search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குழந்தை பராமரிப்பு"

    • பெண்களுக்கு குழந்தைவளர்ப்பு, பராமரிப்பு பற்றி பல குழப்பங்கள் இருக்கும்.
    • பிறந்த குழந்தைக்கு தாய்ப்பால் என்பது மிகவும் அவசியம்.

    முதல்முறையாக தாயான பெண்களுக்கு குழந்தைவளர்ப்பு, பராமரிப்பு பற்றி பல குழப்பங்கள் இருக்கும். குழந்தைகள் பிறந்ததும் என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்பது குறித்து இளம் தாய்மார்களுக்கு சந்தேகம் இருக்கவே செய்யும். குழந்தையின் அழுகை, குழந்தை பராமரிப்பு வரை எதைக்கண்டாலும் மனதில் ஒருவித அச்சம் இருக்கவே செய்யும்.

    சுகப்பிரசவமாக இருந்தாலும், அறுவை சிகிச்சையாக இருந்தாலும் குழந்தை பிறந்த பிறகு மற்றுமொரு சவால் குழந்தை வளர்ப்பு தான். பல பெண்களும் குழந்தை பிறந்தவுடன் கர்ப்பகால அவஸ்தைகள் முடிந்துவிடுவதாக நினைக்கிறார்கள். ஆனால் தாய்மையின் பயணமே அப்போது தான் தொடங்குகிறது. அதிலும் குறிப்பாக முதல் முறை தாயாகியிருக்கும் பெண்கள் அவசியம் குழந்தை வளர்ப்பு பற்றி அவசியம் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.

    குழந்தைக்கு தாய்ப்பாலூட்டுதல்:

    பிறந்த குழந்தைக்கு தாய்ப்பால் என்பது மிகவும் அவசியம் என்பதை மருத்துவர் குழந்தை பிறந்ததும் வலியுறுத்துவார். பிரசவித்தவுடன் குழந்தைக்கு தரக்கூடிய தாய்ப்பால் சீம்பால் என்று அழைக்கப்படுகிறது. இந்த பாலில் குழந்தைக்கு தேவையான எதிர்ப்புசக்தி கிடைக்கும் என்பதால் முதலில் வெளிவரும் மஞ்சள் நிற பாலை குழந்தைக்கு தவிர்க்காமல் கொடுக்க வேண்டும்.

    தாய்ப்பால் கொடுக்கும் நிலை

    குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கும் நிலைகள் உண்டு. இளந்தாய்மார்கள் அனைவருமே செவிலியர் அல்லது மருத்துவரிடம் ஆலோசித்து குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கும் நிலையை தெரிந்துகொள்ள வேண்டும். ஏனெனில் தாய்ப்பால் கொடுக்கும் முறையை அறிந்து சரியாக பின்பற்றும் போது தாய்ப்பால் சுரப்பும் கிடைக்கும். குழந்தைக்கும் தாய்க்கும் இடையேயான பிணைப்பும் அதிகமாகும்.

    குழந்தையின் அழுகை

    குழந்தையின் அழுகை குறித்து சரியாக தெரியாது என்றாலும் ஓரளவேனும் அதன் அறிகுறிகள் குறித்து தெரிந்துகொள்ள வேண்டும். பசிக்கான அழுகை, டயப்பர் ஈர அழுகை, வயிற்றுவலிக்கான அழுகை, தூக்கத்துக்கான் அழுகை என்று எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். இதையெல்லாம் தாண்டி குழந்தையின் அழுகை காய்ச்சல் அல்லது வேறு பிரச்சனைகளால் தீவிரமாக இருக்கும் போது என்ன செய்ய வேண்டும் என்பதை மருத்துவரிடம் கேட்டு அறிந்துகொள்வது அவசியம்.

    குழந்தைக்கான தடுப்பூசி

    பிறந்த குழந்தைக்கு தடுப்பூசி அட்டவணையை மருத்துவரே அளிப்பார் என்றாலும் அதை அம்மாக்களும் நினைவுபடுத்தி வாங்கி வைத்துக்கொள்ள வேண்டும். சீரான இடைவெளியில் குழந்தைக்கு தடுப்பூசி போடுவதை நினைவுபடுத்தி முன்கூட்டியே மருத்துவரை அணுகி ஆலோசனை பெற வேண்டும்.

    குழந்தைக்கான மருந்துகள் பிறந்த நேரத்தில் இல்லை என்றாலும் அதிக காய்ச்சல், சளி, இருமல், தாய்ப்பால் குடிக்காத காலங்களில் அவசரத்துக்கு என்ன செய்ய வேண்டும். எப்போது சிகிச்சைக்கு மருத்துவரிடம் செல்ல வேண்டும் என்பதையும் ஆலோசித்து வைத்துகொள்வது நல்லது.

    குழந்தையை குளிக்கவைக்கும் முறை:

    பிறக்கும் குழந்தை ஆரோக்கியமாக இருந்தால் அடுத்த நாள் முதலே குளிக்க வைக்கலாம். ஆனால் அம்மாக்களால் குழந்தையை குளிப்பாட்டுவது சிரமமாக இருக்கும். வீட்டில் பெரியவர்கள் இல்லை என்றால் எப்படி குழந்தையை குளிக்க வைக்க வேண்டும் என்பதை பற்றி பெற்றோர்கள் இருவருமே தெரிந்துவைத்துக்கொள்ள வேண்டும். 

    குழந்தைக்கு மசாஜ் செய்யும் முறை, அதன் முக்கியத்துவம், தலைகுளியல், குளிக்க வைக்கும் முறை என அனைத்தையும் கற்றுக்கொள்வது நல்லது.

    • காட்டன் டயப்பர்கள் குழந்தைகளுக்கு அணிவித்தால் குழந்தைகளின் தோலுக்கு எந்தவித கெடுதலும் இருக்காது.
    • அதிக செயற்கை பொருட்களாலான டயப்பர்களை உபயோகப்படுத்துவது குழந்தைக்கும், சுற்றுச்சூழலுக்கும் கேடு விளைவிக்கும்.

    குழந்தைகளுக்கு டயப்பர் அணிவது பெற்றோர்களுக்கு சவுகரியமான செயல் என்றாலும் அந்த டயப்பரால் சில தீமைகளும் இருக்கின்றன.

    அதிக செயற்கை பொருட்களாலான டயப்பர்களை உபயோகப்படுத்துவது குழந்தைக்கும், சுற்றுச்சூழலுக்கும் கேடு விளைவிக்கும்.

    ஈரமான டயப்பர்கள், வைரஸ், பாக்டீரியா மற்றும் பூஞ்சை தொற்றுக்களையும், சிறுநீர் பாதையில் நோய் தொற்றுகள் அதிகரிக்கவும் வழி வகுக்கின்றன. 

    காட்டன் டயப்பர்கள் குழந்தைகளுக்கு அணிவித்தால் குழந்தைகளின் தோலுக்கு எந்தவித கெடுதலும் இருக்காது. அதை துவைத்து மீண்டும் பயன்படுத்தலாம். ஆனால் கெமிக்கல் கலந்த மாடர்ன் டயப்பர் அணிவிப்பது குழந்தைகளுக்கு தீங்கு விளைவிக்கும் என்று ஆய்வுகள் முடிவுகள் தெரிவித்துள்ளன.

