search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "death"

    • சிறுவன் நிலை தடுமாறி கீழே விழுகிறான்.
    • சிறுவனை அங்கிருந்தவர்கள் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

    மகாராஷ்டிரா மாநிலத்தின் பூனேவை அடுத்த லொஹேகன் பகுதியை சேர்ந்த சிறுவன் ஷம்பு காலிதாஸ் தனது நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடி கொண்டிருந்த போது உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

    இது தொடர்பான வீடியோவில் சிறுவன் தனது நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடுகிறார். குறிப்பிட்ட நேரத்தில் சிறுவன் பேட்டிங் செய்த தனது நண்பருக்கு பந்துவீசுகிறான். பந்தை எதிர்கொண்ட நண்பர் அதனை வேகமாக அடித்துள்ளார்.

    இந்த பந்து சிறுவன் பிறப்புறுப்பின் மீது வேகமாக தாக்கியது. இதில் சிறுவன் நிலை தடுமாறி கீழே விழுகிறான். பிறகு சில நொடிகளில் மேலே எழுந்த சிறுவன் அடுத்த சில நொடிகளில் நிற்க முடியாமல் கீழே விழுகிறான்.

    அப்படி விழுந்த சிறுவன் மீண்டும் எழவே இல்லை. கீழே விழுந்த சிறுவனை உடனே அங்கிருந்தவர்கள் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

    எனினும், மருத்துவமனைக்கு சென்ற சிறிது நேரத்தில் சிறுவன் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவத்தை விபத்தால் நேர்ந்த உயிரிழப்பாக காவல் துறையினர் வழக்கு பதிவு செய்தனர். 

    • இம்மாணவர்களின் உயிரிழப்பு உண்மையிலேயே மருத்துவ உலகிற்கும் தமிழ்நாட்டிற்கும் பேரிழப்பாகும்
    • மருத்துவக் கல்லூரி மாணவர்களின் பெற்றோர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்துள்ளார்

    கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம் அருகே இராஜாக்கமங்கலம் கிராமம் லெமூர் கடற்கரையில் கடல் அலையில் சிக்கி உயிரிழந்த மருத்துவக் கல்லூரி மாணவர்களின் பெற்றோர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கன்னியாகுமரி மாவட்டம். அகஸ்தீஸ்வரம் வட்டம் இராஜாக்கமங்கலம் கிராமம் மெமூர் கடற்கரையில் இன்று காலை சுமார் 10 மணியளவில் திருச்சி தனியார் மருத்துவக் கல்லூரியில் பயிலும் மாணவர்கள் கால் நனைப்பதற்காக கடலில் இறங்கியபோது. கடல் அலை அதிகமாக இருந்ததால் எதிர்பாராதவிதமாக கடல் அலை இழுத்துச் சென்றதில் நெய்வேலியை சேர்ந்த காயத்ரி (25), கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த சர்வதர்ஷித் (23), திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த பிரவின்சாம் (23), தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த சாருகவி (23) மற்றும் ஆந்திரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த வெங்கடேஷ் (24)ஆகிய 5 மருத்துவக் கல்லூரி மாணவர்கள் உயிரிழந்தனர் என்ற துயரமான செய்தியைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன்.

    மருத்துவக் கல்வி பயின்று உயிர்காக்கும் மருத்துவராகி மருத்துவச் சேவையில் ஈடுபடவிருந்த இம்மாணவர்களின் உயிரிழப்பு உண்மையிலேயே மருத்துவ உலகிற்கும் தமிழ்நாட்டிற்கும் பேரிழப்பாகும்.

    விபத்து குறித்த தகவல் கிடைத்ததும் உடனடியாக மாவட்ட ஆட்சியரை தொடர்பு கொண்டு மீட்பு நடவடிக்கைகளைத் துரிதமாக மேற்கொள்ள அறிவுறுத்தியதோடு, காயமடைந்தவர்களுக்கு தேவையான அனைத்து உரிய உயிர்காப்பு சிகிச்சைகளும் அளிக்கப்படுவதை உறுதி செய்யயும் உத்தரவிட்டிருக்கிறேன்.

    இந்தத் துயரகரமான சம்பவத்தில் தம் பிள்ளைகளை இழந்து வாடும் பெற்றோர்களுக்கும். அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

    பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான அரசு நிவாரண உதவிகள் தேர்தல் ஆணையத்தின் அனுமதி பெற்ற வழங்கப்படும்" என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • இன்று காலை திற்பரப்பு அருவிக்கு செல்வதற்காக 6 பேரும் காரில் புறப்பட்டு சென்றனர்.
    • கடற்கரை பகுதியில் கால் நனைத்து விளையாடிக் கொண்டிருந்தனர்.

