search icon
என் மலர்tooltip icon

    பொது மருத்துவம்

    • ஆசனம் இதய ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லதாகக் கருதப்படுகிறது.
    • ஆசனம் செய்வதால் மன அழுத்தம் மற்றும் பதட்டத்தைக் குறைகிறது.

    உட்கடசனா (நாற்காலி போஸ்)

    * உத்கடாசனா நமது தொடை தசைகள் மற்றும் கணுக்கால்களை வலுப்படுத்துகிறது.

    * இந்த ஆசனம் நமது தோள்பட்டைகள், முதுகு, இடுப்பு மற்றும் பிட்டம் ஆகிய உறுப்புகளை சீராக்குகிறது. மேலும் நமது தசைகளை இறுக்கி, அவற்றுக்குள்ளேயே வலிமையைத் தருகிறது.

    * தட்டையான பாதங்களினால் சிரமப்படுபவா்களுக்கு உத்கடாசனா மிகப் பொிய நன்மையைச் செய்கிறது. அதாவது தட்டைப் பாதப் பிரச்சினையை படிப்படியாகக் குணப்படுத்துகிறது.

    * இதயம் ஆரோக்கியமாக இருப்பதற்கு இந்த உத்கடாசனா மிகவும் உதவியாக இருக்கிறது. இது இதயத்தை மேம்படுத்தி, இதயத்தையும் அதன் துடிப்பையும் தூண்டிவிடுகிறது. பதங்குஸ்தாசனம் (பெருவிரல் போஸ்)

    இந்த ஆசனம் இதய ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லதாகக் கருதப்படுகிறது. பதங்குஸ்தாசனத்தில் கால்களின் விரல்களை கைகளின் கட்டைவிரல்களால் தொட வேண்டும். இந்த ஆசனம் செய்வதால் மன அழுத்தம் மற்றும் பதட்டத்தைக் குறைகிறது. இது ரத்த ஓட்டத்தை சீராக்கி செரிமானத்தை மேம்படுத்துகிறது. இந்த ஆசனம் செய்வது இதய ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.

     உத்தனாசனம் (முன்னோக்கி நிற்கும் வளைவு)

    உத்தனாசனம் செய்வது இதய ஆரோக்கியத்திற்கு மிகுந்த நன்மை பயக்கும். இது முக்கியமாக கணுக்கால், முழங்கால்கள், தொடைகளில் வலிமையை உருவாக்குகிறது. இது தசையின் நெகிழ்வுத் தன்மையை அதிகரிக்கிறது. உத்தனாசனம் செய்வது ரத்த ஓட்டத்தை மேம்படுத்தி, முதுகெலும்பின் வலிமையை அதிகரிக்கிறது.

    உத்தாசனத்தில் உடலின் மேல் பகுதி தரையை நோக்கி வளைவதுடன், தலை பாதங்களைத் தொடுவது போல இருக்க வேண்டும். இதன் காரணமாக, இதயத்தை நோக்கி ரத்த ஓட்டம் அதிகரிக்கத் தொடங்கலாம். இது இதய செல்திறனை மேம்படுத்துகிறது.

     தடாசனா (மலை போஸ்)

    தடாசனம் செய்வது இதய ஆரோக்கியத்திற்கு உதவுகிறது. இது மிகவும் பயனுள்ள ஆசனமாகும். இந்த ஆசனம் செய்வது உடல் தோரணையை மேம்படுத்துவதுடன், உடல் சீரமைப்பை சரியாக்குகிறது. இது ரத்த ஓட்டத்தை மேம்படுத்த உதவுகிறது. இது இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. உங்கள் மன வலிமையை அதிகரிக்கிறது.

    கவலை மற்றும் மனச்சோர்வுக்கு வழிவகுக்கும் எதிர்மறை எண்ணங்களைக் குறைக்கிறது. நுரையீரலை சுத்தம் செய்வதன் மூலம் சுவாசத்தை மேம்படுத்துகிறது. உடலுக்கு புத்துணர்ச்சியூட்டுகிறது மற்றும் நேர்மறையை ஊக்குவிக்கிறது. கலோரிகளை வேகமாக எரிக்க உதவுகிறது. உங்கள் முதுகுத்தண்டில் நெகிழ்வுத்தன்மையை அதிகரிக்கிறது.

     சக்ராசனம்

    இதயத்தை ஆரோக்கியமாக வைக்க உதவும் யோகாசனங்களில் சக்ராசனம் மிகவும் கடினமான ஒன்றாகும். இது இதய ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது. பிட்டம், முதுகு மற்றும் கால்களுக்கு அதிக ஆதரவு கிடைக்கும். இது தவிர, இந்த ஆசனம் செய்வது மார்பு தசைகளை நீட்டுவதுடன் முதுகுத் தண்டின் நெகிழ்வுத் தன்மையை அதிகரிக்கிறது. இதன் மூலம் இதய செயல்பாட்டை அதிகரிக்கிறது.

    முதுகு எலும்புகளைப் பலப்படுத்துவதுடன் புத்துணர்ச்சியை அளிக்கிறது. நீண்ட நேரம் மேசையில் அமர்ந்து கணினி பயன்படுத்துவோர்களுக்கு மன அழுத்தம், கோபம் மற்றும் கூன் முதுகு வராமல் தடுக்கும்.

    இந்த ஆசனங்கள் அனைத்தும் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது. ஆனால் ஆசனம் செய்யும் போது ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டால், அதைத் தவிர்ப்பது நல்லது. எனவே நிபுணரின் வழிகாட்டுதல்களின் கீழ் இந்த ஆசனம் செய்வது மிகவும் நன்மை பயக்கும்.

    • ஆரோக்கியமான வாழ்க்கைக்கு இரும்புச்சத்து மிகவும் அவசியம்.
    • ஜீரண உறுப்புகள் சரியாக செயல்பட இரும்புச்சத்து பெரிதும் உதவுகிறது.

    இரும்புச்சத்து என்பது ஹீமோகுளோபின் உற்பத்திக்கு அவசியமான ஒரு கனிமமாகும். இது உடல் முழுவதும் ரத்த சிவப்பணுக்களில் ஆக்ஸிஜனைக் கொண்டு செல்கிறது. இரும்புச்சத்து நிறைந்த உணவுகளை போதுமான அளவு உட்கொள்வது ஆரோக்கியமான நோயெதிர்ப்பு மண்டலத்தை பராமரிக்கவும், இரும்புச்சத்து குறைபாட்டை தடுக்கவும் முக்கியம்.

    இரும்புச்சத்து குறைபாட்டால் ஏற்படும் ரத்த சோகை மிகவும் பொதுவான ஒன்றாகும். மேலும் இது ரத்த சிவப்பணுக்களை உற்பத்தி செய்ய போதுமான இரும்புச்சத்து உடலில் இல்லாதபோது ஏற்படுகிறது. ஆய்வின்படி, குழந்தைகளில் 30 முதல் 50 சதவிகிதம் இரும்புச்சத்து குறைபாடு காரணமாக ரத்தசோகை ஏற்படுகிறது. சோர்வு, பலவீனம் மற்றும் வெளிர் தோல் ஆகியவை அறிகுறிகளாகும்.

    ஆரோக்கியமான வாழ்க்கைக்கு இரும்புச்சத்து மிகவும் அவசியம். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், உடல் வெப்பநிலையை சீராக வைக்கவும், ஜீரண உறுப்புகள் சரியாக செயல்படவும் இரும்புச்சத்து பெரிதும் உதவுகிறது. அந்த வகையில் இரும்புச்சத்து நிறைந்த உணவுகள் என்னென்ன, அவற்றை எப்படி எடுத்துக் கொள்ளலாம் என அறிவோம்...

