மீனம் -குரோதி வருடம் வருட பலன்

சோபகிருது வருட பலன் 2023

Published On 2023-04-08 08:25 GMT   |   Update On 2023-04-08 08:25 GMT

வெற்றி வாய்ப்புகள் குவியும்!

வெளிப்படையான பேச்சினாலும், எண்ணங்களாலும் அனைவரையும் கவரும் ஆற்றல் கொண்ட மீன ராசியினருக்கு சோபகிருது வருடத்தில் வெற்றி மேல் வெற்றி குவிய நல்வாழ்த்துக்கள். திருக்கணிதப் பஞ்சாங்கப் படி ஆண்டின் துவக்கத்தில் ஏப்ரல் 22-ல் குருபகவான் தன ஸ்தானம் செல்கிறார். ஜனவரி 17-ல் நடந்த சனிப் பெயர்ச்சி முதல் சனி பகவான் விரய ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். ஏழரைச் சனியின் முதல் பகுதி. தற்போது 2,8-ல் சஞ்சரிக்கும் ராகு கேதுக்கள் அக்டோபர் 30 முதல் ராசி மற்றும் ஏழாமிடத்திற்கு மாறுகிறார்கள்.

உங்கள் உடல் நிலையில் மன நிலையில் மாற்றம் எற்படும். நினைப்பது ஒன்றும் நடப்பது ஒன்றுமாக இருந்த நிலை மாறும். உடலும் மனமும் பொழிவு பெறும். தடைபட்ட மகிழ்சியும் சந்தோஷமும், நம்பிக்கையும் துளிர் விடும். எதிர்காலம் பற்றிய பயம் விலகும் புத்திக் கூர்மை பளிச்சிடும்.

மன ஆற்றலும், மன உறுதியும் கொண்ட நீங்கள் எந்தப் பிரச்சினையையும் கண்டு சோர்ந்து போக மாட்டீர்கள். முக்கியமான பிரச்சினை வம்பு, வழக்குகளில் தலையிடாமல் தாமரையிலை தண்ணீர் போல் விலகி விடுவீர்கள். தொழில் விறுவிறுப்பு அடையும். தொழிலுக்காக வாங்கிய கடனை சிறிது சிறிதாக அடைக்க முயற்சிப்பீர்கள். ஆயுள் பயம் அகன்று ஆரோக்கியம் அதிகரிக்கும். பருவ வயதினருக்கு திருமணம் நடக்கும். குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு கர்மம் செய்ய புத்திரன் கிடைப்பான். சிலருக்கு தத்து புத்திர யோகம் உண்டாகும்.

குடும்பம், பொருளாதாரம் : உங்கள் குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி உண்டாகப் போகிறது. உறவினர்களுக்கிடையே உறவு நிலை மேம்படும். குருபகவான் தற்போது தன ஸ்தானம் செல்வதால் பொருளாதார நிலையிலே மிகப் பெரிய வளர்ச்சி ஏற்படும் நீண்ட காலமாக உங்களுக்கு வர வேண்டிய பணம் தாமதமாகிக் கொண்டு இருந்தால் இப்பொழுது வசூலாகும். சம்பள பாக்கி வசூலாகும். சேமிப்புகள் அதிகமாகும். பூர்வீகச் சொத்தில் இருந்த வில்லங்கள் அகலும். உடன் பிறந்த சகோதர, சகோதரிகளுடன் நிலவிய மனக்கசப்பு மறைந்து ஒத்துழைப்பு, ஆதரவு உண்டாகும். வழக்குகளில் வெற்றி ஏற்படும். வீடு வாகன யோகம், தொழில் முன்னேற்றம், புதிய வேலை வாய்ப்பு போன்ற எல்லாவிதமான நன்மைகளும் உண்டாகும். சிலருக்கு இடப்பெயர்ச்சிக்குப் பிறகு நல்ல மாற்றமும், முன்னேற்றமும் ஏற்படும். மகான்களின் தரிசனம் மற்றும் ஆசிகள் கிடைக்கும்.

பெண்கள்: மனக்கவலைகள் நீங்கி புத்துணர்ச்சி உண்டாகும். பணப்புழக்கம்அதிகரிக்கும் நகைச் சீட்டு, ஏலச் சீட்டு என சேமிப்புகள் அதிகரிக்கும். நகை புடவை என ஆடம்பர அழகு பொருட்கள் வாங்கி ஆனந்தமாக வாழ்வீர்கள். வாகன வசதிகள் மேம்படும். புதிய சொத்து மகிழ்ச்சி தரும். உங்களின் வெற்றிக்கு வாழ்க்கை துணையின் ஆதரவு இருக்கும். கணவன், மனைவிக்கிடையே இருந்து வந்த பிரச்சிினைகள் குறைந்து அன்யோன்யம் அதிகரிக்கும்.

