search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "General Medicine"

    • கோடைகாலத்தில் உஷ்ணமும் வியர்வையும் உடலை இயல்பாகவே பலவீனப்படும்.
    • 3 முதல் 4 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும்.

    கோடைகாலம் என்பது இளவேனிற், முதுவேனிற் காலங்களையே குறிக்கும். சித்திரை, வைகாசி மாதங்கள் இளவேனிற் காலம் என்றும், ஆனி, ஆடி மாதங்கள் முதுவேனிற் காலம் என்றும் அழைக்கப்படும்.

    ஆனால் தற்சமயம், பின்பனி காலமாகிய மாசி, பங்குனி மாதங்களிலேயே வெயில் வறுத்தெடுத்து வியர்வைத் துளி ஆவியாகும் அளவுக்கு பருவநிலை மாற்றங்கள் பாடாய்படுத்துகிறது.

    கோடைகாலத்தில் ஏற்படும் உஷ்ணமும் வியர்வையும் நம் உடலை இயல்பாகவே பலவீனப்படுத்துகின்றது. கோடை காலத்தில் அதிகரிக்கும் வெப்பம் காரணமாக பல்வேறு பாதிப்புகள், நோய்களை நாம் சந்திக்கிறோம்.

    இந்த நோய்களுக்கு இயற்கையான முறையில் நமது வீடுகளில் உள்ள இயற்கை பொருட்களை பயன்படுத்தியும், எளிய சித்த மருந்துகளை பயன்படுத்தியும் தீர்வு காணலாம்.

    நம் உடலின் சராசரி வெப்பநிலை 98.4 டிகிரி பாரன்ஹீட். கோடைகாலத்தில் வெப்பம் 100 டிகிரியை தாண்டும். சில இடங்களில் வெப்ப அலை கடுமையாக வீசும். அப்போது வெயில் அளவு 106 முதல் 112 டிகிரி பாரன்ஹீட் வரை அதிகரிக்கும்.

    இது போன்ற சூழ்நிலையில் உடல் வெப்பம் அதிகரித்து உடலில் நீர்ச் சத்து குறைந்து களைப்பு, மயக்கம் வரலாம். வெப்ப தாக்குதல் அதிகமாகும் போது ஹீட் ஸ்ட்ரோக் எனப்படும் வெப்ப பக்கவாதம் தாக்கும் ஆபத்து உள்ளது. அதுபோன்ற நிலையில் உடல் உறுப்புகளுக்கு பாதிப்பு ஏற்படலாம்.

    சில நேரங்களில் உயிருக்கே ஆபத்தாய் முடியலாம். எனவே இதில் இருந்து பாதுகாக்க கவனமாக இருக்க வேண்டும்.

    கோடைகால நோய்கள்

    கோடைகாலத்தில் டைபாய்டு, மஞ்சள் காமாலை, அமீபியாசிஸ், அம்மை போன்ற நோய்கள் பரவும். இயற்கையிலேயே கோடைகாலத்தில் நம் உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி மற்றும் உடல் வன்மை குறைந்து காணப்படும். ஆகையால் தான் மாசி முதல் ஆடி வரையுள்ள காலம் `ஆதாந காலம்' என்று சித்த மருத்துவத்தில் குறிப்பிடப்படுகிறது.

    நாம் பருகும் நீரும், உண்ணும் உணவும் சுத்தமானதாக இருக்க வேண்டும். 3 முதல் 4 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். குடிக்கும் நீரை கொதிக்க வைத்து வடிகட்டி ஆறவைத்து பருகலாம். நீர்ச்சத்து நிறைந்த பழங்கள், காய்கறிகளை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். சோம்புத் தண்ணீர், சீரகத் தண்ணீர் குடிக்க வேண்டும்.

     வியர்க்குரு:

    கோடை காலத்தில் தான் வியர்வை சுரப்பிகளில் அழுக்குகள் சேர்ந்து வியர்க்குருக்கள் தோன்றும். அதிகப்படியான வியர்வை பிசுபிசுப்பால் சில கிருமிகள் வியர்வையுடன் சேர்ந்து தேமல், படை, தினவு போன்ற சரும தொற்றுகளை ஏற்படுத்தும்.

    மருந்து:

    சிறிதளவு அருகம்புல்லின் சாறு எடுத்து அதனுடன் சமஅளவு தேங்காய் எண்ணெய் சேர்த்து காய்ச்சி ஆற வைத்து ஒரு பாட்டிலில் வைத்துக்கொள்ளுங்கள். இந்த எண்ணெய்யை அடிக்கடி தோலின் மீது பூசி பயன்படுத்த வேண்டும்.

     நலங்கு மாவு:

    குளிப்பதற்கு நலங்கு மாவு பயன்படுத்தலாம். நலங்கு மாவு என்பது வெட்டிவேர், விலாமிச்சுவேர், கோரைக்கிழங்கு, கிச்சிலி கிழங்கு, பாசிப்பயறு, கார்போகரிசி, சந்தனம் இவைகளை சமஅளவில் எடுத்து பொடித்த பொடியாகும். இதை சோப்பிற்கு பதிலாக உடலில் தேய்த்து குளித்து வரவேண்டும். இதனால் தேமல், படை, தினவு, தோல் வறட்சி இவைகள் நீங்கி தோல் பளபளப்பாகவும் புத்துணர்ச்சியாகவும் காணப்படும்.

    அதிகப்படியான வியர்வைக்கு:

    உள்ளங்கை, உள்ளங்கால் வியர்வை, தோலின் வியர்வை, வியர்வை நாற்றம் அதிகம் உள்ளவர்கள் ஆவாரம்பூ, மகிழம்பூ இவை இரண்டையும் டீ போல போட்டு குடித்தும், வெளிப்பூச்சாக ஆவாரம்பூ, மகிழம்பூ, கஸ்தூரி மஞ்சள், வேப்பிலை இவைகளை சமஅளவில் அரைத்து தேய்த்து குளித்தும் வரலாம்.

    தலை அரிப்பு, பொடுகு, முடி உதிர்தல்:

    வெயில் காலத்தில் பிரத்தியேகமாக ஏற்படும் தலை அரிப்பு, பொடுகு, முடி உதிர்தல் இவைகளை நீக்க கடுக்காய்த் தோல், நெல்லிவற்றல், மிளகு, கஸ்தூரி மஞ்சள், வேப்பம் வித்து இவைகளை சமஅளவு எடுத்து பொடித்து பசும்பாலில் காய்ச்சி குளிப்பதற்கு 15 நிமிடம் முன்பாக தலையில் நன்றாக தேய்த்து குளித்து வந்தால் உடல் சூடு தணிந்து கண்களுக்கும் நல்ல குளிர்ச்சி உண்டாகும்.

    சிறுநீரகக் கற்கள்:

    போதிய அளவு தண்ணீர் குடிக்காமல் இருத்தல், வெயிலில் அலைதல், அசைவ உணவுகளை அதிகமாக விரும்பி சாப்பிடுதல் இவைகளால் உணவில் உள்ள அதிகப்படியான கால்சியம், ஆக்சலேட், பாஸ்பரஸ் போன்றவை சிறுநீரகம் மற்றும் சிறுநீரகப்பாதையில் தேங்கி கற்களாக உருவாகின்றது. மேலும் சிறுநீரகத் தொற்றினாலும் கற்கள் உருவாகும். சிறுநீரை அடக்காமல் கழித்து விடவேண்டும்.

    வெட்டிவேர், நன்னாரி வேர் கலந்த தண்ணீர் குடிக்கலாம். சுரைக்காய், வாழைத்தண்டு, சவ்சவ், முள்ளங்கி, பீர்க்கங்காய், எலுமிச்சம்பழம், இளநீர், பீன்ஸ் இவைகளை உணவில் அதிகமாக சேர்த்துக் கொள்ள வேண்டும்.

    சிறுகன்பீளை செடி, நெருஞ்சில் விதை இவைகளை தண்ணீரில் கொதிக்க வைத்து வடிகட்டி குடித்து வர வேண்டும். வாரம் இருமுறை எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும்.

     சின்னம்மை:

    கோடைகாலத்தில் காணப்படும் தொற்றுகளில் முதன்மையானது சின்னம்மை. இது ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு நேரடித்தொடர்பு, காற்று மூலமாக எளிதில் தொற்றும் நோய். முதல் அறிகுறியாக காய்ச்சல், உடல்வலி, கொப்புளங்களை ஏற்படுத்தும்.

    கொப்புளங்களை நகங்களால் கீறவோ, கிள்ளவோ கூடாது. ஒரு வாரத்தில் தானாகவே மறைந்து விடும். வேப்பிலை, வேப்பிலை தளிரில் படுக்க வைக்க வேண்டும். வேப்பிலை, மஞ்சள் அரைத்த நீரால் உடலைக் கழுவி சுத்தம் செய்ய வேண்டும்.

    சீரகம், கொத்தமல்லி சேர்த்து கொதிக்க வைத்த நீரை அடிக்கடி குடித்து வரவும். நுங்கு, இளநீர், பதனீர், தர்ப்பூசணி, கிர்ணி, முலாம்பழம், மோர், சின்ன வெங்காயம், கமலா ஆரஞ்சு, சாத்துக்குடி போன்ற உணவுகளை அடிக்கடி எடுக்க வேண்டும்.

    தசைப்பிடிப்பு வலிகள்:

    கோடைகாலத்தில் ஏற்படும் அதிவியர்வை, நீரிழப்பு, தொற்று நோய்களான வாந்தி, வயிற்றுப்போக்கு முதலியவற்றால் உடலில் உள்ள பொட்டாசியம் அளவு குறையும். உடலில் உள்ள நரம்புகள் மற்றும் தசைகளின் இயக்கத்திற்கு பொட்டாசியம் அவசியமான ஒன்று. இது குறைந்தால் உடல் களைப்படைந்து தசைகள் இழுத்துக் கொள்ளும். சில நேரங்களில் கால் மூட்டுகள் வலுவிழந்து நடக்க முடியாத நிலை கூட ஏற்படும்.

