search icon
என் மலர்tooltip icon

    அழகுக் குறிப்புகள்

    • லிப்ஸ்டிக்குகளில் உள்ள டெக்ஸ்சர்கள் ஒவ்வொரு சீசனுக்கும் வேறுபடும்.
    • செமி-மேட் முதல் கிரீம் வரை சீசனுக்கு மிகவும் சிறந்தவை.

    லிப்ஸ்டிக்குகளில் உள்ள டெக்ஸ்சர்கள் ஒவ்வொரு சீசனுக்கும் வேறுபடும். செமி-மேட் முதல் கிரீம் வரை இந்த சீசனுக்கு மிகவும் சிறந்தவை. அதிக அளவு கிளாஸ், அதாவது ஜொலிக்கும் விதமான லிப்ஸ்டிக்குகள் கண்ணை பறிக்கும், ஆனால் எளிதில் கலைந்து விடும். முழுவதும் மேட் ஸ்டைலில் உள்ள லிப்ஸ்டிக் உங்கள் உதட்டை உலர்ந்ததாக, வயதானதாக காட்டும். ஒரு லிப் பாம் கொண்டு முதலில் உதடுகளை தயார் செய்யலாம், பின்னர் லிப் கலரை பயன்படுத்தலாம் அல்லது கிரீமி லிப்ஸ்டிக்கை பயன்படுத்தலாம். மேட் ஸ்டைல் பகலுக்கும், கிரீமி ஸ்டைல் இரவுக்கும் சிறந்தவையாக இருக்கும்.

     அலுவலக மேக்கப்

    அலுவலகம் செல்லும் பெண்களுக்கு ஆர்ப்பாட்டமில்லாத மேக்கப்பே போதுமானது. நேர்த்தியான கூந்தல், அலங்காரமற்ற உதடுகள் தேவையான மந்திரஜாலத்தை உருவாக்கும்.

    * ஃபவுண்டேஷன் மூலம் சருமத்தை சமமாக்குங்கள்.

    * மென்மையான, நியூட்ரல் கலர் பிளஷை கன்னங்களில் பூசுங்கள்

    * இயற்கையான பீஜ் ஷேடு அல்லது உங்கள் உதட்டு கலரோடு ஒத்துப்போகும் கலரை இடுங்கள்

    * கருவளையங்களை குறைக்க கன்சீலர் இட்டு, உங்கள் கண் இமையில் நியூட்ரல் கலரை பூசுங்கள்

    * கண்ணின் மேல் இமையின் உள்முனையில் இருந்து வெளிமுனை வரை லிக்விட் ஐலைனர் இடுங்கள். கூந்தலை தாழ்வான கொண்டையாக போட்டுக்கொள்ளவும். இறுக்கமாக முடிந்து வையுங்கள். பேங்க்ஸ் இருந்தால், அவை நெற்றியில் அழகாக விழட்டும்.

    • கரும்புள்ளிகளை நீக்க எலுமிச்சை சர்க்கரை ஸ்கரப் சிறந்ததாக இருக்கும்.
    • ஜாதிக்காய் அரைத்து போட்டு வர கரும்புள்ளிகள் இல்லாது போய்விடும்.

    அனைவருக்குமே எலுமிச்சை எவ்வளவு சிறந்த மருத்துவ குணம் வாய்ந்த பொருள் என்பது நன்கு தெரியும். அதிலும் இவை சருமத்திற்கு மிகவும் சிறந்தது. ஏனெனில் இவை சருமத்தில் இருக்கும் அனைத்து கிருமிகளையும் எளிதில் நீக்கவல்லது. இதற்கு காரணம் இதில் உள்ள சிட்ரஸ் அமிலம் தான்.

    ஆகவே அவ்வளவு நன்மையைத் தரும் எலுமிச்சையைப் பயன்படுத்தி பல அழகுப் பொருட்கள் தயாரிக்கப்படுகிறது. அதிலும் இந்த எலுமிச்சையால் தயாரிக்கப்படும் ப்ளீச் அல்லது ஸ்கரப் போன்றவற்றை செய்தால், சருமத்தில் அழுக்குகளால் உருவாகும் கரும்புள்ளிகள், முகப்பருக்கள் போன்றவற்றை நீக்கிவிடலாம்.

    இன்றைய தலைமுறையினர் பெரும்பாலும் கரும்புள்ளிகள், முகப்பரு ஆகியவற்றால் பெரிதும் பாதிக்கப் படுகின்றனர். அதனால் அவர்கள், அழகு நிலையங்களுக்குச் சென்று ஃபேஷியல் செய்து கரும்புள்ளிகளை நீக்குகின்றனர். என்ன தான் அழகு நிலையங்களுக்குச் சென்று முகத்தை அழகுபடுத்தினாலும், அதில் உள்ள கெமிக்கல் கலந்துள்ள சருமத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும். எனவே எப்போதும் இயற்கைப் பொருட்களே சிறந்தது. அதிலும் எலுமிச்சை இதற்கு ஒரு சிறந்த தீர்வாக அமையும். இப்போது அந்த மாதிரியான கரும்புள்ளிகளை நீக்க எலுமிச்சையை எப்படியெல்லாம் பயன்படுத்தலாம் என்று பார்ப்போமா...

    எலுமிச்சை ஸ்கரப்

    இந்த ஸ்கரப் செய்வதற்கு முன் முகத்தை வெதுவெதுப்பான நீரால் கழுவிட வேண்டும். பின்னர் ஒரு துண்டு எலுமிச்சையை முகம் மற்றும் மூக்கின் பக்கவாட்டிலும் நன்கு தேய்க்க வேண்டும். ஏனெனில் பொதுவாக கரும்புள்ளிகளானது முக்கின் பக்கவாட்டில் தான் தங்கியிருக்கும். ஆகவே குறைந்தது 3-4 நிமிடமாவது தேய்த்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இதனை அதிக அளவில் கரும்புள்ளிகள் உள்ளவர்கள், ஒரு நாளைக்கு 2 முறை செய்வது நல்லது.

    எலுமிச்சை- சர்க்கரை ஸ்க்ரப்

    கரும்புள்ளிகளை நீக்க சிறந்த முறைகளில் எலுமிச்சை சர்க்கரை ஸ்கரப் சிறந்ததாக இருக்கும். இவ்வாறு சர்க்கரையுடன் கலந்து ஸ்க்ரப் செய்து வந்தால், கரும்புள்ளிகள் நீங்குவதோடு, முகப்பருக்களும் நீங்கிவிடும்.

    எலுமிச்சை-முட்டையின் வெள்ளைக் கரு

    இது ஒரு பொதுவான கரும்புள்ளிகளை நீக்க செய்யப்படும் இயற்கையான ஸ்கரப் மற்றும் மாஸ்க். இதற்கு எலுமிச்சை சாற்றுடன், முட்டையின் வெள்ளைக் கருவை சேர்த்து, நன்கு கலந்து கொண்டு, பின் அதனை முகத்திற்கு தடவி, காய வைத்து, பின் மாஸ்க் செய்தால் எப்படி உரித்து எடுப்போமா, அப்படி உரித்து எடுத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.

    எலுமிச்சை-ரோஸ் வாட்டர்

    ரோஸ் வாட்டரை எலுமிச்சை சாற்றுடன் கலந்து, காட்டனில் நனைத்து, பின் முகத்தில் கரும்புள்ளிகள் உள்ள இடத்தில் தடவி, 3-4 நிமிடம் ஊற வைத்து, பிறகு குளிர்ந்த நீரில் கழுவினால், கரும்புள்ளிகள் நீங்கிவிடும்.

