search icon
என் மலர்tooltip icon

    இஸ்ரேல்

    • ஏழு மாதங்களாக இஸ்ரேல்- ஹமாஸ் இடையே போர் நடைபெற்று வரகிறது.
    • 150-க்கும் மேற்பட்ட பிணைக்கைதிகள் இன்னும் மீட்கப்படாமல் உள்ளனர்.

    அமெரிக்காவின் வெளியுறவுத்துறை மந்திரி ஆண்டனி பிளிங்கன் மத்திய கிழக்கு நாடுகளில் சுற்றுப் பயணம் செய்து வருகிறார். சவுதி அரேபியா சென்றிருந்த அவர், இன்று இஸ்ரேல் சென்றார்.

    இஸ்ரேல்- ஹமாஸ் இடையே சண்டை தொடங்கியதில் இருந்து ஏழாவது முறையாக இஸ்ரேல் சென்றுள்ளார். இஸ்ரேல் சென்றுள்ள அவர் அங்குள்ள முக்கிய தலைவர்கள் சந்தித்து பேசினார்.

    அப்போது இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் போர் நிறுத்தத்திற்கான உடன்படிக்கையை முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

    மேலும், இது பிணைக்கைதிகளை விடுவிக்கவும், ஏழு மாதங்களாக நடந்து வரும் போரை நிறுத்துவதற்கும் வழிவகுக்கும்.

    பிணைக்கைதிகளை விடுவிக்கவும், போர்நிறுத்தத்தைப் கொண்டு வரவும், அதை இப்போதே நடைமுறை படுத்தவும் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். அது அடையப்படாமல் இருப்பதற்கு ஒரே காரணம் ஹமாஸ்தான்.

    பரிந்துரை மேசை மீது உள்ளது. தாமதம் இல்லை. சாக்குபோக்க இல்லை என நாங்கள் கூறுகிறோம். இதற்கான நேரம் இது. இஸ்ரேல்- ஹமாஸ் இடையிலான உடன்படிக்கை உணவு, மருந்து பொருட்கள், குடிநீர் போன்றவை காசாவிற்கு எடுத்துச் செல்ல அனுமதிக்கும். இவ்வாறு பிளிங்கள் தெரிவித்துள்ளார்.

    • ரபா மீது தாக்குதல் நடத்த இஸ்ரேல் தீவிரம் காட்டி வருகிறது.
    • இஸ்ரேலின் நிபந்தனையை ஹமாஸ் அமைப்பு ஏற்குமா என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    காசா:

    பாலஸ்தீனத்தின் காசாமுனை மீது இஸ்ரேல் நடத்தி வரும் போர் 6 மாதங்களுக்கு மேலாக நீடித்து கொண்டிருக்கிறது.

    ஹமாஸ் அமைப்பினர் குறிவைத்து நடத்தி வரும் தாக்குதலில் குழந்தைகள், பெண்கள் உள்பட 34 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர்.

    காசாவின் வடக்கு, மத்திய பகுதிகளில் தரைவழித் தாக்குதல் நடத்தியதுபோல் தற்போது தெற்கில் உள்ள ரபா நகரில் தாக்குதல் நடத்த இஸ்ரேல் திட்டமிட்டுள்ளது.

    காசா மீதான தாக்குதலால் வடக்கு, மத்திய பகுதிகளில் இருந்து மக்கள் பெரும்பாலானோர் ரபா எல்லையில் தஞ்சமடைந்துஉள்ளனர். அங்கு தரைவழி தாக்குதல் நடத்துவது மிகப்பெரிய அளவில் உயிர் சேதத்தை ஏற்படுத்தும் என்று அமெரிக்கா, எகிப்து உள்ளிட்ட நாடுகள் எச்சரித்து உள்ளன.

    ஆனால் ரபா மீது தாக்குதல் நடத்த இஸ்ரேல் தீவிரம் காட்டி வருகிறது. இதற்கிடையே ஹமாஸ் அமைப்பினரிடம் உள்ள இஸ்ரேல் பிணைக் கைதிகளை மீட்பதற்கான பேச்சுவார்த்தை நடந்து வரும் சூழலில், பிணைக் கைதிகளை விடுவிக்க ஹமாசுக்கு இதுவே கடைசி வாய்ப்பு என்று இஸ்ரேல் தெரிவித்து போர் நிறுத்த முன்மொழிவை அளித்துஉள்ளது.