    இரும்புச்சத்து குறைபாட்டை எவ்வாறு சமாளிப்பது:

    கீரைகள்:

    உணவில் அதிகளவு கீரைகளை எடுத்துக் கொள்ளுங்கள். கீரைகளில் ஏராளமான சத்துகள் உள்ளன. குறிப்பாக கீரைகளில் இரும்புச்சத்து அதிகளவில் உள்ளது.

    நட்ஸ் மற்றும் உலர்ந்த பழங்கள்:

    முந்திரி பருப்பு, ஆப்ரிகாட், பாதாம் பருப்பு, வாதுமை, உலர்ந்த பழங்கள் மற்றும் பேரீச்சம் பழம் போன்றவற்றில் இரும்புச் சத்து அதிகளவில் காணப்படுகிறது.

    பருப்பு வகைகள்:

    பருப்பு வகைகளிலும் இரும்புச் சத்து அதிகளவில் காணப்படுகிறது. சோயா, பீன்ஸ், பாசிப்பருப்பு போன்ற பருப்பு வகைகளை உட்கொண்டால், இரும்புச் சத்தை அதிகரிக்கலாம். பாசிப்பயிறு, முழு கருப்பு உளுந்து போன்ற பயிறு வகைகளைச் சாப்பிடுவது இன்னும் அதிக அளவிலான இரும்புச்சத்து கிடைக்க வழி வகைசெய்யும்.

    விதைகள்:

    பூசணி விதைகள், சூரிய காந்தி விதைகள், ஆளி விதைகள் போன்றவற்றை நொறுக்கு தீனியாக சாப்பிடலாம். இதுவும் உங்களுக்கு ஒரு ஆரோக்கியமான உணவாக இருக்கும்.

    செறிவூட்டப்பட்ட காலை உணவு தானியங்கள், ஓட்ஸ் நல்ல ஆதாரங்களாகும். ஒரு கப் செறிவூட்டப்பட்ட தானியங்கள் போதுமான அளவு இரும்புச்சத்தை வழங்கும். கூடுதலாக, பாதாம், திராட்சை மற்றும் முந்திரி போன்ற சில பழங்களில் இயற்கையாகவே இரும்புச்சத்து அதிகம்.

    மீன்:

    மீன் வகைகளில் ஷெல்பிஷ், நண்டு, டூனா மற்றும் சார்டைன்ஸ் போன்ற மீன்களில் இரும்புச் சத்து காணப்படுகிறது. சிவப்பு இறைச்சி, கோழி, கடல் உணவுகள், பருப்பு வகைகள், டோஃபு, கொட்டைகள், விதைகள் போன்ற இரும்புச் சத்து நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்ளலாம்.

    டார்க் சாக்லேட்:

    டார்க் சாக்லேட் உடம்பிற்கு தேவையான இரும்புச் சத்தையும், ஆன்டி ஆக்சிடென்டுகளையும் தருகிறது. டார்க் சாக்லேட்டில் 55 சதவிகிதம் கோக்கோ மற்றும் நிறைய இரும்புச்சத்து காணப்படுகிறது.

    வைட்டமின் சி அதிகம் உள்ள உணவுகளை உட்கொள்வது தாவர மூலங்களில் இருந்து இரும்புச்சத்தை உறிஞ்சுவதை மேம்படுத்த உதவும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். வைட்டமின் சி சிட்ரஸ் பழங்கள், தக்காளி, குடைமிளகு மற்றும் ப்ரோக்கோலி ஆகியவற்றில் காணப்படுகிறது. வைட்டமின் சி நிறைந்த உணவுகளுடன் இரும்புச்சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்வது இரும்பு உறிஞ்சுதலை அதிகரிக்க உதவுகிறது.

    இரும்புச்சத்து நிறைந்த உணவுகளை சாப்பிடுவதுடன், இரும்புச்சத்து உறிஞ்சுதலில் தலையிடக்கூடிய சில பொருட்களின் உட்கொள்ளலைக் கட்டுப்படுத்துவது முக்கியம். இந்த பொருட்களில் காபி, தேநீர் மற்றும் பால் பொருட்கள் போன்ற கால்சியம் நிறைந்த உணவுகள் அடங்கும்.

    • யோகர்ட் என்பது புளிப்பாக்கப்பட்ட பாலாகும்.
    • தயிரை விட யோகர்ட் அதிக ஊட்டச்சத்து கொண்டது.

    தயிர் போலவே கெட்டியாக இருக்கும் யோகர்ட் சுவைத்திருக்கிறீர்களா...? அது மிகவும் சுவையானது, சத்தானது. அதுபற்றி தெரிந்து கொள்வோமா..!

    யோகர்ட் என்பது புளிப்பாக்கப்பட்ட பாலாகும். பதப்படுத்தப்பட்ட பாலில் பல மணி நேரத்திற்கு உயிருள்ள பாக்டீரியாக்களை சேர்த்து வைப்பதன் மூலம் யோகர்ட் தயாரிக்கப்படுகிறது. தயிரை விட யோகர்ட் அதிக ஊட்டச்சத்து கொண்டது. இது புரதங்கள் மற்றும் கால்சியத்தின் அற்புதமான மூலமாகும். இதில் பி காம்ப்ளக்ஸ் வைட்டமின்கள், பாஸ்பரஸ், பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் உள்ளது. இது வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்துகிறது. வயிற்றுக்கு திருப்தியான உணர்வை வழங்குகிறது.

    சிறுவர் முதல் பெரியோர் வரை வயது வேறுபாடின்றி விரும்பிச் சாப்பிடும் உணவுப்பொருளாக யோகர்ட் காணப்படுகின்றது. ஆகையால், சிறிய பெட்டிக்கடைகள் முதல் நட்சத்திர ஹோட்டல்கள் வரை இந்த யோகர்ட் காணப்படுகின்றது.

     யோகர்ட்டில் கால்சியம், புரதம், பொட்டாசியம், பாஸ்பரஸ் மற்றும் வைட்டமின்-டி உள்ளிட்ட எலும்புகளின் அடர்த்தியை பராமரிக்க இன்றியமையாத பல ஊட்டச்சத்துகள் உள்ளன.

    யோகர்ட்டை தொடர்ந்து உட்கொள்வது நமது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது, பல்வேறு நோய் தொற்றுகளில் இருந்து நம் உடலைப் பாதுகாக்கிறது. இரைப்பை குடல் நோய்த்தொற்றுகள், சளி, காய்ச்சல் மற்றும் புற்றுநோய், சுவாசப் பிரச்சினைகளுக்கு எதிராக யோகர்ட் திறம்பட போராடுகிறது. யோகர்ட்டில் உள்ள மெக்னீசியம், செலினியம் மற்றும் துத்தநாகமும் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துகின்றன.

    நமது உடலை பெருங்குடல், சிறுநீரக மற்றும் மார்பக புற்றுநோயிலிருந்து பாதுகாக்கும் தன்மையை யோகர்ட் கொண்டுள்ளது. யோகர்ட் கால்சியத்தின் வளமான மூலமாகும். இதனால் எலும்புகளின் ஆரோக்கியம் மேம்படும். யோகர்ட் உட்கொள்வது, எலும்பு முறிவு மற்றும் எலும்புப்புரை (ஆஸ்டியோபோரோசிஸ்) அபாயத்தை குறைக்கும்.

    யோகர்ட்டில் உள்ள அதிகப் புரதச்சத்து நம்மை நிறைவாக உணரவைத்து பசியை குறைக்கிறது. இதனால் நமது கலோரி நுகர்வு குறைகிறது. இது எடை இழப்புக்கு ஊக்குவிக்கிறது.