    மேற்கூறியவாறு எலுமிச்சையின் சாற்றை பயன்படுத்தினால், கரும்புள்ளிகளை நீக்குவதோடு, வெள்ளை புள்ளிகளையும் நீக்கிவிடும். அதிலும் இதனை ஒரு நாளைக்கு இரண்டு முறை செய்து வந்தால், நல்ல பலனை பெறலாம். முக்கியமாக எலுமிச்சை சாறு சருமத்தை வறட்சியடையச் செய்யும். ஆகவே எலுமிச்சை சாற்றைப் பயன்படுத்தியப் பின்னர் மறக்காமல் மாய்ச்சுரைசரை பயன்படுத்த வேண்டும். முகத்தில் கரும்புள்ளிகளை இல்லாமல் செய்வதற்கு மேலும் பல வழிகள் உள்ளன.

    * ரோஜா இதழ்களுடன், பாதாம் பருப்பை ஊற வைத்து, அரைத்து முகத்தில் தடவி வர வேண்டும்.

    * வாழைப்பழம் அல்லது பப்பாளி பழத்துடன், சிறிது தேன் கலந்து குழைத்து, முகத்தில் பூசி வரலாம்.

    * வெள்ளரிச் சாறு, புதினாச் சாறு, எலுமிச்சை பழச்சாறு ஆகியவற்றை, சம அளவில் கலந்து, முகத்திலுள்ள கரும் புள்ளிகள் மீது தேய்த்து வந்தால், கரும் புள்ளிகள் போய்விடும்.

    * உருளைக்கிழங்கை ரெண்டாக வெட்டி, தடவவும்.

    * ஜாதிக்காய் அரைத்துப் போட்டு வரவும் கரும்புள்ளிகள் இல்லாது போய்விடும்.

    * முகத்தில் வெண்ணெய் தடவி, எலும்பிச்சைச் சாறு கலந்த வெந்நீரால் ஆவி பிடித்து, துண்டால் முகத்தை அழுந்தத் துடையுங்கள். தொடர்ந்து இப்படி செய்து வர, கரும்புள்ளி மறையும்.

    * பன்னீர், விளக்கெண்ணெய் தலா ஒரு தேக்கரண்டி கலந்து, கரும்புள்ளி உள்ள இடங்களில் தடவவும். பின், டவலை சூடான நீரில் நனைத்து பிழிந்து, முகத்தில் வைத்து பஞ்சினால் துடைத்து எடுத்து விடவும்.

    * வெள்ளரிச்சாறு, போரிக் பவுடர், தலா ஒரு தேக்கரண்டி கலந்து, கரும்புள்ளிகளில் தடவி, ஐந்து நிமிடம் ஊறவிடவும். பின், லேசாக மசாஜ் செய்து துடைத்தால், உள்ளிருக்கும் அழுக்குகள் நீங்கும்.

    * கோதுமை தவிடு, பால் இரண்டும் தலா ஒரு மேஜைக்கரண்டி கலந்து, கரும் புள்ளிகள் உள்ள இடத்தில் தடவி வர வேண்டும். கொஞ்ச நாட்களில் கரும் புள்ளிகள் வலுவிழந்து உதிர்ந்து விடும்.

    இவ்வாறு நீங்கள் தொடர்ச்சியாக செய்து வந்தால் உங்கள் முகத்தில் கரும்புள்ளிகள் நீங்கி, முகம் பொலிவுடன் அழகாகவும் காணப்படும்.

    • செம்பருத்திப்பூவில் பல்வேறு மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளது.
    • கண்களும், உடலும் குளிர்ச்சி அடையும்.

    நமது ஊர்களில் பலபேர் வீடுகளின் முன்பு சாதாரணமாக செம்பருத்தி செடி வளர்ந்து இருப்பதை பார்த்து இருப்போம். நாம் நினைத்துக்கூட பார்க்க முடியாத அளவிற்கு செம்பருத்திப்பூவில் பல்வேறு மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளது.

    தோல் நோய் வராமல் பாதுகாக்க காயவைத்த செம்பருத்தி இதழ்களுடன், ஆவாரம்பூ பாசிப்பயிறு, கருவேப்பிலை இவைகளைச் சேர்த்து பொடியாக்கி சேமித்து வைத்துக்கொள்ள வேண்டும். தினம்தோறும் குளிப்பதற்கு, சோப்புக்கு பதிலாக இந்த தூளை உடம்பில் தேய்த்து குளித்து வந்தால் தோல் நோய் வராமல் தப்பித்துக் கொள்ளலாம். இதன் மூலம் நம் சருமமும் பளபளப்பாக இருக்கும்.

    பொதுவாக ஆண்களாக இருந்தாலும் சரி, பெண்களாக இருந்தாலும் சரி தன்னுடைய தலைமுடி அடர்த்தியாகவும், பளபளப்பாகவும் இருக்க வேண்டும் என ஆசைப்படுவார்கள். ஆனால் தற்போது இருக்கும் வாழ்க்கை முறை மாற்றம், சூழல், ரசாயன ஷாம்போ பாவனை இவற்றால் அது பலவீனமடைகின்றது. இது போன்ற பிரச்சினை இருப்பவர்கள் ஆங்கில மருத்துவத்திற்கு செல்வதற்கு முன் வீட்டில் உள்ள பொருட்களைக் கொண்டு கை வைத்தியம் செய்வதால் ஆரோக்கியமான முடிவை பெற முடியும்.

    இதன்படி, செம்பருத்தி பூவை பயன்படுத்தி எண்ணெய் செய்து தடவுவதால் தலைமுடி பிரச்சினைகள் அனைத்தும் சரியாகின்றது என கூறப்படுகின்றது.

    செம்பருத்தி பூ வெப்பமண்டல பகுதிகளில் பொதுவாக காணப்படும் பூச்செடி. இதில் இருக்கும், இலை மற்றும் பூ உங்கள் கூந்தலுக்கு பல்வேறு நன்மைகளை வழங்குகிறது. அந்த வகையில், செம்பருத்தியை தலைமுடி பிரச்சினைக்கு எப்படி பயன்படுத்துவது, அதன் நன்மைகள் என்ன? என்பதனை தொடர்ந்து பார்க்கலாம்...

    1. தேங்காய் எண்ணெய் + செம்பருத்தி பூ ஆகியவற்றை சேர்த்து காய்ச்சி தலைக்கு தடவினால் தலைமுடி உதிர்வு குறையும்.

    2. செம்பருத்தி எண்ணெயில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள், வைட்டமின்கள் ஏ மற்றும் சி மற்றும் ஆல்பா-ஹைட்ராக்ஸி அமிலங்கள் மற்றும் அமினோ அமிலங்கள் அதிகளவில் உள்ளன. இதனால் தலைமுடி பாதுகாக்கப்படுகின்றது.

    3. செம்பருத்தி எண்ணெய் முடி வளர்ச்சியை மேம்படுத்துவதோடு, தலைமுடியை பளபளப்பாக்கவும் உதவியாக இருக்கின்றது.

    4. மயிர்க்கால்களுக்கு ஊட்டமளிக்கிறது மற்றும் இரத்த ஓட்டம், புதிய முடி வளர்ச்சி மற்றும் சுழற்சியைத் தூண்டுதல் ஆகிய வேலைகளை செம்பருத்தி பார்க்கிறது.

    5. இந்த எண்ணெயை குளிக்கும் முன்னர் தடவுவதால் பலவீனமான தலைமுடிகள் உதிர்ந்து புதிய தலைமுடி வளர்வதற்கு உதவியாக இருக்கின்றது.

