search icon
என் மலர்tooltip icon

    சமையல்

    • சுடுநீரில் சாதம் வைத்தால் சமைக்கும் நேரம் குறைவாகும்.
    • காய்கறிகளை வேகவைக்க சிறிதளவு தண்ணீரை தெளித்தால் மட்டும் போதும்.

    மைக்ரோவேவ் அவன் சாதனத்தில் சமைக்கும்போது ஒருசில விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும். அதில் சமைப்பதற்கான சமையல் டிப்ஸ்...

    * காய்கறிகளை ஒரே அளவாக நறுக்கி வேகவைக்க வேண்டும்.

    * காய்கறிகளை வேகவைக்க சிறிதளவு தண்ணீரை தெளித்தால் மட்டும் போதும்.

    * சுடுநீரில் சாதம் வைத்தால் சமைக்கும் நேரம் குறைவாகும்.

    * உப்பை முதலிலேயே சேர்த்தால் காய்கறிகள் வறண்டு விடும். ஆதலால் அவை வெந்தபின்புதான் உப்பு சேர்த்து சமைக்க வேண்டும்.

    * சமைக்கும் பாத்திரத்தில் பாதி அளவு சமையல் பொருள் இருந்தால்தான் பொங்கி வழியாமல் சீராக சமைக்க முடியும்.

    * ஒரு பவுல் அல்லது ஒருகப் தண்ணீரை மைக்ரோவேவில் சூடு செய்து அதில் தக்காளியை போட்டு எடுத்தால் ஓரிரு நிமிடத்தில் தோலை நீக்கி விடலாம்.

    * உருளைக்கிழங்கு, கத்தரிக்காய், சர்க்கரை வள்ளிக்கிழங்கு போன்ற தோல் தடிமனான காய்களை முள்கரண்டியால் குத்தியோ அல்லது துண்டு துண்டாக வெட்டியோதான் அவனில் வைக்க வேண்டும்.

    * புழுங்கல் அரிசியில் சாதம் வைக்க, பச்சரிசியில் வைப்பது போலவே நேரம், அளவு வைக்கவேண்டும்.

    * பாசுமதி அரிசியில் சமைக்கும்போது அரிசியும், தண்ணீரும் சேர்த்து பாத்திரத்தை மூடி 15 நிமிடம் 'மைக்ரோ-ஹை'யில் வைக்கவும்.

    * தோலுடன் கூடிய நிலக்கடலையை வேகவைக்க அது முழ்கும் வரை தண்ணீர் ஊற்றி, மைக்ரோ-ஹையில் 10 நிமிடம் மூடி வைக்கவும். பின்பு வெளியே எடுத்து உப்பு போட்டு 5 நிமிடங்கள் ஊறியபின் வடியவிட்டு சாப்பிடவும்.

    * நமத்துப் போன சிப்ஸ், கார்ன் பிளேக்ஸ், பிஸ்கட் வகைகளை, காட்டன் கர்ச்சீப் போன்ற துண்டு விரித்து அதில் பரப்பி வைத்து மூடாமல் ஒரு நிமிடம் சூடு செய்யலாம்.

    * பருப்பை வேகவைக்கும்போது அந்த பாத்திரத்தில் பருப்பும், நீரும் பாதி அளவுதான் இருக்க வேண்டும். 1/4 ஸ்பூன் நல்லெண்ணெய் விட்டு கலந்து வைத்தால் பொங்காது. 5 நிமிடங்களுக்கு 1 முறை வெளியே எடுத்து கலக்கிவிடவும்.

    * உலோக பாத்திரங்களை அவனில் வைத்து சமைக்கக் கூடாது. ஏனெனில் அந்த உலோகத்தில் மைக்ரோ அலைகள் ஊடுருவ முடியாது. அது தவிர கண்ணாடிபோல் பிரதிபலித்து, ஓவனின் உட்புற உலோக தகட்டில் எதிரொலித்து பக்க விளைவுகள் ஏற்படும்.

    • பாரம்பரிய உணவுகளில் ஒன்று பருத்தி பால்.
    • நெஞ்சு சளிக்கு உடனே தீர்வளிக்கும் உணவாக பார்க்கப்படுகிறது.

    மாதவிடாய் நாட்களில் அதிக தொல்லை மற்றும் மாதவிடாய் சுழற்சியில் பிரச்சனை என ஏராளமான பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர். இப்படி நாள்பட்ட பிரச்சனைகளை சந்திப்பவர்களுக்கு ஒரு அருமையான உணவாகவும் மருந்தாகவும் செயல்படுவது தான் நம் பாரம்பரிய உணவுகளில் ஒன்றான பருத்தி பால். மதுரை ஜிகர்தண்டாவை போல மேலும் ஒரு ஸ்பெஷல் உணவாக பார்க்கப்படுவது பருத்தி பால்.