    இந்த நிலையில் போர் நிறுத்தம் குறித்து ஹமாஸ் தரப்பு கூறும்போது, இஸ்ரேலின் சமீபத்திய போர்நிறுத்த முன்மொழிவை பெற்றோம். அதற்கு பதிலைச் சமர்ப்பிப்பதற்கு முன் அதை ஆய்வு செய்து வருகிறோம் என்று தெரிவித்துள்ளது. இஸ்ரேலின் நிபந்தனையை ஹமாஸ் அமைப்பு ஏற்குமா என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    ஏற்கனவே அமல்படுத்தப்பட்ட போர் நிறுத்தத்தின் போது 100-க்கும் மேற்பட்ட பிணைக்கைதிகள் விடுவிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • ஹமாஸ் அமைப்பிற்கு எதிராக போர் பிரகடனம் செய்தது.
    • பொது மக்கள் அந்த பகுதியில் இருந்து வெளியேற உத்தரவு.

    கடந்த ஆண்டு அக்போடர் மாத துவக்கத்தில் இஸ்ரேல் நாட்டிற்குள் அத்துமீறி நுழைந்த ஹமாஸ் அமைப்பினர், கண்ணில் தென்பட்டவர்களை கண்மூடித்தனமாக சுட்டுக் கொன்றது. மேலும், 200-க்கும் மேற்பட்டோரை பிணைக்கைதிகளாக பிடித்து சென்றது.

    இந்த கொடூர சம்பவம் காரணமாக ஆத்திரம் அடைந்த இஸ்ரேல், ஹமாஸ் அமைப்பிற்கு எதிராக போர் பிரகடனம் செய்து காசா மீது தாக்குதல் நடத்த துவங்கியது. கடந்த ஏழு மாதங்களாக காசா மீது தாக்குதல் நடத்தி வரும் இஸ்ரேல் காசா எல்லையின் வடக்கில் உள்ள பெய்ட் லஹியா நகரத்தில் வசிக்கும் பொது மக்கள் விரைந்து அந்த பகுதியில் இருந்து வெளியேற உத்தரவிட்டுள்ளது.

    புதிய திட்டமிடலின் கீழ் பெய்ட் லஹியாவில் உள்ள ஹமாஸ் உள்கட்டமைப்பு பகுதிகள் மீது கடுமையான தாக்குதல் நடத்தப்பட இருப்பதால் இந்த அறிவிப்பை இஸ்ரேல் பாதுகாப்பு படைகளின் செய்தி தொடர்பாளர் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

    "நீங்கள் மிகவும் அபாயகரமான போர் மண்டலத்தில் இருக்கின்றீர்கள். உங்களை காப்பாற்றிக் கொள்ள உடனடியாக இந்த பகுதியில் இருந்து வெளியேறிவிடுங்கள்," என்று இஸ்ரேல் பாதுகாப்பு படைகளின் செய்தி தொடர்பாளர் அவிச்சே அட்ரே குறிப்பிட்டுள்ளார். 

    • ஹஸ்புல்லா இயக்கத்தினர் இஸ்ரேல் மீது அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகிறார்கள்.
    • லெபனானில் இருந்து வடக்கு இஸ்ரேல் பகுதிக்குள் 35 ஏவுகணைகள் வீசப்பட்டன.

    லெபனானில் செயல்படும் ஹஸ்புல்லா இயக்கத்தினர் இஸ்ரேல் மீது அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகிறார்கள். இதற்கு இஸ்ரேலும் பதிலடி கொடுத்து வருகிறது. இந்த வடக்கு இஸ்ரேலில் உள்ள ராணுவ தலைமையகம் மீது ராக்கெட்டுகளை ஏவியதாக ஹஸ்புல்லா இயக்கம் தெரிவித்துள்ளது.

    தெற்கு லெபனானில் உள்ள கிராமங்களை குறி வைத்து இஸ்ரேல் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக இத்தாக்குதல் நடத்தப்பட்டதாக அந்த இயக்கம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக இஸ்ரேல் ராணுவம் கூறும்போது, லெபனானில் இருந்து வடக்கு இஸ்ரேல் பகுதிக்குள் 35 ஏவுகணைகள் வீசப்பட்டன. அந்த ஏவுகணைகளை இஸ்ரேல் ராணுவம் தாக்கி அழித்தது என்று தெரிவித்தது. 

    • கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 7-ந்தேதி ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேல் நாட்டிற்குள் புகுந்து தாக்குதல்.
    • 1200 பேரை கொன்று குவித்ததுடன், 250 பேரை பிணைக்கைதிகளாக பிடித்துச் சென்றனர்.

    ஹமாஸ் அமைப்பினர் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 7-ந்தேதி திடீரென காசா எல்லையைத் தாண்டி இஸ்ரேல் நாட்டிற்குள் நுழைந்தனர். இஸ்ரேல் நாட்டிற்குள் நுழைந்த அவர்கள் கண்ணில் தென்பட்டவர்களையெல்லாம் துப்பாக்கியால் சுட்டுக்கொன்றனர். மேலும், 250 பேரை பிணைக்கைதிகளை பிடித்துக் சென்றனர்.

    இதனால் ஆத்திரம் அடைந்த இஸ்ரேல், ஹமாஸ்க்கு எதிராக போர் பிரகடனம் செய்து காசா மீது தாக்குதல் நடத்திய தொடங்கியது. ஏழு மாதங்களாக இஸ்ரேல் காசா மீது தாக்குதல் நடத்தி வருகிறது.

    இஸ்ரேல் எல்லைக்குள் ஹமாஸ் அமைப்பினர் திடீரென புகுந்து தாக்குதல் நடத்தியதற்கு, இஸ்ரேல் ராணுவத்தின் உளவுத்துறை தோல்வியும் முக்கிய காரணம் என குற்றம் சாட்டப்பட்டு வந்தது. ஆனால், இதுவரை உயர்அதிகாரிகளும் பொறுப்பேற்று தங்களது பதவியை ராஜானாமா செய்யாமல் இருந்து வந்தனர்.

    இந்த நிலையில் இன்று ராணுவத்தின் உளவுத்துறை தலைவர் மேஜர் ஜெனரல் அஹரோன் ஹலிவா தனது தலைவர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

    இஸ்ரேல் ராணுவத்தின் தலைசிறந்த பாதுகாப்பு அமைப்பை முறியடித்து இஸ்ரேல் நாட்டிற்குள் புகுந்து தாக்குதல் நடத்தியதை தடுக்க முடியாததற்கு தான் பொறுப்பேற்பதாக தாக்குதல் நடைபெற்ற பிறகு ஹலிவா தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    அக்டோபர் மாதம் 7-ந்தேதி ஹமாஸ் அமைப்பினர் நடத்திய கொடூர தாக்குதலில் 1200 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இஸ்ரேல் காசா மீது நடத்தி வரும் தாக்குதலில் இதுவரை 32 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • இஸ்ரேல், ஈரான் நாடுகளுக்கு இடையே போர் மூள்வதற்கான சூழல் காணப்படுகிறது.
    • அமெரிக்க அரசு இஸ்ரேல் நாட்டிற்கு 13 பில்லியன் மதிப்பிலான ராணுவ உதவிக்கு ஒப்புதல் அளித்தது.

    டெல் அவிவ்:

    இஸ்ரேல் மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே சில வாரமாகவே மோதல் போக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் மத்திய கிழக்கு பகுதியில் போருக்கான பதற்ற நிலை நீடித்து வருகிறது.

    ஈரான் சில மாதங்களில் அணு ஆயுதங்களைக் கட்டமைக்க உள்ளது என இஸ்ரேல், அமெரிக்கா மற்றும் சில ஐரோப்பிய நாடுகள் குற்றம்சாட்டின.

    இந்தக் குற்றச்சாட்டை மறுத்துள்ள ஈரான், நாங்கள் தற்போது மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள், அமைதிக்காகவும், குடிமக்களின் நன்மைக்காகவும் என தெரிவித்துள்ளது.

    ஈராக் நாட்டின் மத்திய பகுதியில் அமைந்த ராணுவ தளத்தின்மீது இரவோடு இரவாக இஸ்ரேல் வெடிகுண்டு தாக்குதல் நடத்தியது. இந்த தளத்தில் ராணுவ வீரர்கள், ஈரான் ஆதரவு பெற்ற துணைராணுவப் படையினர் தங்கி உள்ளனர். இஸ்ரேல், ஈரான் நாடுகளுக்கு இடையே போர் மூள்வதற்கான சூழல் காணப்படும் சூழலில் இது 3-வது உலகப்போருக்கு வழிவகுக்குமோ என்ற அச்சமும் ஏற்பட்டுள்ளது.