    இதைத் தவிர்க்க பொட்டாசியம் நிறைந்த உணவுகளான இளநீர், தர்ப்பூசணி, வெள்ளரி, கொய்யா, திராட்சை, வாழைப்பழம், நுங்கு, பதநீர் போன்றவற்றை எடுத்துக் கொள்ள வேண்டும்.

    கோடை காலத்தில் சூரியக் கதிர்களில் இருந்து வரும் புறஊதாக் கதிர்களில் ஒருவகை தோலின் ஆழம் வரை ஊடுருவி செல்லக் கூடியது. இதனால் ஒவ்வாமை, தோல் சுருக்கங்கள் மற்றும் இளவயதிலேயே வயதான தோற்றம் போன்றவைகளை ஏற்படுத்தும்.

    மற்றொரு வகை கதிர்கள் தோலின் மேற்பகுதியை ஊடுருவி செல்லக் கூடியது. இவை தோலின் நிறமிச் செல்களை பாதித்து மெலனின் உற்பத்தியை அதிகரிக்கும். இதனால் உடல் கருநிறம் அடைகின்றது.

    இதை தவிர்க்க முகம், உதடுகளில் வெண்ணெய் பூசிக்கொள்ளலாம். உடலில் தேங்காய் எண்ணெய் தேய்த்து கொள்ளலாம். புற ஊதாக்கதிர்கள் உடலை தாக்காதவாறு துணிகளால் உடலை மூடிக் கொள்ளலாம்.

     நீர்க்கடுப்பு-சூடு பிடித்தல்

    கோடையில் நம் உடலில் நீரின் அளவு குறைவதால், வெளியேறும் சிறுநீரின் அளவும் குறைகின்றது. தினமும் 3 முதல் 4 லிட்டர் நீர் குடிக்க வேண்டும். இளநீர், நுங்கு, எலுமிச்சை, நன்னாரி சர்பத், முலாம் பழம், தர்ப்பூசணி பழம், வெள்ளரி போன்ற நீர் சத்துள்ள பழங்கள் சாப்பிட வேண்டும்.

    எலுமிச்சைச்சாறு, பனங்கருப்பட்டி, கொடம்புளி, சுக்குப்பொடி, ஏலப்பொடி, தண்ணீர் சேர்த்து தயாரிக்கப்படும் `பானகம்' உடலுக்கு குளர்ச்சியைத் தரும். இது நீர்க்கடுப்புக்கு அருமருந்தாகும். எலுமிச்சை, கொடம்புளி, புளி, அன்னாசி, மாதுளை போன்ற பல வகையான பானகங்களை கோடைகாலத்தில் குடிக்கலாம்.

    • உடற்பயிற்சி செய்வதையோ, கடுமையான வேலை செய்வதையோ தவிருங்கள்.
    • வியர்வை ஆவியாக மாறுவதற்கு ஏற்ப பருத்தியாலான ஆடைகளை அணியுங்கள்.

    அக்னி நட்சத்திரம் ஆரம்பிப்பதற்கு முன்பே வெயிலின் உக்கிரம் அதிகரிக்க தொடங்கிவிட்டது. நாட்டின் பல நகரங்கள் 100 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையை சர்வ சாதாரணமாக எட்டிப்பிடித்துவிட்டன. இன்னும் அச்சுறுத்தும் வகையில் வெப்ப அலையும் விஸ்வரூபம் எடுத்திருப்பதாக வானிலை ஆய்வு மையம் கூறுகிறது. வெப்ப அலை என்றால் என்ன? அது எதனால் ஏற்படுகிறது? அது என்னென்ன பாதிப்புகளை ஏற்படுத்தும் என்று பார்ப்போம்.

    வெப்ப அலை ஏன் ஏற்படுகிறது?

    வெப்பநிலை அதிகரிக்கும் சமயங்களில் காற்றழுத்தம் குறைவாக இருக்கும் பகுதிகளுக்கு தொடர்ந்து காற்றை அழுத்தித் தள்ளும் செயல்முறை நடக்கும். அப்படி காற்று ஒரே பகுதியில் குவிந்து காற்றழுத்தம் அதிகரிக்கும்போது மேகங்கள் உருவாவது கட்டுப்படுத்தப்படும். வானம் நீல நிறத்தில் தெளிவாக காணப்படும்.

    அப்போது வானின் மேற்பரப்பில் வெப்பம் பரவி வெப்பநிலை உயர்வுக்கு வழிவகுக்கும். இப்படி காற்றின் வடிவங்களில் ஏற்படும் தொடர்ச்சியான மாற்றம் குறிப்பிட்ட பகுதிக்கு வெப்பமான காற்றை கொண்டு வரக்கூடும். அத்துடன் காலநிலை மாற்றம் காரணமாக அதிகரித்து வரும் வெப்பநிலையும் இணைந்து வெப்ப அலைக்கு வித்திடுகின்றன.

    எங்கு வெப்பநிலை அதிகமாகும்?

    பொதுவாகவே இந்தியாவில் ஏப்ரல் மாதத்தில் பல பகுதிகளில் வெப்பநிலை அதிகரிக்க தொடங்கும். இயல்பை விட 4 முதல் 6 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக இருக்கும். குறிப்பாக ஒடிசா, மேற்கு வங்காளம், ஜார்கண்ட், சத்தீஸ்கார், மத்தியபிரதேசம், குஜராத், தமிழ்நாடு, தெலுங்கானா, ஆந்திர பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களின் சில பகுதிகளில் சராசரி வெப்பநிலை 42 டிகிரி செல்சியஸ் முதல் 45 டிகிரி செல்சியஸ் வரை நிலவும்.

    வெப்ப அலை என்றால் என்ன?

    பொதுவாக இந்தியாவின் வட மேற்கு பகுதிகளில் கோடை காலங்களில் நிலவும் அதிகபட்ச வெப்பநிலையை விட கூடுதலாக வெப்பநிலை உயருவதைத்தான் வெப்ப அலை என்று குறிப்பிடுகிறார்கள். பொதுவாக வெப்ப அலை மார்ச் முதல் ஜூன் மாதங்களுக்கு இடைப்பட்ட காலகட்டங்களில் ஏற்படும்.

    சில சமயம் ஜூலை மாதம் வரை நீடிக்கும். இயல்பாக இருக்கும் வெப்பநிலையை விட 3 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை தொடர்ச்சியாக 3 நாட்களுக்கு மேல் நீடித்தால் அதனை வெப்ப அலை என்று வரையறை செய்கிறார்கள். அதிலும் சமவெளி பகுதியில் 40 டிகிரி செல்சியசுக்கும் அதிகமாகவும், கடலோர பகுதிகளில் 37 டிகிரி செல்சியஸுக்கு அதிகமாகவும், மலைப்பகுதிகளில் 30 டிகிரி செல்சியசுக்கு கூடுதலாகவும் வெப்பநிலை உயர்ந்தால் அங்கு வெப்ப அலை வீசுவதாக கணக்கிடப்படுகிறது.

    எத்தகைய பாதிப்புகளை ஏற்படுத்தும்?

    வெப்ப அலையின் தாக்கம் அதிகரிக்கும்போது நீரிழப்பு, சோர்வு, உடல் பலவீனம், தலைச்சுற்றல், தலைவலி, குமட்டல், வாந்தி, தசைப்பிடிப்பு, வியர்வை, வெப்ப பக்கவாதம் போன்ற பாதிப்புகள் எற்படும். உடல் வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸ் அதாவது 104 டிகிரி பாரன்ஹீட்டுக்கும் அதிகமாகும்.

    அதனால் மயக்கம், வலிப்பு, காய்ச்சல் போன்ற பிரச்சினைகள் உண்டாகும். சிலர் கோமா நிலைக்கு தள்ளப்படலாம். வெப்ப அலைகள் உடலில் இருந்து வெளியேறும் வியர்வையின் அளவை அதிகப்படுத்தும். அதனை ஈடுசெய்ய போதுமான திரவ நிலை உணவுகளை உட்கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் நீரிழப்புக்கு வழிவகுக்கும்.

     வெப்ப அலை வீசும் சமயத்தில் எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கைகள்:

    * தாகம் எடுக்காவிட்டாலும் நாள் முழுவதும் தண்ணீர் மற்றும் திரவ பானங்கள் அருந்திக்கொண்டிருக்க வேண்டும். பருகும் தண்ணீர் அறை வெப்பநிலைக்குள்ளாகவே இருக்க வேண்டும்.

    குறிப்பாக குளிர்ந்த நீர் அல்லது ஐஸ் நீர் பருகுவதை தவிர்க்கவும். அதிலும் வெப்பநிலை 40 டிகிரி செல்சியல் நிலையில் இருந்தால் குளிர்ந்த நீரை அறவே தவிர்க்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள். அதனை பருகுவது ரத்த நாளங்களில் பாதிப்பை ஏற்படுத்தும்.

    * வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸுக்கும் அதிகமாக இருக்கும் சமயங்களில் வெளியே சென்று விட்டு வீட்டுக்குள் நுழைந்தால் உடனே கை, கால்களை கழுவக்கூடாது. அறை வெப்பநிலைக்கு உடல் தன்னை தயார் செய்த பிறகு அல்லது அரை மணி நேரம் கழித்து கை, கால்களை கழுவவோ, குளிக்கவோ செய்யலாம்.