    பருத்தி பால் மாதவிடாய் பிரச்சனை மட்டும் இல்லாது, நெஞ்சு சளிக்கும் உடனே தீர்வளிக்கும் ஒரு உணவாக பார்க்கப்படுகிறது. நிறைய நார்ச்சத்து உள்ளதால் மலச்சிக்கல் பிரச்சனைக்கு தீர்வளிக்கிறது. ரத்த அழுத்தத்தை குறைத்து இதயத்திற்கு பலம் தருகிறது. சரி இப்படி ஏராளமான பலன்களை தரும் பருத்தி பால் செய்வது எப்படி என்பதை இங்கு பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள்

    பருத்தி கொட்டை- 2 கப்

    வெல்லம் - 1 1/2 கப்

    பச்சரிசி-1/4 கப்

    ஏலக்காய் - 5

    சுக்கு-ஒரு சிறிய துண்டு

    தேங்காய் ஒரு கப்

    செய்முறை

    பருத்தி கொட்டைகளை நன்றாக கழுவி இரவில் ஊற வைக்க வேண்டும். காலையில் பருத்திப் பால் செய்வதற்கு இரண்டு மணி நேரத்திற்கு முன்பு ஊற வைக்க வேண்டும்.

    இதையடுத்து கிரைண்டர் அல்லது மிக்சியில் பருத்திக் கொட்டையை சேர்த்து தண்ணீர் விட்டு அரைக்க வேண்டும் பருத்தி நன்றாக அரைத்த பின்னர் அதை பிழிந்து பால் எடுத்துக்கொள்ள வேண்டும். இரண்டு முறை அரைத்து பால் எடுத்துக்கொள்ளலாம். இதையடுத்து ஊற வைத்த பச்சரிசியை மைய அரைத்துக் கொள்ள வேண்டும்.

    அதே போல் வெல்லத்தை பாகு காய்ச்சி வடித்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

    பின்னர் ஒரு அடி கனமான பாத்திரத்தில் பருத்திப் பாலை ஊற்றி அடுப்பில் வைத்து கிளற ஆரம்பிக்க வேண்டும். பருத்தி பால் கொதிக்க ஆரம்பிக்கும் போது அரைத்து வைத்துள்ள பச்சரிசி மாவை கலந்து கொள்ள வேண்டும். இப்போது ஒரு சிட்டிகை அளவுக்கு உப்பை சேர்க்க வேண்டும். கைவிடாமல் பருத்தி பாலை கிளறி விட வேண்டும். இல்லை என்றால் கட்டி விழுந்து விடும்.

    பருத்திப் பால் ஓரளவிற்கு கெட்டியாக வரும் போது வடித்து எடுத்து வைத்துள்ள வெல்லப் பாகை சேர்த்துக் கிளற வேண்டும்.

    இதையடுத்து நன்றாக கொதித்த பின்னர் ஏலக்காய் மற்றும் சுக்கை நன்றாக பொடித்து பாலில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

    பின்னர் தேவையான அளவு தேங்காயை துருவி சேர்த்துக்கொள்ளலாம். இனி சிறிய கிண்ணத்திற்கு மாற்றி பருத்திப் பாலை உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு பரிமாறலாம்.

    வாரத்திற்கு ஒரு முறையேனும் இதுபோன்ற ஆரோக்கியமான உணவை எடுத்துக்கொள்வது ஆண்-பெண் இருதரப்பினருக்கும் அதிக பலனைத் தரும்.

    • யோகர்ட் என்பது புளிப்பாக்கப்பட்ட பாலாகும்.
    • தயிரை விட யோகர்ட் அதிக ஊட்டச்சத்து கொண்டது.

    தயிர் போலவே கெட்டியாக இருக்கும் யோகர்ட் சுவைத்திருக்கிறீர்களா...? அது மிகவும் சுவையானது, சத்தானது. அதுபற்றி தெரிந்து கொள்வோமா..!

    யோகர்ட் என்பது புளிப்பாக்கப்பட்ட பாலாகும். பதப்படுத்தப்பட்ட பாலில் பல மணி நேரத்திற்கு உயிருள்ள பாக்டீரியாக்களை சேர்த்து வைப்பதன் மூலம் யோகர்ட் தயாரிக்கப்படுகிறது. தயிரை விட யோகர்ட் அதிக ஊட்டச்சத்து கொண்டது. இது புரதங்கள் மற்றும் கால்சியத்தின் அற்புதமான மூலமாகும். இதில் பி காம்ப்ளக்ஸ் வைட்டமின்கள், பாஸ்பரஸ், பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் உள்ளது. இது வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்துகிறது. வயிற்றுக்கு திருப்தியான உணர்வை வழங்குகிறது.

    சிறுவர் முதல் பெரியோர் வரை வயது வேறுபாடின்றி விரும்பிச் சாப்பிடும் உணவுப்பொருளாக யோகர்ட் காணப்படுகின்றது. ஆகையால், சிறிய பெட்டிக்கடைகள் முதல் நட்சத்திர ஹோட்டல்கள் வரை இந்த யோகர்ட் காணப்படுகின்றது.

     யோகர்ட்டில் கால்சியம், புரதம், பொட்டாசியம், பாஸ்பரஸ் மற்றும் வைட்டமின்-டி உள்ளிட்ட எலும்புகளின் அடர்த்தியை பராமரிக்க இன்றியமையாத பல ஊட்டச்சத்துகள் உள்ளன.

    யோகர்ட்டை தொடர்ந்து உட்கொள்வது நமது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது, பல்வேறு நோய் தொற்றுகளில் இருந்து நம் உடலைப் பாதுகாக்கிறது. இரைப்பை குடல் நோய்த்தொற்றுகள், சளி, காய்ச்சல் மற்றும் புற்றுநோய், சுவாசப் பிரச்சினைகளுக்கு எதிராக யோகர்ட் திறம்பட போராடுகிறது. யோகர்ட்டில் உள்ள மெக்னீசியம், செலினியம் மற்றும் துத்தநாகமும் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துகின்றன.