    மாடர்ன் டயப்பர்களில் ஒரு சில விஷப்பொருட்கள் கலந்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் அது குழந்தைகளின் உடல்நலனை பெரிதும் பாதிக்கும் என்றும் குறிப்பாக சிறு வயதிலேயே ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் உள்ளிட்ட நோய்கள் வருவதற்கு வாய்ப்பு இருப்பதாகவும் அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது

    எனவே வேதிப்பொருள்கள் பயன்படுத்தாத சுத்தமான காட்டன் டைப்பர்கள் பயன்படுத்தினால் எந்த விதமான பிரச்சனையும் இல்லை. அது மட்டுமின்றி அடிக்கடி டயப்பரை மாற்ற வேண்டும்.

    ஈரம் கசிந்தால், டயப்பர் கனமாக தெரிந்தால், குழந்தை மலம் கழித்துவிட்டால், துர்நாற்றம் வருகையில், குழந்தை விடாத அழுது கொண்டிருந்தால் டயப்பர்களை உடனே மாற்ற வேண்டும். குறைந்தது 2 அல்லது 3 மணி நேரத்துக்கு ஒரு முறை மாற்ற வேண்டும்.

    • இயற்கை முறையில் மருந்து தயாரித்து குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.
    • இஞ்சியுடன் சுத்தம் செய்த வேப்பிலை சேர்த்து, சிறிதளவு உப்பும் சேர்த்து நன்கு அரைக்கவும்.

    குழந்தைகள் பால், சாக்லேட், இனிப்பு வகைகள் சாப்பிடுவதால் வயிற்றில் பூச்சிகள் இருக்கும். குழந்தைகள் முகத்தில் அங்கங்கே தேமல் இருந்தால், சாப்பாடு சரியாக உட்கொள்ளாமல் இருப்பது, அடிக்கடி வயிற்று வலியால் பாதிக்கப்பட்டால் கண்டிப்பாக பூச்சி வயிற்றில் இருக்கும். 

    இதற்கு 6 மாதத்திற்கு ஒரு முறை பூச்சி மருந்து டாக்டரிடம் காண்பித்து கொடுப்பது நல்லது. இயற்கை முறையிலும் மருந்து தயாரித்து குழந்தைகளுக்கு கொடுக்கலாம். குழந்தைகள் என்றில்லை பெரியவர்களுக்கும் இந்த மருந்து சிறந்தது.

    தேவையான பொருட்கள்:

    இஞ்சி - 50 கிராம்

    வேப்பிலை - 20 இலைகள்

    தேன் - தேவையான அளவு

    உப்பு - ஒரு சிட்டிகை

    சர்க்கரை - சிறிதளவு

    செய்முறை:

    இஞ்சியை தோல் நீக்கி பொடியாக நறுக்கிக் கொள்ளவும். இஞ்சியுடன் சுத்தம் செய்த வேப்பிலை சேர்த்து, சிறிதளவு உப்பும் சேர்த்து நன்கு அரைக்கவும். அரைத்த விழுதை வடிகட்டவும்.

    வடித்த சாறை அப்படியே 15 நிமிடம் வைக்கவும், அடியில் நஞ்சு தங்கி இருக்கும். மேலோடு தெளிந்த சாறை மட்டும் எடுத்து கசப்பு தெரியாமல் இருக்க தேவைக்கு தேன் கலந்து குடிக்கவும்.

    கைக்குழந்தைகள் அதிக இனிப்பு சாப்பிட வாய்ப்பு இருக்காது தேவைபட்டால் அரை சங்கு ஊற்றலாம். 9 முதல் 3 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு 1 சங்கு முழுவதும் கொடுக்கலாம்.

    அதற்கு மேற்பட்ட வயது மற்றும் பெரியவர்கள் கால் டம்ளர் குடிக்கலாம். சிறியவர்களுக்கு தேன் நன்றாக கலந்து கொடுக்கலாம். வயதிற்கு வந்த பெண்களுக்கு வரும் வயிறு உபாதைகளுக்கு இது சிறந்த மருந்து. கர்ப்பிணி பெண்கள் இதை சாப்பிடக்கூடாது. கர்ப்பம் தரிப்பதற்கு முன், குழந்தை பெற்ற பிறகு இதை அடிக்கடி செய்து குடிக்கலாம்.

    ஆறு மாதத்திற்கு ஒரு முறை என்றில்லாமல் அடிக்கடி இதை செய்து குடிக்கலாம்.

    • இளநீர், மோர், எலுமிச்சை ஜூஸ் போன்ற நீர்ச்சத்து நிறைந்த பானங்களை கொடுக்கலாம்.
    • கடுமையான வெயில் நேரத்தில் வெளியே விளையாக அனுமதிக்க வேண்டாம்.

    சிறு குழந்தைகளை பாதுகாப்பாக வளர்ப்பது என்பதே பெற்றோருக்கு ஒரு சவாலான காரியம் தான். எனினும் கோடை வெயிலில் குழந்தைகளை பாதுகாப்பது என்பது இன்னும் கடினமானது.

    பள்ளி விடுமுறையில் வீட்டில் இருக்கும் குழந்தைகளை கோடை வெயிலில் இருந்து பாதுகாப்பது எப்படி என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

    * குழந்தைகள் நாள் முழுவதும் போதுமான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். குழந்தைகள் தாகம் எடுத்தால் தண்ணீர் குடிப்பார்கள் என்று காத்திருக்காமல், அடிக்கடி தண்ணீர் கொடுக்க வேண்டும்.

    * வெறும் தண்ணீர் மட்டும் குடிக்க சில குழந்தைகளுக்கு பிடிக்காது. அதனால் இளநீர், மோர், எலுமிச்சை ஜூஸ் போன்ற நீர்ச்சத்து நிறைந்த பானங்களை கொடுக்கலாம்.

    * கடுமையான வெயில் நேரத்தில் வெளியே விளையாக அனுமதிக்க வேண்டாம். நாமும் குழந்தைகளை வெளியே அழைத்து செல்லாமல் இருப்பது நல்லது.

    * அப்படி வெளியே செல்லும்போது, தொப்பி, சன்ஸ்கிரீன், சூரிய ஒளியிலிருந்து பாதுகாக்கும் கண்ணாடிகள் போன்றவற்றை அணிவிக்க வேண்டும்.

    * குழந்தைகளுக்கு லேசான, பருத்தி உடைகளை அணிவிக்க வேண்டும்.

    * குழந்தைகளுக்கு சத்தான உணவாக கொடுக்க வேண்டும். 

    * பழங்கள், காய்கறிகள், சூப்கள், தயிர் போன்ற நீர்ச்சத்து நிறைந்த உணவுகளை அதிகம் கொடுக்க வேண்டும். வறுத்த, எண்ணெய் நிறைந்த உணவுகளை தவிர்க்க வேண்டும்.

    * குழந்தைகளுக்கு கோடை காலத்தில் ஏற்படும் வெப்ப நோய்கள், சூரிய ஒளியின் தாக்கம் பற்றி கூற வேண்டும்.