    நாகர்கோவில்:

    திருச்சி எஸ்.ஆர்.எம். மருத்துவ கல்லூரியில் படித்து முடித்து விட்டு பயிற்சி டாக்டராக உள்ள நாகர்கோவில் பறக்கையை சேர்ந்த சர்வதர்ஷித், திண்டுக்கல்லை சேர்ந்த பிரவீன் ஷாம் மற்றும் வெங்கடேஷ், காயத்ரி, சாருகவி, நேசி ஆகிய 6 பேரும் நேற்று அங்கிருந்து கார் மூலமாக நாகர்கோவில் நடந்த திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக வந்தனர்.

    நேற்று இரவு நாகர்கோவிலுக்கு வந்து சேர்ந்த இவர்கள் இங்கு தங்கினார்கள். இன்று காலை திற்பரப்பு அருவிக்கு செல்வதற்காக 6 பேரும் காரில் புறப்பட்டு சென்றனர். திற்பரப்பு அருவியில் தண்ணீர் குறைவான அளவில் கொட்டியது. இதையடுத்து 6 பேரும் அங்கிருந்து புறப்பட்டு ராஜாக்கமங்கலம் அருகே உள்ள லெமூர் கடற்கரை பகுதிக்கு வந்தனர்.

    கடற்கரை பகுதியில் கால் நனைத்து விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது வந்த ராட்சத அலை 6 பேரையும் இழுத்துச்சென்றது. இதை பார்த்த மீனவர்கள் அவர்களை காப்பாற்ற முயன்றனர். இதில் பறக்கையை சேர்ந்த சர்வ தர்ஷித், நேசி இருவரையும் மீட்டனர். மற்ற 4 பேரையும் மீட்க முடியவில்லை. அவர்கள் உடல் பிணமாக கரை ஒதுங்கியது. இதற்கிடையில் மீட்கப்பட்ட 2 பேரும் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டதில் சர்வதர்ஷித் பரிதாபமாக இறந்தார். இதனால் சாவு எண்ணிக்கை 5 ஆனது. பலியான வெங்கடேஷ், பிரவீன் சாம், காயத்ரி, சாருகவி, சர்வ தர்ஷித் ஆகியோரது குடும்பத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனால் அவர்கள் அதிர்ச்சியடைந்தனர். சுற்றுலா வந்த இடத்தில் 5 பயிற்சி டாக்டர்கள் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    குமரி மாவட்டத்தில் 2 நாட்களாக கடல் சீற்றமாக இருக்கும் என்று கலெக்டர் ஸ்ரீதர் எச்சரிக்கை விடுத்து இருந்த நிலையில் குளச்சல் கோடிமுனை பகுதியில் நேற்று கடல் அலையில் சிக்கி சென்னையை சேர்ந்த 2 பேர் பலியானார்கள். தேங்காய்பட்டினம் பகுதியில் தந்தையுடன் வந்திருந்த சிறுமி ஆதிரா (7) என்பவரை கடல் அலை இழுத்துச்சென்றது.

    அவரது உடலை இன்று காலை மீட்டனர். நேற்றும், இன்றும் கடல் அலையில் சிக்கி குமரி மாவட்டத்தில் 8 பேர் பலியாகி இருப்பது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • வெளிப்படையாக காவல்துறை விசாரணை மேற்கொள்ள வேண்டும்.
    • காவல்துறை பாரபட்சம் காட்டாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    நெல்லை:

    நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் தனசிங் மாயமான நிலையில் நேற்று இறந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.

    அவரது உடல் நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு இன்று குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. கே.பி.கே. ஜெயக்குமாரின் பூத உடலை அவரது மகன் கருத்தையா ஜெப்ரின் பெற்றுக்கொண்டார்.

    இதைத்தொடர்ந்து அவரது உடலுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வ பெருந்தகை எம்.எல்.ஏ., மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

    கே.பி.கே. ஜெயக்குமார் ஒரு நல்ல மனிதர். காங்கிரஸ் கட்சி மாவட்ட தலைவர். அவர் தற்போது உயிரிழந்துள்ளார் என்பது எங்களுக்கு மிகப்பெரிய வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது.

    இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது வெளிப்படையாக காவல்துறை விசாரணை மேற்கொள்ள வேண்டும். இதில் பல்வேறு சந்தேகங்கள் இருந்து வருகிறது. இதில் தொடர்புடையவர்கள் எந்த கட்சியின் பின்புலத்தில் இருந்தாலும், எவ்வளவு பெரிய தொழிலதிபராக இருந்தாலும் அவர்கள் மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

    இன்று மாலைக்குள் ஒரு நல்ல தகவல் வெளியே வரும் என்று மாவட்ட எஸ்.பி என்னிடம் தெரிவித்துள்ளார். மேலும் அவரது மரண வாக்குமூலம் தற்போது வெளியாகியுள்ளது. அதில் யாருடைய பெயர்கள் இருந்தாலும் கூட அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

    எங்கள் கட்சியை சேர்ந்த வர்களாக இருந்தாலும் கூட காவல்துறை வெளிப்படையான விசாரணையை மேற்கொள்ளப்பட வேண்டும். அப்படி வெளிப்படையாக விசாரணை மேற்கொண்டால் தான் இவர் உயிர் இழப்புக்கு யார் காரணம் என்பது வெளியே வரும்.