    6. சிலருக்கு இளநரை, பொடுகு தொல்லை, முடி உதிரும் பிரச்சினைகள் அதிகமாக இருக்கும். செம்பருத்திப்பூ இலைகளுடன் கருவேப்பிலை, மருதாணி இலை இவற்றை சேர்த்து நன்றாக அரைத்து தலையில் தேய்த்து அரை மணிநேரம் ஊற வைத்து பின்பு குளிக்க வேண்டும். இதேபோன்று வாரத்திற்கு 2 முறை செய்துவந்தால் தலைமுடி பிரச்சினைகளில் இருந்து தப்பித்துக் கொள்ளலாம். இப்படி செய்து வரும்போது நம் கண்களும், உடலும் குளிர்ச்சி அடையும். உடம்பில் உள்ள சூடு தன்மை குறையும்.

    7. அதிக தலைமுடி உள்ளவர்களுக்கு பேன் ஈறு தொல்லை அதிகமாக இருக்கும். அப்படி உள்ளவர்கள் இரவில் தூங்கும் போது செம்பருத்திப் பூவை தலையில் வைத்துக்கொண்டு அப்படியே படுத்து உறங்கலாம். நம் உடலில் ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்க 2, 3 செம்பருத்திப் பூக்களை நீரில் போட்டுக் காய்ச்சி வடிகட்டி ஒரு டம்ளர் அளவு நீரில், ஒரு ஸ்பூன் தேன் கலந்து குடித்து வந்தால் ரத்த சோகை நீங்கும்.

    • பெண்கள் அழகாக இருக்க நிறைய முயற்சிகள் செய்கிறார்கள்.
    • ஹேர் ஸ்ட்ரெய்டனிங் உச்சந்தலையில் பயன்படுத்தக்கூடாது.

    இன்றைய ஃபேஷன் உலகில், பெண்கள் அழகாக இருக்க நிறைய முயற்சிகள் செய்கிறார்கள். இந்த நோக்கத்திற்காக பல்வேறு வகையான அழகுசாதனப் பொருட்கள் பயன்படுத்தப் படுகின்றன. சருமத்தின் அழகு மட்டுமின்றி, அவர்கள் அழகு நிலையத்திற்குச் சென்று, தலைமுடியை அழகாக்குவதற்கு, ஹேர் ஸ்ட்ரெய்டனிங் மற்றும் ஹேர் ஸ்மூத்திங் சிகிச்சைகளை மேற்கொள்கின்றனர்.

     தற்காலிக ஹேர் ஸ்ட்ரெயிட்டனிங் செய்தால், பிறகு முடி மீண்டும் சிக்கலாகிவிடும். நீங்கள் அதே நிரந்தர ஹேர் ஸ்ட்ரெயிட்டனிங் செய்தால், முடி 3-6 மாதங்களுக்கு நேராக இருக்கும். ஆனால்... இந்த சிகிச்சையில் சில வகையான ரசாயனங்கள் பயன்படுத்தப் படுகின்றன. இதனால் பல உடல்நலக் கோளாறுகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.

    * ஹேர் ஸ்ட்ரெய்டனிங் உச்சந்தலையில் பயன்படுத்தக்கூடாது.

    * ஏனெனில் தோல் எரியும் அபாயம் உள்ளது.

    * ஹேர் ஸ்ட்ரெயிட்னிங் சரியாக செய்யாவிட்டால், பொடுகு, முடி உதிர்தல், நரை, முடி பிளவு முனைகள் ஏற்படும்.

    * ஹேர் ஸ்மூத்திங் செய்தால் முடி உதிர்தல், உச்சந்தலையில் எரிச்சல், சிலருக்கு ரசாயனங்களால் ஒவ்வாமை ஏற்படலாம்.

    * கர்லிங் (சுருட்டையாக்குதல்) செய்யும்போது கூந்தல் முற்றிலும் உலர்ந்திருக்க வேண்டும். ஏனென்றால், அவை வேறுபட்ட சூட்டைப் பயன்படுத்துகின்றன.

    * சுருட்டை முடியில் ஃபிளாட் அயர்னை பயன்படுத்துதல். ஃபிளாட் அயர்னை பயன்படுத்துவதற்கு முன்பு கூந்தலை புளோ -டிரை செய்ய வேண்டும்.

    * கூந்தல் முழுவதையும் ஒரே நேரத்தில் அயர்ன் செய்யக்கூடாது. இதனால், சீரற்ற சூடும் அழுத்தமும் ஏற்படுகிறது. இவை இரண்டுமே சீரற்ற கூந்தல் நேராக்குதலுக்கு வழிவகுத்து விடும்.

    • வறண்ட கூந்தலுக்கு முட்டை மாஸ்க்கும் சிறந்தது.
    • ஆலிவ் ஆயில் வறண்ட கூந்தலுக்கான மிகச் சிறந்த முறை

    கூந்தல் பராமரிப்பில் பலருக்கும் உள்ள சிக்கல் தங்களின் வறண்ட கூந்தலை எப்படி சரி செய்வது என்பதுதான். உங்களின் கூந்தல் வறண்ட தன்மையுடையதா? இதோ, உங்கள் கூந்தல் பட்டு போன்று மிளிர சில குறிப்புகள் பின்வருமாறு:-

    1. வறட்சியால் முடி உதிர்வு எனில், ஒரு டீஸ்பூன் ஆலிவ் ஆயில், ஒரு டீஸ்பூன் எலுமிச்சைச் சாறு, ஒரு டீஸ்பூன் தயிர், முட்டையின் வெள்ளைக்கரு ஆகியவற்றைக் கலந்து ஸ்கால்ப்பில் அப்ளை செய்து தொடர்ந்து குளித்து வர, முடி உறுதி அடைவதோடு உதிர்வதும் நிற்கும்.

     2. வறண்ட கூந்தல் உள்ளவர்கள் 25 மில்லி 'ஈவினிங் ப்ரிம் ரோஸ் ஆயில்' உடன் (அனைத்து ஹெல்த் புராடக்ட்ஸ் கடைகளிலும் கிடைக்கும்) தேங்காய்ப்பால் (கூந்தலின் தேவைக்கு ஏற்ப) கலந்து தலையில் தேய்த்து நான்கு மணிநேரம் ஊறவைத்துக் குளிக்க, கூந்தல் டால் அடிப்பது உறுதி

    3. ஒரு அவகாடோ பழத்தை மேஷ் செய்து முட்டையுடன் சேர்த்துக்கொள்ள வேண்டு. பின்னர் ஈரமான கூந்தலில் இந்த பேஸ்டை தடவி குறைந்தபட்சம் 20 நிமிடங்களுக்கு மேல் ஊற வைத்து கழுவினால் மென்மையான கூந்தலை பெறலாம்.

     4. வெண்ணையை வரண்ட முடிகளில் தடவி நன்றாக மசாஜ் செய்யலாம், பின்னர் அரை மணி நேரம் ஊறவைத்து வழக்கம் போல் ஷாம்பூ போட்டு தலைமுடியை சுத்தம் செய்யலாம். இப்படி செய்தால் பளபளப்பான கூந்தலை எளிதாக பெறலாம்.

     5. வறண்ட கூந்தலுக்கு முட்டை மாஸ்க்கும் சிறந்தது. முட்டையின் வெள்ளை கரு மற்றும் ஆலிவ் ஆயில் சேர்த்து கலந்து தலையில் தேய்த்துக்கொள்ள வேண்டும். பிறகு 15-20 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழுவலாம். இவ்வாறு வாரம் ஒருமுறை தொடர்ந்து செய்து வந்தால் உங்கள் கூந்தல் பட்டு போல் அலைபாயும்.

