சினிமா
எல்லைகளை தாண்டிவிட்டது சினிமா - காஜல் அகர்வால்
தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கும் காஜல் அகர்வால் சமீபத்தில் அளித்த பேட்டியில் சினிமா, எல்லைகளை தாண்டிவிட்டது என்று கூறியிருக்கிறார்.
காஜல் அகர்வால் அடுத்து கமலுடன் இந்தியன்-2 படத்தில் நடித்துவருகிறார். ஒரு ஹாலிவுட் படத்திலும் நடிக்க உள்ளார். இந்த படங்கள் பற்றி அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:-
‘’இந்தியன் 2’வுக்காக செப்டம்பரில் என் பகுதி படப்பிடிப்பு இருக்கும் என ஆர்வத்துடன் காத்திருக்கிறேன். படத்துக்காக களரி பயிற்சியைத் தொடர வேண்டும். குதிரை ஏற்றமும் கற்று வருகிறேன். இதில் நான் ஒரு வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடிக்கிறேன். ஹாலிவுட் படமாக இருந்தாலும் நிறைய இந்தியத்தன்மை அதில் இருக்கும்.
சர்வதேச அளவில் எல்லோரையும் சென்றடையும். சகோதரர்களுக்குள் நடக்கும் இந்தக் கதை நிஜமாக நடந்தது. இந்தப் படம் மாண்டரின், காண்டனீஸ், ஆங்கிலம் என பல மொழிகளில் வெளியாக உள்ளது. மாநில மொழிகள் என்கிற வரையறைகளை, எல்லைகளை எல்லாம் சினிமா தாண்டிவிட்டது என்று நினைக்கிறேன்.
இணையத்தின் வளர்ச்சியால் எல்லோரும் எல்லாவற்றையும் பார்க்கின்றனர். ஒரு படத்தின் கதை நன்றாக இருக்கும் பட்சத்தில் மொழி இரண்டாம் பட்சமாகிவிடுகிறது. சத்தீஸ்கரில் கூட என் படம் பார்த்து பாராட்டுபவர்கள் இருக்கிறார்கள்’ என்று கூறினார்.