     தயிருக்கும் யோகர்ட்டுக்குமுள்ள வித்தியாசம்

    பாலில் சிறிது மோர் ஊற்றி வைப்பதன் மூலம், அது இயற்கையாகப் புளித்துப் போய் தயிராகிறது. அதனால் வீடுகளிலேயே எளிதாக தயிரைத் தயார் செய்யலாம். ஆனால், யோகர்ட் தயாரிப்பதற்கு உயிருள்ள பாக்டீரியாக்கள் தேவை. எனவே, அதனை உணவு தொழிற்சாலைகளில் தான் தயார் செய்ய முடியும். கால்சியம் உள்ளிட்ட பல சத்துக்களை உள்ளடக்கிய தயிரானது இலங்கை, இந்திய உணவுமுறையில் முக்கிய இடத்தைப் பெற்றிருக்கிறது.

    • பற்களை முறையாக சுத்தம் செய்யவேண்டும்.
    • தினமும் இரண்டு வேளை பல் துலக்குவது அவசியம்.

    முகத்திற்கு அழகு சேர்க்கும் விஷயங்களில் பற்களுக்கும் முக்கிய பங்குண்டு. அதை எப்படி பாதுகாப்பது என தெரிந்துகொள்வோமா...? முக அழகை அதிகரிப்பதில் பற்கள் முக்கியமானவை. சீரற்ற பல்வரிசையால் மனதளவில் பாதிக்கப்படுபவர்கள் பலர் உள்ளனர்.

    பற்களின் அமைப்பை குழந்தைப் பருவத்திலிருந்தே சீரமைக்கத் தொடங்கினால் எளிதாக இருக்கும். குழந்தைகளுக்கு 8 முதல் 15 வயதிற்குள் பற்களை சீரமைப்பது சிறந்தது. இந்த வயதில், பற்கள் விழுந்து முளைக்கும் என்பதால், குறைந்த காலத்தில் பற்களை சீரமைக்கலாம்.

    குழந்தைப் பருவம் முதலே பற்களை முறையாக சுத்தம் செய்யவேண்டும். தினமும் இரண்டு வேளை பல் துலக்குவது அவசியம்.

    சாப்பிட்டவுடன் கண்டிப்பாக வாய் கொப்பளிக்க வேண்டும். சிலருக்கு சிறு வயதிலேயே பற்கள் நீண்டு வளர்வதால், அவர்களது முக அமைப்பே மாறிவிடுகிறது. இதற்குக் காரணம், குழந்தைப் பருவத்தில் விரல் சூப்புவதே.

    பால் பற்கள் விழுந்து நிரந்தரமான பற்கள் வளரும் பருவத்தில் இந்தப் பழக்கம் தொடரும் பட்சத்தில், பற்கள் நேரான வளர்ச்சிக்கு விரல்கள் இடையூறாக இருக்கின்றன. பற்கள் இயல்பை விட்டு விரல் சூப்பும் நிலைக்கேற்ப நீண்டு வளர ஆரம்பித்து விடுகின்றன.

    எனவே, 4 வயதுக்கு மேல் குழந்தைகள் இந்த பழக்கத்தைத் தொடர அனுமதிக்கக்கூடாது. பல் துலக்கும்போது பலரும் தெரியாமலேயே தவறு செய்கிறார்கள். அது, பற்களுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை பல் ஈறுகளுக்கு கொடுக்க மறப்பதுதான்.

    ஈறுகளுக்கும், பற் களுக்கும் இடையில் உள்ள சின்ன இடை வெளிகளில், நாம் சாப்பிடும் உணவுப் பொருட்கள் தங்குவதால்தான் ஈறு தொடர்பான பிரச்சினைகள் ஏற்படுகின்றன. இதைத் தவிர்க்க ஈறுகளை எப்படி பாதுகாப்பது என்பதை பல் மருத்துவர்கள் மூலம் அறிந்து, அதை குழந்தைகளுக்கு கற்றுக் கொடுக்க வேண்டும். இப்படிச் செய்தால், பிற்காலத்தில் பல் தொடர்பாக ஏற்படும் பிரச்சினைகளை தவிர்க்கலாம்.

    • உடற்பயிற்சி செய்தால் ரத்தத்தில் சர்க்கரை அளவு குறைய வாய்ப்புள்ளது.
    • பயிற்சியில் ஏதேனும் சந்தேகம் இருந்தால் பயிற்சியாளரை அணுகவும்.

    பிட்டான உடலை பெற விரும்பி இன்று பலரும் உடற்பயிற்சி கூடத்திற்கு செல்வது வழக்கமாகி வருகிறது. ஜிம்முக்கு செல்வோர் எதை செய்யலாம் எதை தவிர்க்க வேண்டும் என்று தெரிந்துகொள்ள வேண்டியது அவசியமாகும். பயிற்சிகள் முறைகள், பயிற்சி நேரம் உள்ளிட்ட விவரங்களை தெரிந்து கொள்ளாமல் ஜிம்முக்கு சென்று உடற்பயிற்சி செய்வது மரணத்தில் கூட சென்று முடியலாம்.

    ஜிம்முக்கு செல்வோர் அல்லது செல்ல விரும்புவோர் கீழ்கண்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டால் உடல்காயம், மாரடைப்பு, ஸ்ட்ரோக், சுயநினைவிழப்பு ஆகியவற்றில் இருந்து தங்களை தற்காத்துக் கொள்ளலாம்.

    நீரிழிவு நோய் அல்லது குறைந்த ரத்த சர்க்கரை அளவு உள்ளவர்கள் ஜிம்முக்கு செல்லும் முன் உடலின் சர்க்கரை அளவை தெரிந்துகொள்ள வேண்டும். உடற்பயிற்சி செய்தால் ரத்தத்தில் சர்க்கரை அளவு குறைய வாய்ப்புள்ளது. இதனால் மயக்கம், வாந்தி அல்லது உடற்சோர்வு ஏற்படலாம். ரத்த சர்க்கரை அளவு மிகவும் குறைந்தால் சுயநினைவு இழக்க நேரிடும். மாவுச்சத்து அதிகம் உள்ள திண்பண்டங்களை ஜிம்முக்கு எடுத்து செல்வது நீரிழிவு நோயாளிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

     பயிற்சி முறை

    ஜிம் பயிற்சிகள் சிக்கலானவையாக இருக்கலாம். சரியான முறையில் பயிற்சிகளை செய்ய வேண்டியது அவசியம். இல்லையேல், காயங்கள் ஏற்பட வாய்ப்புண்டு. பயிற்சியில் ஏதேனும் சந்தேகம் இருந்தால் பயிற்சியாளரை அணுகவும். அதேபோல, புதிய பயிற்சி மேற்கொள்ளும் முன்னர் பயிற்சியாளரிடம் கலந்தாலோசிக்க வேண்டும்.

    உடற்பயிற்சி செய்வது அவசியம் தான். இருப்பினும், அளவிற்கு மிஞ்சினால் அமுதும் நஞ்சு என்பது போல அதிகமாக உடற்பயிற்சி செய்தாலும் உடலுக்கு தீங்கு ஏற்படக்கூடும். பரிந்துரைக்கப்பட்ட கால அளவிற்கு மட்டுமே உடற்பயிற்சி மேற்கொள்ள வேண்டும்.

    • சத்துக்களில் முக்கியமானவை வைட்டமின்கள் தான்.
    • சூரிய சக்தியில் இருந்துதான் பெரும்பாலும் நமக்கு கிடைக்கிறது.

    உடலுக்குத் தேவையான முக்கிய சத்துக்களில் முக்கியமானவை வைட்டமின்கள். நாம் அன்றாடம் உண்ணும் காய்கறி, பழங்களில் இருந்து இந்த வைட்டமின் சத்துக்கள் நமக்கு கிடைக்கின்றன. அப்படி ஒரு நாளைக்கு போதுமான சத்துக்கள் உணவில் இருந்து கிடைக்கவில்லை என்றால் மருத்துவர்கள் வைட்டமின் மாத்திரைகளை பரிந்துரைப்பார்கள் இல்லையா?

