சினிமா செய்திகள்

திருமண நாளில் சோகம்.. மதுபான பாரில் திரைப்பட இயக்குனர் கொலை

Published On 2023-06-06 10:58 GMT   |   Update On 2023-06-06 10:58 GMT
  • பெரம்பலூரைச் சேர்ந்த இயக்குனர் செல்வராஜ் என்ற அப்துல் ரஹ்மான்.
  • இவர் ’தமிழ் தேசம்’ என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார்.

பெரம்பலூரைச் சேர்ந்த செல்வராஜ் என்ற அப்துல் ரஹ்மான் (வயது 40). இயக்குனரான இவர் மறைந்த திரைப்பட இயக்குனர் மணிவண்ணனின் மகன் ரகுவண்ணனை வைத்து 'தமிழ் தேசம்' என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். மேலும் பிரபல ரவுடியான இவர் மீது போலீஸ் நிலையங்களில் பல்வேறு வழக்குகளும் நிலுவையில் உள்ளது.

செல்வராஜ் என்ற அப்துல் ரஹ்மான் நேற்று தனது பிறந்த நாள், திருமண நாளை பெரம்பலூர், பாலக்கரை பகுதியில் ஒரு தனியார் ஓட்டலில் உள்ள பாரில் தன்னுடைய நண்பர்களான பெரம்பலூர் அன்பு நகரை சேர்ந்த தியாகராஜ் (43) மற்றும் 17 வயது சிறுவன் ஆகியோருடன் சேர்ந்து மது அருந்தி கொண்டாடினார்.

அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 3 நபர்கள் பாருக்குள் அதிரடியாக புகுந்து மது அருந்தி கொண்டிருந்த அப்துல் ரஹ்மானை கத்தியால் தலையில் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி சென்றனர். இதில் அப்துல் ரஹ்மான் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனைக்கண்ட அப்துல் ரஹ்மானின் நண்பர்கள் மற்றும் பாரில் மது அருந்தி கொண்டிருந்த சக மது பிரியர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

மேலும் இது குறித்து பார் ஊழியர்கள் பெரம்பலூர் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து வந்தனர். மேலும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஷியாம்ளா தேவி சம்பவ இடத்திற்கு நேரில் வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினார். போலீஸ் மோப்ப நாய் பைரவா வரவழைக்கப்பட்டு துப்பு துலக்கப்பட்டது. கைரேகை நிபுணர்கள் வந்து தடயங்களை சேகரித்தனர்.

இது தொடர்பாக பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அப்துல் ரஹ்மான் முன்விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டாரா? என்ற பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி மர்மநபர்களை தேடி வருகின்றனர். மேலும் தனியார் ஓட்டல் பாரில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை பார்வையிட்டு, அப்துல் ரஹ்மானுடன் சேர்ந்து மது அருந்திய நண்பர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

Similar News