தோஷ பரிகாரங்கள்

கடன் பிரச்சனையில் இருந்து விடுதலை தரும் மைத்ர முகூர்த்தம்

Published On 2022-06-16 01:36 GMT   |   Update On 2022-06-16 01:36 GMT
  • கடன் பிரச்னைகளில் சிக்கித் தவிப்பவர்களுக்கு அதிலிருந்து விடுதலை தரும் காலமாக முகூர்த்த காலம் உள்ளது.
  • கடன் வெறும் பொருளாதாரச் சுமையாக மட்டும் இல்லாமல் மனதில் நிம்மதியில்லாத சூழலை ஏற்படுத்திவிடும்.

யார் எல்லாம் கடன் பிரச்னைகளில் சிக்கித் தவிக்கிறார்களோ அவர்களுக்கு அதிலிருந்து விடுதலை தரும் காலமாக இந்த முகூர்த்த காலம் இருக்கிறது என்று சொல்கிறார்கள். ஒரு மாதத்தில் இரண்டு முறை இந்த முகூர்த்த காலம் ஏற்படும்.

இந்த உலகில் நிம்மதியான ஒரு வாழ்க்கையை வாழப் பணம் இன்றியமையாத ஒன்று. பொருள் இல்லார்க்கு இவ்வுலகம் இல்லை என்பதுதான் வள்ளுவரின் வாக்கு. வருமானம் குறைகிறபோது தேவைக்குக் கடன் வாங்குவது இயல்பு. ஆனால், அந்தக் கடன் வெறும் பொருளாதாரச் சுமையாக மட்டும் இல்லாமல் மனதில் நிம்மதியில்லாத சூழலையும் ஏற்படுத்திவிடும்.

கடன் பட்டுவிட்டால் அதை அடைக்கும்வரை யாருக்கும் நிம்மதியிருக்காது. ஒரு சிலர் கடன் வாங்கிக் கடன் அடைப்பது என்னும் பழக்கத்திலும் இருப்பர். இவ்வாறு செய்வதன் மூலம் கடன் தவிர்க்க முடியாத சுழலில் சிக்கியதுபோல நம்மை ஆழ்த்திவிடுகிறது. கடன்பட்டு அதை அடைக்கமுடியாமல் வருந்துகிறவர்களுக்கு ஓர் எளிய பரிகாரம் உண்டு. அதுவே மைத்ர முகூர்த்தம்.

மைத்ர முகூர்த்தம் என்றால் என்ன?

அசுவினி நட்சத்திர நாளில் மேஷ லக்ன நேரமும் அனுஷ நட்சத்திர நாளின் விருச்சிக லக்ன நேரமும் `மைத்ர முகூர்த்தம்' எனப்படுகின்றன.

பொதுவாகவே கடனை அடைப்பதற்கு மனம் சார்ந்த சில உந்துதல்கள், முயற்சிகள் தேவை. அசுவினி நட்சத்திரம் என்பது கேதுவுடைய நட்சத்திரம். இதில் மேஷ லக்னம் என்பது செவ்வாயின் ஆதிக்கம் கொண்டது. கேது பகவான் ஒரு பிரச்னையின் தீவிரத்தைக் குறைக்கக் கூடியவர். கடனை அடைக்க, உழைப்பும் முயற்சியும் தேவை. அதற்குச் செவ்வாயின் அனுக்கிரகம் தேவை.

எனவேதான் கேதுவுக்கு உரிய நாளில் செவ்வாயின் ஆதிக்கம் கொண்ட மேஷ லக்ன காலத்தில் கடனை அடைப்பதன் மூலம் கேது கடன் பிரச்னைகளைக் குறைத்து அருள்புரிவார். அதே போன்று விருச்சிக லக்னமும் செவ்வாயின் ஆதிக்கம் மிகுந்த காலம். அனுஷ நட்சத்திரம் சனிபகவானுக்குரியது. சனிபகவான் உழைப்பையும் ஊதியத்தையும் கொடுக்கக்கூடியவர். எனவே, அனுஷ நட்சத்திர நாளில் வரும் செவ்வாயின் பலம் பெற்ற விருச்சிக லக்ன நேரத்தில் கடனைத் திருப்பிச் செலுத்த கடன் பிரச்னைகளிலிருந்து நிவாரணம் கிடைக்கும். குறிப்பாக உழைப்பும் நம் முயற்சியும் இணைந்து நமக்கு நவகிரகங்களின் அருளைப் பெற்றுத்தரும் என்பதுதான் இதன் தாத்பர்யம்.