    இந்த வைட்டமின்களில் பல பிரிவுகள் உள்ளன. அதில் முக்கியமானது வைட்டமின் டி. இது சூரிய சக்தியில் இருந்துதான் பெரும்பாலும் நமக்கு கிடைக்கிறது. அதிகாலை சூரிய ஒளியில் இருந்து ஒரு நாளைக்குத் தேவையான வைட்டமின்கள் நமக்கு கிடைத்துவிடும்.

     ஆனால் தற்போது பலரும் வெயில் படாமலேயே இருந்துவிடுகின்றனர். தைராய்டு இருப்பவர்களுக்கு முக்கியமாக இந்த வைட்டமின் உடலில் போதுமான அளவு சென்றடைவதில்லை. இதனால்தான் திடீர் உடல்பருமன் வருவதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

    இந்த வைட்டமின் டி குறைபாட்டால் உடல் பருமன் மட்டுமல்லாமல் இதயக் கோளாறுகள், புற்றுநாய் வருவதற்கான வாய்ப்பும் இருக்கிறது என்று அவர்கள் கூறுகிறார்கள்.

    மேலும் இந்த வைட்டமின் டி நேரடியாக நன்மை தருவதோடு மறைமுகமாகப் பல வேலைகளை செய்கிறது. வைட்டமின் டி நமது உடலில் கேல்சியம் மற்றும் பாஸ்பரஸ் கிரகிப்பதற்கு முக்கியப் பங்காற்றுகிறது. மேலும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் உதவுகிறது. இதனால் உடலில் வைட்டமின் டி குறைபாட்டால் கால்சியமும் குறையும். அதனால்தான் எலும்பு வலி இருப்பவர்களுக்கு முதலில் வைட்டமின் டி டெஸ்ட் எடுக்கிறார்கள்.

    வைட்டமின் டி குறைபாட்டால் எப்படி உடல் பருமன் ஆகிறது?

    உடலில் உள்ள கொழுப்பு செல்களை குறைப்பது வைட்டமின் டியின் வேலை. மேலும் வைட்டமின் டி சீரான அளவு இருந்தால் செரொடின், டெஸ்டொஸ்டெரொன் போன்ற ஹார்மோன்கள் சீராக சுரக்க உதவுகிறது. இதனால் உடல் பருமனாவது தடுக்கப்படுகிறது.

    உடலில் உள்ள கொழுப்பின் அளவயும் கட்டுப்படுத்துகிறது. உடல் எடை குறைய டயட் இருப்பவர்கள் கண்டிப்பாக வைட்டமின் டி அளவை பரிசோதித்துக் கொள்ளுங்கள்.

    வைட்டமின் டி குறைபாட்டால் எவ்வளவு டயட் இருந்தாலும் உடல் எடை குறையாது. மேலும் கால்சியமும் குறைந்து போய், உடல் மிகுந்த சோர்வுற்றும், எலும்புகளில் வலி ஏற்படவும் வாய்ப்புகள் அதிகம்.

    வைட்டமின் டி அதிகம் உடலில் சேர என்ன செய்யவேண்டும்?

    முதலில் உங்களுக்கு வைட்டமின் டி குறைவாக இருக்கிறதா என்று மருத்துவரிடம் பரிசோதனை செய்து அவர் கூறும் வழிமுறைகளைப் பின்பற்றுங்கள்.

    இந்த வகை வைட்டமின்கள் வெயில் தவிர உணவுகளில் மிகவும் குறைவு என்பதால் உங்களுக்கு வைட்டமின் டி மிகவும் குறைவாக இருந்தால், வைட்டமின் மாத்திரைகளை கொடுப்பார்கள். தயவுசெய்து நீங்களாகவே மாத்திரைகளை எடுத்துக் கொள்ளாதீர்கள். ஏனென்றால் இந்த வகை வைட்டமின் உடலில் அதிகமாக இருந்தால் அது கொழுப்பாக மாறிவிடும். இது மிகவும் கெடுதலான விஷயம்.

    பொதுவாகவே தினமும் வைட்டமின் டி கிடைக்கவேண்டும் என்றால், அதிகாலை வெயில் படுமாறு நடைப்பயிற்சி, யோகா ஆகியவற்றை செய்யத் தொடங்குங்கள். முடியாவிட்டாலும் காலையில் செய்தித் தாளையாவது வெயிலில் உக்கார்ந்து படியுங்கள்.

    தினமும் 20-30 நிமிடங்கள் காலை வெயில் உடலில் படுமாறு பார்த்துக்கொள்ளுங்கள். வைட்டமின் டி குறைபாட்டால் பாதிப்படைவது வயிறுதான் என்பதால், வைட்டமின் டி குறைந்தால் முதலில் எடை கூடுவது வயிற்றுப்பகுதிதான். அதனால் வயிறு தொப்பைப் போடுகிறது என்றால் உடனே மருத்துவரிடன் சென்று ஆலோசனைக் கேளுங்கள்.

    • எல்லோருக்கும் இயல்பாக கருத்தரித்தல் அமைந்துவிடுவதில்லை.
    • பலருக்கும் சில காரணங்களால் கருவுறுதலில் சிக்கல் உண்டாகிறது.

    கருத்தரித்தலை எதிர்நோக்கும் எல்லோருக்கும் இயல்பாக கருத்தரித்தல் அமைந்துவிடுவதில்லை. பலருக்கும் சில பல காரணங்களால் கருவுறுதலில் சிக்கல் உண்டாகிறது. இதனால் கருவுறாமை பிரச்சனையை அதிக தம்பதியர் எதிர்கொள்கிறார்கள். கருத்தரிக்க இயலாமையால் பாதிக்கப்படுபவர்களுக்கு உரிய பரிசோதனைகளுக்கு பிறகு செய்றகை கருவுறுதல் செய்யலாம் என்று மருத்துவர்கள் பரிசோதிக்கிறார்கள். அவர்களுக்கு இந்த IVF கை கொடுக்கிறது.

    கருவுறுதல் தாமதமாகும் போதும் பரிசோதனையில் இயல்பான கருத்தரிப்பு சாத்தியமில்லை எனும் போதும் இந்த இவ்ப் தொழில்நுட்பத்தை விரும்புகிறார்கள்.

    இந்த செயல்முறையின் போது கருப்பையில் இருந்து முட்டைகள் அறுவை சிகிச்சை மூலம் மீட்டெடுக்கப்படுகின்றன. ஆய்வகத்தில் விந்தணுவுடன் சேர்க்கப்பட்டு கருவுறுகின்றன.

    பிறகு பெண்ணின் கருப்பையில் மீண்டும் செருகப்படுகின்றன. தம்பதியர் கருவுறாமை பிரச்சனையில் இருக்கும் போது invitro fertilization (IVF) சிகிச்சையை தேர்வு செய்வதாக இருந்தால் இது குறித்து முழுமையாக தெரிந்துகொள்ள வேண்டும்.

     நீங்கள் IVF முயற்சிக்கும் தம்பதியராக இருந்தால் சில குறிப்புகளை பின்பற்ற வேண்டும்.

    ஆரோக்கியமான எடையை பராமரிப்பது அவசியம்

    ஆரோக்கியமான எடையை பராமரிப்பது சிகிச்சையில் முக்கியமானது. உடல் பருமனாக இருப்பது மற்றும் குறைவான எடை கொண்டிருப்பது என இரண்டுமே உங்கள் சிகிச்சை வெற்றி விகிதங்களை பாதிக்கச் செய்யலாம். அதிக எடையுடன் இருக்கும் பெண், சிகிச்சையில் கருப்பை கண்காணிப்பை சிரமமாக வைக்கிறது. முட்டைகளை மீட்டெடுக்கும் போது சிரமத்தை உண்டு செய்கிறது.