    6. ஆலிவ் ஆயில் வறண்ட கூந்தலுக்கான மிகச் சிறந்த முறையாகும். 1/2 கப் ஆலிவ் எண்ணெயை இதமான சூட்டில் காய்ச்சி எடுத்துக்கொள்ள வேண்டும். வறண்ட உங்கள் கூந்தலில் இதனை தேய்த்து ஊறவைத்து பின்னர் கூந்தலை ஒரு பிளாஸ்டிக் பையை கொண்டு கவர் செய்யவும். 45 நிமிடங்களுக்கு பின்னர் ஷாம்பூ போட்டு அலசலாம். இதனை செய்து வந்தால் மென்மையான பளபளப்பான கூந்தலை பெறலாம்.

    7. வறண்ட கூந்தல் பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வர கற்றாழை ஜெல் பெரிதும் பயன்படுகிறது. கற்றாழை ஜெல்லை மயிர்க்கால்களில் படும்படி தேய்க்கும் போது அது முடியின் வேர்க்கால்களுக்குள் நுழைந்து கூந்தல் வறண்டு போவதை தடுக்கிறது. கற்றாழை ஜெல்லை தடவிய பிறகு ஒரு ஒரு மணி நேரம் அப்படியே வைக்க வேண்டும். பிறகு மைல்டு ஷாம்பு கொண்டு அலசிக் கொள்ளுங்கள்.

    8. ஆல்மண்ட் ஆயில்,ஆலிவ் ஆயில்,,நல்லெண்ணெய்,விளக்கெண்ணையை சமஅளவு எடுத்து,லேசாக சூடாக்கி தலையில் தேய்த்து மஜாஜ் செய்து ஒரு மணிநேரம் கழித்து குளிக்கலாம். இப்படி இரண்டு நாட்களுக்கு ஒருமுறை செய்து குளிக்க உங்கள் கூந்தல் 'டால்' அடிப்பது உறுதி.

    • கரும்புள்ளிகள் வேரோடு வந்துவிடும்.
    • ஆவி பிடிப்பதால், முகப்பருக்கள் குறையும்.

    முகத்தில் உள்ள அழுக்குகள் விரைவில் எளிதாக செல்வதற்கு ஆவி பிடித்தால் மிகவும் சிறந்தது. ஆவி பிடித்து முடித்ததும், முகத்தை சுத்தமான துணியால் துடைக்கும் போது, முகத்தில் உள்ள இறந்த செல்கள் எளிதில் வந்துவிடும். இருமல், ஜலதோஷம், சளி தொந்தரவு, தலைவலி மற்றும் உடல் அசதி உள்ளவர்கள் அனைவரும் ஆவி பிடித்தால் நிமிட நேரத்தில் நோய்கள் பறந்தோடிவிடும். இதை காலை வேளையிலும், இரவு தூங்கச் செல்வதற்கு முன்பும் சிறிது நேரம் ஆவி பிடித்துவிட்டால் போதும் விரைவில் நோய் குணமாகும்.

    * கரும்புள்ளிகள் மற்றும் வெள்ளை புள்ளிகளும் விரைவில் நீங்கிவிடும். அதற்கு 5 முதல் 10 நிமிடம் ஆவி பிடித்து, பின் தேய்த்தால், மூக்கில் காணப்படும் வெள்ளையானவை சீக்கிரம் வந்துவிடும். மேலும் அவை எளிதில் வருவதோடு, கரும்புள்ளிகள் வேரோடு வந்துவிடும். பின்னர் அவை வராது போய்விடும்.

    * ஆவி பிடிப்பதால், முகப்பருக்கள் குறையும். எப்படியெனில் ஆவி பிடிக்கும் போது முகத்தில் உள்ள எண்ணெய் சுரப்பிகளில் இருந்து சுரக்கும் சருமத்திற்கு ஏற்ற இயற்கை எண்ணெயால், சருமம் எண்ணெய் பசையோடு இருப்பதால், துளைகளில் சேரும் அழுக்குகள் அல்லது டாக்ஸின்களால் ஏற்படும் பருக்கள், துணியால் துடைக்கும் போது போய்விடும்.

    * மற்றொரு நன்மைகள் என்னவென்றால், முதுமை தோற்றதை தடுக்கும். எவ்வாறென்றால், சருமத்தில் அழுக்குகள் நீங்காமல் தங்கிவிடுவதால் தான், முகம் மிகவும் பளிச்சென்று இல்லாமல் முதுமை தோற்றத்தோடு காணப்படுகிறது. அப்போது ஆவி பிடித்தால், அவை அந்த அழுக்குகளை நீக்கி, பளிச்சென்று, இளமைத் தோற்றதை தரும்.

    * பிம்பிள் இருக்கும் போது முகத்திற்கு 4-5 நிமிடம் ஆவி பிடிக்க வேண்டும். பின் 30 நிமிடம் ரிலாக்ஸ் ஆக இருந்து, பின்னர் ஐஸ் கட்டிகளால், முகத்தை தேய்த்தால், பிம்பிள் உடைந்துவிடும். இதனால் ஒரே நாளில் பிம்பிளை சூப்பராக குறைத்துவிடலாம்.

    * ஆவி பிடிக்கும் போது முகத்திற்கு சரியாக ரத்த ஓட்டம் இருக்கும். மேலும் துளைகள் நன்கு எந்த ஒரு தொந்தரவும் இல்லாமல் சுவாசிக்கும். அதனால் சருமம் நன்கு அழகாக, பொலிவோடு இருக்கும். ஆகவே நேரம் இருக்கும் போது முகத்திற்கு ஆவி பிடித்து, சோர்ந்து போன சருமத்தை புத்துணர்ச்சியுடன், அழகாக மாற்றுங்கள்.

    • முகப்பருக்கள் வராமல் தடுப்பதற்கு உணவுக்கட்டுப்பாடு அவசியம்.
    • வேப்பிலை கிருமி நாசினியாக செயல்படுகிறது.

    இன்றைய காலக்கட்டத்தில் பிம்பிள்ஸ், கரும் புள்ளிகள், தழும்புகள் என அனைத்தும் அவர்களது அழகான கன்னங்களுக்கு அச்சுறுத்தலாகத் உள்ளது.

    பருக்கள் வராமல் இருக்க வேண்டும் என்றால் மலச்சிக்கல் வராத அளவுக்கு வயிற்றைப் பராமரிக்க வேண்டும். பொடுகுத் தொல்லை, ஹார்மோன் பிரச்சினை, நகத்தினை வளர்த்தல், முறையற்ற உணவுப்பழக்கம், உணவில் அதிக அளவு எண்ணெய் பயன்படுத்துதல் போன்றவை இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

    வெளிப்படையான பயன்பாடுகளை பொருத்த வரையில் தலையணை உறை, சோப், டவல் போன்றவைகளை தனித்தனியாக ஒவ்வொருவரும் வைத்து தங்களுக்கு மட்டும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். முகப்பரு இருக்கும் ஒருவர் பயன்படுத்தும் பொருட்களை இன்னொருவர் பயன்படுத்தும் போது அவருக்கும் பரவக்கூடும்.