    மேலும் நாங்கள் கட்சி ரீதியாகவும் இதை விசாரித்து மேலிடத்திற்கு இந்த அறிக்கையை அனுப்புவோம். காவல்துறை விசாரணை என்பது தற்போது நடைபெற்று கொண்டிருப்பதன் காரணமாக மற்ற தகவல்கள் எங்களால் வெளியே தெரிவிக்க முடியாது.

    இதில் பணம் படைத்தவராக இருக்கலாம். மிகப்பெரிய அரசியல்வாதியாக கூட இருக்கலாம். அப்படி இருந்தாலும்கூட அவர்கள் மீதும் காவல்துறை பாரபட்சம் காட்டாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் அவரது உடல் உள்ள தாக எங்கள் கட்சிக்காரர்கள் என்னிடம் தெரிவித்துள்ளா ர்கள். அதேபோன்ற புகைப்பட ங்களும் வெளியாகி உள்ளது. ஆகவே இதில் பெருத்த சந்தேகம் இருக்கிறது. இது தொடர்பாக காவல்துறை தீவிரமாக விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும்.

    இந்த விசாரணை என்பது வெளிப்படையாக இருக்க வேண்டும் என்பதுதான் எங்கள் எண்ணம். மேலும் உயிரிழந்த ஜெயக்குமாரின் கை கால்கள் இரண்டும் கட்டப்பட்டுள்ளது. இதிலிருந்து ஏதோ ஒரு சம்பவம் நடை பெற்றுள்ளதாக எங்களுக்கு தெரிகிறது.

    ஆகவே தான் நாங்கள் திரும்பத் திரும்பச் சொல்கி றோம் வெளிப்படையான விசாரணை மேற்கொண்டால்தான் இவருடைய உயிர் இழப்புக்கு காரணம் என்ன என்பது வெளியே தெரியவரும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அப்போது காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவர் கிள்ளியூர் ராஜேஷ் குமார், விஜய் வசந்த் எம்.பி., நெல்லை பாராளுமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ராபர்ட் புரூஸ், ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ., நெல்லை மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் சங்கர பண்டியன் மற்றும் திரளான நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

    • சிக்கன் ரைஸில் பூச்சிக் கொல்லி மருந்து கலந்ததால் உயிரிழப்பு.
    • உயிரிழந்த முதியவரின் குடும்பத்தினரிடம் நாமக்கல் போலீசார் தீவிர விசாரணை.

    நாமக்கல் மாவட்டத்தின் பேருந்து நிலையம் எதிரே உள்ள ஓட்டல் ஒன்றில் நேற்று முன்தினம் இரவு 8.30 மணி அளவில் எருமப்பட்டி அருகே உள்ள கொண்டிச்செட்டிபட்டி தேவராயபுரத்தை சேர்ந்த தனியார் என்ஜினீயரிங் கல்லூரி மாணவர் பகவதி (20) இந்த ஓட்டலில் சிக்கன் பிரியாணி சாப்பிட்டு உள்ளார்.

    தொடர்ந்து 7 சிக்கன் ரைஸ் பொட்டலம் வாங்கி கொண்டு வீட்டிற்கு சென்றார். அவற்றை தன்னுடைய தாய் நதியா (37), தம்பி கவுசிக் ஆதி (18), தாத்தா சண்முகம் (67), பாட்டி பார்வதி (63), சித்தி பிரேமா (35) மற்றும் இவரது இரு குழந்தைகளுக்கு வழங்கி உள்ளார்.

    இதில் சிக்கன் ரைஸ் உணவை சாப்பிட்ட நதியா, சண்முகம் ஆகியோருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது.

    இதையடுத்து நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இருவரும் அனுமதிக்கப்பட்டனர். இவர்களின் நிலைமை தற்போது கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்பட்டு வந்த நிலையில், சண்முகம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

    சிக்கன் ரைஸில் பூச்சிக் கொல்லி மருந்து கலந்ததால் உயிரிழந்ததாக பரபரப்புத் தகவல் வெளியானது.

    உயிரிழந்த முதியவரின் குடும்பத்தினரிடம் நாமக்கல் போலீசார் தீவிர விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.