    * வெப்பம் அதிகம் நிலவும் வேளையில் சோர்வாக இருந்தால், உடனடியாக குளிர்ந்த நீரை குடிப்பதைத் தவிர்க்க வேண்டும். அது நரம்புகள், ரத்த நாளங்கள் சுருங்குவதற்கு வழிவகுக்கும். பக்கவாதத்திற்கும் வித்திடும்.

    * வெப்பம் அதிகம் நிலவும் சமயத்தில் உடற்பயிற்சி செய்வதையோ, கடுமையான வேலை செய்வதையோ தவிருங்கள்.

    * உடலில் இருந்து வெளிப்படும் வியர்வை ஆவியாக மாறுவதற்கு ஏற்ப பருத்தியாலான ஆடைகளை அணியுங்கள்.

    * வெப்பநிலை அதிகமாக இருக்கும் சமயத்தில் குளிரூட்டப்பட்ட அறை, நூலகம் மற்றும் உயரமான அடுக்குமாடி கட்டிடங்களில் நேரத்தை செலவிடலாம். தினமும் இருமுறை குளியல் போடலாம்.

    • முக்கனிகளில் பிரபலமான கனி வாழை.
    • அனைத்து காலநிலைகளிலும் கடைகளில் எளிதில் கிடைக்கும்.

    முக்கனிகளில் பிரபலமான கனி வாழையாக கருதப்படுகிறது. அனைத்து காலநிலைகளிலும் கடைகளில் எளிதில் கிடைக்கக் கூடியதாக உள்ளது. வாழைப்பழத்தின் நன்மைகள் பற்றி இப்பொழுது பார்ப்போம்.

    இரும்புச்சத்து வாழைப்பழத்தில் அதிகம் இருப்பதால், இதனை உட்கொள்வதால், ரத்த சோகை நீங்கி, ரத்த அணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என ஆராய்ச்சிகளில் கண்டறியப்பட்டுள்ளது.

    வாழைப்பழத்தில் உள்ள ஃபுருக்டோஸ், குளுக்கோஸ், மற்றும் சுக்ரோஸ், உடலுக்கு ஆற்றலையும் சுறுசுறுப்பையும் உடனடியாகக் கொடுக்கும். இதனால் தான் விளையாட்டு வீரர்கள் அடிக்கடி வாழைப்பழத்தை விரும்பி சாப்பிடுகின்றனர்.

    வருடம் முழுவதும் கிடைக்கக்கூடியது, வாழைப்பழம். 100 கிராம் பழத்தில் 90 கலோரியை இது தருகிறது. தவிர, வைட்டமின்கள், தாது உப்புக்கள் இதில் நிறைவாக உள்ளன.

    உடல் எடை குறைவாக உள்ள குழந்தைகளுக்கு தினசரி வாழைப்பழம் கொடுப்பது நல்லது. இதில் அதிக அளவில் நார்ச்சத்து உள்ளதால், செரிமானப் பிரச்சினை உள்ளவர்கள் எடுத்துக்கொள்ளலாம். இதில் உள்ள வைட்டமின் பி-6, ரத்தசோகை போன்ற

    குறைபாடுகள் நெருங்காமல் பார்த்துக்கொள்ளும். இதய ரத்தக்குழாய் பாதிப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படுவதற்கான வாய்ப்பை குறைக்கும்.

    தாது உப்புக்களைப் பொறுத்த வரையில், தாமிரம், மெக்னீசியம், மாங்கனீஸ் ஆகியவை குறிப்பிடத்தகுந்த அளவில் உள்ளன. மெக்னீசியம் நம் எலும்புகளின் உறுதிக்கும், இதய பாதுகாப்புக்கும் அவசியமான தாது உப்பு.

    100 கிராம் வாழைப்பழத்தில் 358 கிராம் பொட்டாசியம் உள்ளது. இது, இதயத்துடிப்பை கட்டுக்குள் வைத்திருப்பது, ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்திருப்பது போன்றவற்றை செய்கிறது.

     மசித்த வாழைப்பழத்தில் சிறிது உப்பு சேர்த்து பிசைந்து சாப்பிட்டால், வயிற்றுக்கடுப்பிற்கு நல்ல நிவாரணம் கிடைக்கும். மது அருந்தியதால் ஏற்படும், தலைபாரத்தை போக்குவதற்கு வாழைப்பழ மில்க் ஷேக் சாப்பிட வேண்டும். இதனால் வாழைப்பழம் மற்றும் பாலானது உடலை அமைதிப்படுத்தி, உடலை சீராக இயங்க வைக்கும்.

    ஒவ்வாமையால் கஷ்டப்படுபவர்கள் வாழைப்பழத்தை உட்கொள்வது மிகவும் நல்லது. இதில் அமினோ ஆசிட்டுகள் நிறைந்திருப்பதால், இது ஒவ்வாமை ஏற்படுவதைத் தடுக்க உதவும்.

    தினமும் ஒரு வாழைப்பழத்தை சாப்பிட்டு வந்தால், குடல் கோளாறான அல்சர் பிரச்சினை எளிதில் நீங்கிவிடும். அதிலும் நன்கு கனிந்த பழத்தை சாப்பிட்டால், புண்ணுடன் கூடிய குடல் அலற்சியையும் குணமாக்கும்.

    வாழைப்பழத்தில் உள்ள ட்ரிப்டோஃபேன் என்னும் அமினோ ஆசிட், மூளையில் உற்பத்தியாகும் செரோடோனின் அளவை அதிகரித்து, மன அழுத்தத்தைப் போக்கி, உள்ளத்தை புத்துணர்ச்சியுடன் வைத்துக் கொள்ள உதவுகிறது.

    • நின்று கொண்டே வேலை செய்பவர்களுக்கும் கால்கள் வீங்குவதுண்டு.
    • கால்களில் உள்ள ரத்த நாளங்களுக்கு அதிக அழுத்தம் ஏற்படுகிறது.

    நீண்ட தூர கார், பஸ், ரெயில், விமானப் பயணங்களில் இவ்வாறு கால்களும் பாதங்களும் வீங்குவது சகஜம் தான் ஆசிரியர், காவல் துறையினர், பாதுகாப்பு பணியினர் இவர்களைப் போன்று நாள் முழுக்க நின்று கொண்டே வேலை செய்பவர்களுக்கும் கால்கள் வீங்குவதுண்டு.

    உடல் இயக்கம் இருந்தால்தான். உடலிலுள்ள ரத்தம் மேலே ஏறிச்சென்று இதயத்தை அடையும். இல்லை என்றால் ரத்தம் மேலே ஏறுவதற்கு சற்று சிரமப்படும். தாமதப்படும். தொடர்ந்து நீண்ட நேரம் உட்கார்ந்துகொண்டே இருக்கும்போது கால்களில் உள்ள ரத்த நாளங்களுக்கு அதிக அழுத்தம் ஏற்படுகிறது. இதனால் ரத்தத்திலுள்ள நீர் ரத்தத்தை விட்டு வெளியேறி ரத்த நாளங்களைச் சுற்றியுள்ள திசுக்களில் சேர ஆரம்பித்துவிடுகிறது.

    இதனால் உடலின் கீழ்ப்பகுதியான பாதம், கணுக்கால், கால் களின் கீழ்ப்பகுதி இவைகளில் லேசாக நீர் தேங்க ஆரம்பிக்கும். இதைத்தான் நாம் கால் வீக்கம் என்கிறோம்.

    நீண்ட பயணத்திற்குப் பிறகு இரண்டு கால்களுமே வீங்கியிருந்தால் கவலைப்படத் தேவையில்லை.

    மறுநாள் இரண்டு கால்களையும் சற்று உயரே தூக்கி வைத்துப் படுத்திருந்தாலே கால் வீக்கம் சுத்தமாக வற்றிவிடும்.

     நீங்கள் பயணம் செய்யும்போதும் கால்கள் வீங்குகிறது என்றால் பின்னாளில் இது 'வேரிகோஸ் வெயின்ஸ்' என்று சொல்லக்கூடிய 'விரிசுருள்சிரை நோயில் கொண்டுபோய் விட்டுவிடக்கூடாது. பயணத்தின் போது அடிக்கடி கால் வீக்கம் வருபவர்கள் இதயத்திற்கு ரத்தத்தை எடுத்துச்செல்லும் ரத்தநாளக் குழாய்களின் 'ரத்த ஓட்ட மதிப்பீடு' சோதனையை செய்வது நல்லது.

     உங்கள் கால்களின் மேல் பாதியில் மட்டும் வீக்கம் இருந்தாலோ, ஒரு காலில் மட்டும் தான் வீக்கம் இருக்கிறது என்றாலோ, வலியுடன் வீக்கம் உள்ளது என்றாலோ, கால்களின் மேல் தோல் நிறம் கறுப்பு, பழுப்பு, சிவப்பு நிறத்தில் மாறியிருந்தாலோ நீங்கள் உடனடியாக சிறப்பு ரத்தக் குழாய் சிகிச்சை நிபுணரைச் (வேஸ்குலார் நிபுணர்) சந்தித்து ஆலோசனை பெறுவது நல்லது. ஏனெனில் இது 'ஆழ்சிரை ரத்த உறைவு நோயாக (டி.வி.டி.) இருந்து விடக்கூடாது.

    இதய நோய், கல்லீரல், சிறுநீரக நோய், தைராய்டு கோளாறு, புற்றுநோய், கர்ப்ப காலம், அதிக உடல் எடை உள்ளவர்கள், தூக்கமின்மை நோய் உள்ளவர்கள், உணவில் அதிக உப்பு சேர்த்துக்கொள்பவர்கள், நுரையீரல் நீர் வீக்க நோய் உள்ளவர்கள் இவர்களுக்கெல்லாம் கூட ஒரு காலோ அல்லது இரண்டு கால்களுமோ வீங்குவதும் பின் வற்றுவதும் காணப்படும்.