     முகப்பருக்கள் வராமல் தடுப்பதற்கு உணவுக்கட்டுப்பாடு மிகவும் அவசியம். எளிதில் செரிமானம் ஆகக்கூடிய மென்மையான உணவுகளை உண்ண வேண்டும். பழங்கள், காய்கறிகள், கீரை வகைகளை உணவில் அதிகம் சேர்க்க வேண்டும். தண்ணீர் நிறைய பருக வேண்டும். முகத்தில் எண்ணெய் வழியாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். பொடுகுத் தொல்லை இருந்தால் முறையான சிகிச்சை எடுத்து அதனைக் கட்டுப்படுத்த வேண்டும். அவ்வப்போது வெதுவெதுப்பான நீரில் முகத்தைக் கழுவி சுத்தப்படுத்த வேண்டும். இதை எல்லாம் தொடர்ந்து செய்து வந்தால் பிம்பிள்ஸ் பிரச்சனை இருக்காது.

     கரும்புள்ளிகள் மறைய:

    வேப்பிலை கிருமி நாசினியாக செயல்படுகிறது. கொழுந்து வேப்பிலையை தண்ணீரில் அரைத்து முகப்பரு இருக்கும் இடத்தில் பூசி 15 நிமிடம் கழித்து கழுவிவிட வேண்டும். முகத்திற்கு மஞ்சள் பூசுவதை முடிந்த வரை தவிர்த்து விடுங்கள். இப்போதைய மஞ்சளில் அதிக அளவு ரசாயணத் தன்மை இருக்கிறது. அது பலரது முகத்திற்கும் ஒத்துக்கொள்ளாததாக இருக்கிறது. அதுபோல எலுமிச்சை சாறையும் தனியாக முகத்தில் தேய்த்துவிட வேண்டாம்.

     முகத்தில் உள்ள வடுக்கள் நீங்க:

    முகத்தில் பல்வேறு விதமான வடுக்கள் ஏற்படுகின்றன. முகப்பரு வடு, அம்மைத் தழும்பு, விபத்துக்களால் ஏற்படும் வடு போன்றவை. தொடக்கத்திலேயே இதற்கு அழகு சிகிச்சை கொடுத்தால் நிரந்தரமாக மாற்றிவிடலாம். இல்லாவிட்டால் பிளாஸ்டிக் சர்ஜரி மூலம்தான் இதனை குணப்படுத்த வேண்டும். அதேநேரத்தில் வடுக்கள் எவ்வாறாக இருந்தாலும் அதனை மேக்கப் மூலம் தற்காலிகமாக மறைத்துவிடலாம்.

    இயற்கை அழகு சிகிச்கை:

    ஐம்பது சதவீத அளவிலான பெண்களுக்கு அதிகமான அளவு தொந்தரவு தந்து கொண்டிருப்பது முகத்தில் வளரும் ரோமங்கள்தான். இதற்கு பாரம்பரியம் ஒரு முக்கியக் காரணம். ஹார்மோனில் ஏற்படும் மாற்றங்களும் தேவையற்ற ரோமங்களை வளரச் செய்கிறது.

    வீட்டிலேயே இதற்கான இயற்கையான அழகு சிகிச்சைகளை மேற்கொள்ளலாம். பூலான் கிழங்கு, மஞ்சள், பாசிப்பயிறு, போன்றவைகளை அரைத்து தண்ணீர் கலந்து உடல் முழுக்கத் தேய்க்க வேண்டும். பத்து வயதில் இருந்து சிறுமிகளுக்கு இதனைதேய்து குளிப்பாட்டினால் தேவையற்ற ரோமங்கள் வளருவதை முதலில் இருந்தே தவிர்த்துவிடலாம்.

    • பொடுகு இல்லாத கூந்தல் வேண்டும் என்ற ஆசை நிச்சயம் இருக்கும்.
    • நீங்களும் கூந்தல் அழகியாக சில டிப்ஸ்

    கூந்தல் பராமரிப்பில் பலருக்கும் உள்ள சிக்கல் தங்களின் வறண்ட கூந்தலை எப்படி சரி செய்வது என்பதுதான். குறிப்பாக இந்த வகை கூந்தல் உள்ளவர்களுக்கு முடி எளிதில் உடையும். அதிகமாக உதிரும். முடியில் ஈரப்பதம் நிச்சயம் தேவையான ஒன்று. அதை எப்படி தக்க வைத்துக் கொள்வதென இங்கு பார்ப்போம்.

    எல்லா பெண்களும் அடிக்கடி முடி உதிராத, நீண்ட, பளபளப்பான, பொடுகு இல்லாத கூந்தல் வேண்டும் என்ற ஆசை நிச்சயம் இருக்கும். நீங்களும் கூந்தல் அழகியாக சில டிப்ஸ்:

    அவகேடா, தேன் மற்றும் ஆலிவ் ஆயில் சேர்ந்த ஹேர் மாஸ்க் வறண்ட கூந்தலுக்கு சிறந்த ஒன்று. இதை வாரத்திற்கு இரண்டு முறை செய்து வந்தால் மென்மையான பட்டு போன்ற கூந்தல் கிடைக்கும்.

    ஒரு கையளவு வேப்பிலை எடுத்து 4 கப் தண்ணீரில் நன்கு கொதிக்கவிடுங்கள். ஆறியதும் அந்த தண்ணீரால் தலையை அலசி வந்தால் பொடுகு வராமல் தடுக்கலாம். வினிகரை தலையில் தடவி குளித்து வந்தாலும் பொடுகு தொல்லை குறையும்.

    வெந்தயம், வேப்பிலை, கறிவேப்பிலை, பாசிபருப்பு, ஆவாராம் பூ ஆகியவற்றை வெயிலில் காய வைத்து மெஷினில் நன்கு பொடித்துக்கொள்ளுங்கள். இந்த பொடியை ஷாம்புக்கு பதிலாக வாரம் இருமுறை கூந்தலில் தேய்த்து அலசி குளியுங்கள். உங்கள் கூந்தல் பளப்பளக்க தொடக்கிவிடும்.

     ஹேர் டிரையரை அதிகம் உபயோகிக்காதீர்கள். அப்படி செய்தால் தலை வறண்டு, முடியின் வேர்களும் பழுதடைந்து போய்விடும். மேலும், அதிக கெமிக்கல் நிறைந்த ஷாம்பூ, ஹேர் கலர் ஆகியவற்றை பயன்படுத்தாதீர்கள்.

    இரவு படுக்கைக்கு செல்லுமுன் ஆலிவ் ஆயிலை தலையில் தடவி ஊறவிட்டு, மறுநாள் காலையில் குளித்து வந்தால் பேன் தொல்லையில் இருந்து விடுபடலாம்.

    தலைக்கு குளித்த பின்னர், ஒரு கப் தண்ணீரில் 1/2 கப் வினிகரை கலந்து தலையில் தேய்த்து அலசவும். பின் அப்படியே துண்டால் தலையில் கட்டிக் கொள்ளவும். 15 நிமிடத்திற்கு ஊற விடுங்கள். பின்பு, பேன் சீப்பால் சீவினால் தலையில் இருக்கும் ஈறு எல்லாம் வந்துவிடும். 2 வாரத்திற்கு ஒருமுறை இப்படி செய்து வந்தாலே போதும். பேன் தொல்லையிலிருந்து முற்றிலும் விடுபடலாம்.

    முட்டையின் வெள்ளைக் கருவை நன்கு அடித்து, தலையில் தேய்த்து ஊறவைத்து, மாதம் 2 முறை அவ்வாறு செய்து குளித்து வந்தால் போதும். கூந்தல் பளபளக்க ஆரம்பித்து விடும்.