    * குழந்தைகளை வெயில் நேரத்தில் வெளியில் விளையாடுவதை தவிர்க்க, குழுவாக சேர்ந்து ஓவியம் வரைதல், வண்ணம் தீட்டுதல், கதை கேட்பது, வீட்டிற்குள் விளையாடுவது என்று பழக்கலாம்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • குழந்தைகளுடன் செலவிடுவதற்கு நேரம் ஒதுக்க வேண்டும்.
    • பெற்றோரின் சரியான வழிகாட்டுதல்தான் அவர்களின் தனித்திறனை வளர்க்க உதவும்.

    குழந்தைகளின் ஒட்டுமொத்த வளர்ச்சியில் பெற்றோர் முக்கிய பங்கு வகிக்கிறார்கள். பெற்றோரின் சரியான வழிகாட்டுதல்தான் குழந்தைகளின் தனித்திறனை வளர்க்க உதவும். வேலை, குடும்ப பொறுப்புகள் என எத்தகைய நெருக்கடிகளுக்கு மத்தியில் இருந்தாலும் குழந்தைகளுடன் செலவிடுவதற்கு நேரம் ஒதுக்க வேண்டும்.

    ஒவ்வொரு காலகட்டத்திலும் குழந்தைகளை உடன் இருந்து வழிநடத்தி செல்வது அவர்களை சரியான வளர்ச்சி பாதையில் பயணிக்க வழிவகை செய்யும். அவர்களின் சிந்தனைகள், செயல்திறன்களை மேம்படுத்த உதவும். அதற்கு செய்ய வேண்டிய விஷயங்கள்:

    அறிவாற்றல் வளர்ச்சி

    குழந்தைகள் வளரும்போது அவர்களின் அறிவாற்றல் வளர்ச்சி அடையும். பெற்றோர்களின் நடவடிக்கைகளை பார்த்தே பிள்ளைகள் வளர்வார்கள் என்பதால் பொறுப்புணர்வுடன் செயல்பட வேண்டியது முக்கியமானது. பெற்றோரின் செயல்பாடுகள் சிறப்பாக இருந்தால் அதனை பின்பற்றி பிள்ளைகளும் சிறந்த மனிதர்களாக உருவாகுவார்கள்.

    எதிர்கொள்ளும் சமூக சிக்கல்களை தீர்க்கும் திறன்களை மேம்படுத்திக்கொள்வார்கள். எல்லா சூழ்நிலைகளையும் சிறப்பாக கையாளுதல், ஒழுக்கம், நேர மேலாண்மை போன்ற நடைமுறைகள் மூலம் தங்கள் தகுதியை வளர்த்துக்கொள்வார்கள்.

    உடல் வளர்ச்சி

    ஆரோக்கியமாக இருப்பது, உடற்பயிற்சி செய்வது, சரியான உணவுகளை உட்கொள்வது என பெற்றோரிடமிருந்து கிடைக்கும் சரியான வழிகாட்டுதல்கள் குழந்தைகளின் உடல் வளர்ச்சியை மேம்படுத்த உதவும். இந்த விஷயத்தில் பெற்றோரைதான் பிள்ளைகள் ரோல்மாடலாக கருதுகிறார்கள் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

     மன வளர்ச்சி

    குழந்தைகள் புதுமையாக கற்றுக்கொள்ள பெற்றோர்களின் செயல்பாடுகள் உதவுகின்றன. தோல்விகளை ஏற்றுக்கொள்ளும் பக்குவம், ஒழுக்கநெறிகளை தவறாமல் பின்பற்றவது, பிறருடைய கருத்துக்களுக்கு செவி சாய்ப்பது, ஆட்சேபனை இருப்பின் மனம் நோகாதபடி விளக்கி புரியவைக்கும் விதம் போன்ற விஷயங்களை பெற்றோரை பார்த்துத்தான் கற்றுக்கொள்கிறார்கள். அதற்கேற்ற மனப்பக்குவம் கொண்டவர்களாக மாறிவிடுகிறார்கள்.

    ஒப்பீடு

    குழந்தை வளர்ச்சியில் தந்தையின் பங்கு மிக முக்கியமானது. எந்தவொரு காரியத்தை செய்வதாக இருந்தாலும் தந்தையின் செயல்பாட்டுடன் அதனை ஒப்பிட்டு பார்ப்பார்கள். குழந்தைகள் மனதில் எளிதில் எதிர்மறை சிந்தனைகள் குடிகொண்டு விடும்.

    தாங்கள் ஆசைப்படும் விஷயங்கள் தங்களுக்கு சாதகமாக அமையாவிட்டால் சட்டென்று மனதொடிந்து போய்விடுவார்கள்.

    பிரச்சினைகளில் சிக்கிக்கொண்டால் அவற்றை எப்படி கையாள்வது என்பதை பக்குவமாக குழந்தைகளுக்கு சொல்லி புரியவைக்க வேண்டும். நேர்மறையான அணுகுமுறையுடன் சிக்கல்களை எப்படி தீர்க்கலாம் என்பதை கற்றுக்கொடுக்க வேண்டும்.

    சின்ன சின்ன வீட்டு வேலைகளை செய்ய வைத்து குடும்ப பொறுப்புடன் செயல்படுவதற்கு அடித்தளமிட வேண்டும். குழந்தைகளின் தேவைகள் எவ்வளவு சிறியதாக இருந்தாலும், அவற்றைப் புரிந்துகொள்வதும், நிறைவேற்றுவதும் மிக முக்கியமானது.

    எல்லா நேரங்களிலும் அவர்களுக்கு பக்கபலமாக இருக்கிறீர்கள் என்பதை உணர்த்திக்கொண்டே இருக்க வேண்டும். அப்போதுதான் பெற்றோர் தங்களை நேசிக்கிறார்கள், அவர்களுக்கு நாம் நம்பிக்கைக்குரியவராக இருக்க வேண்டும் என்ற எண்ணம் குழந்தைகள் மனதில் வளரும். பொறுப்புணர்வுடன் நடந்து கொள்வார்கள்.

    • மாணவர்கள் ஒழுக்கப் பண்பு உடையவர்களாக காணப்படுதல் வேண்டும்.
    • மாணவர்கள் நேர்மையுடன் செய்யும் பண்பு கொண்டவராக இருத்தல் வேண்டும்.

    கல்வி கற்றுக்கொடுக்கும் ஆசிரியர்களை உயர்வாக எண்ணி மதிப்பளித்தல் மற்றும் அவர்களுடன் சிறந்த முறையிலான கலந்துரையாடல்களை மேற்கொள்ளுதல் வேண்டும். மாணவர்கள், ஆசிரியர்களிடம் தமக்கு ஏற்படும் சந்தேகங்களை தைரியத்துடன் கேட்டு தெளிவடையும் பண்பு கொண்டவராகவும் காணப்படுதல் வேண்டும்.

    மாணவர்கள் எந்த செயலையும் நேர்மையுடன் செய்யும் பண்பு கொண்டவராக காணப்படுதல் வேண்டும். பிற உயிர்கள் மீது அன்பு, கருணை பண்பு கொண்டவராக மாணவர்கள் காணப்படுதல் வேண்டும். இது சிறந்த பிரஜையாக அவர்கள் மாறுவதற்கு பெரிதும் உதவுகிறது. மாணவர்கள் தமக்கு கிடைக்கும் வாய்ப்புகளை சரியான முறையில் நேர்மையாக பயன்படுத்தி தமது திறமைகளை வழிகாட்டும் பண்பு கொண்டவராக காணப்படுதல் வேண்டும்.