    • குடோனுக்கு பக்கத்தில் நின்றிருந்த வெடி மருந்து ஏற்றப்பட்ட இரண்டு வேன்களும் சேதமடைந்து கிடந்தன.
    • புகாரின் அடிப்படையில் 286 (மனித உயிருக்கு ஆபத்தை விளைவித்தல், அலட்சியமாக இருத்தல்), 304(2) மற்றும் 9 (பி)(1)(பி) ஆகிய பிரிவுகளின் கீழ் ஜாமினில் வெளிவரமுடியாத வழக்கு பதியப்பட்டுள்ளது.

    காரியாபட்டி:

    விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே கீழ உப்பிலிக்குண்டு கிராமத்தில் ஆர்.எஸ்.ஆர்.கிரஷர் என்ற பெயரில் கல் குவாரி ஒன்று இயங்கி வருகிறது. இந்தநிலையில் நேற்று காலை சுமார் 8.30 மணியளவில் அங்குள்ள வெடிமருந்து சேமித்து வைக்கும் குடோனில் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது.

    இதில் அங்கு பணியில் இருந்த தொழிலாளர்கள் உடல் சிதறி பலியானார்கள். அவர்களது உடல் பாகங்கள் 1 கி.மீ. தூரம் வரை வீசப்பட்டு கிடந்தது. இந்த விபத்து தொடர்பாக கடம்பன்குளம் கிராம நிர்வாக அலுவலர் செல்வராஜ் ஆவியூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

    முதல் தகவல் அறிக்கையில் வெளியாகி உள்ள தகவல்கள் வருமாறு:-

    நானும் (கிராம நிர்வாக அலுவலர் செல்வராஜ்), கிராம உதவியாளர் மஜீத்கனியும் அலுவலகத்தில் பணியில் இருந்தபோது டமார் என்ற பயங்கர வெடிச்சத்தம் கேட்டது. உடனே நாங்கள் இருவரும் குவாரி பக்கம் சென்று பார்த்தபோது, கிரஷருக்கு தெற்கு பக்கம் உள்ள வெடிமருந்து குடோனில் வெடிவிபத்து ஏற்பட்டு குடோன் தரைமட்டமாகி கிடந்தது. குடோனுக்கு பக்கத்தில் நின்றிருந்த வெடி மருந்து ஏற்றப்பட்ட இரண்டு வேன்களும் சேதமடைந்து கிடந்தன. அதன் பாகங்கள் நாலாபக்கமும் சிதறிக்கிடந்தன.

    வெடிச்சத்தம் கேட்டு வந்த கடம்பன்குளத்தை சேர்ந்த வேட்டையன் மற்றும் கிரஷரில் கணக்குப் பிள்ளையாக வேலை பார்த்த கீழஉப்பிலிக்குண்டு குருநாதனிடம் விசாரித்த போது, கள்ளிக்குடி தாலுகா டி.புதுப்பட்டி அழகர்சாமி மகன் கந்தசாமி, தென்காசி மாவட்டம் செந்தட்டியாபுரம் அருகன்குளம் குருசாமி ஆகியோர் குடோனில் இருந்த வெடிமருந்துகளை ஏற்றிக்கொண்டிருந்தபோது வெடிவிபத்து ஏற்பட்டு உடல் பாகங்கள் நாலாபுறமும் சிதறி இறந்துவிட்டதாக சொன்னார்.

    மனித உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்று தெரிந்திருந்தும் போதிய பாதுகாப்பு உபகரணங்கள் ஏதும் கொடுக்காமல் உயர்ரக வெடிமருந்துகள் இறக்கும் இடத்தில் போதிய கண்காணிப்பு செய்யும் அலுவலர் இல்லாமலும் எலக்ட்ரிக் டெட்டனேட்டர் இருந்த வெடிமருந்து வேனையும், நைட்ரோ மிக்சர் (நைட்ரஜன்) வெடிமருந்து இருந்த லோடு வேனையும் அருகருகே வைத்து லோடு இறக்கினாலோ, ஏற்றினாலோ வெடிவிபத்து ஏற்பட்டு உயிர் சேதத்தை விளைவிக்கும் என்று தெரிந்திருந்தும் அஜாக்கிரதையாகவும், கவனக்குறைவாகவும் இறக்கியுள்ளனர்.

    வெடி மருந்துகளை போதிய பாதுகாப்பு செய்து கொடுக்காமல் வெடிமருந்து குடோனில் வேலை செய்ததால் வெடிவிபத்து ஏற்பட்டு அதன் காரணமாக இருந்த மேற்படி வெடிமருந்து குடோனை முறையாக நிர்வகிக்காத அதன் உரிமையாளர் ராஜ்குமார், மேற்பார்வை செய்து வந்த உரிமையாளர்களான ராம்ஜி, மேற்பார்வையாளர் ராம மூர்த்தி ஆகியோர் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக்கொள்கிறேன் என்று குறிப்பிட்டு இருந்தார்.