    கறிவேப்பிலை, மருதாணி இரண்டையும் அரைத்து தலையில் தேய்த்து குளித்து வந்தால் இளநரையை தடுக்கலாம். மாதம் இரு முறை இவ்வாறு செய்தாலே போதும்.

    • ரேசர் பயன்படுத்துவதால் அக்குள் கருமையாகும்.
    • ஸ்லீவ்லெஸ் ஆடைகளை அணிவதில் சிரமம் இருக்கும்.

    சருமத்தை சரியாக கவனித்துக்கொள்வது எவ்வளவு முக்கியம் என்பதை நாம் அனைவரும் அறிவோம். முகத்துடன், உடலின் மற்ற பாகங்களின் தோலுக்கும் சமமான கவனிப்பு தேவைப்படுகிறது. அதை நாம் அடிக்கடி புறக்கணிக்கிறோம்.

    உடலில் மெலனின் அதிகரிக்கத் தொடங்கும் போது, உடலின் சில பகுதிகள் கருமையாகத் தொடங்கும். இதில் கழுத்து, தொடை இடுக்கு மற்றும் அக்குள்களும் அடங்கும். முடியை அகற்றும் கிரீம் அதிகமாக பயன்படுத்துவதால், அக்குள்களின் நிறமும் கருப்பாக மாறத்தொடங்குகிறது. எனவேதான், இந்த பொருட்களை குறைவாக பயன்படுத்த வேண்டும். முடி அகற்றுவதற்கு ரேசர் போன்றவற்றைப் பயன்படுத்துவதால், அக்குள் கருமையாகும்

    முழங்கால்கள் மற்றும் முழங்கைகள் தவிர, நம்மில் பலருக்கு அக்குள் கருமையாக இருக்கும். அக்குள் கருமையாக இருந்தால், நம்மால் ஸ்லீவ்லெஸ் ஆடைகளை அணிவதில் சிரமம் இருக்கும். அக்குள் கருமையை போக்க எந்த சிகிச்சையும், விலை உயர்ந்த கிரீம்களை தேவையில்லை. சமையலறையில் இருக்கும் சில பொருட்களைக் கொண்டு ஒரே வாரத்தில் அக்குள் கருமையை நீக்கிவிடலாம்.

     எலுமிச்சை

    அக்குளில் உள்ள கருமையைப் போக்குவதற்கு எலுமிச்சை ஒரு சிறந்த பொருள். ஏனெனில் அதில் ப்ளீச்சிங் தன்மை இருப்பதால், எலுமிச்சையைக் கொண்டு தினமும் அக்குளில் தேய்த்து, ஊற வைத்து கழுவினால், அக்குளில் உள்ள இறந்த செல்கள் நீங்கி, அக்குள் வெள்ளையாவதோடு, அக்குள் துர்நாற்றத்தில் இருந்து விடுபடலாம்.

    மஞ்சள், தயிர்

    மஞ்சள் மற்றும் தயிரில் இயற்கையாகவே ப்ளீச்சிங் தன்மை நிறைந்துள்ளது. எனவே சருமத்தில் உள்ள கருமையைப் போக்க, மஞ்சளை தயிரில் கலந்து, அக்குளில் தேய்த்து ஊற வைத்து கழுவினால், அக்குள் கருமையை நிச்சயம் போக்கலாம்.

    தயிர், எலுமிச்சை

    தயிர் மற்றும் எலுமிச்சை சாற்றை ஒன்றாக கலந்து, அக்குளில் தடவி 10 நிமிடம் ஸ்கரப் செய்து, குளிர்ச்சியான நீரில் கழுவ வேண்டும். இந்த முறையை தொடர்ந்து வாரத்திற்கு ஒரு முறை செய்து வந்தால், நல்ல பலன் கிடைக்கும்.

    உருளைக்கிழங்கு

    உருளைக்கிழங்கு சாற்றில் சில துளிகள் எலுமிச்சை சாறு கலக்கவும். காட்டனில் உதவியுடன் அக்குள்களில் தடவவும். பின்னர், 15 முதல் 20 நிமிடங்கள் கழித்து தண்ணீர் கொண்டு சுத்தம் செய்யவும். இதை அடிக்கடி செய்து வர நல்ல முன்னேற்றம் தெரியும்.

    குங்குமப்பூ

    குங்குமப்பூவை பாலில் ஊற வைத்து, அதனை அக்குளில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து, ஈரமான பஞ்சு கொண்டு துடைத்து, பின் நீரில் கழுவ வேண்டும். இந்த செயலை தினமும் செய்து வந்தால், அக்குளில் உள்ள கரும்புள்ளிகள் நீங்கி, அக்குள் வெள்ளையாகிவிடும்.

    டீ ட்ரீ ஆயில்

    தேயிலை மர எண்ணெய் சருமத்தின் நிறத்தை மேம்படுத்த மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இந்த எண்ணெய் தோல் தொடர்பான பல பிரச்சனைகளை குறைக்க உதவுகிறது. அக்குள் கருமையால் அவதிப்பட்டு வந்தால், தேயிலை மர எண்ணெயைப் பயன்படுத்தலாம். இதற்கு, ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் 2 கப் தண்ணீரில் 5 துளிகள் தேயிலை மர எண்ணெயைச் சேர்க்கவும். தினமும் குளித்த பிறகு, டீ ட்ரீ ஆயிலை அக்குள்களில் தெளித்து வந்தால் நல்ல பயன் கிடைக்கும்.

    • பழங்கள் சருமம் மற்றும் கூந்தலுக்கு ஆரோக்கியத்தை தருகிறது.
    • சரியான கூந்தல் பராமரிப்பு இல்லாததும் ஒரு காரணம்.

    பழங்கள் மற்றும் காய்கறிகளை டயட்டில் சேர்ப்பதால், அவை உடலுக்கு ஆரோக்கியத்தை மட்டும் தருவதில்லை, சருமம் மற்றும் கூந்தலுக்கும் தான் ஆரோக்கியத்தை தருகிறது. மேலும் பழங்கள் மற்றும் காய்கறிகளை சாப்பிடுவது, மட்டுமின்றி, அவற்றை அழகுப் பொருளாகவும், சருமம் மற்றும் கூந்தலுக்கும் பயன்படுத்தலாம்.

    இத்தகைய சருமம் மற்றும் கூந்தல் பராமரிப்பிற்கு நிறைய பழங்கள் பயனுள்ளவையாக உள்ளன. உதாரணமாக, மிகவும் பிரபலமான வாழைப்பழம் கூந்தலுக்கு மட்டுமின்றி, சருமத்திற்கும் மிகவும் சிறந்தது. அதேபோன்று காய்கறிகளில் பசலைக் கீரை, ப்ராக்கோலி மற்றும் கேரட் போன்றவையும் கூந்தலுக்கு மிகவும் நல்லது.

    தற்போது கூந்தல் உதிர்தல் பிரச்சனை அதிகமாக உள்ளது. இவற்றிற்கு ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை மற்றும் உணவுகள் மட்டுமின்றி, சரியான கூந்தல் பராமரிப்பு இல்லாததும் ஒரு காரணம். எனவே இத்தகைய கூந்தல் உதிர்தலைத் தடுப்பதற்கு, பழங்களில் எவை பயன்படுகின்றன என்று ஒருசில பழங்களை பட்டியலிட்டுள்ளோம்.

     நெல்லிக்காய்

    நெல்லிக்கால் கூந்தல் வளர்ச்சிக்கான பொருள் நிறைந்துள்ளது. மேலும் தலையில் பொடுகு உள்ளவர்கள், நெல்லிக்காய் சாற்றுடன், எலுமிச்சை சாறு மற்றும் தயிர் சேர்த்து கலந்து, முடியின் வேர்கால்களில் படும் படியாக தேய்த்து ஊற வைத்து குளித்தால், பொடுகுத் தொல்லையோடு, கூந்தல் உதிர்தல் பிரச்சனையும் நீங்கும்.