    இது தவிர எப்பொழுது பயணம் செய்தாலும் இரண்டு கால்களும் வீங்குகிறது என்றால் உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது சிறப்பு ரத்த சிகிச்சை நிபுணரை சந்தித்து ஆலோனை பெறுங்கள்.

    • உடலில் நீர்சத்து குறையாமல் பாதுகாக்க வேண்டும்.
    • வீட்டில் சமைத்த உணவுகளை உண்ண வேண்டும்.

    உச்சி வெயிலில் சாலையில் நடந்து செல்லும் சிலர் திடீரென மயக்கம் அடைந்து விழுவதை காணலாம்.

    வெயிலின் தாக்கம் தாங்க முடியாமல் சுருண்டு விழுந்து மயக்கம் அடைவது மற்றும் உடல் உறுப்புகள் செயல்படாமல் போவது 'ஹீட் ஸ்ட்ரோக்' அல்லது 'வெப்ப பக்கவாதம்' என்று அழைக்கப்படுகிறது. இது பெரும்பாலும் 50 வயதுக்கு மேற்பட்ட நபர்களை பாதிக்கிறது.

    சுற்றுப்புறத்தில் வெப்பம் அதிகரிக்கும்போது உடலின் வெப்பநிலை உயர்ந்து மற்றும் உடலில் ஏற்படும் நீர் வறட்சி காரணமாக இது ஏற்படுகிறது.

    இதன் காரணமாக, உடலின் மத்திய நரம்பு மண்டலம் பாதிக்கப்படும்போது மூளை மற்றும் பிற உறுப்புகளுக்கு சேதம் ஏற்படுகிறது.

    ஒருவருக்கு வெப்பத்தால் பாதிப்பு ஏற்படும்போது தலைச்சுற்றல், தலைவலி, வறண்ட தோல், வியர்வை இல்லாமை, குமட்டல் மற்றும் வாந்தி, விரைவான அல்லது பலவீனமான இதய துடிப்பு, மூச்சு வாங்குதல், குழப்பம், தடுமாற்றம், வலிப்பு, மயக்கம் ஆகியவை ஏற்படலாம்.

    ஒருவருக்கு வெயில் காலங்களில் இந்த அறிகுறிகள் ஏற்பட்டால் தாமதிக்காமல் அவரை குளிர்விக்க முதலுதவி செய்ய வேண்டும்.

    பாதிக்கப்பட்ட நபரை நிழலான பகுதியில் அமர்த்தி, ஆடைகளை தளர்த்தி ஓய்வு கொள்ள செய்ய வேண்டும். உடலில் காற்று படும்படி விட வேண்டும்.

    நோயாளியின் அக்குள், இடுப்பு, கழுத்து மற்றும் முதுகில் ஐஸ் கட்டிகளை கொண்டு ஒத்தடம் கொடுத்து உடல் வெப்பநிலையை குறைக்க வேண்டும். இதனை தொடர்ந்து உடனடியாக மருத்துவரின் உதவியை நாடி தகுந்த மருந்துகளின் துணையோடு அவரை பாதிப்பில் இருந்து மீளச்செய்ய வேண்டும்.

    வெப்பத் தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்கள் வயதானவர்களாகவோ, சிறு குழந்தைகள் மற்றும் நாள்பட்ட நோய்களால் ஏற்கனவே பாதிப்புக்கு உள்ளாகியவர்களாக இருந்தால் அவர்களுக்கு ஐஸ் கட்டிகளை கொண்டு ஒத்தடம் கொடுக்கக்கூடாது. அவ்வாறு செய்வது ஆபத்தாக முடியும். இவர்களுக்கு சற்று காற்றுபடும்படி ஓய்வு கொடுத்து தாமதிக்காமல் மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளிப்பதே தீர்வாகும் என்று டாக்டர்கள் தெரிவிக்கிறார்கள்.

     உடலில் நீர்சத்து குறையாமல் பாதுகாக்க பயணத்தின் போது குடிநீரை எடுத்துச் செல்ல வேண்டும். ஓஆர்எஸ், எலுமிச்சை ஜூஸ், இளநீர், மோர் மற்றும் பழச்சாறுகள் குடிக்க வேண்டும். பருவகால பழங்கள், காய்கறிகள் மற்றும் வீட்டில் சமைத்த உணவுகளை உண்ண வேண்டும், முடிந்த வரை வீட்டுக்குள் பாதுகாப்பாக இருக்க வேண்டும், நல்ல காற்றோட்டம் மற்றும் குளிர்ந்த இடங்களில் இருக்க வேண்டும்,

    இளநீர் போன்ற திரவங்களை கொடுங்கள், தனியே வசிக்கும் முதியவர்களின் உடல்நிலையை தினமும் இருமுறை சரிபார்த்துக் கொள்ள வேண்டும். வெப்பத்தை தணிக்க ஈரமான துண்டுகளால் கழுத்து மற்றும் கைகளில் துடைக்கவேண்டும். போதிய இடைவேளைகளில் நீர் அருந்துவதை உறுதி செய்ய வேண்டும்.

    • உடல் எடை குறைக்கும் அறுவை சிகிச்சையில் அபாயங்கள் இருக்கின்றன.
    • அறுவை சிகிச்சை பற்றி பரவும் செய்திகளும் உயிரிழப்பும் அச்சத்தை ஏற்படுத்துகிறது.

    உடல் பருமனாக இருப்பவர்களை வேடிக்கையாகப் பார்த்து வியந்த காலம் மாறி, இன்று பெரும்பாலானோருக்கு அது பொதுப் பிரச்சனையாகிவிட்டது. வாழ்க்கை முறை மாற்றம், உணவுப்பழக்கம், வளரும் சூழல் என உடல் பருமனுக்கான காரணங்கள் நம் வாழ்க்கையோடு பின்னிப் பிணைந்திருக்கின்றன. அதனால் இன்று உலகை ஆட்டுவிக்கும் பெரும் பிரச்னையாக உடல் பருமன் உருவெடுத்து நிற்கிறது.

    சாதாரணமாக உடல் எடையை குறைக்க மாத்திரை, டயட் என பல வழிமுறைகள் உண்டு. ஆனால், குறிப்பிட்ட உடல் எடையை தாண்டியவர்களுக்கு அறுவை சிகிச்சை ஒன்றே தீர்வாக இருக்கிறது என்கிறார்கள் மருத்துவர்கள்.

    ஆனால், உடல் எடை குறைக்கும் அறுவை சிகிச்சையில் பல அபாயங்கள் இருக்கின்றன. மேலும் எல்லோருக்கும் இது பொருந்திப் போவதும் இல்லை. சில மருத்துவமனைகள் அந்த அபாயங்களை மறைத்து அனைவருக்கும் அறுவை சிகிச்சை செய்து காசு பார்ப்பதும் நடக்கிறது.

    உடற்பயிற்சி, டயட் போன்றவற்றை செய்து உடல் எடையைக் குறைக்க சோம்பல் படும் இளம் தலைமுறையை, இந்த அறுவை சிகிச்சை ஈர்க்கிறது. இச்சூழலில் அண்மைக்காலமாக இந்த அறுவை சிகிச்சை பற்றி பரவும் செய்திகளும், தற்போது ஏற்பட்டுள்ள உயிரிழப்பும் பெரும் அச்சத்தை உருவாக்கியிருக்கிறது.

     கொழுப்பை அகற்றும் சிகிச்சை முறைகள்

    கேஸ்ட்ரிக் பைபாஸ் அறுவை சிகிச்சையிலும் இரைப்பையின் அளவில் ஒரு பகுதி நீக்கப்பட்டு விடும். நாம் உண்ணும் உணவு சிறுகுடல்களில் தான் சத்துகளை உட்கிரக்கும். சிறுகுடலின் ஒரு பகுதியை அறுவை சிகிச்சை மூலம் நீக்குவதால், உணவின் மூலம் கிடைக்கக் கூடிய சத்துகள் குறைக்கப்படுகிறது. அதனால் எடை கட்டுக்குள் வரும்.

    உடலில் குறிப்பிட்ட பகுதியில் மட்டும் தேங்கியிருக்கும் கொழுப்பை நீக்க லைப்போசக்ஷன் (Liposuction) அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது.

    லைப்போசக்ஷன் சிகிச்சையின் மூலம் கை, வயிறு, இடுப்பு, தொடை, மார்புப் பகுதியில் உள்ள அதிகப்படியான கொழுப்பு அகற்றப்படும்.

    அல்ட்ரா சவுண்ட் துணையுடனும், சாதாரண ஊசி மூலமாகவும் உடலில் உள்ள கொழுப்பு உறிஞ்சி எடுக்கப்படும்.

    பொதுவாக, உடல் பருமன் சிகிச்சைக்காக வருபவர்களுக்கு ஏற்கெனவே தைராய்டு, சர்க்கரைநோய், இதயம் தொடர்பான நோய்கள் இருக்கலாம். எனவே, அறுவை சிகிச்சைக்கு முன்பாக, அவரது உடல்நிலை தொடர்பான முழுமையான விவரங்களைக் கேட்டு, பரிசோதித்து அறிந்துகொள்ள வேண்டும்.

    யாரெல்லாம் செய்துகொள்ளலாம்?

    நாள்பட்ட டைப் 2 சர்க்கரைநோய், உயர் ரத்த அழுத்தம், இதயநோய், அதிகக்கொழுப்பு, தூக்கத்தில் மூச்சுத்திணறல், நீண்டநாள் செரிமானக் கோளாறுகள், சர்க்கரை நோய் போன்ற மருத்துவப் பிரச்னை உள்ளவர்களுக்கு பி.எம்.ஐ. அளவு 35-க்கு மேலும் இருந்தால் இந்த அறுவை சிகிச்சை செய்துகொள்ளலாம். ஆனால், இந்த பி.எம்.ஐ அளவு குறைவாக இருக்கும் நிலையில், அழகுக்காக சிலர் இந்த அறுவை சிகிச்சை செய்துகொள்ள வருகிறார்கள்.