    இதற்கிடையே, இஸ்ரேலின் 'அயர்ன் டோம்' வான் பாதுகாப்பு அமைப்பு உள்பட இஸ்ரேல் ராணுவத்தின் பாதுகாப்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு, அமெரிக்க அரசு இஸ்ரேல் நாட்டிற்கு 13 பில்லியன் மதிப்பிலான ராணுவ உதவிக்கு ஒப்புதல் அளித்துள்ளது.

    இந்நிலையில், ராணுவ உதவிக்கு ஒப்புதல் அளித்துள்ள அமெரிக்க செனட் சபைக்கு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு மற்றும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி ஆகியோர் நன்றி தெரிவித்தனர்.

    இதனால் இஸ்ரேல், ஈரான் இடையிலான போர் பதற்றம் தணிவதற்கான சூழல் ஏற்பட்டுள்ளது.

    • வடக்கு இஸ்ரேலில் உள்ள ராணுவ தளத்தை குறிவைத்து ஹிஸ்புல்லா இயக்கம் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது.
    • இஸ்ரேலின் மேற்கே கலிலீ பகுதியில் உள்ள பெத்வாயின் கிராமத்தில் சமூகநல கூடத்தின் மீது ஹிஸ்புல்லா இயக்கம் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது.

    இஸ்ரேல்-காசாவின் ஹமாஸ் அமைப்பு இடையேயான போரில் ஹமாசுக்கு ஆதரவாக லெபனானில் செயல்படும் ஹிஸ்புல்லா இயக்கம் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி வருகிறது.

    இந்த நிலையில் வடக்கு இஸ்ரேலில் உள்ள ராணுவ தளத்தை குறிவைத்து ஹிஸ்புல்லா இயக்கம் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது. இதில் 14 வீரர்கள் காயம் அடைந்தனர்.

    இதற்கிடையே இஸ்ரேலின் மேற்கே கலிலீ பகுதியில் உள்ள பெத்வாயின் கிராமத்தில் சமூகநல கூடத்தின் மீது ஹிஸ்புல்லா இயக்கம் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது. இதில் 14 பேர் காயம் அடைந்தனர்.

    இதற்கு பதிலடியாக இஸ்ரேல் எல்லையையொட்டி உள்ள லெபனான் நாட்டின் ஐடா ஆஷ் ஷாப் கிராமத்தில் வளாகம் ஒன்றிற்குள் பதுங்கியிருந்த ஹிஸ்புல்லா அமைப்பினர் மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதல் நடத்தியது.

    • 17 இந்தியர்கள் உட்பட 25 மாலுமிகள் உள்ளனர்.
    • சரக்கு கப்பலை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று அமெரிக்கா வலியுறுத்தல்.

    இஸ்ரேல்- ஈரான் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இன்று அதிகாலை இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதலை நடத்தியது. இதற்கிடையே நேற்று அரபிக்கடலில் ஹார்முஸ் ஜலசந்தி பகுதியில் சென்றுகொண்டிருந்த சரக்கு கப்பலை ஈரான் சிறைபிடித்தது.

    இந்த கப்பல் இஸ்ரேலை சேர்ந்த தொழிலதிபருக்கு தொடர்புடையது. ஐக்கிய அரபு எமிரேட்சில் இருந்து இந்தியா நோக்கி சென்று கொண்டிருந்த கப்பலுக்குள் ஹெலிகாப்டர் மூலம் ஆயுதங்களுடன் இறங்கிய ஈரான் கடற்படை கமாண்டோக்கள் கப்பலை தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். இதில் 17 இந்தியர்கள் உட்பட 25 மாலுமிகள் உள்ளனர். அவர்களை ஈரான் கடற்படை சிறை பிடித்துள்ளது.

    கப்பலில் உள்ள இந்தியர்களை மீட்பதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது. இதற்காக பேச்சுவார்த்தை நடத்த ஈரானுடன் இந்தியா தொடர்பில் உள்ளது. இந்தியர்களின் பாதுகாப்பு, நலன் மற்றும் முன்கூட்டியே விடுதலை ஆகியவற்றை உறுதி செய்வதற்காக, ஈரான் மற்றும் புதுடெல்லியில் உள்ள தூதரகங்கள் மூலம் ஈரான் அதிகாரிகளுடன் தொடர்பில் இருப்பதாக அந்த வட்டாரங்கள் தெரிவித்தன. 

