சினிமா
இயக்குனர் ரமணா - போக்குவரத்து போலீசார்

விஜய் பட இயக்குனர் ரமணாவிடம் தரக்குறைவாக பேசிய போலீசார்

Published On 2019-08-27 14:34 IST   |   Update On 2019-08-27 14:34:00 IST
நடிகர் விஜய்யை வைத்து திருமலை, ஆதி படங்களை இயக்கிய ரமணா சந்திரசேகர், தன்னிடம் போக்குவரத்து போலீசார் தரக்குறைவாக பேசியதாக புகார் கூறியுள்ளார்.
நடிகர் விஜய்யை வைத்து திருமலை, ஆதி உள்ளிட்ட படங்களை இயக்கியவர் ரமணா சந்திரசேகர். போக்குவரத்து போலீசார் தன்னை தரக்குறைவாக நடத்தியதாக வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து முகநூலில் ரமணா கூறியிருப்பதாவது:-

‘கண்ணியம் மிக்க காவல்துறை மீது எனக்கு எப்போதும் மரியாதை உண்டு. பல நேர்மையான மனிதர்களிடம் தனிப்பட்ட முறையில் எனக்கு மிக நெருங்கிய நட்பும் உண்டு.

ஆனால் இன்று நான் சந்தித்த உதவி ஆய்வாளர்கள் இருவர் அந்த கண்ணியமான நேர்மையான அதிகாரிகள் வட்டத்துக்குள் வராதது மட்டுமல்லாமல் ஒரு சராசரி மனிதப்பிறவியாகக்கூட கருத தகுதியற்றவர்கள்.

நான், என் மனைவி, மகளுடன் காரில் சென்ற போது சாந்தோமில் என் வீட்டருகில் காவல்துறை அபராதம் விதித்துக் கொண்டிருந்தது. சாலை விதிகளை மீறும் வழக்கம் எனக்கு எப்போதும் இல்லாத காரணத்தால் நான் சாலை விதிகளுக்குட்பட்டே என் வாகனத்தை திருப்பினேன். மிதமான வேகத்தில் வந்த என்னை அங்கிருந்த காவலர் வழிமறித்து நிறுத்தச்சொல்லி விதியை மீறி திரும்பியதாக அபராதம் கட்ட சொன்னார்.

விதியை மீறாததால் நான் அபராதம் கட்ட மறுத்தேன். அதற்கு அவர் என்னை காரில் இருந்து இறங்க வற்புறுத்தி எனது லைசென்சை காண்பிக்கச்சொல்லி அபராதம் விதித்துக் கொண்டிருந்த உதவி ஆய்வாளரிடம் தந்து எனக்கு அபராதம் விதிக்கச் சொன்னார்.

அதற்கு நான் அந்த உதவி ஆய்வாளரிடம் அபராதம் கட்டுவதற்காக காவலரிடம் என் லைசன்சை தரவில்லை, எனக்கு வாகனம் ஓட்ட தகுதி இருப்பதற்கு அத்தாட்சியாக மட்டுமே தந்ததாகவும் கூறி அபராதம் கட்ட மறுத்தேன்.



அப்போது அந்த மனித பண்பாளர் உதவி ஆய்வாளர் என்னை பார்த்து, ஏய்.. தள்ளி நின்னு பேசுடா.. மேல எச்சில் படப்போகுது... உன் நோய் எனக்கு ஒட்டிக்கும்... என்று கூற கேன்சரால் பாதிக்கபட்டதை அறிந்தும் அவர் அப்படி பேசியதில் நான் மிகுந்த மனவேதனை அடைந்தேன்.

கேன்சரால் பாதித்தவனை அரசாங்கத்தின் காவல் துறையில் பொறுப்பிலிருக்கும் ஒருவர் இப்படி மனிதாபிமானமற்ற முறையில் பேசியது வேதனைக் குரியது மட்டுமல்ல கண்டிக்கத்தக்கதும் கூட...

அதைவிட கொடுமை. அழைத்துவந்த காவலர் ராமரிடம், பாதியிலேயே சாவப் போறவனயெல்லாம் என்கிட்ட கூட்டிகிட்டு வந்து என் உயிர ஏன் எடுக்குற..? என்று கூற, நான் அவரிடம் நீங்கள் அப்படிப்பேசுவது தவறு என்று உதவி ஆய்வாளரிடம் சுட்டிக்காட்ட, அதற்கு, அப்படித்தாண்டா பேசுவேன் என்றார். இன்னொரு உதவி ஆய்வாளர் உண்மையை உணர்ந்து என்னை சமாதானப்படுத்தி அங்கிருந்து அபராதம் விதிக்காமல் அனுப்பி வைத்தார்.