    ஆரோக்கியமான எடையை பெறுவது உணவு மற்றும் செயல்பாட்டில் ஏற்படும் மாற்றங்கள். தேவையெனில் உடல் எடை குறைய பயிற்சி போன்றவற்றை செய்யலாம். உணவியல் நிபுணருடன் ஆலோசித்து கார்டியோ, மெட்டபாலிக் எடை இழப்பு திட்டம் போன்றவை எடையை பராமரிக்க உதவலாம். பெண்களோடு, ஆண்களும் உடல் எடையை கட்டுக்குள் வைப்பது நல்லது.

    மன அழுத்தம்

    மன அழுத்தம் உங்கள் சிகிச்சையில் தலையிடலாம். மேலும் IVF சிகிச்சையின் போது மன அழுத்தம் இருந்தால் அது சிகிச்சையை வெற்றி பெற செய்வதில் தடை ஏற்படும். மேலும் இதை குறைப்பது கடினமானதாக இருந்தாலும் கூட மன அழுத்தத்தை குறைக்கும் பயிற்சிகளில் தம்பதியர் இருவரும் இணைய வேண்டும்.

    மனம், உடல் திட்டங்களில் பதிவு செய்தல், மன அழுத்தத்தை குறைத்தல் போன்றவற்றை பயன்படுத்த வேண்டும். இதன் மூலம் கர்ப்பத்தின் வெற்றியை சாத்தியமாக்கலாம்.

    விந்தணு ஆரோக்கியத்தை மேம்படுத்த முயற்சிப்பது நல்லது

    விந்தணு ஆரோக்கியத்தை மேம்படுத்த மல்டி வைட்டமின்களின் பயன்பாடு முக்கியம். ஆண்களும் மலட்டுத்தன்மை குறைபாடு வராமல் இருக்க மல்டி வைட்டமின்கள் எடுப்பது நல்லது. உடல் எடையை பராமரிப்பது, உடற்பயிற்சி செய்வது விந்தணுக்களின் தரத்தை மேம்படுத்தலாம். சரியான கவனிப்பின் கீழ் விந்தணுக்களின் எண்ணிக்கை மற்றும் தரத்தை அதிகரிக்க உதவும் மருந்துகளை ஆண்களும் உட்கொள்ள தொடங்கலாம்.

    இது IVF விளைவுகளில் நன்மை பயக்கும். சில நேரங்களில் விந்தணுவிலிருந்து நேரடியாக விந்து வெளியேறும் அளவுக்கு இவை பலனளிக்கலாம். விந்து பகுப்பாய்வுகளில் எந்த வகையான அசாதாரணங்கள் இருந்தாலும் கருவுறாமை நிபுணரை சந்தித்து உரிய சிகிச்சை பெறுவது அவசியம்.

    புகைப்பிடிக்கும் பழக்கம்

    ஆண்கள் புகைப்பிடிக்கும் போது IVF வெற்றிக்கான வாய்ப்பை வெகுவாக குறைக்கலாம். ஆண்கள் கருத்தரிப்பு சிகிச்சைக்கு முயற்சிக்கும் போது புகைப்பிடிப்பதால் முட்டை மற்றும் விந்தணுக்களின் தரத்தை பாதிக்கலாம். நீங்கள் புகைப்பிடிக்கும் பழக்கத்தை கொண்டிருந்தாலும் அதை நிறுத்துவதுதான் சிறந்த வழி.

    விந்தணுக்களின் தரம் அதிகரிக்க மாத்திரைகள்

    விந்தணுக்களின் தரம் மேலும் உறுதி செய்ய சில சப்ளிமெண்ட்கள் உதவுகிறது. மருத்துவர் உங்களுக்கு பரிந்துரைப்பார் அல்லது நீங்களே மருத்துவரிடம் கேட்டு அதற்கான மாத்திரைகளை எடுக்கலாம். இதற்கு மல்டிவைட்டமின்களும் உதவியாக இருக்கும். தம்பதியர் இருவருக்கும் கூட இவை தேவையாக இருக்கலாம்.

    வைட்டமின் டி

    போதுமான அளவு வைட்டமின் டி இருப்பதை உறுதி செய்யுங்கள். ஏனெனில் கருவுறாமை கொண்டுள்ள தம்பதியரில் 40 சதவீதம் நபர்களுக்கு வைட்டமின் டி குறைபாடு இருக்கலாம். மேலும் இந்த குறைபாடு IVF உடன் மோசமான விளைவுகளை உண்டு செய்யலாம். கருவுற முயற்சிக்கும் தம்பதியர் மற்றும் கருவுறாமை நிலையில் உள்ளவர்கள் உடல் பரிசோதனையில் வைட்டமின் டி பரிசோதனை செய்வதும் நல்லது. வைட்டமின் டி குறைவாக இருந்தால் வைட்டமின் டி உணவுகள் மற்றும் வைட்டமின் டி மாத்திரைகள் எடுப்பது நல்லது.

    சரியான மருத்துவரை அணுகவும்

    சிறந்த இனப்பெருக்க உட்சுரப்பியல் நிபுணரை தேர்ந்தெடுப்பதன் மூலம் உங்களுக்கு வெற்றி கண்டிப்பாக கிடைக்கும். உங்கள் மருத்துவரிடம் ஒளிவு மறைவில்லாத உங்கள் வரலாறு முக்கியம். அப்போதுதான் சரியான காரணங்களை கண்டறிந்து சிகிச்சை அளிக்க முடியும்.

    கருவுறாமைக்கு பரிசோதனைக்கு பிறகு உங்கள் மருத்துவர் IVF தீர்வு என்று சொன்னால் நீங்கள் உங்கள் சிகிச்சை காலத்தில் சில விஷயங்களில் கவனமாகவும் பொறுமையாகவும் இருக்க வேண்டும். தொடர்ந்து முயற்சி செய்வதும் பொறுமையோடு இருப்பதும் சிகிச்சையில் வெற்றி பெற உதவும். பல நேரங்களில் தம்பதியருக்கு ஒன்றுக்கு மேற்பட்ட IVF சுழற்சிகள் இந்த சிகிச்சையில் தேவைப்படலாம். மேலும் முடிவுகள் இந்த சுழற்சியிலிருந்து கணிசமாக வேறுபடலாம்.

    முதல் முறை வெற்றி கிடைக்கவில்லை என்றால் உங்கள் மருத்துவர் அடுத்த சுழற்சியில் மேம்படுத்த சிகிச்சை செய்யலாம். அதனால் பின்னடைவில் சோர்வடையாமல் இருங்கள். ஏனெனில் இவை எதுவும் உங்கள் கட்டுப்பாட்டில் இல்லை என்பதால் சில சமயங்களில் இது குறித்து அலட்டிகொள்ளாமல் இருப்பது உங்களை நீங்களே நிம்மதியாக வைத்திருக்க செய்யும். சிகிச்சையில் வெற்றி கிட்டாத போது உங்களை நீங்களே குறைத்து மதிப்பிட வேண்டாம். பொறுமையாக இருங்கள். நிச்சயம் வெற்றி கிடைக்கும்.

    • திராட்சையின் விதையில் ஏராளமான மருத்துவ நன்மைகள் நிறைந்துள்ளன.
    • மூலநோயினால் ஏற்படும் ரத்தப்போக்கை கட்டுப்படுத்த உதவுகிறது.

    கருப்பு திராட்சை என்றவுடன் அனைவருக்கும் நினைவுக்கு வருவது புளிப்பு சுவை தான். திராட்சைப் பழங்களை விட அதன் விதையில் ஏராளமான மருத்துவ நன்மைகள் நிறைந்துள்ளன. கருப்பு திராட்சைப் பழத்தை விட, அதன் விதையில் புரோ-ஆன்தோசயனிடின் எனும் சத்து அதிகமாக நிறைந்துள்ளது.

    ரத்தக்குழாய்களில் ஏற்படும் அடைப்பு, ரத்தக்குழாய்களில் ஏற்படும் வீக்கம், ரத்தக்கொதிப்பு போன்ற பிரச்னைகளை குணமாக்க திராட்சைப் பழத்தின் விதை அதிகமாக பயன்படுகிறது.