    இந்தியாவின் கோரிக்கையை ஏற்று இந்திய மாலுமிகள் 17 பேரை ஈரான் விடுவிக்குமா என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே சரக்கு கப்பலை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.

    இதுகுறித்து வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் அட்ரியன் வாட்சன் கூறும்போது, "சர்வதேச கடற்பகுதியில் கப்பலை ஈரான் கைப்பற்றியதை நாங்கள் கடுமையாகக் கண்டிக்கிறோம். கப்பலின் குழுவில் இந்தியா, பிலிப்பைன்ஸ், பாகிஸ்தான், ரஷ்யா, எஸ்டோனிய நாட்டவர்கள் உள்ளனர். கப்பலையும் அதன் சர்வதேச பணியாளர்களையும் உடனடியாக விடுவிக்க ஈரானுக்கு அழைப்பு விடுக்கிறோம் என்றார்.

    • இஸ்ரேலை நோக்கி ஈரான் ஏவுகணை, டிரோன்கள் ஏவியது.
    • ஈரானின் தாக்குதலுக்கு இஸ்ரேல் தயாராகி வருகிறது.

    டெல் அவிவ்:

    இஸ்ரேல்மீது ஈரான் தாக்குதல் நடத்தலாம் என தகவல் வெளியானநிலையில், தங்கள் நாட்டை நோக்கி ஈரான் ஏவுகணை, டிரோன்கள் ஏவியதாக இஸ்ரேல் குற்றம்சாட்டியது. 100-க்கும் அதிகமான டிரோன்கள் ஈரானிலிருந்து ஏவப்பட்டதாக இஸ்ரேல் தெரிவித்தது.

    இந்நிலையில், ஈரான் தாக்குதல் குறித்து இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு கூறியதாவது:

    ஈரானின் நேரடி தாக்குதலுக்கு பல ஆண்டாக இஸ்ரேல் தயாராகி வருகிறது. தற்காப்பு மற்றும் தாக்குதலுக்கு பதிலளிக்க நாடு தயாராக உள்ளது. இஸ்ரேல் அரசு பலமாக உள்ளது. ராணுவம் பலமாக உள்ளது. பொதுமக்கள் பலமாக உள்ளனர். இஸ்ரேலுக்கு யார் தீங்கு விளைவித்தாலும், நாங்கள் அவர்களுக்கு தீங்கு விளைவிப்போம். நாம் ஒரு தெளிவான கோட்பாட்டை வைத்துள்ளோம். யார் நமக்குத் தீங்கு விளைவித்தாலும் நாம் அவர்களுக்குத் தீங்கு செய்வோம். எந்தவொரு அச்சுறுத்தலுக்கும் எதிராக நம்மை தற்காத்துக்கொள்ள அதைத் தலைநிமிர்ந்து, உறுதியுடன் செய்வோம். இஸ்ரேல் குடிமக்களே, நீங்களும் சம நிலையில் உள்ளவர்கள் என்பதை நான் அறிவேன்.

    ராணுவத்தின் கட்டளையின் வழிமுறைகளைப் பின்பற்றுமாறு உங்களை கேட்டுக் கொள்கிறேன். நாம் ஒன்றாக நிற்போம், கடவுளின் உதவியால், நம் எதிரிகள் அனைவரையும் வெல்வோம். இஸ்ரேலை ஆதரிப்பதற்காக அமெரிக்காவைப் பாராட்டுகிறேன் என்றார்.

    இஸ்ரேல் மீதான தாக்குதலுக்கு இங்கிலாந்து, கனடா, ஜெர்மனி, பிரான்ஸ், ஐரோப்பிய ஒன்றியம், ஸ்பெயின், நெதர்லாந்து, நார்வே, செக் குடியரசு, பராகுவே, மெக்சிகோ ஆகிய நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

    • எதற்கும் தயாராக இருக்கிறோம் என இஸ்ரேல் பிரதமர் தெரிவித்துள்ளார்.
    • இஸ்ரேலுக்கு உதவும் வகையில் கூடுதல் படைகளை அங்கு அமெரிக்கா அனுப்பி வைத்தது.
    • காசாவில் பயங்கரவாதிகள் என சந்தேகிக்கப்படும் நபர்களை அடையாளம் கண்டு, அவர்களின் இருப்பிடத்தை இஸ்ரேல் ராணுவத்துக்கு தெரியப்படுத்துகிறது
    • இஸ்ரேல் ராணுவம் ஏற்கனவே ‘ஹப்சோரா' என்கிற செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வருகிறது.