அங்கு நிலவிய சூழலால் நானும் காரை எடுத்துக் கொண்டு நகர, சற்று தூரம் வந்தவுடன் என் ஒரிஜினல் லைசன்ஸ் அந்த கண்ணிய மற்ற காவல் அதிகாரிடம் இருப்பதை உணர்ந்து மீண்டும் அவ்விடத்திற்கு நான் காரை திருப்ப முயன்றேன். என் மகள் தர்ஷினி வேண்டாம்பா... நீங்க மறுபடியும் போக வேண்டாம். நான் சென்று வாங்கி வருகிறேன் என்று கூறினாள். மேலும் சூழலை சிக்கலாக்க விரும்பாமல் மகளை லைசன்ஸ் வாங்க அனுப்பினேன்.

ஆனால் அந்த குமார் என்ற உதவி ஆய்வாளர் பெண் என்ற காரணத்தாலும் அவளின் அமைதியான குணத்தை சாதகமாக பயன் படுத்திக்கொண்டு அவளை வேண்டுமேன்றே நீண்ட நேரம் காத்திருக்க வைத்து, உன் அப்பன் என்னை எதிர்த்து பேசியதால் அபராதம் கட்டினால்தான் லைசன்சை தருவேன் என்று நிர்பந்தித்தார். என் மகள் நான் மீண்டும் அங்கு வந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டு என் குரல் மற்றும் உடல் நிலையை மோசமாக்கி கொள்ள விரும்பாமல் எனக்கு தெரிவிக்காமல் அபராதத்தை செலுத்தி என் ஓட்டுனர் உரிமத்தை பெற்றுக்கொண்டுவந்து தந்தாள்.

அவள் அபராதம் செலுத்தியது எனக்கு தெரியாத காரணத்தால் நான் காரை எடுத்துக்கொண்டு வந்துவிட்டேன். வீட்டுக்கு வந்த பின்பே அவள் அபராதம் கட்டி லைசன்ஸை வாங்கி வந்ததை வருத்தத்துடன் கூறினாள்.

அரசாங்கத்தின் விதி முறைகள், ஆணைகள் மக்களை நெறிப்படுவதற்காக இருக்கவேண்டும். மாற்றாக இதுபோன்ற மனிதாபி மானமற்ற மோசமான செயலில் இடுபடும் அரசு அதிகாரிகளுக்கு சாதகமாய் இருப்பது வேதனை.

குறிப்பாக கேன்சர் பாதித்த ஒருவனையே இப்படி அந்த ஆய்வாளர் நடத்துவார் என்றால் சராசரி வெகுஜனத்திடம் அவரது அணுகுமுறை என்னவாக இருக்கும் என்று நினைக்கவே பயங்கரமாக உள்ளது. உயிருடனும், வாழ்வுடனும் போராடிக்கொண்டிருக்கும் எங்களைப்போன்ற கேன்சர் போராளிகளிள் யாரிடமும் அனுதாபத்தை எதிபார்ப்பதில்லை.

ஆனால், இவர்களை போன்றவர்கள் கருணையுடன் நடத்தாவிட்டாலும் பரவாயில்லை. பாதியில் சாகப்போகிறவன் என்று கண்ணியமில்லாத வார்தைகளில் சராசரி மனிதர்களிடம் அதிகாரத்திமிரில் பயன்படுத்தி காயப்படுத்துவதை தவிர்க்கலாம். செய்வார்களா...?

இவ்வாறு டைரக்டர் ரமணா தனது பதிவில் கூறியுள்ளார். காவல் துறையினரின் படங்களையும் அதில் வெளியிட்டுள்ளார்.

இதற்கிடையே இன்று காலை போக்குவரத்து போலீசார் சார்பில் உதவி கமி‌ஷனர் ஒருவரும், பெண் போலீஸ் ஒருவரும் டைரக்டர் ரமணாவை சந்தித்து நடந்த சம்பவங்களை விசாரித்ததாகவும் வருத்தம் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.

Similar News