    உடல் எடையை குறைக்க, உடற்பயிற்சிக் கூடங்கள், உணவுக் கட்டுப்பாடுகள், நடைபயிற்சி, சைக்ளிங் போன்ற சில வழிகள் இருக்கின்றன. அவற்றை மேற்கொண்டு ஆரோக்கியமான முறையில் உடல் எடையை கட்டுக்குள் வைப்பதே சிறந்தது.

    • வெப்ப தாக்குதல் மிகவும் அதிகமானால் ஹீட் ஸ்ட்ரோக் வரலாம்.
    • வெயில் நேரத்தில் தீவிர உடற்பயிற்சிகள் செய்யக்கூடாது.

    வெயில் பாதிப்பினால் உடலில் வெப்பம் அதிகரித்து நீர்ச்சத்து குறைந்து வறட்சி ஏற்பட்டு சோர்வு, களைப்பு, மயக்கம் உண்டாகிறது.

    வெப்ப தாக்குதல் மிகவும் அதிகமானால் 'ஹீட் ஸ்ட்ரோக்' எனப்படும் 'வெப்ப பக்கவாதம் வரலாம். இந்த பாதிப்புக்கு ஆளானவர்களுக்கு உடனடியாக சிகிச்சை அளிக்க வேண்டும். இல்லை என்றால், மூளை, இதயம், சிறுநீரகம் மற்றும் உடல் தசைகளை விரைவாக இது சேதப்படுத்தும். சில சூழ்நிலைகளில் உயிருக்கும் ஆபத்து ஏற்படுத்தும்.

    வெப்ப பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அவசர சிகிச்சை கிடைக்கும் வரை கீழ்க்கண்ட முதல் உதவி அளிக்க வேண்டும்.

    1) பாதிக்கப்பட்டவரை நிழ லான அல்லது குளிரூட்டப்பட்ட இடத்திற்கு அழைத்துச் செல்ல வேண்டும்.

    2) ஈரமான துணி மூலம் உடலை துடைக்கலாம். குளிர்ந்த நீரை உடலில் தெளிப்பதன் மூலம் வெப்பத்தை தணிக்க வேண்டும்.

    3) வியர்வை மூலம் உடலில் உப்பு சத்து குறைவதால், குளிர்பானங்கள் மற்றும் இழந்த உப்பை ஈடுசெய்யும் பானங்களை குடிக்க கொடுக்க வேண்டும்.

    பொதுவாக வெயில் பாதிப்பில் இருந்து உடம்பை பாதுகாப்பதற்கான வழிமுறைகள்:

    1) வெயில் நேரத்தில் தீவிர உடற்பயிற்சிகள் செய்யக்கூடாது, அடிக்கடி முகம், கை.கால்கள் கழுவிக் கொள்ள வேண்டும்.

    2) நைலான். பாலிஸ்டர் போன்ற துணிகளால் செய்த உடைகளை தவிர்த்து பருத்தி உடைகளை அணிய வேண்டும்.

    3) மண் பானையில் வெட்டிவேர் போட்டு மறுநாள் அந்த தண்ணீரை குடிக்கும் பொழுது உடலுக்கு குளிர்ச்சி கிடைக்கும். நா வறட்சி நீங்கும்.

    4) அவ்வப்போது மோர், இளநீர், நுங்கு, பதநீர், நீராகாரம் அல்லது தண்ணீர் குடிக்க வேண்டும். வெயில் காலத்தில் காரமான உணவுகள், அத்துடன் கோழி, நண்டு, இறால் போன்ற உஷ்ணத்தை அதிகப்படுத்தும் அசைவ உணவுகளை தவிர்ப்பது நல்லது.

    5) எலுமிச்சை பழச்சாற்றில் உப்பு, சர்க்கரை சேர்த்து ஜூஸ் போட்டு குடிக்க வேண்டும். நன்னாரி சர்பத், வில்வ பழ சர்பத், பதநீர், இளநீர், கரும்புச் சாறு, தர்ப்பூசணி ஜூஸ், முலாம் பழ ஜூஸ், வெண்பூசணி ஜூஸ், சோற்றுக்கற்றாழை ஜூஸ் இவை கோடை வெயிலுக்கு ஏற்ற பானங்கள்.

    6) வாரம் ஒருமுறை நல்லெண்ணெய் தேய்த்து எண்ணெய் குளியல் எடுப்பது நல்லது.

    சித்த மருத்துவம்:

    1) உடல் வெப்பத்தை தணிப்பதற்கு தண்ணீர் விட்டான் கிழங்கு நெய் - காலை, இரவு 5 மி.லி. வீதம் சாப்பிடலாம்.

    2) உடல் வெப்பம் நீங்க தலையில் தேய்த்து குளிப்பதற்கு பொன்னாங்கண்ணி தைலம், சந்தனாதி தைலம், கரிசாலை தைலம் இவைகளில் ஒன்றை பயன்படுத்தலாம்.

    • திரவ நைட்ரஜன் ஒழுங்காக கையாளப்படாவிட்டால் ஆபத்தானது.
    • கிரையோஜெனிக் தீக்காயங்களை ஏற்படுத்தும்.

    திரவ நைட்ரஜன் ஒழுங்காக கையாளப்படாவிட்டால் ஆபத்தானது. இது உடம்பில் ஏதாவது இடத்தில் பட்டால் உறைபனி அல்லது தீக்காயங்களை ஏற்படுத்தும். இந்த திரவ நைட்ரஜன் ஐஸ்க்ரீம் தயாரிக்கும் பொருட்கள் உறைவதுக்கு பயன்படுத்துவது.

    நைட்ரஜன் ஆக்ஸைடு என்றால் என்ன? அதன் விளைவுகள்

    இந்த திரவ நைட்ரஜன் என்பது மிகக்குறைந்த வெப்பநிலையில் திரவ நிலையில் இருக்கும் நைட்ரஜன் ஆகும். இது ஒரு நிறமற்ற, வாசனையற்ற திரவ நிலையில் உள்ள நைட்ரஜன் திரவம் ஆகும்.

    இதன் டெம்பரேச்சர் மைனஸ் 190 டிகிரி செல்சியஸ். இதனுடைய முக்கியமான பயன்பாடு என்னவென்றால் ஐஸ்கிரீம், இறைச்சி வகைகளை படுத்துவதற்கு பெரிதும் பயன்படுகிறது.

    இந்த திரவ நைட்ரஜனை பயன்படுத்தி எல்லா பொருட்களையும் பதப்படுத்தி பாதுகாக்க முடியும். திரவ நிலையில் இருந்து வாயுவாக வெளிவரக்கூடியது. இது திரவ நிலையில் இருது வாயுவாக மாறும்போது அதன் தன்மை மிகவும் ஆபத்தானது என்கின்றனர் மருத்துவர்கள்.

    அதே நைட்ரஜன் வாயுக்கள் நம் உடலுக்குள் செல்லும் போது கடும் உடல் உபாதைகளை உண்டுபண்ணுகிறது. வயிற்றுவலி, மூச்சுத்திணறல் மற்றும் மரணம் ஏற்படுவதற்கு கூட அதிக வாய்ப்புகள் உண்டு. இந்த திரவ நைட்ரஜன் இன்ஸ்டண்ட்டாக எந்த பொருளையும் உறைய வைக்கும் தன்மை கொண்டது. அதுமட்டுமல்லாமல் திரவ நைட்ரஜன் ஆவியாகும் போது காற்றில் உள்ள ஆக்சிஜன் அளவை குறைக்கக்கூடியது. இதனால் தான் மூச்சுத்திணறல் ஏற்படுகிறது.

    ஒரு லிட்டர் திரவ நைட்ரஜன் 700 லிட்டர் கியாஸ் வாயுவை வெளிப்படுத்தும் தன்மை கொண்டது. இதனால் திரவ நைட்ரஜனில் இருந்து வரும் நீராவி உடல் உள்ளுறுப்புகளுக்குள் சென்று திசுக்களை உறைய வைக்கும் தன்மை கொண்டது. இதனை அளவுக்கு அதிகமாக எடுத்துக்கொள்ளும் போது உடல் உறுப்புகளில் துளையை கூட ஏற்படுத்தக் கூடும். அந்த அளவிற்கு குளிர்ந்த உறைபனி தன்மையை உருவாக்கக் கூடியது.

    பெரும்பாலும் உணவுத்துறையில் ஐஸ்கிரீம் துறையில் மட்டுமே இந்த நைட்ரஜனை பயன்படுத்தி வந்தனர். ஆனால் தற்போது ஒரு கேளிக்கையாக திரவ நைட்ரஜனை பயன்படுத்தி நைட்ரோ ஸ்நாக் என்ற பேரில் கேக், பிஸ்கெட், சாக்லேட் ஆகிய உணவுப்பொருட்களில் இதனை ஊற்றி விற்பனை செய்து வருகின்றனர். இதன் ஆபத்து தெரியாமலேயே மக்கள் இதனை பயன்படுத்தி வருகின்றனர்.

    இந்த திரவ நைட்ரஜன் அளவுக்கு அதிகமாக சேர்க்கப்படும் போது அது பல பின்விளைவுகளை ஏற்படுத்தி மரணத்தை கொடுக்கும் என்று டாக்டர்கள் எச்சரிக்கிறார்கள்.