    கருப்பு திராட்சையின் விதை மூலநோயினால் ஏற்படும் ரத்தப்போக்கை கட்டுப்படுத்த பெரிதும் உதவுகிறது.

    ரத்தக்குழாய்களில் உள்ள கொழுப்பைக் கரைத்து, சர்க்கரை நோய் மற்றும் கால்கள் மரத்துப்போதல் போன்ற பிரச்னையை குணமாக்க கருப்பு திராட்சையின் விதை மிகவும் உதவுகிறது.

    சிறுநீரகச் செயல்பாட்டின் குறைகளை சரிசெய்யப் பயன்படுகிறது. மேலும், மாலைக்கண் நோய் மற்றும் கண்புரை போன்ற கண் தொடர்பான பிரச்னைகள் வராமல் இருக்க கருப்பு திராட்சையின் விதை பயன்படுகிறது.

    பெண்களின் மார்பகப் புற்றுநோய், கருப்பை கோளாறுகள் மற்றும் ஆண்களுக்கு ஏற்படும் புரோஸ்டேட் புற்றுநோய் போன்ற பிரச்னைகள் வராமல் இருக்கவும் கருப்பு திராட்சையின் விதை உதவுகிறது.

    நம் உடலிலுள்ள நச்சுப் பொருட்களை வெளியேற்றி புத்துணர்ச்சி தரக்கூடிய ஆன்டி ஆக்சிடன்ட் இதில் அதிகம் நிறைந்துள்ளது. மேலும், புற்றுநோய் செல்களை அழித்து, புதிய ஆரோக்கியமான செல்கள் அதிக அளவில் உற்பத்தி செய்ய உதவுகிறது. எனவே திராட்சைப் பழத்துடன் விதைகளையும் சேர்த்து உண்பது நல்ல பலனைத் தரும்.

    உடல் வளர்ச்சியில் குறைபாடு உள்ளவர்கள், உடல் பலகீனம் உள்ளவர்கள், தோல் வியாதி, மூட்டு வலி, மூட்டு வீக்கம் ஆகிய பிரச்சனை உள்ளவர்கள் இதைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் விரைவில் நிவாரணம் கிடைக்கும். நினைவாற்றலை பெருக்கவும் இது பயன்படுகிறது.

    எனவே, இவ்வளவு மகத்துவம் நிறைந்த திராட்சை விதைகளை, இவ்வளவு நாளாக தூக்கி எறிந்து விட்டோமே என வருந்தாமல், இனிமேலாவது திராட்சையுடன் விதைகளையும் சாப்பிடுங்கள்.

    பழங்காலத்தில் இருந்தே திராட்சை ரசம் அல்லது சிவப்பு ஒயின் குடிக்கும் பழக்கம் உலகின் பல்வேறு நாடுகளில் இருக்கும் மக்களிடம் இருந்து வருகிறது. இதற்கு காரணம், திராட்சையில் அரிய பல மருத்துவ குணங்கள் இருப்பதை நம் முன்னோர் கண்டறிந்ததுதான்.

    சிவப்பு திராட்சையில் இருந்து தயாரிக்கப்படும் ஒயின் உடலுக்கு பல நன்மைகளை தருவதாக கூறப்படுகிறது. ரத்தம் உறைதல் காரணமாக உடலின் நாளங்களில் அடைப்பு ஏற்பட்டு மாரடைப்பு, பக்கவாத பாதிப்புகள் ஏற்படும். சிவப்பு ஒயினில் அதிக அளவில் நோய் எதிர்ப்பு மூலக்கூறுகள் இருப்பதால், ரத்தம் உறைவு ஏற்படுவதை தடுக்கிறது. நோய் வருவதையும் தடுத்து நிறத்துகிறது.

    இதேபோல் சிவப்பு ஒயின் அருந்துவதால் ரத்த அழுத்தம் சீராக துணை புரியும் என்றும், அதற்கு சிவப்பு ஒயினில் காணப்படும் ரெஸ்வராடால் என்ற வேதிப்பொருள் முக்கிய காரணமாக இருக்கிறது என்றும் இத்துறை ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.

    • குழந்தைக்கு உடல்நல பிரச்சனைகள் இருப்பதால் சிசேரியனை திட்டமிடலாம்.
    • பிரசவத்தின் போது கருவின் இதயத்துடிப்பு கண்காணிக்கப்படும்.

    சிசேரியன் என்பது கர்ப்பிணியின் வயிறு மற்றும் கருப்பையை திறக்கும் அறுவை சிகிச்சை மூலம் குழந்தையை பெற்றெடுக்கும் ஒரு வழி. இது சிசேரியன் முறை பிரசவம் என்று அழைக்கப்படுகிறது.

    சிசேரியனுக்கான காரணங்கள்

    கர்ப்பிணிக்கு அல்லது குழந்தைக்கு உடல்நல பிரச்சனைகள் இருப்பதால் சிசேரியனை திட்டமிடலாம். ஏற்கனவே சிசேரியன் இருந்தால் அடுத்த குழந்தையை பிரசவிப்பதும் சிசேரியனாக இருக்கலாம்.

    யோனி பிரசவத்தின் போது தாய்க்கு அல்லது குழந்தைக்கு ஹெச்.ஐ.வி மற்றும் செயலில் உள்ள ஹெர்ப்ஸ் போன்ற சில நோய்த்தொற்றுகளை கொடுக்கலாம்.

    கர்ப்பிணி நீரிழிவு மற்றும் உயர் ரத்த அழுத்தம் போன்ற சில நிபந்தனைகள் கொண்டிருக்கும் போது மருத்துவர் சிசேரியனை அறிவுறுத்தலாம்.

    நஞ்சுக்கொடி கருப்பை வாயை தடுக்கலாம். சில பிரசவங்கள் சிசேரியனை அவசியமாக்கலாம். குழந்தை மிகவும் பெரியதாக இருக்கலாம். அல்லது பிரசவத்துக்கு தவறான நிலையில் இருக்கலாம். சில பெண்கள் சுகப்பிரசவத்தில் தொடங்கினாலும் சிசேரியனுக்கு மாற்றப்படலாம்.

    வயிற்றில் குழந்தைக்கு ஒழுங்கற்ற இதயத்துடிப்பு போன்ற மோசமான அறிகுறிகளை மருத்துவர்கள் கவனிக்கலாம். ஏனெனில் பிரசவத்தின் போது கருவின் இதயத்துடிப்பு, கரு எவ்வளவு நன்றாக இருக்கிறது என்பதற்கான நல்ல அறிகுறியாகும். பிரசவத்தின் போது கருவின் இதயத்துடிப்பு கண்காணிக்கப்படும். சாதாரண விகிதம் நிமிடத்துக்கு 120 முதல் 160 வரை இடையில் மாறுபடும்.

    கருவின் இதயத்துடிப்பு ஏதேனும் சிக்கல் இருப்பதாக தெரிந்தால் மருத்துவர் உடனடி நடவடிக்கையை எடுப்பார். தாய்க்கு ஆக்சிஜனை வழங்குவது, திரவத்தை அதிகரிப்பது மற்றும் தாயின் நிலையை மாற்றுவது போன்றவை முயற்சிக்கப்படும். இதயத்துடிப்பு மேம்படவில்லை எனில் டாக்டர் சிசேரியன் சிகிச்சைக்கு வலியுறுத்தலாம்.

    சில குழந்தைகள் பிறக்கும் போது கருவின் அசாதாரண நிலையில் இருக்கலாம். பிரசவத்தின் போது கருவின் இயல்பான நிலை தாயின் முதுகை எதிர்கொள்ளும் வகையில் தலை கீழாக இருக்க வேண்டும். சில நேரங்களில் கரு சரியான நிலையில் இருக்காது. இது யோனி வழியாக பிரசவத்தை கடினமாக்கலாம் எனவே டாக்டர் சிசேரியனை திட்டமிடுகின்றனர்.