    அந்த புகாரின் அடிப்படையில் 286 (மனித உயிருக்கு ஆபத்தை விளைவித்தல், அலட்சியமாக இருத்தல்), 304(2) மற்றும் 9 (பி)(1)(பி) ஆகிய பிரிவுகளின் கீழ் ஜாமினில் வெளிவரமுடியாத வழக்கு பதியப்பட்டுள்ளது.

    இதில் தலைமறைவாக இருக்கும் ராஜ்குமார், ராம்ஜி, ராமமூர்த்தி ஆகியோர் விரைவில் பிடிபடுவார்கள் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

    இதற்கிடையே விபத்து நடந்த பகுதியில் இருந்து கைப்பற்றப்பட்ட 1,200 கிலோ வெடிபொருட்களை செயலிழக்க செய்யும் நடவடிக்கையில் அதன் நிபுணர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

    • தரங்கம்பாடி-கடலூர் தேசிய நெடுஞ்சாலையில் தரங்கம்பாடி அருகே வந்து கொண்டிருந்தனர்.
    • விபத்து நடந்த உடன் லாரியை நிறுத்தி விட்டு அதன் டிரைவர் தப்பியோடி விட்டார்.

    தரங்கம்பாடி:

    கடலூர் மாவட்டம் பட்டான் குப்பத்தை சேர்ந்த வாலிபர்கள் ஹரி, ஆகாஷ், சச்சின். இவர்கள் 3 பேரும் ஒரே மோட்டார் சைக்கிளில் புதுக்சேரி மாநிலம் காரைக்காலுக்கு சுற்றுலாவிற்காக சென்றனர். பின்னர் இன்று காலையில் அங்கிருந்து வீடு திரும்பினர்.

    தரங்கம்பாடி-கடலூர் தேசிய நெடுஞ்சாலையில் தரங்கம்பாடி அருகே வந்து கொண்டிருந்தனர். அப்போது எதிரே வந்த மோட்டார் சைக்கிள் மீது 3 பேர் வந்த மோட்டார் சைக்கிள் எதிர்பாராத விதமாக மோதியது. இதில் ஹரி, ஆகாஷ், சச்சின் ஆகிய 3 பேரும் சாலையில் தூக்கி விசப்பட்டனர். இந்நிலையில் அந்த வழியாக வந்த லாரி 3 பேர் மீதும் ஏறி இறங்கியது. இந்த விபத்தில் 3 பேரும் படுகாயம் அடைந்தனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்ததும் பொறையார் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவர்களை மீட்டு சிகிச்சைக்காக பொறையார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர்கள் 3 பேரும் பரிதாபமாக இறந்தனர்.

    விபத்து நடந்த உடன் லாரியை நிறுத்தி விட்டு அதன் டிரைவர் தப்பியோடி விட்டார். இதுகுறித்து பொறையார் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பியோடி லாரி டிரைவரை தேடி வருகிறார்கள்.

    • தீயணைப்பு வீரர்கள் பல மணி நேரம் தேடி 3 பேரின் உடல் பாகங்களை மீட்டனர்.
    • 3 பேரின் குடும்பத்துக்கும் இன்று ரொக்கமாக தலா ரூ.50 ஆயிரமும், காசோலையாக ரூ.11.50 லட்சமும் வழங்கப்பட்டு உள்ளது.

    காரியாபட்டி:

    விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியை அடுத்துள்ள கீழஉப்பிலிக்குண்டுவில் செயல்பட்டு வரும் தனியாருக்கு சொந்தமான கல்குவாரியில் நேற்று பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டது.

    இதில் மதுரை மாவட்டம் கள்ளிக்குடி தாலுகா டி.புதுப்பட்டியை சேர்ந்த கந்தசாமி (வயது 47), தென்காசி மாவட்டம் வடமலாபுரத்தை சேர்ந்த பெரியதுரை (25), சிவகிரி அருகன்குளத்தை சேர்ந்த குருசாமி (60) ஆகியோர் உடல் சிதறி பலியானார்கள்.

    தீயணைப்பு வீரர்கள் பல மணி நேரம் தேடி 3 பேரின் உடல் பாகங்களை மீட்டனர். பின்னர் விருதுநகர் அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் இன்று காலை ஒப்படைக்கப்பட்டது. வெடிவிபத்தில் இறந்தவர்களுக்கு தமழக அரசு சார்பில் விரைவில் நிவாரணம் அறிவிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் இறந்த 3 தொழிலாளர்களின் குடும்பத்துக்கு கல்குவாரி நிர்வாகம் ரூ.12 லட்சம் வழங்க முன்வந்துள்ளது. அதன்படி 3 பேரின் குடும்பத்துக்கும் இன்று ரொக்கமாக தலா ரூ.50 ஆயிரமும், காசோலையாக ரூ.11.50 லட்சமும் வழங்கப்பட்டு உள்ளது.