பூரட்டாதி 4 : செல்வாக்கு, திறமை மற்றும் கவுரவத்தோடு செயல்பட்டு சிறப்பும் பெருமையும் அடையும் காலம். புகழுக்கும், பெருமைக்கும் ஆசைப்படுவீர்கள். அதற்கான வழிமுறைகளை கையாளுவீர்கள்.

திறமைகளின் மூலம் பணியில் பொறுப்புகள் உயரும். உடன் பணிபுரிந்தவர்களுடன் உண்டான கருத்து வேறுபாடு அகன்று நட்பு நிலை நீடிக்கும். தொழிலில் ஏற்பட்ட தளர்வுகள் அகலும். வெளிநாட்டு பயணம், வீடு, வாகன யோகம் உள்ளது. வசீகரமான பேச்சால் உறவுகளை கட்டிப்போடுவீர்கள்.

நன்மைகளே மிகுதியாக நடக்கும், எனினும் யாருக்கும் வாக்கு கொடுக்க வேண்டாம். பிள்ளைகளால் ஏற்பட்ட மனக்கவலை அகலும். சுபச் செய்திகளால் சுபவிரயங்கள் ஏற்படும். குழந்தைகள் உயர் கல்விக்காக வெளி மாநிலம், வெளிநாடு செல்ல நேரும். தினமும் குரு கவசம் படிக்கவும்.

உத்திரட்டாதி : வாழ்க்கையில் மற்றவர்கள் அடையாததை அடைய வேண்டும் என்று நினைப்பீர்கள்.முயற்சியால் தேவைகள் அனைத்தையும் அடைவீர்கள். வம்பு, வழக்கு அவமானங்கள், ஆரோக்கிய குறைபாடு விலகி எல்லாவற்றிலும் சாதகமான சூழ்நிலை நிலவும். இன்சூரன்ஸ், பாலிசி முதிர்வு தொகை, உயில் சொத்து கிடைக்கும். தாய் வழிச் சொத்தின் மூலம் சகோதரர்களிடம் ஏற்படும் கருத்து வேறுபாட்டை தவிர்க்க முறையான பத்திரப் பதிவை ஏற்படுத்திக் கொள்வது அவசியம். சிலருக்கு அடமானத்தில் உள்ள சொத்து மீண்டு வரும். வீடு, வாகனம் போன்ற சுபச் செலவு ஏற்படலாம்.வேலைக்கு செல்லும் இடத்தில் மதிப்புடன் நடத்தப் படுவீர்கள்.தாய் மாமன் உறவுகளால் அனுகூலம் கிடைக்கும். தொழில் நிமித்தமாக பிரிந்த தம்பதிகள் மீண்டும் இணையும் காலம். தினமும் தட்சிணாமூர்த்தி காயத்திரி மந்திரம் படிக்கவும்.

ரேவதி: எண்ணற்ற புதிய வாய்ப்புகள் தேடி வரும் காலம்.நன்மைக்கு மேல் நன்மை நடக்கும்.கடின உழைப்பு லாபத்தை ஈட்டித்தரும். திடமான நம்பிக்கையும், தெம்பும், உற்சாகமும் கூடும். நிறைந்த அறிவு, திறமை இருந்தும் பயன்படுத்தவோ சாதிக்கவோ முடியவில்லையே என்ற மனக்குறை தீரும். தொழிலில் கூட்டாளிகளால் சாதகமான சூழல் ஏற்பட்டு தனலாபம் அடைவீர்கள்.

தந்தைவழி சொத்துக்களில் இருந்துவந்த சிக்கல்கள் நீங்கும். வீட்டுப் பெரியோர்களின் ஆசிகள் கிடைக்கும். வெளிவட்டாரங்களில் மரியாதைகள் உயரும். தாயிடம் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் மறையும். ஆரோக்கியம் சார்ந்த இன்னல்கள் குறையும். நீண்ட நாட்களாக நினைத்த காரியங்களை செய்து முடிப்பீர்கள். தினமும் தட்சிணாமூர்த்தி அஷ்டோத்திரம் படிக்கவும்.

பரிகாரம்: மீன ராசியினர் தன குருவின் முழு பலன்களையும் அனுபவிக்க ஆலங்குடி ஆபாத்சகா யேஸ்வரர் கோவில் சென்று வரவும்.

'பிரசன்ன ஜோதிடர்'

ஐ.ஆனந்தி

செல்: 98652 20406

Similar News