    உணவுவகைகளில் இந்த நைட்ரஜனை பயன்படுத்தி நைட்ரோ பிஸ்கெட், நைட்ரோ கார்ன் போன்றவைகளில் பயன்படுத்துகின்றனர்.

     நிறைய பேர் இந்த திரவ நைட்ரஜனை ஒரு கொண்டாட்டத்தின் பேரில் கேளிக்கையாக சென்று சாப்பிட்டு வருகின்றனர். அப்படியே உணவினை சாப்பிடும் போது நைட்ரஜன் வாயு முழுவதும் உணவில் இருந்து வெளியேறிய பிறகு சாப்பிட்டால் ஆபத்து எதுவும் இல்லை.

    ஆனால் இந்த திரவ நைட்ரஜனை உணவில் கலந்து சாப்பிடும் போது அந்த வாயுக்கள் வாய் மற்றும் மூக்கு வழியாக வெளியேறுவதை நாம் பார்த்திருப்போம். இந்த உணவுகளை நாம் சாப்பிடும் போது இந்த வாயுக்கள் நம் உடலில் எங்கெல்லாம் படுகிறதோ அந்த உறுப்புகள் எல்லாம் பாதிப்படைய வாய்ப்புகள் அதிகம். அதனால் உறுப்புகள் சேதம் அடையும்.

    இந்த திரவ நைட்ரஜன் ஒரு துளி கண்களில் படும்போது கண்பார்வையை இழந்துவிடும் அபாயம் உண்டு. இதனால் நைட்ரோ ஸ்நாக்ஸ் சாப்பிடும் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இதன் பாதிப்பு என்னவென்றால் எந்த அளவுக்கு நைட்ரோ ஸ்நாக்ஸ் சாப்பிடுகிறோமோ அந்த அளவிற்கு உடலின் உள் உறுப்புகளில் பாதிப்புகள் இருக்கும்.

    இந்த திரவ நைட்ரஜன் உணவுகளில் இவ்வளவு தீங்குகள் இருக்கிறது என்பதை அறியாமலேயே மக்கள் அதனை ஒரு கேளிக்கை பொருளாக நினைத்து சாப்பிட்டு வருகின்றனர். இனியாவது இந்த மாதிரி உணவுகளை தவிர்ப்பது உடலுக்கு நல்லது.

    • தேன் மிகச் சிறந்த உணவுப் பொருளாகும்.
    • தேன் மூலம் எல்லாப் பிணிகளையும் நீக்கமுடியும்.

    * தேன் மிகசிறந்த உணவு பொருளாகும். தேன் மூலம் எல்லா நோய்களையும் குணப்படுத்த முடியும். தேனை பொதுவாக வயிற்றின் நண்பன் என கூறுவது உண்டு. தேன் வயிற்றில் உருவாகும் அழற்சி, புண், பித்தப்பை மற்றும் ஈரல் நோய்கள் அனைத்திறக்கும் மருந்தாக உள்ளது.

    * தினமும் வெறும் வயிற்றில் காலை அல்லது இரவு நேரத்தில் உணவு உண்பதற்கு முன் சுத்தமான தேனை ஒன்று முதல் மூன்று ஸ்பூன் எடுத்து ஆறிய சுடுதண்ணிரில் கலந்து அருந்தி வர வேண்டும். இவ்வாறு செய்தால் இரைப்பை அழற்சி, வயிற்றுப் புண், பித்தப்பை நோய்கள் குணமாகும்.

    * தேனுடன் வெங்காய சாறை கலந்து சாப்பிட்டு வர இரைப்பையில் அளவுக்கு அதிகமாக சுரக்கும் அமிலத்தின் தன்மையை கட்டுப்படுத்துகிறது, இதனால் வயிற்றுப் புண்ணிற்கு அமிலத்தால் ஏற்படுத்தப்படுகிற தூண்டுதலை குறைத்து, வயிற்று வலி மற்றும் எரிச்சலை நீக்குகிறது.

    * எலுமிச்சம் பழச்சாறுடன் தேனை கலந்து அருந்தினால் குமட்டல், வாந்தி, மற்றும் தலைவலி சரியாகும்.

    * கண்பார்வை பிரகாசமாக தெரிய தேனுடன் வெங்காய சாரை கலந்து சாப்பிட்டு வரவேண்டும்.

    * தேனுடன் முட்டை மற்றும் பாலை கலந்து சாப்பிட்டால் ஆஸ்துமா உபாதையில் இருந்து தப்பலாம்

    * உடல் ஆரோக்கியத்திற்கு தேன் மிகவும் நல்லது. தேனும், வெந்நீரும் கலந்து அருந்தினால் பருத்த உடல் மெலியும், ஊளைச் சதை குறையும் உடல் உறுதி அடையும்.

    * இருமல், சளித்தொல்லை, நுரையீரல் தொடர்பான நோய் எதுவாக இருந்தாலும் பார்லி கஞ்சியை வடிகட்டி அதில் தேன் கலந்து சாப்பிட, இருமல் மட்டுப்படும். சளித் தொல்லை குறையும்.

    * தேனையும் மாதுளை ஜூசையும் சம அளவு சேர்த்து தினமும் சாப்பிட்டால் இருதய நோய்கள் தீரும்.

    * உடம்பில் ரத்தக் குறைவு அல்லது ரத்தசோகை நோய் இருந்தால் தேனும், பாலும் சாப்பிட்டு வந்தால் ரத்தசோகை நோய் நீங்கும்.

    * தேனுடன் சுண்ணாம்பைக் கலந்து, நன்றாகக் குழைத்து பழுக்காத கட்டிகள் மேல் பூசி வர கட்டிகள் பழுத்து உடையும்.

    * மீன் எண்ணெயோடு தேனைக் கலந்து உண்டு வந்தால், ஆறாத புண்கள் ஆறிவிடும்.

    * கருஞ்சீரகத்தை நீர் விட்டுக்காய்ச்சி அதில் தேன் கலந்து சாப்பிட, கீழ் வாதம் போகும்.

    * வயிற்றுவலி ஏற்பட்டவர்களுக்கு தொப்புளை சுற்றிலும் தேன் தடவினால் வலி நீங்கும்.

    * தேனோடு பாலோ, எலுமிச்சம் பழச்சாறோ கலந்து சாப்பிட பித்த நீர் தொந்தரவுகள் குறையும். கல்லீரல் வலுவடையும்.

    * ஒரு ஸ்பூன் தேனுடன், ஒரு அவுன்ஸ் இஞ்சிச்சாறு கலந்து காலை நேரங்களில் தொடர்ந்து சாப்பிட்டு வர, ரத்த சுத்திகரிப்பும், ரத்த விருத்தியும் ஏற்படும். நரம்புத் தளர்ச்சிகளும் நீங்கும்.

    * அல்சர் நோய்க்கு சாப்பாட்டிற்கு முன் இரண்டு ஸ்பூன் தேனைத் தொடர்ந்து சாப்பிட்டு வர, குணமாகும்.

    * முருங்கைக்காய்ச் சாறுடன் சமளவு தேன் கலந்து பருகினால் நீர்க்கோவை நீங்கும்.

    * தேன் மிகச் சிறந்த உணவுப் பொருளாகும். தேன் மூலம் எல்லாப் பிணிகளையும் நீக்கமுடியும். அதிகாலையில் வெறும் வயிற்றில் தேனை நாவால் தொட்டு சாப்பிட்டு வந்தால் எந்த வியாதியும் நமக்கு வராது. ஆனால், தேன் சுத்தமான தேனாக இருக்கவேண்டும்.

    * ஒரு டம்ளர் வெந்நீரில் ஒரு டீஸ்பூன் தேன் கலந்து, பின்னர் அதில் அரை எலுமிச்சம்பழச் சாற்றையும் சேர்த்து சாப்பிட்டு வந்தால் உடல் எப்பொழுதும் சுறுசுறுப்பாக இருக்கும். நுரையீரலில் சேர்ந்துள்ள சளி எல்லாம் கண்காணாத இடத்திற்கு ஓடிவிடும். குடல் மற்றும் வயிற்றுக் கோளாறுகள் நீங்கிவிடும்.

    * குளிர்ச்சியால் ஏற்படும் எல்லா வியாதிகளையும் உடல் எதிர்த்து நின்று தடுத்துவிடும். இதய பாதிப்புகள் நீங்கி இதயம் பலம்பெறும். புதிய ரத்தம் உடம்பில் பாய்ந்தோடும். அதிகாலையிலும், படுக்கச் செல்வதற்கு முன்பும் பருகவேண்டும்.

    நெல்லிக்காய்களை துண்டு துண்டாக்கி தேன், ஏலக்காய், ரோஜா இதழ்கள் சேர்த்து இரண்டு நாட்கள் வெயிலில் காய வைக்கவேண்டும். பின்னர் ஒரு ஸ்பூன் வீதம் காலையும், மாலையும் சாப்பிட்டு வந்தால் வறட்டு இருமல் குணமாகிவிடும்.

    * என்றும் இளமையுடன் இருக்க வேண்டும் என விரும்புவோர் தினமும் தேனை அருந்தவேண்டும். நாற்பது வயதைக் கடந்தவர்கள் கண்டிப்பாகத் தினமும் தேனை அருந்திவர வேண்டும்.

    * சிறந்த மருத்துவரும், மாபெரும் சிந்தனையாளருமான ஹிப்போ கிரேட்ஸ் 107 வயது வரை நோய் நொடியின்றி, திடகாத்திரமாக புலன்கள் பலம் நிறைந்தவராக வாழ்ந்தார். இதற்குக் காரணம் தேன் தான். ``ஒவ்வொரு நேரமும், உணவு உண்ணும்போது தேனையும் சேர்த்து உண்டு வந்தேன்'' என்று கூறினார் அவர்.