    நமது உடலை பெருங்குடல், சிறுநீரக மற்றும் மார்பக புற்றுநோயிலிருந்து பாதுகாக்கும் தன்மையை யோகர்ட் கொண்டுள்ளது. யோகர்ட் கால்சியத்தின் வளமான மூலமாகும். இதனால் எலும்புகளின் ஆரோக்கியம் மேம்படும். யோகர்ட் உட்கொள்வது, எலும்பு முறிவு மற்றும் எலும்புப்புரை (ஆஸ்டியோபோரோசிஸ்) அபாயத்தை குறைக்கும்.

    யோகர்ட்டில் உள்ள அதிகப் புரதச்சத்து நம்மை நிறைவாக உணரவைத்து பசியை குறைக்கிறது. இதனால் நமது கலோரி நுகர்வு குறைகிறது. இது எடை இழப்புக்கு ஊக்குவிக்கிறது.

     தயிருக்கும் யோகர்ட்டுக்குமுள்ள வித்தியாசம்

    பாலில் சிறிது மோர் ஊற்றி வைப்பதன் மூலம், அது இயற்கையாகப் புளித்துப் போய் தயிராகிறது. அதனால் வீடுகளிலேயே எளிதாக தயிரைத் தயார் செய்யலாம். ஆனால், யோகர்ட் தயாரிப்பதற்கு உயிருள்ள பாக்டீரியாக்கள் தேவை. எனவே, அதனை உணவு தொழிற்சாலைகளில் தான் தயார் செய்ய முடியும். கால்சியம் உள்ளிட்ட பல சத்துக்களை உள்ளடக்கிய தயிரானது இலங்கை, இந்திய உணவுமுறையில் முக்கிய இடத்தைப் பெற்றிருக்கிறது.

    • பல காய்கறிகளை நாம் உணவில் சேர்த்துக் கொள்வது இல்லை.
    • உடல் எடை குறைக்க நினைப்பவர்கள் முள்ளங்கியை உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.

    சத்து மிகுந்த பல காய்கறிகளை நாம் உணவில் சேர்த்துக் கொள்வது இல்லை. அதன் சுவையிலோ அல்லது மனத்திலோ ஏதாவது பிடிக்காமல் போய்விட்டால் அதை நாம் உண்ண மறுத்து விடுவோம். அப்படி பிடிக்காத காய்களில் முள்ளங்கியும் ஒன்று. ஒரு சிலரே இந்த முள்ளங்கியை விரும்பி சாப்பிடுவார்கள். பலரும் இதை விரும்ப மாட்டார்கள்.

    முள்ளங்கியை நாம் சாப்பிடுவதால் நம் உடலில் இருக்கக்கூடிய கல்லீரல், சிறுநீரகம், ரத்த சிவப்பணுக்கள் மற்றும் மலக்குடல் போன்றவற்றின் ஆரோக்கியம் மேம்படுகிறது. இதில் அதிக அளவு நீர் சத்தும், நார் சத்தும் இருப்பதால் உடல் எடை குறைக்க நினைப்பவர்கள் தங்கள் உணவில் முள்ளங்கியை சேர்த்துக் கொள்ள வேண்டும். முள்ளங்கியை வைத்து எப்படி காரசாரமான துவையல் செய்வது என்று பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள்:

    முள்ளங்கி- கால் கிலோ

    சின்ன வெங்காயம்- 10

    காய்ந்தமிளகாய்- 4

    மல்லி - ஒரு ஸ்பூன்

    வேர்கடலை- ஒரு ஸ்பூன்

    கடலை பருப்பு- ஒரு ஸ்பூன்

    உளுத்தம்பருப்பு- ஒரு ஸ்பூன்

    எண்ணெய்- தேவையான அளவு

    உப்பு- தேவையான அளவு

    புளி- நெல்லிக்காய் அளவு

    பூண்டு- 4

    செய்முறை:

    முதலில் முள்ளங்கியை எடுத்து தோல் சீவி சிறிது சிறிதாக நறுக்கிக் கொள்ள வேண்டும். பின்னர் சின்ன வெங்காயத்தை எடுத்து தோல் உரித்து சுத்தம் செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.

    இப்பொழுது அடுப்பில் ஒரு கடாயை வைத்து காய்ந்ததும் எண்ணெய் ஊற்றி அது நன்றாக காய்ந்த பிறகு அதில் கடலைப்பருப்பு, உளுந்தம் பருப்பு சேர்த்து வறுக்க வேண்டும். இவை இரண்டும் லேசாக நிறம் மாறியதும் அதில் மல்லி சேர்க்க வேண்டும். பிறகு காய்ந்த மிளகாய் போட்டு நன்றாக வறுக்க வேண்டும். இவை அனைத்தும் நன்றாக வறுபட்ட பிறகு வருத்த வேர்க்கடலை சேர்த்து கிளறி ஒரு பாத்திரத்தில் எடுத்து ஆற வைக்க வேண்டும்.

