சொகுசு ஓட்டலில் விருந்து.. போதைப் பொருள் வழக்கில் சிக்கிய பிரபல நடிகர்
- போதைப் பொருள் பயன்படுத்தியதாக பிரபல நடிகரின் மகன் கைது.
- இவர் பிரபல பாலிவுட் நடிகை ஷரத்தா கபூரின் சகோதரர் சித்தாந்த் கபூர்.
கர்நாடக மாநிலம் பெங்களூரில் இருக்கும் சொகுசு ஓட்டல் ஒன்றில் நேற்று இரவு நடந்த விருந்து நிகழ்ச்சியில் போதைப் பொருள் பயன்படுத்தப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் அங்கு சோதனை நடத்தினர். அதில் விருந்தில் போதைப் பொருள் பயன்படுத்தப்பட்டது தெரிய வந்தது. இதையடுத்து சிலரை கைது செய்து, சோதனைக்காக அவர்களின் ரத்தமாதிரி எடுக்கப்பட்டது. 35 பேரில் 5 பேர் போதைப் பொருள் பயன்படுத்தியது ரத்த பரிசோதனையில் தெரியவந்தது.
அதில் பாலிவுட் நடிகர் சித்தாந்த் கபூரும் ஒருவர். போலீசார் சித்தாந்த் கபூரை கைது செய்து, போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். பாலிவுட் நடிகர் சக்தி கபூரின் மகன் தான் சித்தாந்த். பிரபல பாலிவுட் நடிகை ஷரத்தா கபூர், சித்தாந்தின் சகோதரி ஆவார். முன்னதாக பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் இறந்த போது இந்தி திரையுலகை சேர்ந்த பலரை போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள். அதில் ஷரத்தா கபூரும் ஒருவர். ஆனால் அவருக்கு எதிராக எதுவும் நிரூபிக்கப்படவில்லை. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 2ம் தேதி கார்டிலியா கப்பலில் நடந்த பார்ட்டியில் போதைப் பொருள் பயன்படுத்தியதாக பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கைது செய்யப்பட்டு மும்பை சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் அவர் மீது எந்த குற்றமும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.