    மாணவர்கள் பாடசாலை சட்டதிட்டங்களையும், அரசியல் சட்ட திட்டங்களை அறிந்து அவற்றிற்கு மதிப்பளித்து அதற்கு உட்பட்டு நடக்கும் பண்பு கொண்டவராக காணப்படுதல் வேண்டும். சமத்துவ பண்பு உடையவராக காணப்படுதல் மாணவர்களிடம் காணப்பட வேண்டிய முக்கியமான பண்புகளில் ஒன்றாகும்.

    நேரமுகாமைத்துவம் என்பது கல்வி பயிலும் மாணவர்களிடையே இருக்க வேண்டிய மிக முக்கியமான பண்பாக காணப்படுகிறது.

    மாணவர்கள் தமது அனைத்து வேலைகளை சரிவர திட்டமிட்டு குறிப்பிட்ட நேரத்திற்குள் முடிக்கும் தன்மை கொண்டவராக காணப்படுதல் வேண்டும். சிறந்த மாணவன் தம்மை விட வயதில் மூத்தவர்கள், இளையவர்கள், வயோதிபர்கள் ஆகியோர்களுக்கு சரியான முறைகளில் மதிப்பளித்து உதவிகள் புரியும் பண்பு கொண்டவராக காணப்படுதல் வேண்டும்.

    மாணவர்கள் பின்பற்ற வேண்டிய நற்பண்புகள் ஒழுக்கம் என்பது இன்றியமையாத ஒன்றாக காணப்படுகிறது. பிறருடன் பேசும் விதம், சமூகத்தில் நடந்து கொள்ளும் விதம், கலாசாரம், நடத்தை என்று அனைத்து விஷயங்களிலும் ஒழுக்கப் பண்பு உடையவர்களாக காணப்படுதல் வேண்டும்.

    • பெற்றோரின் நடவடிக்கைகளை பின்பற்றியே பிள்ளைகள் வளர்கிறார்கள்.
    • குழந்தை வளர்ப்பு விஷயத்தில் பெற்றோர் கவனமுடன் செயல்பட வேண்டும்.

    பெற்றோரின் நடவடிக்கைகளை பின்பற்றியே பிள்ளைகள் வளர்கிறார்கள். அதனால் குழந்தை வளர்ப்பு விஷயத்தில் பெற்றோர்தான் கூடுதல் கவனத்துடன் செயல்பட வேண்டும். தங்களின் நடை, உடை, பாவனைகள் பிள்ளைகளிடத்தில் பிரதிபலிக்கும் என்பதையும் உணர்ந்து அதற்கேற்ப நடந்து கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் பெற்றோர் பின்பற்றும் கெட்ட பழக்கவழக்கங்களை பார்த்து பிள்ளைகளும் அவற்றை பின்தொடர்வார்கள். அத்தகைய பழக்கவழக்கங்கள் பற்றியும், அவற்றை தவிர்ப்பதற்கான வழிமுறைகள் பற்றியும் பார்ப்போம்.

    ஒழுங்கற்ற நடத்தை:

    தாய், தந்தையரில் சிலர் தாங்கள் பயன்படுத்தும் பொருட்களை எடுத்த இடத்தில் வைக்கமாட்டார்கள். காபி பருகினால் டம்ளரை பருகிய இடத்திலேயே வைத்துவிடுவார்கள். அவரசமாக புறப்படும்போது குளித்துவிட்டு வந்த டவலை நாற்காலியில் அப்படியே போட்டுவிடுவார்கள். ஆடை மாற்றும்போதும் ஏற்கனவே உடுத்தி இருந்த ஆடையை அறைக்குள் ஏதாவது ஒரு இடத்தில் வீசிவிடுவார்கள். படுக்கையை விட்டு எழும்போது போர்வையை நேர்த்தியாக மடித்து அலமாரியில் வைக்கமாட்டார்கள்.

    வெளியே சென்றுவிட்டு வீட்டுக்குள் நுழையும்போது வாசலுக்கு வெளியே காலணிகளை நேர்த்தியாக கழற்றி வைக்காமல் தனித்தனியாக சிதறி கிடக்கும் நிலையில் வைத்திருப்பார்கள். இதுபோன்ற பழக்க வழக்கங்களை பார்த்து வளரும் பிள்ளைகளும் அதனையே பின்பற்ற தொடங்குவார்கள். அது வாழ்நாள் முழுவதும் பின்தொடர வழிவகுத்துவிடும். அதற்கு பெற்றோர் காரணமாகிவிடக்கூடாது. தங்கள் பழக்கவழக்கங்களில் ஒழுங்கற்ற நடத்தைக்கு இடம் கொடுத்துவிடக்கூடாது.

     போட்டி மனப்பான்மை

    பெரும்பாலான பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை மற்ற குழந்தைகளுடன் ஒப்பிட்டு அவர்களின் திறன்களை மதிப்பிடுகிறார்கள். அப்படி செயல்படுவது குழந்தைகள் தங்களுடைய தனித்திறனை கண்டறியவோ, மெருகேற்றவோ வழி இல்லாமல் போய்விடும். மற்றவர்களுடன் கடுமையாக போட்டிப்போடும் மன நிலையே மேலோங்கும். அது அவர்களின் சுய மரியாதையை எதிர்மறையாக பாதிக்கலாம். இத்தகைய போட்டியில் வெற்றிபெற முடியாமல் போகும்போது விரக்தி, ஏமாற்றம், மனச்சோர்வு உண்டாகலாம். குழந்தைகள் சுயமாகவே தங்கள் திறமையை அறிந்து கொள்ள முடியாத நிலைக்கு ஆளாக்கிவிடக்கூடாது.

    சுகாதாரம்

    தினமும் குளிப்பது, உள்ளாடைகளை மாற்றுவது, சரும பராமரிப்புக்கு முக்கியத்துவம் கொடுப்பது, நேர்த்தியாக ஆடை அணிவது போன்ற பழக்கவழக்கங்களை பெற்றோர்களை பார்த்துதான் பிள்ளைகள் கற்றுக்கொள்வார்கள். காலையில் எழுந்ததும் பல் துலக்கிய பின்பே எந்த உணவுப்பொருளையும் சாப்பிட வேண்டும் என்ற பழக்கத்தை பின்பற்ற வைக்க வேண்டும். பெற்றோரில் ஒருவர் பல் துலக்காமல் எப்போதாவது சாப்பிடுவது தவறில்லை என்று கூறி அத்தகைய பழக்கத்தை பின்பற்றுபவராக இருந்தால் குழந்தைகளும் அப்படியே செயல்பட தொடங்கிவிடும். இது வாய்வழி சுகாதாரத்திற்கு பாதிப்பை ஏற்படுத்திவிடும். தினமும் குளிக்கும் வழக்கத்தை பின்பற்ற தவறினால் குழந்தைகளுக்கும் அத்தகைய பழக்கம் தொற்றிக்கொள்ளும்.