    மறுபடியும் அடுப்பில் கடாயை வைத்து அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்த பிறகு நாம் நறுக்கி வைத்திருக்கும் முள்ளங்கியை அதில் சேர்த்து வதக்க வேண்டும். முள்ளங்கியின் நிறம் லேசாக மாறிய பிறகு சின்ன வெங்காயத்தை அதில் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். இவை இரண்டும் நன்றாக வெந்த பிறகு புளியை போட்டு ஒரு நிமிடம் அடுப்பில் நன்றாக வதக்க வேண்டும். இதையும் எடுத்து ஆற வைத்து விட வேண்டும்.

    ஒரு மிக்ஸி ஜாரை எடுத்து அதில் நாம் வறுத்து ஆற வைத்திருக்கும் பருப்பு வகைகளை போட்டு தண்ணீர் ஊற்றாமல் ஒன்று இரண்டாக அரைத்துக் கொள்ள வேண்டும். பிறகு அதில் வதக்கி வைத்திருக்கும் முள்ளங்கியையும் சேர்த்து தேவையான அளவு உப்பு போட்டு சிறிதளவு மட்டுமே தண்ணீர் ஊற்றி அரைத்துக் கொள்ள வேண்டும். அனைத்தும் நன்றாக அரைபட்ட பிறகு அதை ஒரு பவுலுக்கு மாற்றி விட வேண்டும்.

    இப்பொழுது துவையலை தாளிப்பதற்காக அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்த பிறகு அதில் கடுகு, உளுத்தம்பருப்பு சேர்க்க வேண்டும். பருப்பு நன்றாக சிவந்த பிறகு அதில் ஐந்து பல் பூண்டை நன்றாக தட்டி சேர்க்க வேண்டும். பூண்டு லேசாக சிவந்த பிறகு அதில் கருவேப்பிலையை போட வேண்டும். கருவேப்பிலை நன்றாக பொரிந்த பிறகு நாம் அரைத்து வைத்திருக்கும் துவையலில் சேர்த்து நன்றாக கிளறி விட வேண்டும்.

    இதனை சூடான சாதத்தில் நெய் விட்டு அரைத்து வைத்துள்ள முள்ளங்கி தொக்கு சேர்த்து சாப்பிட்டால் அமிர்தமாக இருக்கும். இட்லி, தோசைக்கு தொட்டுக்கொள்ள சூப்பராக இருக்கும்.

    • குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சாப்பிடலாம்.
    • தேரலி இலைகள் அல்லது வாழை இலைகளில் வேகவைக்கப்படுகிறது.

    பலாப்பழ அப்பம் என்பது பழுத்த பலாப்பழம், வெல்லம், தேங்காய் மற்றும் வீட்டில் வறுத்த அரிசி மாவுடன் தயாரிக்கப்படும் ஒரு பாரம்பரிய தேநீர் நேர சிற்றுண்டாகும். தயாரிக்கப்பட்ட மாவை தேரலி இலைகள் அல்லது வாழை இலைகளில் வேகவைக்கப்படுகிறது.

    கேரளாவிலும், தமிழ்நாட்டின் சில பகுதிகளிலும் பிரபலமானது. இது சக்கா அப்பம், எலாய் அடாய் கும்பலியப்பம் சக்கா அடா இலா அடா எலாய் கொசுகட்டாய் சக்கா கோலுகாட்டா போன்ற பல பெயர்களில் அறியப்படுகிறது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சாப்பிடலாம்.

    தேவையான பொருட்கள்:

    வறுத்த அரிசி மாவு - 1.5 கப்

    பலாப்பழம் - 1.5 கப் நசுக்கியது

    வெல்லம் - 3/4 கப்

    அரைத்த தேங்காய் - 1/4 கப்

    வாழை இலை -8 துண்டுகள்

    நெய் - 1 ஸ்பூன்

    ஏலக்காய் - 4

    உப்பு - ஒரு சிட்டிகை

    செய்முறை

    அனைத்து பலாப்பழ துண்டுகளிலும் விதைகளை அகற்றிவிட்டு மிக்சி ஜாரில் கரகரப்பாக அரைத்து எடுத்து கொள்ள வேண்டும்.

    ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் 1/2 கப் தண்ணீர் ஊற்றி வெல்லம் சேர்த்து அது முழுமையாக உருகும் வரை சூடாக்க வேண்டும். பின்னர் வெல்லம் கரைந்த பிறகு அதை வடிகட்ட வேண்டும்.

    ஒரு அடிகனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து சூடாக்கி அதில் நெய் ஊற்றி காய்ந்த பிறகு நசுக்கிய பலாப்பழத்தை சேர்த்து 3 முதல் 5 நிமிடங்கள் குறைந்த தீயில் வைத்து வதக்க வேண்டும்.

    பின்னர் உருகிய வெல்லத்தை சேர்த்து நன்கு கலக்க வேண்டும். பலாப்பழம் மென்மையாகி, கலவை கெட்டியாகும் வரை கிளற வேண்டும். இதில் அரைத்த தேங்காய், ஏலக்காய் தூள் மற்றும் ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து நன்றாக கலக்க வேண்டும்.

    இப்போது வறுத்து வைத்துள்ள அரிசி மாவை சேர்க்க வேண்டும். எல்லாம் நன்கு ஒன்றாக சேரும்' வரை அனைத்தையும் சேர்த்து நன்றாக கலக்க வேண்டும். பின்னர் அடுப்பை அனைத்து விட்டுசில நிமிடங்கள் மூடி வைக்க வேண்டும்.