    * நாம் உண்ணும் உணவுகள் இரைப்பையில் சென்று சேருகிறது. அங்கு ஜீரண உறுப்புகள் எல்லாம் ஒன்று சேர்ந்து உணவை ஜீரணித்து பலவித சத்துக்களை தனித்தனியாகப் பிரித்து, பின்பு உடல் முழுவதும் அனுப்புகின்றன. இரைப்பையின் பணி சீராக நடப்பதற்கு தேன் மிகவும் உதவுகிறது. ஜீரணச் சத்து குறைந்திருந்தால் ஒரு டம்ளர் பாலில் ஒரு ஸ்பூன் தேன் கலந்து சாப்பிட்டால் ஜீரண உறுப்புகள் பலம் பெற்றுவிடும். இரைப்பையின் பணி கெட்டுவிட்டால் உடம்பு அவ்வளவுதான்.

    * மூட்டு வலிகளுக்குச் சிறந்த மருந்து தேன் தான். வலி உள்ள இடத்தில் நன்றாக தேனை தேய்த்துவிட வேண்டும். அத்துடன் எப்பொழுது உணவு உட்கொண்டாலும் ஒரு ஸ்பூன் தேனையும் உடனே உட்கொள்ள வேண்டும். மூட்டு எலும்புகள் வலிமையாக இருக்கும்.

    * படுக்கையே கதியாகக் கொண்டிருக்கும் பிணியாளர்கள், பாலில் கொஞ்சம் தேன் கலந்து தவறாமல் குடித்து வந்தால், விரைவில் தெம்பு ஏற்பட்டு சுறுசுறுப்புடன் செயல்படத் தொடங்கிவிடுவார்கள்.

    * கொம்புத்தேன், மலைத்தேன், குறிஞ்சித்தேன் என்று தேனில் அறுபது வகை உண்டு. ஒவ்வொரு வகை தேனுக்கும் ஒவ்வொரு சிறப்பு குணம் உண்டு. ஆஸ்துமா, அலர்ஜி தொல்லைகளில் இருந்து விடுபட தினமும் தேனை பருகி வரவேண்டும்.

    தேன் நமது உடலுக்கு கார்போஹைட்ரேட் சக்திகளை அளித்து, நமக்குத் தேவையான சக்தியைத் தருகிறது. பிற உணவுகளைப் போல வயிற்றில் தங்கிப் புளிக்கும் அபாயமோ, ஜீரணக் கோளாறோ எல்லாம் இதில் இல்லை. இதில் இரும்பு, தாமிரம், மங்கனீசு, பொட்டாசியம் போன்ற சத்துக்கள் உள்ளதால் நல்ல ரத்த விருத்தி ஏற்படும்.

    ஒரு ஸ்பூன் தேனை இரவில் படுக்கும்போது உண்டு. வந்தால் அடிக்கடி சிறுநீர் கழிக்கும் நிலை மாறும். நரம்புத் தளர்ச்சிக்குத் தேனைவிட சிறந்த மருந்து இல்லை. தேனை துளசிச் சாற்றில் கலந்து உபயோகிப்பது சளி, தொண்டை வீக்கம், பிராங்டீஸ் எனப்படும் சுவாசத்தொல்லை போன்றவைகளுக்கு மிகவும் நல்லது.

    • நீர்க்கடுப்பு மற்றும் சிறுநீரகக் கல்லால் அதிகம் பேர் பாதிக்கப்படுகிறார்கள்.
    • சிறுநீர் பாதையில் உள்ள கிருமிகள் பன்மடங்காகப் பெருக வாய்ப்புள்ளது.

    கோடை காலத்தில் சிறுநீர் எரிச்சல் அல்லது 'நீர்க் கடுப்பு' மற்றும் சிறுநீரகக் கல்லால் அதிகம் பேர் பாதிக்கப்படுகிறார்கள். கோடையில் தேவையான அளவில் தண்ணீர் குடிக்காமல் இருப்போமானால் ஏற்கனவே நம் உடலில் இருக்கும் தண்ணீர் வியர்வையாகி அதிக அளவில் வெளியேறும்போது சிறுநீர் கழிக்கும் அளவு குறையும்.

    கோடைகாலத்தில் மிக அதிக நேரம் வெயிலில் வேலை செய்பவர்கள் சரியான அளவு நீர்ச்சத்து ஆகாரங்களை குடிக்காமல் இருப்பதாலும் சிறுநீர் வெளியேறும் அளவு குறையும். இதனால் சிறுநீர் சற்று அடர்த்தி அதிகமாகி சற்று அடர் மஞ்சள் நிறமாக வெளியேறும் போது எரிச்சல் வலி, கடுப்பு ஏற்படலாம்.

    கோடைகாலங்களில் ரெயில் மூலமாகவோ, பேருந்து மூலமாகவோ நெடுந்தூரப் பயணம் மேற்கொள்கிறார்கள். இந்த மாதிரியான நேரங்களில் நாம் நெடுநேரம் சிறுநீர் கழிக்காமல் அடக்கி வைப்பதன் மூலம் சிறுநீர் கடுப்பு ஏற்படும் வாய்ப்புகள் அதிகம்.

    இந்த மாதிரியான நேரங்களில் சிறுநீர் பாதையில் உள்ள கிருமிகள் பன்மடங்காகப் பெருக வாய்ப்புள்ளது. இது ஆண்களைவிட பெண்களுக்கு அதிக அளவில் வருகிறது. பெரும்பாலும் 'ஈகோலை' என்னும் பாக்ட்டீரியாவால் இந்த 'நீர் கடுப்பு நோய்' வருகிறது.

    அறிகுறிகள்:

    அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டும் என்பதுபோன்ற உணர்வு வரும். அப்படி முயற்சி செய்யும்போது எரிச்சல் அல்லது கடுப்புடன் சிறுநீர் வெளியேறும். லேசாக அடிவயிற்றில் வலியும் ஏற்படும்.

    குழந்தைகள் தன்னை அறியாமல் அடிக்கடி சிறுநீர் கழிப்பார்கள். நோய் அதிகமாகும்போது சிலருக்கு பயங்கர குளிருடன் கூடிய காய்ச்சல் ஏற்படும்.

    கோடைகாலத்தில் நீர் சரியாக பருகாத காரணத்தால் சிறுநீர் வெளியேறும் அளவு குறைவாகும். இதனால் சிறுநீரகத்தில் செயல்பாட்டால் உப்பு கலந்த கழிவுப் பொருட்கள் முழுமையாக வெளியேறாமல் கொஞ்சம், கொஞ்சமாக படிந்து அது கல்லாக உருவாகும் வாய்ப்புகள் அதிகம்.

    இந்த பிரச்சினை வராமல் தடுப்பதற்கு சிறந்த வழி கோடை காலத்தில் தேவையான அளவு நீர்ச்சத்துள்ள பானங்களை குடிப்பதுதான்.

    அப்பொழுதுதான் சிறுநீர் சரியான அளவில் வெளியேறி சிறுநீர் பாதையில் உள்ள கிருமிகளும், சிறுநீரில் உள்ள உப்புகளும் வெளியேற வாய்ப்புகள் ஏற்படும்.

    மேலும் சுற்றுலா மற்றும் நெடுந்தூர பயணம் மேற்கொள்வோர் சிறுநீரை அடக்கி வைக்காமல் அவ்வப்போது கழிப்பது நல்லது.

    உணவுமுறைகள்:

    * இளநீர், மோர், பழச்சாறு மற்றும் நீர்ச்சத்துள்ள ஆகாரங்களை போதிய அளவு எடுத்துக்கொள்ள வேண்டும்.

    * கர்ப்பிணிப் பெண்கள் மற்ற காலங்களை விட நிறைய தண்ணீர் குடிப்பது நல்லது.

    * கோடை காலத்தில் வெயிலில் விளையாடச் சென்றுவிடும் குழந்தைகளை அழைத்து அடிக்கடி நிறைய நீர்ச்சத்துள்ள ஆகாரங்களை கொடுப்பதுடன் குழந்தைகளை அடிக்கடி சிறுநீர் கழிக்கவும் அறிவுறுத்த வேண்டும்.

    * 'நீர்க் கடுப்பு' அதிகமானாலோ அல்லது அடிவயிற்றில் வலி அதிகமானாலோ மருத்துவரை அணுகி மருத்துவரின் அறிவுறுத்தலின் பேரில் எந்த வகை கிருமியால் இந்த 'நீர்க் கடுப்பு' நோய் ஏற்பட்டுள்ளது என்பதை கண்டறிந்து அதை அழிப்பதற்கு தகுந்த மாத்திரைகளை உட்கொள்வது நல்லது.

    மருந்துகள்:

    ஹோமியோபதியில் ஆபிஸ் மெல், லைகோபோடியம், காந்தாரிஸ், பெர்பெரிஸ் வல்காரிஸ், ஹய்ட்ரஜ்யா போன்ற மருந்துகள் சிறுநீர் கடுப்பிற்கும், சிறுநீரகக் கற்கள் தோன்றுவதை தடுப்பதற்கும் மிகச் சிறந்தவை.

    • பொன்னாவரை வேர், சுக்கு, மிளகு, சீரகம் கஷாயம் குடித்தால் பித்தபாண்டு தீரும்.
    • அகத்திக்கீரை சாப்பிட்டு வந்தால் பித்தக் கோளாறுகள் அகலும்.

    விருப்பமான உணவுகள், மசாலா உணவுகள் பேன்றவற்றை பார்த்தால் சாப்பிடலாமா, வேண்டாமா என்ற அச்சம். அதிகம் சாப்பிடலமா சாப்பிட்டால் ஜீரணமாகுமா நெஞ்சு கறிக்குமா...? எதுக்கிக்கெண்டே இருக்குமா? இதுபேன்ற கேள்விகளுக்கெல்லாம் முக்கிய காரணமாக விளங்குவது பித்தம். இந்த பித்தம் தெடர்பான பிரச்சினைகளையும், அதனை பேக்கும் எளிய இயற்கை மருத்துவ முறைகளையும் பார்க்க்கலாம்....