    திட்டமிட்ட சிசேரியன்

    சிசேரியன் மூலம் குழந்தை பிறக்கும் என்று முன்கூட்டியே தெரிந்தால் நீங்கள் பிரசவ தேதியையும் மருத்துவர் மூலம் அறிந்துகொள்ளலாம். ஐவிஎஃப் முலம் மருந்துகள் மற்றும் திரவங்களை பெற்று, அறுவை சிகிச்சையின் போது உங்கள் சிறுநீர்ப்பை காலியாக வைக்க ஒரு வடிகுழாய் வைக்கப்படும்.

    சிசேரியனை திட்டமிடும் பெரும்பாலான பெண்களுக்கு மயக்க மருந்து ஒரு எபிட்யூரல் அல்லது ஸ்பைனல் பிளாக் இடுப்பிலிருந்து கீழே இறங்கிவிடும். இதனால் எந்த வலியையும் அவர்கள் உணரமாட்டார்கள். இந்த வகையான மயக்க மருந்து உங்களை இன்னும் விழித்திருக்கவும் என்ன நடக்கிறது என்பதை நீங்கள் அறிந்துகொள்ளவும் உதவுகிறது.

    அறுவை சிகிச்சையின் போது இடுப்புக்கு குறுக்கே ஒரு திரை வைக்கப்படும் இதனால் அதை பார்க்க முடியாது. வயிற்றில் அதன் பிறகு கருப்பையில் ஒரு வெட்டு இருக்கும் என்றாலும் மயக்க மருந்து காரணமாக நீங்கள் அதை உணர மாட்டீர்கள்.

    கருப்பையில் இருந்து குழந்தையை அகற்ற மருத்துவர்கள் பணிபுரியும் போது நடுப்பகுதியை அவர்கள் தள்ளுவதையோ அல்லது இழுப்பதையோ நீங்கள் உணர முடியும். அல்லது அழுத்தமாக உணர்வீர்கள். குழந்தை பிறந்தவுடன் அழுவதை கேட்கவும், பார்க்கவும் முடியும். எனினும் சிசேரியன் முடிந்ததும் மருத்துவர் உங்களை அனுமதித்தால் நீங்கள் தாய்ப்பால் கொடுக்க முயற்சிக்கலாம். அதே நேரம் எல்லா கர்ப்பிணி பெண்களும் தங்கள் குழந்தையை உடன் வைத்திருக்க முடியாது.

    சில நேரங்களில் சிசேரியன் மூலம் பிறக்கும் குழந்தைகளுக்கு சுவாசிப்பதில் சிக்கல் மற்றும் மருத்துவர்களின் உதவி தேவைப்படலாம்.

    குழந்தையின் நஞ்சுக்கொடியை அகற்றி தையல் போடப்படும். சிசேரியன் பிரசவம் செய்வதற்கு ஒரு மணி நேரம் வரை இருக்கலாம்.

    அதே நேரம் அவசரகால சிசேரியன் பிரசவத்தின் போது அறுவை சிகிச்சையின் வேகம் மற்றும் அவசரம் உள்பட சில வித்தியாசங்கள் இருக்கலாம். திட்டமிடப்பட்ட சிசேரியனை காட்டிலும் அவசரமாக செய்யப்படும் சிசேரியனில் வேகம் அதிகமாக இருக்கும்.

    • கழுத்தெலும்பு தேய்மானம் என்பது சித்த மருத்துவத்தில் 'சகன வாதம்' எனப்படும்.
    • உடற்பருமன் இருந்தாலும் கழுத்துவலி வரும்.

    கழுத்தெலும்பு தேய்மானம் என்பது சித்த மருத்துவத்தில் 'சகன வாதம்' எனப்படும். செர்விகல் ஸ்பாண்டிலைட்டிஸ்' என்பது இதன் மருத்துவப்பெயர். கழுத்து முள்ளெலும்புகளுக்கு இடையில் உள்ள 'டிஸ்க்' அல்லது சவ்வு தேய்ந்து போவது அல்லது விலகி விடுவது போன்ற காரணங்களால் கழுத்து வலி வருகிறது.

    தொழில் ரீதியாக ஒரே இடத்தில் உட்கார்ந்து வேலை பார்ப்பது, எடுத்துக்காட்டாக, கம்ப்யூட்டர் டெய்லரிங், டிரைவிங் போன்ற வேலைகளில் தொடர்ச்சியாக ஈடுபடுவது. இரு சக்கர வாகனங்களை ஓட்டிச் செல்லும்போது செல்போனில் பேசிக்கொண்டு செல்வது மற்றும் தொடர்ச்சியாக பயணம் செய்வதும் கழுத்துவலியை வரவழைத்து விடும்.

    உடற்பருமன் இருந்தாலும் கழுத்துவலி வரும். இந்த நோயின் ஆரம்பத்தில் கழுத்தில் மட்டும் வலி ஏற்படும். பிறகு தோள்பட்டைக்கு வலி பரவும். கைகளில் குடைவது போல் வலிக்கும். விரல்கள் வரை வலி பரவக்கூடும். சிலருக்குக் கை, விரல்கள் மரத்துப்போவதும் உண்டு. நாளாக ஆக கழுத்தைத் திருப்பும் போது கழுத்து வலியுடன், தலைச்சுற்றலும் ஏற்படும்.

    வாழ்க்கை முறை:

    எப்போதும் நேராக நிமிர்ந்து உட்கார வேண்டும். நீண்ட நேரம் உட்காரும் போது அடிக்கடி கழுத்தை மெதுவாக வலது, இடது பக்கம் திருப்ப வேண்டும். அதுபோன்று மேலேயும் கீழேயும், அசைக்க வேண்டும். மிருதுவான சிறிய தலையணையை பயன்படுத்த வேண்டும். உடல் பருமனை குறைக்க வேண்டும்.

    சித்த மருத்துவம்:

    1) அமுக்கிரா சூரணம் 1 கிராம், ஆறுமுகச் செந்தூரம் 200 மி.கி., சிவனார் அமிர்தம் 200 மி.கி., முத்துச் சிப்பி பற்பம் 200 மி.கி., குங்குலிய பற்பம் 200 மி.கி. இவைகளை தேன் அல்லது வெந்நீரில் இருவேளை உணவுக்கு பின் சாப்பிட வேண்டும்.

    2) அமுக்கரா லேகியம் அல்லது தண்ணீர் விட்டான் கிழங்கு லேகியம் 1 முதல் 2 கிராம் வீதம் காலை, இரவு இருவேளை சாப்பிட வேண்டும்.

    3) தண்டுவட பிரச் சினைகளுக்கு எண்ணெய் மசாஜ் மற்றும் வர்ம முறை மசாஜ் மிகவும் சிறந்தது. இதற்காக வாத கேசரி தைலம், விடமுட்டி தைலம், சுக்கு தைலம், உளுந்து தைலம் இவைகளில் ஏதேனும் ஒன்றை மேலி ருந்து கீழ் நோக்கி நன்றாக தேய்த்து விட வேண்டும். வெந்நீரில் குளிப்பது மிகவும் சிறந்தது.

    4) வாத மடக்கி, வாத நாராயணன், தழுதாழை, நொச்சி, முடக்கத்தான், பழுத்த எருக்கம் இலை இவை களை, ஆமணக்கு எண்ணெய்யில் வதக்கி வலியுள்ள இடங்களில் ஒத்தடமிட வேண்டும். 5)உணவில் கால்சியம், வைட்டமின் டி சத்து அதிகம் உள்ள பால், தயிர், முட்டை, மீன், இறைச்சி, பசலைக் கீரை, முருங்கைக்கீரை, பிரண்டைத் தண்டு, பாலக் கீரை, உளுந்து, வெந்தயம், பாதாம், வால்நட், எலும்பு சூப் இவைகளை சேர்த்துக்கொள்ள வேண்டும்.