     இதற்கிடையில், வாழை இலையை சிறிய சதுரங்களாக வெட்டி எடுத்துக்கொள்ள வேண்டும். அந்த இலையில் சிறிது நெய் தடவி சிறிய பங்கு மாவை நடுவில் வைத்து வட்டமாக தட்டி விரல்களால் அதைப் பரப்பவும். வாழை இலையை பாதியாக மடித்து ஒரு பொட்டலமாக அமைக்கலாம். மீதமுள்ள மாவையும் அதைப் போலவே செய்யுங்கள்.

    இதனை ஒரு இட்லி பாத்திரத்தில் வைத்து 20 நிமிடங்கள் வரை சமைக்க வேண்டும். சூடு ஆறியதும் பொட்டலத்தை அகற்றி சூடான தேநீருடன் பலாப்பழ அப்பத்தை சுவைக்கலாம்.

    • ஊறுகாய் வகைகளில் இருந்து சற்று மாறுபாடான சுவையுடையது.
    • மீன் மலிவாக கிடைக்கும் நேரங்களில் தயாரித்து வைத்துகொள்ளலாம்.

    மீன் ஊறுகாய் மற்ற ஊறுகாய் வகைகளில் இருந்து சற்று மாறுபாடான சுவையுடையது. மீன் மலிவாக கிடைக்கும் சமயங்களில் தயாரித்து வைத்துகொள்ளலாம். நேரம் கிடைக்கும்போது செய்து வைத்துகொண்டால் தேவைப்படும்போது உபயோகித்துகொள்ளலாம். ஆனால் மற்ற ஊறுகாய் போன்று அதிக நாட்கள் வைத்திருக்க முடியாது. மீன் ஊறுகாய் மாறுபட்ட சுவையுடன் இருப்பதால் அனைவரும் விரும்பி உண்பார்கள்.

    கேரளா கன்னியாகுமரி, நாகர்கோவில் பகுதிகளில் உள்ளவர்களால் அதிகமாக செய்யப்படும் ஒரு சுவையான ஊறுகாய் இந்த மீன் ஊறுகாய். சுவையாக இருப்பதால் தற்போது அனைவரும் சமைக்கும் உணவு பட்டியலிலும் வந்துவிட்டது நீங்களும் ஒரு முறை சமைத்து பாருங்கள் இதன் சுவை உங்களுக்கும் பிடித்த வகையில் நிச்சயம் இருக்கும். இதே போன்று இறால் ஊறுகாயும் மிகவும் சுவையானது. இப்போது மீன் ஊறுகாய் செய்முறையை பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள்:

    மீன் - 1/2 கிலோ (முள் இல்லாத மீன்)

    மஞ்சள் பொடி - 1/2 ஸ்பூன்

    மிளகாய் தூள் - 4ஸ்பூன்

    வெந்தயப்பொடி - 1ஸ்பூன்

    பூண்டு - ௧ (நறுக்கியது)

    இஞ்சி - ஒரு சிறிய துண்டு

    வினிகர் - 1/2 கப்

    உப்பு - தேவையான அளவு

    கடுகு - ஒரு ஸ்பூன்

    கறிவேப்பில்லை - சிறிது

    நல்லெண்ணெய் - தேவையான அளவு

    செய்முறை:

    முதலில் ஊறுகாய் செய்வதற்கு தேவையான மீன்களை எடுத்து சுத்தம் செய்து சதுர வடிவில் வெட்டி வைக்க வேண்டு. பின்னர் இஞ்சி, பூண்டு இரண்டையும் பொடியாக நறுக்கி வைத்துக்கொள்ள வேண்டும். சுத்தம் செய்து வைத்துள்ள மீன்களுக்கு மேல் மிளகாய் பொடி, மஞ்சள் பொடி, உப்பு ஆகியவற்றை போட்டு நன்றாக மீன்களுக்கு மேல் படும்படி கலந்து விட வேண்டும்.

    இதனைத் தொடர்ந்து ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் உப்பு கலந்து வைத்திருக்கும் மீன்களை போட்டு நன்றாக வறுத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

    அதே கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, கறிவேப்பிலை, இஞ்சி, பூண்டு ஆகிய பொருட்களை போட்டு நன்றாக கிளர வேண்டும். பின்னர் மிளகாய் பொடி, வெந்தயப்பொடி, உப்பு சேர்த்து கிளறி அதனுடன் நாம் ஏற்கனவே வறுத்து வைத்துள்ள மீன்களையும் சேர்க்க வேண்டும்.

    சரியாக 5 நிமிடங்கள் மீனை வேக விட்டு அரை கப் வினிகர் சேர்த்து மீண்டும் ஒரு 5 நிமிடம் கொதிக்க வைத்து விட்டு இறக்கினால் சுவையான மீன் ஊறுகாய் தயார்.

    பின்னர் ஆறியதும் ஊறுகாயை காற்று போகாத பாட்டிலில் போட்டு அடைத்து வைத்து தேவையான போது எடுத்து பரிமாறலாம்.

    • மாவில் வண்டு வராமல் இருக்க சிறிதளவு உப்பை போட்டு வைத்தால் போதும்.
    • இட்லி மாவு புளிக்காமல் இருக்க வெற்றிலையை போட்டு வைக்கலாம்.

    * கோதுமை மாவில் வண்டு பிடிக்காமல் இருப்பதற்கு அதில் சிறிதளவு உப்பை கலந்து வைத்தால் போதும்.