``பொதுவாக அசுவினி நட்சத்திரம் உதிக்கும் நாளில் வரும் மேஷ லக்னம் மற்றும் அனுஷ நட்சத்திர நாளில் வரக்கூடிய விருச்சிக லக்னம் வரும் நேரங்களில் ஒரு முகூர்த்தம் ஏற்படும். அதுவே மைத்ர முகூர்த்தம் எனப்படுகிறது. மைத்ர முகூர்த்தம் என்பது ஒருவருக்குப் பணத்தால் ஏற்படக் கூடிய மன சஞ்சலங்களுக்கு விடிவுகாலம் தரும் முகூர்த்த காலம். யார் எல்லாம் கடன் பிரச்னைகளில் சிக்கித் தவிக்கிறார்களோ அவர்களுக்கு அதிலிருந்து விடுதலை தரும் காலமாக இந்த முகூர்த்த காலம் இருக்கிறது என்று சொல்கிறார்கள். ஒரு மாதத்தில் இரண்டு முறை இந்த முகூர்த்த காலம் ஏற்படும். அப்படி இந்த மாதத்தில் வரும் அனுஷ நட்சத்திரமும் விருச்சிக லக்னமும் கூடிய மைத்ர முகூர்த்தம் இன்று வாய்த்துள்ளது.

உங்கள் கடன் எவ்வளவு பெரிய தொகையாக இருந்தாலும் கவலைப் படவேண்டாம். உங்கள் கையில் இருக்கும் பணம் எதுவாக இருந்தாலும் அதில் ஒரு சிறுதொகையை எடுத்துக் கொள்ளுங்கள். அது 100 ரூபாயாக இருந்தாலும் சரி 10 ரூபாயாக இருந்தாலும் சரி. அந்தப் பணத்தை ஒரு கவரில் வைத்து, நீங்கள் யாருக்குத் தர வேண்டுமோ அவரின் பெயரை அந்தக் கவரில் எழுதிவிடுங்கள். வங்கிக் கடனாக இருந்தால் வங்கியின் பெயரை எழுதிவிடுங்கள். பின்பு அந்தக் கவரை சுவாமிபடம், பூஜை அறை அல்லது நீங்கள் வழக்கமாகப் பணம் வைக்கும் இடத்தில் வைத்துவிடுங்கள்.

பின்பு வீட்டில் இருக்கும் உங்கள் இஷ்ட தெய்வத்தின் படத்துக்கு அல்லது சிவலிங்கம் போன்ற சிறு மூர்த்தங்கள் இருந்தால் அதற்கு சிறிது அரிசி மாவு கொண்டு அபிஷேகம் செய்து ஏதேனும் ஒரு பூ சாத்தி வழிபடுங்கள். குறைந்தது ஐந்து நிமிடம் சுவாமிக்கு முன்பாக அமர்ந்து சிவபுராணம் அல்லது கோளறுபதிகம் பாடுங்கள். அல்லது உங்களுக்குப் பிடித்த தெய்வ ஸ்லோகத்தைப் பாடி ஆராதியுங்கள். அவ்வாறு செய்யும்போது உங்களின் விருப்பமும் வேண்டுதலுமான செல்வ வளம் அதிகரிக்க இறைவன் அருள்புரிவார். அதனால் விரைவிலேயே உங்கள் கடன்கள் அடையும். நீங்கள் கடன் தொகையைத் திருப்பிச் செலுத்தும்போது எடுத்துவைத்த அந்தச் சிறு தொகையையும் சேர்த்துச் செலுத்த வேண்டும். இது உங்களின் விருப்பத்துக்கும் பிரயாசைக்குக் கிடைக்கும் ஆசீர்வாதம் என்பதை உணருங்கள்.

Tags:    

Similar News