    • வியர்வை சுரப்பிகள் நமது உடலெங்கும் உள்ள தோலில் இருக்கின்றன.
    • உடலின் வெப்ப நிலையை பராமரித்து காப்பவை வியர்வை சுரப்பிகள்.

    வியர்வை சுரப்பிகள் நமது உடலெங்கும் உள்ள தோலில் இருக்கின்றன. உதடு, வெளிக்காது, நகத்தின் அடிப்பகுதி, ஆண்கள்- பெண்களின் பிறப்புறுப்பு ஆகிய இடங்களில் மட்டும் தான் வியர்வை சுரப்பிகள் இல்லை. உடலின் வெப்ப நிலையை பராமரித்து காப்பவை வியர்வைச் சுரப்பிகள்.

    தட்பவெப்ப சீதோஷ்ண நிலை, வெயிலில் அதிக நேரம் இருப்பது. அதிக வியர்வை வரும் வேலைகளை செய்வது. இறுக்கமான ஆடைகளை அணிவது. காற்றோட்டம் அதிகம் இல்லாத இடத்தில் அதிக நேரம் இருப்பது போன்றவை வியர்க்குருவை உண்டாக்கும் சில காரணங்களாகும்.

    1) இளநீர், தர்ப்பூசணி, வெள்ள ரிக்காய், கிர்ணிப்பழம், பனை நுங்கு போன்ற பழங்களை அதிகமாக சாப்பிட லாம்.

    2) வேப்பிலை, சந்தனம், மஞ்சள் இந்த மூன்றையும் சம அளவில் எடுத்து அரைத்து, வியர்க்குரு இருக்கும் இடங்களில் தேய்த்து, சுமார் ஒரு மணி நேரம் ஊற விட்டு பின்பு குளிக்கலாம். இதுபோல சந்த னத்தை உடலெங்கும் தேய்த்துக்கொள்ளலாம். கற்றாழைச் சாறு தடவினால் நல்ல பலன் கிடைக்கும். ஐஸ் கட்டிகளை ஒரு துணியில் கட்டி வைத்துக் கொண்டு வியர்க்குரு இருக்கும் இடங்களின் மேல் தடவினால் எரிச்சல், அரிப்பு குறைந்துவிடும்.

    3) வெயில் காலத்தில் வழக்கமாக குடிப்பதைவிட சற்று அதிகமாக தண்ணீர் குடிக்க வேண்டும்.

    4) முடிந்தவரை வெயில் கடுமையாக இருக்கும் நேரங்களில் வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும். பருத்தியால் செய்யப்பட்ட ஆடைகளை வெயில் காலத்தில் உடுத்தவும். காற்றோட்டமான இடத்தில் இருக்கப் பழகுங்கள்.

    4.கற்றாழை ஜெல் அனைத்து சரும பிரச்சனைக்கும் தீர்வு தருகிறது. சரும பிரச்சனையை பாதுகாப்பதோடு மட்டுமல்லாமல் வியர்குருவிற்கும் சிறந்ததாக விளங்குகிறது. கற்றாழையில் இருக்கும் ஜெல்லை வியர்க்குரு ஏற்பட்டு இருக்கும் இடத்தில் தடவி சிறிது நேரம் கழித்த பின்னர் நன்றாக குளிர்ந்த நீரில் குளித்து வந்தால் கண்டிப்பாக இந்த வியர்க்குரு போன்ற பிரச்சனை உடனடியாக நீங்கும்.

     5. வியர்க்குரு, அரிப்பு போன்ற பிரச்சனைகளுக்கு சிறந்த வீட்டு வைத்தியம் என்னவென்றால் ஃப்ரிட்ஜில் இருக்கும் ஐஸ் கட்டி தான். இந்த ஐஸ் கட்டிகளை வியர்க்குரு உள்ள பகுதிகளில் தேய்த்து வந்தால் வியர்க்குரு போன்ற பிரச்சனைகள் நீங்கும்.

    6. சந்தன பவுடரை பன்னிருடன் கலந்து வியர்க்குரு எங்கெல்லாம் இருக்கிறதோ அங்கு தடவ வேண்டும். நன்றாக தடவிய பிறகு சிறிது நேரம் கழித்து நீரால் கழுவ வேண்டும். இந்த முறையை பின்பற்றினால் வியர்க்குரு தொல்லை அறவே இருக்காது.

    7. வியர்க்குருவை தடுக்க வெள்ளரிக்காயை நறுக்கி அரைத்து வைத்து கொள்ளவும். பிறகு அரைத்து வைத்த வெள்ளரிக்காய் விழுதை வியர்க்குரு உள்ள இடங்களில் 2 அல்லது 3 மணிநேரம் தடவி நன்றாக காயவைக்க வேண்டும். நன்றாக காய்ந்த பிறகு குளிர்ந்த நீரில் குளித்தால் வியர்க்குரு நீங்கி விடும்.

    • கொரோனா தடுப்பு மருந்தாக ஓமியோபதி ஆர்சனிக் ஆல்பம் பயன்படுத்தப்பட்டது.
    • ஆண்மைக்குறைவு பாதிப்புக்கு பரிந்துரைக்கப்படுகிறது.

    மக்களுக்கு ஓமியோபதி மருத்துவம் சிறப்பானதாக இருக்கும் என்றார் மகாத்மா காந்தி. விலை குறைவு, உடலுக்கு தீங்கு விளைவிக்காமல் நிவாரணம் அளிப்பதால் உலக அளவில் மக்கள் பயன்படுத்தும் 2-வது மருத்துவமுறையாக ஓமியோபதி மருத்துவமுறை இருக்கிறது. கொரோனா தடுப்பு மருந்தாக ஓமியோபதி ஆர்சனிக் ஆல்பம் என்ற மருந்து பயன்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த மருத்துவத்தில் பெருமளவு தாவரங்களும், ஒரு சில உலோகங்களும் அணு வடிவமாக்கப்பட்டு மருந்தாக பயன்படுகின்றன.

    அந்த வகையில் நாம் வீடுகளில் வளர்க்கும் அழகு தாவரமான கலாடியம் என்ற செடியில் இருந்து மருந்து தயாரிக்கப்பட்டு அந்த செடியின் பெயரிலே வழங்கப்படுகிறது. அதிலும் குறிப்பாக இந்த கலாடியம் மருந்து, தீவிர புகையிலை பழக்கத்தால் ஆண்மைக்குறைவு பாதிப்புக்கு உள்ளானவர்களுக்கு பரிந்துரைக்கப்படுகிறது. அது மட்டுமல்லாமல், பசியின்மை, வாயு கோளாறு, கொசு கடித்தால் கூட தோலில் ஏற்படும் கடுமையான அரிப்பு, சிவப்பு கொப்பளங்கள், மூக்கு, காது மற்றும் தலையில் ஏற்படும் கொப்பளங்கள், இருமல், ஆஸ்துமா உள்ளிட்ட பாதிப்புகளையும் நீக்க ஓமியோபதி மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படுகிறது.

    கலாடியம் தாய் திரவத்தை சொட்டு மருந்தாக தண்ணீரில் கலந்து குடிப்பதன் மூலம் புகைப்பழக்கம், புகையிலை பழக்கங்களில் இருந்து மீளலாம் என்று கண்டறியப்பட்டுள்ளது. ஐரோப்பிய நாடுகள் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இந்த மருந்து பயன்படுத்தப்படுகிறது.

    பொதுவாக, ஓமியோபதி மருந்துகளை தகுதி வாய்ந்த மருத்துவரின் பரிந்துரையின் பேரில் பயன்படுத்தினால் பெரிய மருத்துவ செலவு இல்லாமல் பல நோய்களில் இருந்து வருமுன் தற்காத்து கொள்ளலாம் என நம்பப்படுகிறது.

    ×