    * காப்பர் பூசப்பட்ட பாத்திரம் மங்காமல் இருப்பதற்கு சிறிது உப்பையும், வினிகரையும் பாத்திரத்தின் மேல் பூசி, துணியால் அழுத்தி தேய்த்தால் போதும். பாத்திரம் பளிச்சென்று இருக்கும்.

    * இட்லி மாவு புளிக்காமல் இருப்பதற்கு வெற்றிலையை காம்பு கிள்ளாமல் அதன் உள்பகுதியை மாவில் போட்டு வைக்கவும். மாவு இரண்டு நாட்கள் வரை கெடாமலும், புளிக்காமலும் இருக்கும்.

    * மிக்ஸி ஜாடியில் உள்ள பிளேடை கழற்ற இயலாமல் இருந்தால், அதை கழற்றுவதற்கு ஜாடியில் பிளேடு மூழ்கும் வரை வெந்நீர் ஊற்றி சிறிது நேரம் வைக்கவும். பின்பு நீரை ஊற்றிவிட்டு முயற்சி செய்தால் பிளேடை எளிதாக கழற்றலாம்.

    * மிளகு, சீரகம், காய்ந்த மிளகாய், கொத்தமல்லி போன்றவற்றை ஒரு பாத்திரத்தில் போட்டு வறுத்து, மிக்ஸியில் அரைத்து இட்லி சாம்பாரில் போட்டால் கூடுதல் சுவையாக இருக்கும்.

    * உருளைக்கிழங்கு வறுவல் செய்யும்போது புளிப்பு இல்லாத தயிர் அரைக்கரண்டி ஊற்றி செய்தால் சுவையாக இருக்கும்.

    * வற்றல் குழம்பு வைக்கும்போது சிறிதளவு கடுகு, மஞ்சள் தூள், மிளகாய் வற்றல் போன்றவற்றை வெறும் பாத்திரத்தில் போட்டு வறுத்து அதனை தூளாக்கி குழம்பில் போட்டு இறக்கினால் மணமாக இருக்கும்.

    * சப்பாத்தியை சில்வர் பாயில் பேப்பரில் சுற்றி வைத்தால் நீண்ட நேரம் காயாமல் இருக்கும்.

    * ரசம் தயார் செய்யும்போது அதனுடன் தேங்காய் தண்ணீர் சேர்த்தால் ருசியாக இருக்கும்.

    * கறிவேப்பிலையை அலுமினியப் பாத்திரத்தில் போட்டு மூடி வைத்தால் காயாமல் இருக்கும்.

    * வறுத்த வெந்தயத்தை சாம்பாரில் போட்டால், சுவையாகவும் வாசனையாகவும் இருக்கும்.

    * தோசை சுடும்போது மாவில் சிறிது சர்க்கரையை சேர்த்தால் தோசை மொறுமொறுப்பாக வரும்.

    * முட்டைகோஸில் உள்ள தண்டை வீணாக்காமல் சாம்பாரில் போட்டு சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.

    * வெயில் காலத்தில் பெருங்காயம் கட்டியாகிவிடும். அப்படி ஆகாமலிருக்க பச்சை மிளகாயை காம்பு எடுக்காமல் பெருங்காய டப்பாவில் போட்டு வைத்தால் பஞ்சு போல் மிருதுவாக இருக்கும்.

    • அருமையான சுவையில் பிரெட் டோஸ்ட்.
    • நீண்ட நேரம் பசியெடுக்காமல் வைத்திருக்கும்.

    பெரும்பாலும் காலையில் வேலைக்கு செல்லும் போதோ அல்லது குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பும் போதோ, எப்போதும் நல்ல சுவையான காலை உணவை செய்ய முடியாது. அந்த நேரத்தில் மதிய வேளையில் சாப்பிடுவதற்கு ஏற்றவாறு உணவுகளை தயாரித்து, அதனையே தான் காலையிலும் சாப்பிடுவோம். ஆனால் இப்போது சற்று எளிமையாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கக்கூடிய ஒரு சூப்பர் ரெசிபியை பார்க்கலாம்.

    பிரட்டுகளைக் கொண்டு ஒரு அருமையான சுவையில் பிரெட் டோஸ்ட் செய்வது தான். இந்த டோஸ்ட்டில் முட்டைகளை சேர்த்து செய்வதால், நிச்சயம் இது நீண்ட நேரம் பசியெடுக்காமல் வைத்திருக்கும். குறிப்பாக இந்த ரெசிபி பேச்சுலர்களுக்கு சிறந்த ரெசிபியாக இருக்கும்.

    தேவையான பொருட்கள்:

    பிரட் துண்டுகள் - 4

    முட்டை - 2

    சீஸ் - 2 கட்டிகள் (துருவியது)

    பட்டை தூள் - 1/2 டீஸ்பூன்

    பெப்பர் தூள் - 1/2 டீஸ்பூன்

    வெண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்

    உப்பு - 1/2 டீஸ்பூன்

    ப்ரஷ் க்ரீம் - 1 டேபிள் ஸ்பூன்

    செய்முறை:

    முதலில் ஒரு பிரட்டை இரண்டு பிரட் துண்டுகள் போன்று வெட்டிக் கொள்ள வேண்டும். பின்னர் அந்த இரண்டு பிரட் துண்டுகளுக்கும் இடையில், துருவிய சீஸை வைத்துக் கொள்ள வேண்டும். (அளவுக்கு அதிகமாக சீஸை துணித்து வைக்கக்கூடாது.) இதே போன்று அனைத்து பிரட் துண்டுகளையும் வெட்டி, சீஸ் வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் ஒரு பௌலில் முட்டை, உப்பு, பட்டை தூள் மற்றும் மிளகு தூள் சேர்த்து நன்கு அடித்துக் கொள்ள வேண்டும்.