     மற்றவர்களை தாக்குதல்

    குழந்தைகள் ஏதேனும் தவறு செய்தால் அடித்து கண்டிக்கும் பழக்கத்தை பெற்றோர் பின்பற்றக்கூடாது. தவறு செய்தவர்களை அடிப்பதுதான் சரி என்ற எண்ணம் குழந்தைகள் மனதில் பதிந்துவிடும். தங்களிடம் பிரச்சினை செய்யும் மற்ற குழந்தைகளை அடிக்கும் பழக்கத்தை பின்பற்றிவிடுவார்கள். தவறு செய்யும்போது மென்மையாக கண்டிக்கும் அணுகுமுறையை பின்பற்றினால்தான் குழந்தைகளும் அத்தகைய பழக்கத்தை பின் தொடர்வார்கள்.

    வார்த்தைகள்

    குழந்தைகள் முன்பு பெற்றோர் உச்சரிக்கும் வார்த்தைகளில் கவனம் தேவை. ஏனெனில் குழந்தைகள் பேச ஆரம்பித்த பிறகு ஒவ்வொரு நாளும் புதிய சொற்களை கற்றுக்கொள்வதற்கு ஆர்வம் காட்டுவார்கள். பெற்றோர் பயன்படுத்தும் சொற்களை கொண்டு தங்களுடைய சொற்களஞ்சியத்தை உருவாக்குவார்கள். பெற்றோர் கெட்ட வார்த்தைகள் பேசினால் அதுவும் அவர்கள் மனதில் பதிந்துவிடும். தம்பதியர் குழந்தைகள் முன்னிலையில் சண்டையிடுவது, மற்றவர்களின் குடும்ப விஷயங்களை பேசுவது, பிறரை விமர்சனம் செய்வது போன்ற பழக்கங்களை தவிர்க்க வேண்டும்.

     நகம் கடித்தல்

    மன அழுத்தத்தில் இருக்கும் போது சில பெற்றோர் நகம் கடிப்பார்கள். அதை பார்த்து குழந்தைகளும் கற்றுக்கொள்வார்கள். அந்த பழக்கத்தை குறிப்பிட்ட வயதுக்குள் கைவிட வைத்துவிட வேண்டும். இல்லாவிட்டால் வாழ்நாள் முழுவதும் அந்தப்பழக்கம் தொற்றிக்கொள்ளும்.

     டிஜிட்டல் சாதனங்களை பார்வையிடுதல்

    மடிக்கணினிகள், ஸ்மார்ட்போன்கள், டேப்லெட்டுகள், டி.வி. போன்ற எலெக்ட்ரானிக் சாதனங்களை பெற்றோர் அதிகமாக பயன்படுத்தினால் குழந்தைகளும் அந்த நடைமுறையை கையாள தொடங்கிவிடுவார்கள். குழந்தைகள் முன்னிலையில் குறிப்பிட்ட நேரமே பார்க்க வேண்டும். அவர்களுடன் அதிக நேரத்தை செலவிட வேண்டும். அதன் மூலம் எலெக்ட்ரானிக் சாதனங்கள் மீது குழந்தைகள் மோகம் கொள்வதை தவிர்க்க முடியும்.

     ஆரோக்கியமற்ற உணவுப்பழக்கம்

    உணவு, நொறுக்குத்தீனி வகைகளை சாப்பிடும்போது அவை தரையில் விழாமல் சாப்பிட வேண்டும். அப்போதுதான் குழந்தைகளும் அப்படி சாப்பிட பழகுவார்கள். உடலுக்கு ஊட்டச்சத்து வழங்கும் உணவுப்பொருட்களுக்குத்தான் முன்னுரிமை கொடுக்க வேண்டும். துரித உணவுகளை தவிர்க்க வேண்டும். அடிக்கடி கேக், மிட்டாய் போன்ற அதிக சர்க்கரை சேர்க்கப்பட்ட பதார்த்தங்களை உட்கொள்ளக்கூடாது. இத்தகைய கட்டுப்பாடுகளை பெற்றோர் பின்பற்றினால்தான் குழந்தைகளிடத்தில் ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்ளும் ஆர்வம் அதிகரிக்கும்.

    • பாராட்டு என்பது உடலுக்குத் தேவையான வைட்டமின்கள் போன்றது.
    • குழந்தையின் ஸ்பெஷல் திறனை வளர்க்க வழிகாட்டியாக இருந்து உதவுங்கள்.

    உங்கள் குழந்தைக்கு, இயல்பிலே நல்ல குணங்கள் இருக்கலாம். அந்த குணத்தை தக்க வைக்க, அவை வெளிப்படும் போதெல்லாம் பாராட்டுங்கள். குழந்தைகளை பாராட்டும்போது, எந்த செயலுக்காக பாராட்டுகிறோம் என்பதை அவர்களுக்கு புரியும்படி எடுத்துச் சொல்லுவதுதான் சரி. அவர்களை தன் செயலில் தெளிவுடன் இறங்க வைக்க இதுதான் நல்ல வழியும் கூட.

    பாராட்டுகளை பொறுத்தவரை, அவை வாய் வார்த்தைகளாக இருக்கவேண்டும் என்பதில்லை. ஒரு தட்டிக்கொடுத்தலோ, ஒரு முத்தமோ, அன்பான அழுத்தமான அணைப்போ, ஆச்சரியப் பார்வையோ, தலைகோதி விடுதலோ, பிடித்த இடத்துக்கு அழைத்துச்செல்வதோ, பிடித்த உணவை சமைத்து தருவதாகவோ கூட இருக்கலாம்.

    உங்கள் குழந்தையின் ஏதேனும் ஒரு சிறப்பான செயல்பாட்டினை, அவர்களுக்குப் பிடித்தவர்களின் முன்னிலையில் பாராட்டுங்கள். இது அவர்களுக்கு தன்னம்பிக்கையை அதிகரிப்பதோடு, தொடர்ந்து இதுபோன்ற செயல்களை செய்யும் ஊக்கத்தையும் அளிக்கும்.

     நம் பாராட்டுதல்கள் குழந்தையை ஊக்கப்படுத்துவதாக மட்டுமல்லாமல், பிறரைப் பாராட்டும் தன்மையை குழந்தைகளிடம் வளர்ப்பதாகவும் இருக்க வேண்டும். மற்றவர்களிடம் உள்ள நல்ல குணங்களையும் ஏற்று அதையும் மனதார பாராட்டுவதை குழந்தைகளுக்கு சிறு வயதிலிருந்தே பழக்குங்கள். இது அவர்களுக்கான தலைமைப் பண்பை வளர்க்கும்.

    திறனை வெளிப்படுத்தும்போதும், போட்டிகளில் வெற்றி பெறும்போதும் மட்டும் பாராட்டாமல், தோல்வி அடையும் போதும், குழந்தையின் பங்களிப்பை முதன்மைப்படுத்தி பாராட்டுதல் வேண்டும். ஒருமுறை பாராட்டிவிட்டு அந்த திறமையை அப்படியே விட்டுவிடாமல், உங்கள் குழந்தையின் ஸ்பெஷல் திறனை வளர்த்தெடுக்க வழிகாட்டியாக இருந்து உதவுங்கள். அவர்களின் அடுத்தக்கட்ட நகர்வுக்கு அதுதான் உதவும்.

    பாராட்டு என்பது நம் உடலுக்குத் தேவையான வைட்டமின்கள் போன்றது. உணர்வுரீதியாகவும், சமூக ரீதியாகவும் தேவையானது. அதை தவறாமல் வழங்குங்கள்.

