சினிமா
தமிழில் நடிக்காததன் காரணம் என்ன?- வித்யா பாலன் பரபரப்பு பேட்டி
இந்தியில் முன்னணி நடிகையாக விளங்கும் வித்யா பாலன், தமிழில் நடிக்காததற்கான காரணத்தை சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார்.
இந்தியில் முன்னணி நடிகையாக விளங்குபவர் வித்யா பாலன். தென் இந்திய நடிகை சில்க் சுமிதாவின் வாழ்க்கை வரலாற்று படமான ‘தி டர்ட்டி பிக்சரில்’ நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமானார். சமீபத்தில் அவர் அஜித்துக்கு ஜோடியாக 'நேர்கொண்ட பார்வை' படத்தில் நடித்து இருந்தார். அவரது இந்தி படமான மிஷன் மங்களும் கடந்த 15-ந்தேதி வெளியாகி வெற்றிகரமாக தியேட்டர்களில் ஓடிக் கொண்டிருக்கிறது.
இந்நிலையில் ஒரு பேட்டியில், தன்னை தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் ஒருவர் படுக்கைக்கு அழைத்ததாக கூறி பரபரப்பை கிளப்பி இருக்கிறார் வித்யா பாலன். வித்யா பாலன் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:- தொடக்கத்தில் நான் ஒரு தமிழ் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருந்தேன். சில நாட்கள் அந்த படத்தில் நடிக்கவும் செய்தேன். திடீரென ஒரு நாள் அந்த படத்தில் இருந்து என்னை தூக்கிவிட்டனர்.
இதனால் நானும் எனது பெற்றோரும் கவலை அடைந்தோம். தயாரிப்பாளரிடம் சென்று என்னை நீக்கியதற்கான காரணத்தை கேட்டோம். படத்தில் நான் நடித்த சில காட்சிகளை எனது பெற்றோரிடம் காண்பித்து ‘உங்கள் மகள் ஹீரோயின் மாதிரியா இருக்கிறாள்’ என கேட்டார். மேலும் என்னை ஹீரோயினாக போடுவதில் தனக்கு விருப்பம் இல்லை என்றும், இயக்குனரின் கட்டாயத்தால் தான் என்னை ஹீரோயினான ஒப்பந்தம் செய்ததாகவும் அவர் கூறினார்.
இதை கேட்டதும் என்னை மிகவும் அசிங்கமானவளாக நான் உணர்ந்தேன். பல மாதங்கள் கண்ணாடி பார்க்காமல் இருந்தேன். அந்த தயாரிப்பாளரை நான் எனது வாழ்நாளில் மன்னிக்கவே மாட்டேன். இன்று நான் எப்படி இருக்கிறேனோ, அதை நேசிக்கிறேன். இதேபோல் மற்றொரு தமிழ் படத்தில் நடித்த அனுபவமும் உண்டு. இப்போது இருப்பது போல் எல்லாம் அப்போது வசதிகள் கிடையாது.
ஒருவர் போன் மூலம் என்னை தன்னுடைய படத்திற்கு ஹீரோயினாக ஒப்பந்தம் செய்தார். ஒரு நாள் தான் சென்னையில் நடந்த படப்பிடிப்பில் கலந்து கொண்டேன். அவர் என்னிடம் நடந்து கொண்டவிதம் எனக்கு பிடிக்கவில்லை. ஒரு நாள் அந்த பட தயாரிப்பாளர் என்னைச் சந்திக்க வந்தார். காபி ஷாப்பில் அமர்ந்து பேசலாம் என கூறினேன்.
ஆனால் அவர் ‘நிறைய பேச வேண்டும். தனியறைக்கு போவோம்‘ என்று தனியறைக்கு செல்வதிலேயே குறியாக இருந்தார். அறைக்கு சென்று கதவை திறந்தே வைத்தேன். வெறும் ஐந்து நிமிடத்தில் கிளம்பி சென்றுவிட்டார். அவரது நடவடிக்கைகள் பிடிக்காததால், அந்த படத்தில் இருந்து விலகிவிட்டேன். அதற்காக அவர்கள் எனக்கு வக்கீல் நோட்டீஸ் கூட அனுப்பினார்கள்.
இவ்வாறு வித்யா பாலன் கூறியுள்ளார்.