    தேர்தல் நடத்தை விதிகள் முடிவடைந்ததும் அரசு சார்பில் நிவாரணம் அறிவிக்கப்பட்டு வழங்கப்படும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.

    • கேரள மாநிலத்தில் பாலக்காடு உள்ளிட்ட சில மாவட்டங்களில் வெப்பநிலை 104 டிகிரிக்கு மேல் இருந்து வருகிறது.
    • தேர்தல் நாளில் வாக்களிக்க வந்த வாக்காளர்களில் 10 பேர் சுருண்டு விழுந்து பலியாகினர்.

    திருவனந்தபுரம்:

    கேரளா மற்றும் தமிழகத்தில் இந்த ஆண்டு கோடை காலம் தொடங்குவற்கு முன்னதாகவே வெயில் சுட்டெரித்தது. இந்நிலையில் ஏப்ரல் மாத தொடங்கியதில் இருந்து வெயிலின் தாக்கம் மேலும் அதிகரித்தது.

    தமிழகத்தில் பல மாவட்டங்களில் பகல் நேரத்தில் 100 டிகிரிக்கு மேல் வெயில் அடிக்கும் நிலையில், கேரள மாநிலத்தில் பாலக்காடு உள்ளிட்ட சில மாவட்டங்களில் வெப்பநிலை 104 டிகிரிக்கு மேல் இருந்து வருகிறது.

    வெப்பஅலை தாக்குதலுக்கு உள்ளாகியிருக்கும் மாநிலங்களில் கேரளாவும் இடம் பெற்றிருக்கிறது. இதனால் மக்கள் வெயில் கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

    இந்நிலையில் கேரள மாநிலத்தில் அதிக வெப்பம் காரணமாக உயிர்பலி ஏற்படுவதும் அரங்கேறி வருகிறது. தேர்தல் நாளில் வாக்களிக்க வந்த வாக்காளர்களில் 10 பேர் சுருண்டு விழுந்து பலியாகினர். அதனைத்தொடர்ந்து பொது இடங்களுக்கு வந்த 3 பேரும் அடுத்தடுத்து இறந்தனர்.

    கடும் வெயில் காரணமாகவே அவர்கள் பலியாகியிருப்பது தெரியவந்தது. இதனால் பகல் நேரத்தில் தேவையில்லாமல் வெளியே வருவதை மக்கள் தவிர்க்க வேண்டும் என்று மாநில சுகாதாரத்துறை கேட் டுக்கொண்டுள்ளது.

    இந்நிலையில் கேரள மாநிலத்தில் கடும் வெயில் காரணமாக நேற்று ஒரே நாளில் 2 வாலிபர்கள் மற்றும் ஒரு பெண் என 3 பேர் இறந்துள்ளனர். பாலக்காடு மாவட்டத்தில் மட்டும் 2 பேர் பலியாகி இருக்கின்றனர். அது பற்றிய விவரம் வருமாறு:-

    கோட்டயம் மாவட்டம் வைக்கம் தாளை யோலப்பறம்பு தாளப்பாறை பகுதியை சேர்ந்தவர் ஷமீர்(வயது35). இவர் நேற்று வைக்கம் கடற்கரை பகுதியில் நடந்த கிரிக்கெட் போட்டியில் பங்கேற்று விளையாட வந்திருந்தார்.

    மதிய நேரத்தில் அவர் கிரிக்கெட் விளையாடினார்.அப்போது அவர் திடீரென சுருண்டு விழுந்தார். இதையடுத்து ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு டாக்டர்கள் பரிசோதித்த போது அவர் ஏற்கனவே இறந்துவிட்டது தெரியவந்தது.

    பாலக்காடு மாவட்டம் மன்னார்காடு பகுதியை சேர்ந்த ரமணி-அம்புஜத் தம்பதியரின் மகன் சபரீஷ்(27). இவர் நேற்று பகல் நேரத்தில் தனது நண்பர்களுடன் நின்று கொண்டிருந்தார்.

    அப்போது சபரீஷ் திடீ ரென சுருண்டு விழுந்தார். அருகில் உள்ள தாலுகா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இருந்தபோதிலும் சபரீஷ் பரிதாபமாக இறந்து விட்டார்.

    பாலக்காடு தென்கரை பகுதியை சேர்ந்த சரோஜினி(56) என்ற பெண் நேற்று பகலில் பஸ்சுக்காக காத்து நின்றார். அப்போது அவர் திடீரென சுருண்டு விழுந்தார். சுய நினைவின்றி கிடந்த அவரை அந்த பகுதியில் நின்றவர்கள் மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். இருந்தபோதிலும் அவர் பரிதாபமாக இறந்தார்.

    சுருண்டு விழுந்து இறந்த 2 வாலிபர்கள் உள்ளிட்ட 3 பேரும் கடும் வெயில் காரணமாகவே இறந்ததாக கூறப்படுகிறது. ஆனால் பிரேத பரிசோதனைக்கு பிறகே அவர்களது இறப்புக்கான சரியான காரணம் தெரியவரும் என்று போலீசார் கூறியுள்ளனர்.