    • அனைவரும் செல்போனில் அதிக நேரம் அடிமையாகி இருக்கிறோம்.
    • மின்காந்த கதிர்வீச்சுகள் ஆபத்தானது என்று பல ஆய்வுகள் கூறுகின்றது.

    இன்றைய காலகட்டத்தில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் செல்போனில் அதிக நேரம் அடிமையாகி இருக்கிறோம். ஷாப்பிங் முதல் வங்கி சேவைகள் வரை அனைத்துமே உட்கார்ந்த இடத்திலிருந்து செல்போன் வைத்து முடித்து விடுகிறோம். ஒரு பக்கம் இதனால் நாம் சோம்பேறியாக மாறினாலும் இன்னொரு பக்கம் நமக்கே தெரியாமல் அடிமையாகிக் கொண்டிருக்கிறோம். குழந்தைகள் செல்போனுக்கு அடிமையாவது ஏன்...? இதனால் ஏற்படும் பக்க விளைவுகள் என்ன...? என்பதை பற்றி பார்க்கலாம்.

     செல்போனை பெரியவர்களே அதிகம் உபயோகிப்பது தவறு, அதிலும் பிறந்த குழந்தையின் அழுகையை நிறுத்த சிலர் செல்போனை கொடுத்து பழக்கம் ஏற்படுத்துகிறார்கள். இந்த செல்போனில் இருந்து வெளிவரும் மின்காந்த கதிர்வீச்சுகள் குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கு மிகவும் ஆபத்தானது என்று பல மருத்துவ ஆய்வுகள் கூறுகின்றது.

    நாம் குழந்தைகளுக்கு அருகில் மொபைல் போன்களை வைத்து சோறு ஊட்டும் போது கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். இது மட்டும் இல்லாமல் செல்போன் ஸ்கிரீன்களில் இருந்து வெளிவரும் புற உதாக்கதிர்கள் மனிதர்களுக்கு மிகவும் ஆபத்தானது.

    அதிலும் குறிப்பாக சின்ன குழந்தைகளுக்கு அதிக அளவு ஆபத்தை ஏற்படுத்தும். ஏனென்றால் குழந்தைகளின் மூளை பெரியவர்களின் மூளையை விட இரண்டு மடங்கு அதிக அளவு கதிர்வீச்சுகளை உறிஞ்சக்கூடிய சக்தி கொண்டது.

    குழந்தைகள் மீது இந்த புற ஊதாக்கதிர்கள் தாக்கும் போது அவர்கள் கண்கள் பாதிப்படையக் கூடும். மேலும் இது தூக்கமின்மை, மூளை செயல்பாடு, அறிவுத்திறன் மற்றும் நடத்தையை கூட சில நேரங்களில் பாதிக்க கூடும் என்று கூறப்படுகிறது. இது தெரியாமல் பெற்றோர்கள் பலரும் குழந்தைகள் அழுகையை நிறுத்த பயன்படுத்தும் ஆயுதமாகவே செல்போன் மாறிவிட்டது.

    அதிக நேரம் செல்போன் பார்க்கும் குழந்தைகளுக்கு பேச்சு தாமதம், மனநல குறைபாடு, குழப்பம் மற்றும் சிந்தனை தடைபடுதல் ஏற்படலாம் மற்றும் உடல் செயல்பாடு குறைவதால் உடல் பருமன் மற்றும் மோசமான எலும்பு ஆரோக்கியம் ஏற்படும்.

    செல்போனில் எவ்வளவு தீமைகள் இருந்தாலும் இன்று செல்போன் பயன்பாடு தவிர்க்க முடியாத ஒன்றாக மாறிவிட்டது. ஆனால் இதை குழந்தைகளிடம் இருந்து எப்படி தவிர்ப்பது என்று கேட்டால் ஒரு குறிப்பிட்ட நேரத்திற்கு வரை அவர்களுக்கு விளையாட செல்போன் கொடுக்கலாம்.

    அதாவது செல்போன் மடிக்கணினி இவை அனைத்தும் ஒரு நாளுக்கு ஒன்று அல்லது இரண்டு மணி நேரம் உபயோகிக்க கொடுக்கலாம். அதேபோல வீட்டில் அனைவரும் இருக்கும் ஞாயிற்றுக்கிழமைகளில் மொபைல்போன் பயன்படுத்தக் கூடாது என்று கட்டுப்பாடு நிர்ணயிக்க வேண்டும். இதற்கு பதிலாக பெற்றோர் தங்கள் குழந்தைகளை அருகில் உள்ள பூங்கா அல்லது வெளி இடங்களுக்கு அழைத்து செல்லலாம்.

    • சைபர் புல்லிங் எனப்படும் இணைய வழியிலான மிரட்டல் என்பது உருவாகிறது.
    • சிறுவர்கள் அதில் இருந்து மீளத் தெரியாமல் தவிக்கிறார்கள்.

    இப்போதெல்லாம் பாடசாலையில் பயிலும் மாணவ-மாணவிகளும், உயர்கல்வி கற்கும் மாணவ-மாணவிகளும் திடீரென்று அவர்களது நடத்தையில் பெரிய மாற்றம் ஏற்படுவதால் அவர்களுடைய பெற்றோர்கள் கவலை அடைகிறார்கள்.

     போட்டிகள் நிறைந்த இன்றைய சூழலில் இணையதள வசதி மற்றும் இணைய சூழல் அதிகரித்துவிட்ட தருணத்தில் சைபர் புல்லிங் எனப்படும் இணைய வழி மிரட்டல் அதிகரித்திருப்பதால் இது 18 வயதுக்குட்பட்ட சிறுவர்களின் மனநிலையை பாதிக்கிறது என்றும், இது தொடர்பான முழுமையான விழிப்புணர்வை பெற்றோர்களும், இளம் சிறுவர், சிறுமிகளும் பெறவில்லை என்றும் உளவியல் நிபுணர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள்.

    தகவல் தொழில்நுட்பம் வளர்ச்சி அடைந்த இன்றைய சூழலில் மக்களின் அன்றாட வாழ்க்கையில் அதன் அவசியம் என்பது இன்றியமையாததாகிவிட்டது. இணைய வழி தொழில்நுட்பத்தால் உலகம் சிறியதாகி விட்டாலும், பல புதிய வடிவிலான மனநல பிரச்சினைகள் ஏற்பட்டிருக்கின்றன. இணையதள வசதி அதிகரித்துவிட்டதாலும், பிறந்து மூன்று மாதமான பச்சிளம் குழந்தைகள் முதல் அனைத்து வயதினரின் கைகளிலும் செல்ஃபோன் எனப்படும் கைபேசி இருப்பதாலும் இத்தகைய உளவியல் பிரச்சினைகள் அதிகரித்திருக்கிறது.