     * இஞ்சித் துண்டை தேனில் ஊறவைத்து 48 நாட்கள் சாப்பிட்டு வந்தால் பித்தம் தெளிந்து ஆயுள் பெருகும்.

    * இஞ்சிச் சாறு, வெங்காயச் சாறு தேன் கலந்து குடித்தால் பித்த மயக்கம் தீரும்.

    * பழுத்த மாம்பழத்தை சாறு பிழிந்து அந்த சாறை அடுப்பில் லேசாக சூடேற்றி பின் ஆறவைத்து சாப்பிட்டு வந்தால் பித்தம் குறையும்.

    * எலுமிச்சை சாதம் வாரத்தில் மூன்று நாள் காலையில் சாப்பிட்டால் பித்தத்தை தணிக்கும்.

    * ரோஜாப்பூ கஷாயம், பால் சர்க்கரை கூட்டி சாப்பிட்டால் பித்த நீர் மலத்துடன் வெளியேறும்.

    * பொன்னாவரை வேர், சுக்கு, மிளகு, சீரகம் கஷாயம் குடித்தால் பித்தபாண்டு தீரும்.

    * விளாம்பழம் கிடைக்கும் காலங்களில் தினசரி ஒன்று சாப்பிட்டு வந்தால் பித்தத்தை குறைக்கலாம்.

    * அகத்திக்கீரை சாப்பிட்டு வந்தால் பித்தக் கோளாறுகள் அகலும்.

    * பனங்கிழங்கு சாப்பிட்டால் பித்தம் நீக்கி உடல் பலம் பெருகும்.

    * கமலா பழம் (ஆரஞ்சு) சாப்பிட்டால் உடல் உஷ்ணத்தை தணிக்கும்.

    * நத்தைசூரி விதையை வறுத்து பொடித்து காய்ச்சி கற்கண்டு சேர்த்து சாப்பிட்டு வர கல்லடைப்பு தீரும்.

    * எலுமிச்சை இலையை மோரில் ஊறவைத்து அந்த மோரை உணவில் பயன்படுத்தி வந்தால் பித்த சூடு தணியும்.

    * அரச மரக் குச்சியை சிறு துண்டுகளாக வெட்டி சட்டியில் போட்டு காய்ச்சி ஆறவைத்து, அந்த நீரில் தேன் கலந்து குடித்தால் ரத்தத்தில் உள்ள பித்தம் குறையும்.

    • ஆவிபிடித்தல் உங்களை ரிலாக்ஸாக இருக்கச் செய்யும்.
    • மூச்சுக்குழாய்களை முழுதாக அடைப்பதால் மூச்சு திணறல் ஏறப்டுகிறது.

    ஆவிபிடித்தல்

    ஆவிபிடித்தல் இதை நீங்கள் அடிக்கடி செய்யாமல் மூக்கு அடைப்பிருந்தால் அல்லது வாரத்திற்கு ஒருமுறை அல்லது இரண்டு முறை செய்யலாம். இது உங்களை ரிலாக்ஸாக இருக்க செய்யும். ஆவி பிடிக்கும்போது சிலியாவிற்கு அந்த வெப்பமான காற்று மூக்கை சுத்தம் செய்து, அடைப்பு இருந்தாலும் அதை எடுக்கவும் உதவி செய்கிறது.

    உங்களுக்கு தொற்றுநோய் இருக்கும்போதும் மூக்கடைப்பு இருக்கும்போது செய்தாலே போதுமானது, அடிக்கடி செய்ய வேண்டிய அவசியமில்லை. தொற்று இருக்கும் போது மூக்கடைப்பு இருக்கும் போது மட்டும் செய்ய வேண்டும்.

     இருமல்

    தொற்றுநோய் இருக்கும்போது ஏன் இருமல் வருகிறது?

    நமது தொண்டை நுரையீரல் மற்றும் நுரையீரலில் இருக்கும் அல்வியோலிகளில் ஏற்படும் தொற்றுநோய்களை வெளியேற்ற நமது உடலே முயல்கிறது. இதை தான் இருமல் என்று சொல்கிறோம். ஆனால் இருமலை அடக்கி கட்டுப்படுத்தி வைத்துக்கொண்டு அடக்கமுடியாமல் இருமுகிற போது அதன் பலன்கள் அதிகமாக இருக்கும்.

    இருமலை எப்படி கட்டுப்படுத்துவது?

    தோல்களை ரிலாக்சாக வைத்து சேரில் அமர்ந்து, கால்கள் இரண்டும் தரையில் வைத்து கைகளை வயிற்று தசைகளில் இறுக்கமாக வைத்துக்கொள்ளவும். கையில் ஏதாவது சுத்தமான துணி அல்லது டிஷ்யூ பேப்பர் வைத்து வாயை மூடிக்கொண்டு இருமலாம். இது கட்டுப்படுத்தப்பட்ட இருமல் என்று சொல்லப்படுகிறது. இவ்வாறு இருமுகிற போது காற்று செல்லும் வழியை சுத்தம் செய்ய உதவுகிறது.

     போஸ்டுரல் டிரைனேஜ்

    போஸ்டுரல் என்றால் நிற்பது அல்லது படுப்பது. உடலில் ஏதாவது தொற்றுநோய், ஆஸ்துமா, சி.பி.ஓ.டி போன்றவைகளால் நுரையீரல் பாதித்தால் மூச்சுக்குழாய்கள் சுருங்கிவிடும்.

    இந்த தொற்றுகளை எதிர்க்க நுரையீரல் சளியை உருவாக்குகிறது. இது மூச்சுக்குழாய்களை முழுதாக அடைப்பதால் சுருங்கி மூச்சு திணறல் ஏறப்டுகிறது. அதேபோல நாம் இரும்புகிறபோது மூச்சு விடுவதில் சிரமம் ஏற்படுகிறது.

    படுக்கும் நிலையில் வைத்து போஸ்டுரல் வடிகால் நம்மை எளிமையாக சுவாசிக்க உதவி செய்கிறது. இதை உண்பதற்கு முன்பு செய்வது நல்லது, இல்லையென்றால் உணவிற்கு பின் செரிமானமாகிய 2 மணி நேரத்திற்கு பின் செய்யலாம். கீழே அல்லது மெத்தையில் படுக்கலாம்.

    அசெளகரியமாக இருந்தால் தலையணையை சப்போட்டாக வைத்து இடது பக்கம் அல்லது வலது பக்கம் திரும்பி படுக்கலாம். தலையணை வைக்கும்போது மிக முக்கியமாக கவனிக்க வேண்டியது நீங்கள் வயிற்றுப்பகுதியில் படுக்க வேண்டும். அதாவது கவிழ்ந்து படுத்து உங்கள் மார்பு பகுதி கீழேயும் இடுப்பு பகுதி அதே நிலையில் கவிழ்ந்த நிலையில் மேலேயும் இருக்க வேண்டும். இவ்வாறு வைப்பதால் சளியை வெளியேற்ற உதவுகிறது.

    உடற்பயிற்சி

    மருத்துவர்கள் அனைவருமே நம்மை 30 நிமிடங்களுக்கு உடற்பயிற்சி செய்ய வேண்டும் எனக் கூறுவார்கள். ஏனென்றால் உடல் உழைப்பு செய்கிறபோது நுரையீரலின் திறன் மேம்படுகிறது. ரத்த ஓட்டம் மேம்படுகிறது. உடல் நிறைய ஆக்சிஜனை உள்ளிழுத்து கார்பன் – டை- ஆக்ஸைடு வெளியேற்றி ரத்த ஓட்டம் சீராவதால் உடலில் உள்ள அதிக அளவிலான கார்பன் – டை- ஆக்ஸைடு எளிதாக வெளியேறுகிறது.

     க்ரீன் டீ

    இதில் நிறைய ஆண்டி-ஆக்ஸிடண்ட்ஸ் திறன்கள் உள்ளது. ஆன்டி- ஆக்ஸிடண்ட்களில் அதிக அழற்சி எதிர்ப்பு திறன்கள் உள்ளது. ஒரு தொற்று ஏற்படுகிறது என்றால் அதை எதிர்க்க எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துகிறது. இது க்ரீன் டீ-யில் உள்ளது. ஒருநாளுக்கு ஒருமுறை அல்லது இருமுறை குடித்தால் நுரையீரலுக்கு மிகவும் நல்லது.

    உணவுமுறை

    மஞ்சள், வால்நட், செர்ரிகள் ப்ளூபெர்ரி, பச்சை காய்கறிகள் இவை அனைத்திலுமே எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தவும் ஆன்டி-ஆக்ஸிடண்ட்ஸ் திறன்களும் உள்ளதால் தினசரி உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள்.

     சுவாசிக்கும் முறை

    இது மிகவும் முக்கியமான டிப்ஸ் ஆகும். இதை ஐந்து-பத்து நிமிடம் வரை தினமும் செய்ய வேண்டும். இது எப்போதுமே 1:2 என்ற விகிதத்தில் இருக்க வேண்டும். மூச்சை உள்ளிழுக்கும் நேரம் 1, மூச்சு வெளியேற்றும் நேரத்தை 2 ஆக வைக்கவும். உதாரணத்துக்கு மூச்சை உள்ளிழுப்பதற்கு 2 வினாடி எடுக்கிறீர்கள் என்றால் மூச்சை வெளியேற்றுவதை 4 வினாடிகளுக்கு பொறுமையாக விட வேண்டும்.

    ×