    இருந்தபோதிலும் கேரளாவில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.

    • மாலையில் மாடுகள் திரும்பியபோது வரும் வழியில் ஒன்றன் பின் ஒன்றாக மொத்தம் 9 பசு மாடுகள் மர்மமான முறையில் இறந்து விழுந்தன.
    • மாடுகள் மேய்ச்சலுக்கு செல்லும் வழியில் நெற்பயிர்கள், நெல்குவியல்கள் உள்ளன.

    காஞ்சிபுரம்:

    வாலாஜாபாத் அடுத்த தென்னேரி கிராமத்தில் ஏராளமானோர் மாடுகள் வளர்த்து வருகிறார்கள். இந்த நிலையில் வழக்கம் போல் ஏராளமான மாடுகள் அப்பகுதியில் உள்ள காட்டுப்பகுதிக்கு மேய்ச்சலுக்கு சென்றன. மாலையில் மாடுகள் திரும்பியபோது வரும் வழியில் ஒன்றன் பின் ஒன்றாக மொத்தம் 9 பசு மாடுகள் மர்மமான முறையில் இறந்து விழுந்தன. மேலும் 4 மாடுகள் மயக்கமடைந்து உள்ளன. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் ஏராளமானோர் அங்கு திரண்டனர்.

    இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறும்போது, மாடுகள் மேய்ச்சலுக்கு செல்லும் வழியில் நெற்பயிர்கள், நெல்குவியல்கள் உள்ளன. அதை மாடுகள் சேதம் செய்ததால் மாடுகளுக்கு ஏதேனும் பூச்சி மருந்து கலந்த உணவை அளித்திருக்கலாம் என்றனர்.

    இதுபற்றி அறிந்ததும் வாலாஜாபாத் வட்டாட்சியர் சதீஷ் , வாலாஜாபாத் போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரபாகர் விரைந்து வந்தனர். மேலும் கால்நடை மருத்துவர்கள் மாடுகள் இறப்புக்கான காரணம் குறித்து பரிசோதனை செய்தனர்.

    • இன்று காலை வழக்கம்போல் தொழிலாளர்கள் உடைக்கப்பட்ட பெரிய அளவிலான பாறைகளை உடைக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டிருந்தனர்.
    • வெடி விபத்தின்போது அருகே உள்ள ஒருசில வீடுகளிலும் விரிசல் ஏற்பட்டு சேதம் அடைந்துள்ளன.

    காரியாபட்டி:

    விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியை அடுத்த ஆவியூர் அருகே அமைந்துள்ளது கீழஉப்பிலிக்குண்டு கிராமம். இந்த கிராமத்தையொட்டிய பகுதியில் தனியாருக்கு சொந்தமான கல்குவாரி ஒன்று செயல்பட்டு வருகிறது.

    முறையான லைசென்ஸ் பெற்று இயங்கிவரும் இங்கு ஆவியூர், கீழஉப்பிலிக்குண்டு, கடம்பன்குளம் ஆகிய ஊர்களை சேர்ந்த சுமார் 30-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகிறார்கள்.

    இங்கு பாறைகளை உடைத்து ஜல்லிக்கற்கள், எம்.சாண்ட் மணல் உள்ளிட்ட கட்டுமானத்திற்கு தேவையான பொருட்கள் தயாரித்து உள்ளூர் மற்றும் வெளி மாவட்டங்களுக்கு வாகனங்களில் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. கடந்த சில ஆண்டுகளாகவே குடியிருப்புக்கு அருகாமையில் இயங்கி வரும் இந்த கல் குவாரியை அப்புறப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.

    இருந்தபோதிலும் அதில் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அவ்வப்போது இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் பாறைகளை உடைக்க பயன்படுத்தப்படும் அதிக ஒலி எழுப்பும் வெடிகளால் அருகிலுள்ள குடியிருப்பு பகுதிகள் வரை ஜல்லி துகள்கள் வந்து விழுவதாகவும், இதனால் உயிருக்கு அச்சம் ஏற்பட்டு வாழும் நிலை இருப்பதாகவும் கடம் பன்குளம் உள்ளிட்ட பகுதி மக்கள் புகார் கூறி வந்தனர்.

    இந்தநிலையில் இன்று காலை வழக்கம்போல் தொழிலாளர்கள் உடைக்கப்பட்ட பெரிய அளவிலான பாறைகளை உடைக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டிருந்தனர். அதேசமயம் வெளிமாநிலத்தில் இருந்து பாறை உடைக்கும் பணிக்காக ஒரு வாகனத்தில் வெடிபொருட்கள் கொண்டு வரப்பட்டது. அதனை அந்த குவாரியில் இருந்து சுமார் 200 மீட்டர் தூரத்தில் உள்ள ஒரு தனி அறையில் இறக்கி வைக்கும் பணி ஒருபுறம் நடைபெற்று கொண்டிருந்தது.