     அவகேடோ

    அவகேடோவின் நன்மைகளை சொல்லித் தான் தெரியுமா என்ன? அவகேடோ சருமத்திற்கு மட்டுமின்றி, கூந்தலுக்கும் பெரிதும் நன்மையைத் தருவதாக உள்ளது. அதிலும் ஸ்கால்ப்பை சுத்தமாக வைத்துக் கொள்ள பெரிதும் உதவுகிறது. அதற்கு அவகேடோ பழத்தை அரைத்து, அத்துடன், வெந்தயப் பொடி, சிறிது க்ரீன் டீ மற்றும் சிறிது வெதுவெதுப்பான நீர் சேர்த்து கலந்து, தலையில் தடவி ஊற வைத்து குளிக்க வேண்டும்.

     வாழைப்பழம்

    வாழைப்பழத்தை மசித்து, அதனை கூந்தலில் தடவி ஊற வைத்து குளித்தால், கூந்தல் பட்டு போன்றும் மிருதுவாக இருக்கும்.

     கொய்யாப்பழம்

    கொய்யாப்பழத்தில் கூந்தல் வளர்ச்சியை அதிகரிக்கும் வைட்டமின் ஏ அதிகம். எனவே கொய்யாப்பழத்தை அரைத்து, அத்துடன் எலுமிச்சை சாறு மற்றும் தேன் சேர்த்து கலந்து, கூந்தலில் தடவி ஊற வைத்து குளிக்க வேண்டும்.

     பப்பாளி

    கூந்தலை பராமரிக்க சிறந்த பழங்களில் பப்பாளியும் ஒன்று. அதற்கு பப்பாளியின் ஜூசை, பால் மற்றும் தேனுடன் கலந்து, ஸ்கால்ப்பில் தடவினால், ஸ்கால்ப்பில் ஏற்படும் பிரச்சனைகள் மட்டுமின்றி, கூந்தல் உதிர்தலும் நீங்கும்.

     ஆரஞ்சு

    சிட்ரஸ் பழங்களுள் ஒன்றான இனிப்புச் சுவையுடைய ஆரஞ்சு பழங்கள் கூந்தல் உதிர்தலைத் தடுத்து, அதன் வளர்ச்சியை அதிகரிக்கும். அதற்கு ஆரஞ்சு பழத்தின் சாற்றினை தலையில் ஸ்கால்ப்பில் படும்படியாக தடவினால், நல்ல பலனைப் பெறலாம்.

     பெர்ரிஸ்

    இந்த அடர்ந்த நிறமுடைய பழங்கள் கூந்தல் உதிர்தலை தடுக்கவும், கூந்தலின் வளர்ச்சியை அதிகரிக்கவும் உறுதுணையாக உள்ளது. எப்படியெனில் இதில் உள்ள பயோஃப்ளேவோனாய்டுகள், ரத்த ஓட்டத்தை சீராக வைப்பதோடு, மயிர்கால்களை வலுவாக்கி, கூந்தல் உதிர்தலை தடுக்கின்றன.

     செர்ரி

    செர்ரி பழங்களிலும், கூந்தல் உதிர்தலை தடுக்கும் பளோஃப்ளேவோனாய்டுகள் இருக்கின்றன.

     ப்ளம்ஸ்

    நல்ல ஆரோக்கியமான கூந்தல் வேண்டுமா? அப்படியெனில் கூந்தலைப் பராமரிக்க ப்ளம்ஸ் பயன்படுத்த வேண்டும். அதிலும், ப்ளம்ஸ் வைத்து, ஹேர் மாஸ்க் போட்டால், கூந்தல் உதிர்தல் நின்றுவிடும்.

    பீச்

    பொதுவாக பீச் பழம் ஸ்கால்ப் பிரச்சனைகளை சரிசெய்ய உதவும் ஒரு பொருள். அதிலும் ஸ்கால்ப்பானது சுத்தமாக இல்லாமல், பொடுகுத் தொல்லை இருந்தால், கூந்தல் உதிர்தல் ஏற்படும். எனவே இதற்கு ஒரே சூப்பரான தீர்வு என்றால், அது பீச் ஹேர் மாஸ்க் தான்.

     பம்பளிமாஸ்

    வைட்டமின் சி அதிகம் நிறைந்துள்ள சிட்ரஸ் பழங்களில் பம்பளிமாஸ் பழத்தின் சாற்றினை தலையில் தடவி ஊற வைத்து குளித்தால், தலையில் ரத்த ஓட்டமானது சீராக இருப்பதோடு, கூந்தல் உதிர்தலும் நீங்கும்.

     எலுமிச்சை

    எலுமிச்சையில் நிறைய கூந்தலுக்கான நன்மைகள் உள்ளன. அதிலும் எலுமிச்சை சாற்றினை கூந்தல் பராமரிப்பில் பயன்படுத்தினால், கூந்தல் உதிர்தல் நிற்பதோடு, பொடுகுத் தொல்லை, வறட்சியான ஸ்கால்ப் போன்றவை தடைப்படும்.

    • 'பெடிக்யூர்' செய்வதற்கு பியூட்டி பார்லர் தான் செல்ல வேண்டும் என்பதில்லை.
    • பெடிக்யூர் செய்வதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா?

    கால் விரல் நகங்களை அழகாக பராமரிக்கும் 'பெடிக்யூர்' செய்வதற்கு அழகு நிலையம் தான் செல்ல வேண்டும் என்பதில்லை. வீட்டில் இருந்த படியேகூட அதை மேற்கொள்ளலாம். அது எவ்வாறு என்று பார்ப்போம்...

     முதலில் பாதங்களைச் சுத்தமாக கழுவிக் கொள்ள வேண்டும். ஒரு அகலமான பக்கெட்டில் வெதுவெதுப்பான நீரை ஊற்றிக் கொள்ள வேண்டும். பாதியளவு ஊற்றினாலே போதுமானது. அந்த நீரில் சிறிதளவு உப்பு, பாதி எலுமிச்சை சேர்த்துக் கலந்து, அதில் பாதங்களை 20நிமிடம் வைக்க வேண்டும்.

    நீரில் உள்ள உப்பு, கால்களில் உள்ள அழுக்குகள், நுண்ணுயிர்கள் போன்றவற்றை நீக்குகிறது. சருமத்தை மென்மையாக்குகிறது. பின்னர் பிரஷ் வைத்து பாதங்களை சுத்தம் செய்ய வேண்டும்.

    20 நிமிடங்கள் கழித்து, பாதங்களில் ஈரம் இல்லாமல் துடைத்துவிட வேண்டும். கால் விரல் நகங்களில் நெயில் பாலீஷ் போட்டிருந்தால், நெயில் பாலீஷ் ரிமூவர் மூலம், பழைய நெயில் பாலீஷை அகற்ற வேண்டும். நகங்கள் சற்று நீளமாகவோ அல்லது சீரற்ற முறையில் இருந்தாலோ, நெயில் கட்டர் மூலம் வெட்டிவிடலாம்.

    அடுத்து பியூமிஸ் ஸ்டோனை வைத்து, குதிகால் உள்ளிட்டவற்றை நன்கு சுத்தப்படுத்த வேண்டும். அழுக்குகள் நீங்கும்வரை நன்றாக சுத்தம் செய்ய வேண்டும். பின்னர் பாதங்களை கழுவிக்கொள்ள வேண்டும்.