    அடுத்து தோசைக்கலை அடுப்பில் வைத்து, அதில் வெண்ணெயை தடவி உருகியதும், வெண்ணெயானது உருகியதும், ஒவ்வொரு பிரட் துண்டுகளாக முட்டை கலவையில் நனைத்து, தோசைக்கல்லில் போட்டு, முன்னும் பின்னும் பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும். பின்னர் அதன் மேல் ப்ரஷ் க்ரீம் தடவி பரிமாறினால், சுவையான சீஸ் பிரெஞ்சு டோஸ்ட் ரெடி.

    • உடலில் இருக்கும் கொழுப்புக்கள் கரைந்து எடை குறையும்.
    • குழந்தைகளுக்கு அதிகம் கொடுத்தால் எலும்புகள் வலுவடையும்.

    கொள்ளு உடலுக்கு மிகவும் வலிமையைத் தரும் உணவுப் பொருட்களில் ஒன்று. அத்தகைய கொள்ளுவை அடிக்கடி சாப்பிட்டால், உடலில் இருக்கும் கொழுப்புக்கள் கரைந்து, உடல் எடை குறையும். அதிலும் குழந்தைகளுக்கு அதிகம் செய்து கொடுத்தால், அவர்களது எலும்புகள் வலுவடையும். மேலும் கொள்ளுவை வைத்து இதுவரை ரசம் தான் செய்திருப்போம். ஆனால் இப்போது அந்த கொள்ளுவை வைத்து ஒரு குருமா செய்யலாம். அந்த கொள்ளு குருமாவை எப்படி செய்வதென்று பார்ப்போம்.

    தேவையான பொருட்கள்:

    கொள்ளு - 1 கப்

    வெங்காயம் - 2

    உருளைக்கிழங்கு - 2 (வேக வைத்தது)

    உப்பு - தேவையான அளவு

    எண்ணெய் - தேவையான அளவு

    அரைப்பதற்கு

    வெங்காயம் - 1

    தக்காளி - 3

    வரமிளகாய் - 6

    மல்லி - 1 டீஸ்பூன்

    சீரகம் - 1/2 டீஸ்பூன்

    இஞ்சி - 1 நீளத்துண்டு

    பூண்டு - 7 பல்லு

    தேங்காய் - 1/2 மூடி (துருவியது)

    மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்

    கசகசா - 2 டீஸ்பூன்

    செய்முறை:

    முதலில் மிக்சியில் வெங்காயம், தக்காளி, மல்லி, சீரகம், இஞ்சி, பூண்டு, தேங்காய் துருவல், கசகசா, வரமிளகாய், மஞ்சள் தூள் சேர்த்து நன்கு நைஸாக அரைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் வேக வைத்த உருளைக்கிழங்கின் தோலை உரித்து, அதனை நறுக்கிக் கொள்ளவும். பின்னர் வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.

    அதன்பிறகுகொள்ளுவை ஒரு பாத்திரத்தில் போட்டு நன்கு 8 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ளவும். பின்னர் அதனை குக்கரில் போட்டு, தேவையான தண்ணீர் ஊற்றி, வேக வைத்து, பின் அதில் உள்ள நீரை வடிகட்டி விட வேண்டும்.

    அடுப்பில் குக்கரை வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி, நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்க வேண்டும்.

    அடுத்து அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து, நன்கு மணம் வரும் வரை தொடர்ந்து வதக்க வேண்டும். வாசனை நன்கு வரும் போது, அத்துடன் உருளைக்கிழங்கு, வேகவைத்த கொள்ளு மற்றும் உப்பு சேர்த்து, தேவையான தண்ணீர் ஊற்றி, குக்கரை மூடி ஒரு விசில் விட்டு இறக்க வேண்டும்

    இப்போது சுவையான கொள்ளு குருமா ரெடி. இதன் மேல் கொத்தமல்லியை தூவி, சாதத்துடன் பரிமாறலாம்.

    • குழந்தைகளுக்கு மக்ரோனி என்றால் ரெம்பவும் பிடிக்கும்.
    • நம்மூர் ஸ்டைலில் செய்யப்படும் மக்ரோனி ஒரு தனிச்சுவை.

    குழந்தைகளுக்கு மக்ரோனி என்றால் ரெம்பவும் பிடிக்கும். குழந்தைகளுக்கு மட்டுமில்லாமல் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை மிகவும் பிடித்தமான ரெசிபி என்றால் இந்த மக்ரோனிதான். காரணம், அதன் வழவழப்பு தன்மையும் பார்க்க அழகாக இருப்பதும்தான். அதிலும் நம்மூர் ஸ்டைலில் செய்யப்படும் மக்ரோனி ஒரு தனிச்சுவை பெற்றது. அதை தயாரிப்பது எப்படி? என்று பார்ப்போம்.