    அப்போது எதிர்பாராதவிதமாக அந்த வெடிபொருட்கள் திடீரென்று பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. அதிலிருந்து எழும்பிய தீப்பிழம்பு பல மீட்டர் தூரத்திற்கு புகை மண்டலமாக காணப்பட்டது. இந்த சத்தம் சுற்றியுள்ள பல கிலோ மீட்டர் தூரத்திற்கு கேட்டுள்ளது. தகவல் அறிந்ததும் தீயணைப்பு வீரர்கள் மற்றும் மீட்புக்குழுவினர் விபத்து நடந்த பகுதிக்கு விரைந்தனர். அப்போது வெடிபொருட்கள் பாதுகாப்பு அறை முற்றிலும் தரைமட்டாகி கிடந்தது. மேலும் அங்கிருந்து சில மீட்டர் தூரத்தில் 3 பேரின் உடல்கள் சின்னாபின்னமாகி சிதறிக்கிடந்தன.

    மேலும் அந்த பகுதியில் வெடி மருந்துகள் அதிகம் இருப்பதாலும், எப்போது வேண்டுமானாலும் வெடிக்கலாம் என்ற அச்சம் இருந்ததாலும் மீட்புக்குழுவினரால் உடனடியாக அருகில் செல்ல முடியவில்லை.

    இந்த வெடி விபத்தின்போது அருகே உள்ள ஒருசில வீடுகளிலும் விரிசல் ஏற்பட்டு சேதம் அடைந்துள்ளன. இந்த வெடி விபத்து சம்பந்தமாக கடம்பன்குளம் மற்றும் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் தூத்துக்குடி-மதுரை தேசிய நெடுஞ்சாலை ஒன்று திரண்டனர். பின்னர் அவர்கள் ஆவியூர் பைபாஸ் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதற்கிடையே மேலும் சிலரது உடல்கள் வீசப்பட்டு கிடப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. எனவே பலி எண்ணிக்கை உயரும் அபாயம் இருப்பதாக கூறப்படுகிறது.

    • இன்று காலை திருச்செந்தூரில் இருந்து டெம்போ வேனை வாடகைக்கு பிடித்து கன்னியாகுமரிக்கு சுற்றுலா புறப்பட்டனர்.
    • கல்லாமொழி அனல் நிலையத்தில் இருந்த ஆம்புலன்ஸ் மூலம் காயமடைந்தவர்களை மீட்டு திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர்.

    திருச்செந்தூர்:

    சென்னை, கொடுங்கையூரை சேர்ந்தவர் சகாயராஜ். இவரது குடும்பத்தினர் 11 பேர் சென்னையில் இருந்து நேற்று காலை திருச்செந்தூருக்கு ரெயிலில் வந்து விடுதியில் தங்கி உள்ளனர்.

    இந்நிலையில் இன்று காலை திருச்செந்தூரில் இருந்து டெம்போ வேனை வாடகைக்கு பிடித்து கன்னியாகுமரிக்கு சுற்றுலா புறப்பட்டனர். காலை 10 மணியளவில் கல்லாமொழி, பள்ளிவாசல் நுழைவாயில் எதிரே சென்று கொண்டிருந்தபோது எதிரே வந்த மற்றொரு வேன் மீது நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.

    இதில் டெம்போ வேன் உருண்டு ஓடியது. அதில் பயணித்த சகாயராஜின் மனைவி சுமதி (வயது 37) படுகாயமடைந்து சம்பவ இடத்திலே உயிரிழந்தார். உடனடியாக அங்கிருந்தவர்கள் கல்லாமொழி அனல் நிலையத்தில் இருந்த ஆம்புலன்ஸ் மூலம் காயமடைந்தவர்களை மீட்டு திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர்.

    மேலும் சகாயராஜின் தாயார் மேரி (60), மகன்கள் தன்ஷிக் (14), மனோஜ்குமார் (13), ரமேஷ் என்பவரது மகள் திவ்யதர்ஷினி (8), டெம்போ வேன் டிரைவர் குலசை, முப்புடாதி அம்மன் கோவில் தெருவை சேர்ந்த சுப்பையா மகன் விஜயகுமார்(38) ஆகியோர் பலத்த காயமடைந்தனர்.

    இதில் மேரி மற்றும் தன்ஷிக் தூத்துக்குடி அரசு மருத்துவமனையிலும், டிரைவர் சுப்பையா திருச்செந்தூர் தனியார் மருத்துவமனையிலும், மற்றவர்கள் திருச்செந்தூர் அரசு மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்து குறித்து திருச்செந்தூர் தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×