    பாடசாலையில் பயிலும் சிறுவர்களும், சிறுமிகளும் பாடசாலையில் இருந்து இல்லம் திரும்பியவுடன் சீரூடையைக் கூட களையாமல் உடனடியாக செல்ஃபோனை தங்கள் வசம் எடுத்துக்கொண்டு, இணையத்தில் ஏதேனும் ஒரு விளையாட்டை விளையாடத் தொடங்குகிறார்கள் அல்லது ஏதேனும் ஒரு இணையதள பக்கத்தை அல்லது சமூக வலைத்தள பக்கத்தை இயக்கி தன்னைப் பற்றிய பிம்பத்தையும், தன்னை பற்றி மற்றவர்களின் விமர்சனத்தையும் ஆர்வத்துடன் காணத் தொடங்குகிறார்கள்.

    தற்போது சைபர் புல்லிங் எனப்படும் இணைய வழியிலான மிரட்டல் என்பது உருவாகிறது. இணைய வழி மிரட்டல் என்பது மற்றவர்களை துன்புறுத்தும் நோக்கத்தை கொண்டிருப்பதால், அதனால் பாதிக்கப்படுபவர்கள் மனதளவில் பாதிக்கப்பட்டு ஒருவித அச்ச உணர்வை ஏற்படுத்திக்கொண்டு, அதில் இருந்து மீளத் தெரியாமல் தவிக்கிறார்கள். இது மன ஆரோக்கியத்தை பாதித்து, அவர்களின் வளர்ச்சியில் இடையூறை ஏற்படுத்துகிறது.

    சைபர் புல்லிங் என்பது தற்போதைய சூழலில் பொதுவானதாகிவிட்டது. யாரையும் எந்த ஒரு சூழலையும் துணிவுடன் கையாண்டு அவர்களை பற்றிய எதிர்மறையான கருத்துக்களை பதிவிடுகிறார்கள். இதனுடைய தீவிரத் தன்மை தெரியாமல் ஏதோ ஒரு உந்துதலில் இது போன்ற எதிர்மறையான விமர்சனங்களை இணையத்தில் பதிவிடுகிறார்கள். இதனால் எதிர்மறை விமர்சனத்துக்கு உள்ளாகும்

    நபர்கள் மனதளவில் சீர்குலைந்து சோர்வடைகிறார்கள். குறிப்பாக, உருவ கேலி, கடுமையான வார்த்தைகளுடன் கூடிய விமர்சனத்தை குறிப்பிடலாம்.

    தகவல் தொழில்நுட்ப சட்டத்தின்படி, இது தவறு என்றாலும், இளம் தலைமுறையினர் பலரும் இத்தகைய நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபடுகிறார்கள். முதலில் சைபர் புல்லிங் என்பதன் நோக்கத்தை அறிந்துகொள்ள வேண்டும். இது முற்றிலும் மற்றவர்களை காயப்படுத்த வேண்டும் அல்லது பக்கவிளைவை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் தான் மேற்கொள்ளப்படுகிறது.

    மேலும், இது ஒருவரின் உள நலத்தையும், மன அமைதியையும் சிதைக்கிறது. அவர்கள் பாதுகாப்பின்மையை உணரத் தொடங்குகிறார்கள். இதனால் சமூகத்துடனும் மற்றவர்களுடனும் இயல்பாக பழகுவதில் தடையும் இடைவெளியும் உண்டாகிறது. இது அவர்களின் வளர்ச்சியில் முட்டுக்கட்டையை ஏற்படுத்தி, அவர்களை முற்றிலும் முடக்குகிறது.

    எனவே, பெற்றோர்கள் தங்களது பிள்ளைகள் சைபர் புல்லிங் எனப்படும் இணைய வழி மிரட்டலால் பாதிக்கப்பட்டிருக்கும்போது, அவர்களின் அன்றாட பழக்கவழக்க நடைமுறையில் ஏற்பட்டிருக்கும் மாறுபாடான நடவடிக்கைகளை துல்லியமாக அவதானித்து, அவர்களிடம் இது தொடர்பாக எச்சரிக்கைகளை பகிர்ந்துகொள்ள வேண்டும்.

    மேலும், உங்கள் பிள்ளைகள் இணைய வழி பயன்பாட்டை மேற்கொள்ளும்போது அவரைப் பற்றிய சுய விபரங்களையும், தனிப்பட்ட பிரத்தியேக தகவல்களையும் ஆன்லைனில் பகிரக்கூடாது என கற்பிக்க வேண்டும்.

    உதாரணத்துக்கு உங்கள் வீட்டு முகவரி, உங்களது செல்ஃபோன் எண் போன்றவற்றை பதிவிடக்கூடாது. இது இணையவழி மிரட்டல்காரர்களுக்கு வழிவகுத்துவிடும்.

    பிறகு உங்களின் பிள்ளைகளின் புகைப்படங்களை ஆன்லைனில் பதிவிடுவதையும் தவிர்க்க வேண்டும். அத்துடன் குறிப்பிட்ட விஷயங்களை பற்றியும் தனிப்பட்ட விடயங்களை பற்றியும் இணையவழியில் விவாதிக்க வேண்டாம் என அறிவுறுத்த வேண்டும். ஏனெனில், இவை கூட இணையவழி மிரட்டல்காரர்களுக்கு ஆயுதமாக மாறக்கூடும்.

    அதே தருணத்தில் எந்த காரணத்தை முன்னிட்டும் உங்களுடைய கடவுச்சொல்லையும் மற்றும் மின்னஞ்சல் உள்ளிட்ட கணக்கு விபரங்களையும் யாரிடமும் பகிர்ந்துகொள்ளாதீர்கள் என பிள்ளைகளுக்கு எடுத்துரைக்க வேண்டும்.

    அதனைத் தொடர்ந்து இணையத்தில் மற்றும் சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிடப்படும் விமர்சனங்கள் குறித்தும், கருத்துகள் குறித்தும் எவை நல்லவை? எவை தவறானவை? எவை தவறான உள்நோக்கத்தை கொண்டவை? என்று விஷயத்தையும் பிள்ளைகளுக்கு கற்றுக் கொடுக்க வேண்டும்.

    • புத்தகம் வாசிக்கும் பழக்கம் இளம் தலைமுறையினரிடையே குறைந்து வருகிறது.
    • புத்தகம் படிக்கும் வகையில் வாசிப்பு நேரத்தை ஏற்படுத்த வேண்டும்.

    வீட்டிற்கு ஒரு நூலகம் புத்தகம் வாசிக்கும் பழக்கம் இளம் தலைமுறையினரிடையே குறைந்து வரும் இந்த சூழலில் வீட்டில் ஒரு சிறிய நூலகம் அமைக்க முயற்சிக்கலாம். அதில் வீட்டில் உள்ள ஒவ்வொருவருக்கும் ஒரு இடத்தையும் ஒதுக்கலாம். அவ்வாறு செய்யும் போது அந்த இடத்தை நிரப்ப அவர்களாகவே ஆர்வத்துடன் புத்தகங்களை வாங்குவார்கள்.

    அங்கு குடும்பமாய் அனைவரும் அமர்ந்து புத்தகம் படிக்கும் வகையில் வாசிப்பு நேரத்தை ஏற்படுத்த வேண்டும். ஆரம்ப காலகட்டத்தில் அனைவரும் தினமும் பத்து நிமிடமாவது புத்தகம் வாசிக்கும் முயற்சியை முன்னெடுக்க வேண்டும். வார விடுமுறை நாளில் அனைவரும் ஒன்றாய் அமர்ந்து, வாரம் முழுமையும் வாசித்ததையும், வாசிக்கும் போது தங்களுக்குள் எழுந்த உணர்வுகளையும், வாசித்து முடித்த பின்பு தங்களுக்குள் எழுந்த மாற்றங்களையும் பகிர்ந்து கொள்ளலாம்.