    டெல் அவிவ்:

    பாலஸ்தீனத்தில் ஹமாஸ் அமைப்பினரின் கட்டுப்பாட்டில் உள்ள காசா நகர் மீது இஸ்ரேல் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதல் போர் தொடுத்து வருகிறது. இந்த போரில் காசாவில் இதுவரை 33 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பலியாகி உள்ளனர். 76 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.

    இந்த நிலையில் காசா மீதான போரில் இஸ்ரேல் ராணுவம் 'ஏஐ' எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வருவதாக அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகி உள்ளது.

    இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்தை சேர்ந்த 2 செய்தி நிறுவனங்கள் இணைந்து மேற்கொண்ட செய்தி விசாரணையில் இது தெரியவந்துள்ளது. இஸ்ரேல் உளவுத்துறையை சேர்ந்த அதிகாரிகள் 6 பேரிடம் பெறப்பட்ட தகவல்களை அடிப்படையாக கொண்டு அந்த செய்தி நிறுவனங்கள் கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

    அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    காசா போரில் இஸ்ரேல் ராணுவம் 'லேவண்டர்' என்கிற செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வருகிறது. இது காசாவில் பயங்கரவாதிகள் என சந்தேகிக்கப்படும் நபர்களை அடையாளம் கண்டு, அவர்களின் இருப்பிடத்தை இஸ்ரேல் ராணுவத்துக்கு தெரியப்படுத்துகிறது. இதன் மூலம் இஸ்ரேல் ராணுவத்தால் இலக்கை குறிவைத்து துல்லியமாக வான்தாக்குதலை நடத்த முடிகிறது.

    போர் தொடங்கியதில் இருந்து தற்போது வரை பயங்கரவாதிகளாக இருப்பதற்கு சாத்தியமுள்ள 37 ஆயிரத்துக்கும் அதிகமான நபர்களை இலக்குகளாக 'லேவண்டர்' கண்டறிந்துள்ளது.

    பயங்கரவாதிகளுடன் தொடர்புள்ளவர்கள், அடிக்கடி அலைபேசி மாற்றுபவர்கள் இப்படியான பல்வேறு அளவீடுகள் வழியாக லேவண்டர் இதனை செய்கிறது.

    இஸ்ரேல் ராணுவம் ஏற்கனவே 'ஹப்சோரா' என்கிற செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வருகிறது. இரண்டுக்கும் உள்ள வித்தியாசம் 'ஹப்சோரா' பயங்கரவாதிகள் புழங்க சாத்தியமுள்ள இடங்களை, கட்டடங்களை கண்டறியும். 'லேவண்டர்' மனிதர்களை கண்டறியும்.

    இது தவிர 3-வதாக 'வேர்இஸ் டாடி' என்கிற செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பமும் பயன்பாட்டில் உள்ளது. இது லேவண்டரால் அடையாளம் காணப்பட்ட இலக்குகளை (பயங்கரவாதிகளாக சந்தேகிக்கப்படும் நபர்கள்) கண்காணித்து அவர்கள் வீடு திரும்பும்போது இஸ்ரேல் ராணுவத்துக்கு தகவல் தெரிவிக்கும்.

    அதை தொடர்ந்து இஸ்ரேல் ராணுவம் அந்த வீட்டின் மீது குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தும். இப்படி பயங்கரவாதிகள் என கண்டறியப்பட்டவர்களின் வீடுகள் தாக்கப்படும்போது உடனிருப்பவர்கள் சேர்ந்து உயிரிழக்க நேரிடுகிறது.

    இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    ஆனால் இந்த குற்றச்சாட்டை இஸ்ரேல் ராணுவம் மறுத்துள்ளது. இது தொடர்பாக இஸ்ரேல் ராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "பயங்கரவாதிகளை அடையாளம் காணும் செயற்கை நுண்ணறிவு அமைப்பைப் பயன்படுத்தவில்லை. லேவண்டர் செயற்கை நுண்ணறிவு அமைப்பு அல்ல. அது வெறும் ஒரு தரவுத்தளம் ஆகும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • ரஃபா நகரில் 1.4 மில்லியன் பாலஸ்தீன மக்கள் வசித்து வருகிறார்கள்.
    • ரஃபா மீது தாக்குதல் நடத்தினால்தான் இலக்கு நிறைவடையும் என நேதன்யாகு ஏற்கனவே தெரிவித்துள்ளார்.

    ஹமாஸ் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக இஸ்ரேல் ஹமாஸ்க்கு எதிராக போர் பிரகடனம் செய்து காசா மீது தாக்குதல் நடத்த தொடங்கியது. ஆறுமாதங்களை தாண்டியும் தாக்குதலை தொடர்ந்து நடத்தி வருகிறது.

    முதலில் காசா முனையின் வடக்குப் பகுதியில்தான் இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தியது. ஆனால் ஹமாஸ் அமைப்பினரை முற்றிலும் ஒழிப்பதற்கு தெற்கு பகுதிகளிலும் தாக்குதல் நடத்தப்பட வேண்டும் என தென்பகுதியிலும் தரை தாக்குதலை விரிவுப்படுத்தியது.

    ஹமாஸ் அமைப்பின் வலுவான இடமாக கருதப்பட்ட கான் யூனிஸ் மீது தாக்குதல் நடத்தியது. அந்த நகரத்தை இருக்கும் இடம் தெரியாத அளவிற்கு துவம்சம் செய்துவிட்டது. ஹமாஸ் அமைப்பினர் பயன்படுத்தி வந்த சுரங்கப்பாதைகளை அழித்தது.

    இந்த நிலையில்தான் ரஃபா மீது தாக்குதல் நடத்த தயாராகி வருவதாகவும், ரஃபா மீது தாக்குதல் நடத்தினால்தான் ஹமாஸ் அமைப்பிற்கு எதிராக போரின் இலக்கு நிறைவடையும் என இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு தெரிவித்திருந்தார்.

    ஆனால் ரஃபாவில் வசித்து வரும் 1.4 மில்லியன் பாலஸ்தீன மக்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகிவிடும் என்பதால் அமெரிக்கா ரஃபா தாக்குதலை விரும்பவில்லை. பொதுமக்களை பாதுகாப்பான இடத்திற்கு வெளியேற்ற வலியுறுத்தி வருகிறது.

    இந்த நிலையில்தான் நேற்று முன்தினம் (ஞாயிற்றுக்கிழமை ஏப்ரல் 7-ந்தேதி) கான் யூனிஸ் நகரில் இருந்து ராணுவ துருப்புகளை திரும்பப் பெறுவதாக இஸ்ரேல் அறிவித்தது. இதனால் கான் யூனிஸ் நகருக்கு மக்கள் திரும்பிய வண்ணம் உள்ளனர்.

    இந்த நிலையில் நேதன்யாகு தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் "அது நடக்கும் (ரஃபா மீது தாக்குதல்). தேதி இருக்கிறது" எனக் குறிப்பிட்டுள்ளார். ஆனால் விரிவாக ஏதும் தெரிவிக்கவில்லை.

    அதேவேளையில் இஸ்ரேலின் நெருங்கிய நட்பு நாடான அமெரிக்கா, ரஃபா மீதான தரைவழி தாக்குதல் தவறானதாக இருக்கும். மக்களை பாதுகாப்பதற்கான நம்பகத்தன்மையான திட்டத்தை பார்க்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.

    ஹமாஸ் உடன் போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஏற்படுத்துவதற்கான சர்வதேச முயற்சிகள் குறித்து இஸ்ரேலிய அதிகாரிகள் கெய்ரோவில் விவாதித்து வரும் நிலையில் நேதன்யாகு இவ்வாறு பேசியுள்ளார்.

    காசா மீது இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில் இதுவரை 33,200 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 76 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர்.

    ரஃபா மீது தரைவழி தாக்குதலை நடத்த ராணுவத்தை ஒருங்கிணைப்பதற்காக கான் யூனிஸ் நகரில் இருந்து ராணுவம் வெளியேறியுள்ளது என இஸ்ரேல் ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    ×