    அடுத்ததாக, 'ஸ்கிரப்பிங்' செய்ய வேண்டும். அதற்கு, ஒரு கிண்ணத்தில் 2 ஸ்பூன் தேங்காய் எண்ணெய், 4 ஸ்பூன் சர்க்கரை, ஒரு ஸ்பூன் எலுமிச்சைச் சாறு மற்றும் தேன் சேர்த்து நன்கு கலக்க வேண்டும். இந்த திரவத்தை கால் விரல்கள் மற்றும் உள்ளங்கால்களில் தேய்த்து, 5 நிமிடத்துக்குப் பின்னர் தண்ணீரில் கழுவ வேண்டும்.

     கடைசியாக, உங்களுக்கு விருப்பமான மாய்சரைசரை கால்களில் தடவி, உலரவிடவேண்டும். இப்போது உங்களுக்குப் பிடித்த நெயில் பாலீஷை நகங்களில் போட்டுக்கொள்ளலாம். இப்போது உங்கள் கால் பாதங்களைப் பாருங்கள். உங்களுக்கே ரசிக்கத் தோன்றும்.

    இதுபோல பெடிக்யூர் செய்வதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? கால் பாதங்களில் வெடிப்பு ஏற்படாது. பூஞ்சைத் தொற்றுகள் ஏற்படாது. இறந்த செல்கள் அகற்றப்படும். பாதங்கள் சுத்தமாகவும், அழகாகவும் காட்சியளிக்கும்.

    • உடலில் அதிக பித்தம் ஏற்படுவதால் பாத வெடிப்பு ஏற்படுகிறது.
    • உடலில் உள்ள அனைத்து நரம்புகளும் பாதங்களில் இருக்கின்றன.

    உடலில் அதிக பித்தம் ஏற்படுவதால் பாத வெடிப்பு ஏற்படுகிறது. உடலில் உள்ள அனைத்து நரம்புகளும் பாதங்களில் இருக்கின்றன. இதனால் அதனை சுத்தம் செய்து தூண்டும்போது ரத்தத்தை சுத்தப்படுத்துகிறது. பாத வெடிப்புகள் உள்ளதால் நடப்பதே சிரமமாகிறது. கல் போன்ற சிறு பொருட்களும் உள்நுழைந்து விடுகிறது. இதனால் புண்கள் ஏற்படுகின்றன.

    பாதத்தில் வெடிப்பு என்பது பலரை சிரமத்திற்கு உள்ளாக்கும் விஷயமாக உள்ளது. நமது பாதங்களை சுத்தமாக பராமரிக்காமல் இருக்கும் பட்சத்திலேயே பாத வெடிப்பானது உண்டாகிறது. இந்த வெடிப்பை சரிவர பராமரிக்காமல் இருக்கும் பட்சத்தில், புண்களாக மாறி வலியை ஏற்படுத்தும்.

    பொதுவாக கிருமிகளின் தொற்று மூலமாகவும். உடலின் ஊட்டச்சத்து குறைபாட்டினாலும் ஏற்படுகிறது. பாத வெடிப்பு பிரச்சனை ஏற்பட்டால் பாதத்தின் அழகும் குறைந்து, பாத வெடிப்பு புண்களாக மாறி வலியையும் ஏற்படுத்துகிறது. பாதத்தில் ஏற்படும் பாத வெடிப்புகளை இயற்கையான முறையில் சரி செய்யும் முறை குறித்து இனி காண்போம்.

    நமது பாதங்கள் பித்தவெடிப்புடன் வறட்சியாக காணப்படும் பட்சத்தில். ஒரு தேக்கரண்டி ஆலிவ் ஆயில் அல்லது பாதம் எண்ணெய்யை சேர்த்து பேஸ்ட் மாதிரி கலந்துகொள்ள வேண்டும். பின்னர் இளம் சூடுள்ள நீரில் 10 நிமிடங்கள் ஊற வைத்து கழுவிய பிறகு தயார் செய்யப்பட்ட பேஸ்ட்டை தடவ வேண்டும்.

    பாதத்தின் பித்த வெடிப்பானது தொடக்க கடத்தில் இருக்கும் பட்சத்தில், வெறுமையான தேன் மற்றும் ஆலிவ் ஆயிலை தடவி வரலாம். இந்த முறையை வாரத்திற்கு தொடர்ந்து செய்து வரவேண்டும்.

    தினமும் சாப்பிடும் வாழைப்பழத்தை நன்கு மசித்து, பாதத்தில் தடவி சுமார் 10 நிமிடங்கள் கழித்த பின்னர்.. நீரினால் கழுவி வர பாத வெடிப்புகள் மறையத் தொடங்கும்.

    எலுமிச்சை சாற்றினை இளம் சூடுள்ள நீரில் கலந்து, பாதங்களை வாரத்திற்கு ஒரு முறை, சுமார் 10 நிமிடங்கள் கழித்த பின்னர் கழுவினால் பாதங்களானது மென்மையாகும்.

    தேங்காய் எண்ணெய் மற்றும் விளக்கெண்ணையை சமமான அளவில் எடுத்து., மஞ்சளுடன் சேர்த்து பாதத்தில் தடவினால்  பித்த வெடிப்பானது உடனடியாக நீங்கும். மேலும், நமது பாதத்திற்கு ஏற்ற வடிவம் மற்றும் அளவில் இருக்கும.

     காலணிகளை அணிவது, பாதத்தில் ஈரத்தன்மை இல்லாத அளவில் உலர்த்துவது போன்றவதை செய்யலாம். எளிமையான முறையாக இரவில் உறங்குவதற்கு முன்னதாக கால்களில் தேங்காய் எண்ணெய் தேய்த்து உறங்கினாலே போதுமானது.

    முதலில் காலை ஸ்க்ரப் கொண்டு தேய்த்து கொள்ளவும். அதன்பின் எலும்பிச்சை பழத்தை இரண்டாக நறுக்கி அதனை காலில் தேய்த்துக்கொள்ளவும். பிறகு ஒரு அகலமான பிளாஸ்டிக் பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அதில் 2 டேபிள்ஸ்பூன் சோடா உப்பை சேர்த்து அதன் பின் சாதா உப்பு, ஷாம்பூ சேர்த்து கலந்துகொள்ளவும். அதில் காலை வைத்து 15 நிமிடம் அப்படியே விட்டு விடவும். இதனால் காலில் உள்ள அழுக்குகள் இறந்த செல்கள் அகற்றபடும்.

    பிறகு காலை துடைத்து விட்டு ஒரு பவுலில் சர்க்கரை மற்றும் தேங்காய் எண்ணெய் சேர்த்து கலந்து  அதனை கால் முழுவதும் நன்கு மசாஜ் செய்வது போல தடவ வேண்டும். பின்னர் அதனை ஒரு துணியால் துடைத்து பிளாஸ்டிக் கவரை காலில் கட்டி அதன் மேல் காலுறை அணிந்து தூங்க வேண்டும். காலை எழுந்ததும் அவற்றை கழட்டி குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இதை வாரத்திற்கு இரண்டு முறை செய்ய வேண்டும்.

    மேலும் மருதாணி இலை மற்றும் மஞ்சள்கிழங்கு இந்த இரண்டையும் அரைத்து காலில் தடவி 15 நிமிடம் கழித்து கழுவ வேண்டும். இதனை  வாரத்திற்கு ஒரு முறை செய்து வந்தாலும் பாத வெடிப்பு நீங்கும்.

    ×