    இந்த முயற்சியை பெற்றோர் முன்னெடுக்கும்போது குழந்தைகளும் தானாகவே முன் வந்து பின்பற்ற தொடங்குவார்கள். இந்த பழக்கத்தை குடும்பத்தின் அன்றாட வழக்கமாக்கி விட்டால் இது குடும்பத்திற்கு மட்டுமின்றி வருங்கால தலைமுறைகளும் பின்பற்றும் குடும்ப பாரம்பரியமாகவே மாறிவிடும்.

    குடும்பமாக பல இடங்களுக்கு சென்று பொருட்களையும், உடைகளையும் பார்த்து பார்த்து வாங்கும் நாம், குடும்பமாய் இணைந்து புத்தகக்கண்காட்சிக்கு சென்று புத்தகங்களை பார்த்து பார்த்து வாங்கலாம். இந்த ஆண்டில் வாங்க வேண்டிய பொருட்களுக்கு பட்ஜெட் போடும்போது புத்தகங்கள் வாங்கவும் பட்ஜெட் போடலாம்.

     புதிய வீடு கட்டும் போது குடும்பத்தினர் அனைவருக்கும் தேவையான எல்லா அறைகளையும் கட்டும்போது புத்தகங்களுக்கு என்று தனி அறை கட்டி அதை மினி நூலகமாக மாற்றலாம். இட வசதி இல்லாதவர்கள் அறையாக கட்ட முடியாவிட்டாலும், தங்கள் வீட்டில் இருக்கும் இடத்தில் புத்தகங்களை வைப்பதற்கு ஒரு சிறிய இடத்தை ஒதுக்கலாம். அந்த இடம் அனைவரின் கண்ணில் படும் இடமாக இருக்கட்டும்.

    அடிக்கடி புத்தகங்களைப் பார்க்கும் போது அதனை வாசிக்க வேண்டும் என்ற உள்ளுணர்வு சுயமாகவே ஏற்பட்டு விடும். அது மட்டுமின்றி வீட்டிற்கு வருகிற விருந்தினர்கள் பார்க்கும் இடத்திலும் புத்தகங்கள் இருந்தால் அது அவர்களையும் வாசிக்க தூண்டும்.

    அவர்களுக்கு உணவு விருந்து கொடுப்பதோடு சேர்த்து புத்தக விருந்தும் அளிக்கலாம். அதாவது புத்தகங்களை பரிசாக கொடுக்கலாம். வாசிப்பு ஒரு மகத்தான செயல்பாடு. பாடப்புத்தகத்தையும், துறை சார் புத்தகத்தையும் கடந்து பிற புத்தகங்களை வாசிக்கும்போது பரந்துபட்ட அறிவும் எல்லாவற்றையும் புரிந்து கொள்ள முயற்சிக்கும் மன நிலையும் ஏற்படும். உட்கார்ந்து வாசிக்கும் போது நேரத்தை நாம் பயனுள்ளதாய் மாற்றுகிறோம்.

    ஒரு புத்தகத்தை வாசிக்கும் போது நாம் நம் நிலையில் இருந்து கடந்து மற்றவர் நிலையை, அவர்களது இன்ப துன்பங்களை புரிந்து கொள்கிறோம். வாசிப்பு, அறிவை பெருக்குவதையும் கடந்து நம்மை பக்குவப்பட்ட மனிதர்களாகவும் மாற்றுகிறது.

    எது சரி, எது தவறு என முடிவு எடுக்கும் புரிதலை தருகிறது. ஒரு தளத்தில் மட்டும் சாயாது நடுநிலையோடு பயணிக்க வாசிப்பு உதவுகிறது. இத்தகைய மகத்தான மாற்றத்தை நம்மில் விதைக்கும் வாசிப்பை நேசிப்போம். நாமும் வாசிக்க, பிறரையும் வாசிக்க வைக்க வீட்டுக்கொரு நூலகம் அமைப்போம்!

    • குடற்புழுக்கள் குழந்தைகளின் வளர்ச்சியை பாதிக்கிறது.
    • உடல் எடை குறைவது, அனீமியா போன்றவையும் உண்டாக்கிவிடும்.

    வயிற்றில் குடல் பகுதியில் உருவாகும் புழுக்களைத்தான் குடற்புழு என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். இவை நம் உடல் நலனுக்கு கேடு விளைவிப்பவை. குடற்புழுக்கள் குழந்தைகளின் வளர்ச்சியை பாதிக்கிறது. சில சமயம் பெரியவர்களையும் பாதிக்கிறது.

    சுத்தமான உணவு, சுத்தமான தண்ணீர், சுத்தமான சூழ்நிலையில் நாம் வாழ வேண்டும். அப்படி இல்லையென்றால், நம் குடலில் குடற்புழு உருவாகி பிரச்சினை ஏற்படுத்திவிடும்.

     சிறுநீர் கழித்தல், மலம் கழித்தல், அசுத்தமான மண்ணை குழந்தைகள் கையால் அள்ளி விளையாடும்போதும், செருப்பில்லாமல் அசுத்தமான இடங்களில் நடக்கும்போது இந்த குடற்புழுக்கள் உடலை வந்தடைகிறது.

    புழுக்கள் பலவகைப்படும். அவை உருளைப்புழு, நாக்குப்பூச்சி, இதயப்புழு, நாடாப்புழு, கொக்கிப்புழு என்று பல வகைப்படும். இந்த புழுக்கள் நம் உடலுக்கு பல பிரச்சினைகளை ஏற்படுத்திவிடும். கடுமையான வயிற்றுப்போக்கு, மலச்சிக்கல், குமட்டல், சோர்வு, உடல் எடை குறைவது, அனீமியா போன்றவையும் உண்டாக்கிவிடும்.

    இயற்கை வழிமுறைகள்:

    1. தினமும் கிராம்மை மென்று தின்னால் குடற்புழுக்கள் அழிந்து மலம் மூலம் வெளியேறும்.

    2. தினமும் கேரட்டை சாப்பிட்டுவந்தால் குடற்புழு நீங்கும்.

    3. ஒரு கைப்பிடி புதினா சாற்றுடன், எலுமிச்சை சாறு, உப்பு கலந்து குடித்து வந்தால் குடற்புழு ஒழியும்.

    4. குடற்புழுக்களால் பிரச்சினை ஏற்பட்டால் கற்பூரவள்ளி எண்ணெயை, எலுமிச்சை சாறுடன் கலந்து குடித்து வந்தால் குடற்புழு வெளியேறும்.

    5. சூடான பாலுடன் ஆமணக்கு எண்ணெய் 2 ஸ்பூன் கலந்து குடித்தால் வந்தால் குடற்புழுக்கள் மலம் மூலம் வெளியேறும்.

    6. தினமும் ஒரு பல் பூண்டை சாப்பிட்டு வந்தால் குடற்புழுக்கள் பிரச்சினை தீரும்.

    7. எலுமிச்சை விதை பொடியை நீருடன் கலந்து குடித்து வந்தால் குடற்புழு ஒழியும்.

    ×