    தேவையான பொருடகள்:

    தண்ணீர்-1 லிட்டர்

    உப்பு - தேவைக்கேற்ப

    மக்ரோனி- 2 கப்

    வெஜிடபிள் ஆயில் - 2 ஸ்பூன்

    கடுகு - 1 ஸ்பூன்

    கறிவேப்பிலை - தேவையான அளவு

    வெங்காயம், நறுக்கியது - 1

    சிறிய வடிவில் பச்சை மிளகாய் (நறுக்கியது) - 1-2

    பீன்ஸ் (சதுர வடிவில் நறுக்கியது மற்றும் வேக வைத்தது ) - 1/4

    சாம்பார் மசாலா தூள் - 1 டேபிள் ஸ்பூன்

    வெஜ் மயோனைஸ் - 5 ஸ்பூன்

    செய்முறை:

    ஒரு பாத்திரத்தை எடுத்து அதில் தண்ணீர் ஊற்றி மிதமான தீயில் அடுப்பில் வைத்து தண்ணீரை கொதிக்க வைக்க வேண்டும். அதனுடன் உப்பு மற்றும் மக்ரோனி இரண்டையும் சேர்க்க வேண்டும்.

    மக்ரோனியை 5 நிமிடங்கள் வரை சமைக்க வேண்டும். மக்ரோனி பாத்திரத்தின் அடியில் ஒட்டாத வண்ணம் கிளறிக் கொண்டே இருக்க வேண்டும். மக்ரோனி வெந்த பிறகு வடிகட்டியை கொண்டு தண்ணீரை வடிகட்டிக் கொள்ளவும்.

    இப்பொழுது ஒரு கடாயை எடுத்து அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும். நன்றாக வெடித்ததும் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், பீன்ஸ், காலிபிளவர், சாம்பார் மசாலா, கொஞ்சம் உப்பு சேர்த்து நன்றாக கிளற வேண்டும். நன்றாக கிளறி ஒரு நிமிடம் வரை காய்கறிகளை வேக வைக்க வேண்டும்.

    இப்பொழுது இதனுடன் வேகவைத்த மக்ரோனி தண்ணீரை சேர்க்க வேண்டும். பிறகு கடாயை அடுப்பில் இருந்து இறக்கி அதனுடன் மயோனைஸ் சேர்த்து கிளற வேண்டும். மறுபடியும் கடாயை அடுப்பில் வைத்து 1 நிமிடம் வரை குறைந்த தீயில் வைத்து கலவை கெட்டியாகும் வரை சமைக்க வேண்டும். இதனுடன் வேகவைத்த மக்ரோனியை சேர்த்து நன்றாக கிளற வேண்டும். இப்பொழுது மக்ரோனி கலவையை ஒரு தட்டில் வைத்து பரிமாறவும். சுவையான நம்மூர் ஸ்டைல் மக்ரோனி ரெசிபி தயார்.

    • இளநீர் உடலில் உள்ள அதிகப்படியான சூட்டைத் தணிக்கும்.
    • சமையலுக்குக் கைக்குத்தல் அரிசியைப் பயன்படுத்துவது மிக மிக நல்லது.

    1. நீங்கள், தினமும் ஐந்து விதமான பழங்களையும், சில காய்கறிகளையும் உணவாக எடுத்துக் கொள்பவரா..? ஆம் என்றால்… ஆரோக்கியமும் அழகும் எப்போதும் உங்க பக்கம்தான்!

    2. தினமும் ஒரு டம்ளர் மாதுளை ஜூஸ் குடிப்பது, உடலில் ரத்த அழுத்தம், கொழுப்பு, நச்சுத்தன்மை என பல பிரச்னைகளுக்குத் தீர்வாக இருக்கும்.

    3. மனநலக் கோளாறு மற்றும் மூளை நரம்புகளில் பாதிப்பு உள்ளவர்களின் தினசரி உணவில் தர்பூசணி துண்டுகள் அவசியம். மன அழுத்தம், பயம் போன்ற பாதிப்புகளை தகர்க்கும் விட்டமின் பி-6 தர்பூசணியில் அதிகம்.

    4. ஆப்பிள் தோலில் பெக்டின் என்ற வேதிப்பொருள் கணிசமாக இருப்பதால், தோலோடு சாப்பிட வேண்டும். பெக்டின் நம் உடலின் நச்சுக்களை நீக்குவதற்கு பெரிதும் பயன்படுகிறது.

    5. பூண்டு சாப்பிட்டீர்களென்றால்… உங்கள் உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி வெகுவாக அதிகரிக்கும். வெள்ளை அணுக்கள் அதிகம் உற்பத்தியாவதோடு, கேன்சர் செல்கள் உருவாகாமலும் தடுக்கும்.

    6. சிவப்பணு உற்பத்திக்கு புடலங்காய், பீட்ரூட், முருங்கைக்கீரை, அவரை, பச்சைநிறக் காய்கள், உளுந்து, துவரை, கம்பு, சோளம், கேழ்வரகு, பசலைக்கீரை போன்றவற்றை அடிக்கடி சேர்த்துக் கொள்ள வேண்டும்.

    7. பச்சைப் பயறு, மோர், உளுந்துவடை, பனங்கற்கண்டு, வெங்காயம், சுரைக்காய், நெல்லிக்காய், வெந்தயக்கீரை, மாதுளம் பழம், நாவற்பழம், கோவைக்காய், இளநீர் போன்றவை உடலின் அதிகப்படியான சூட்டைத் தணிக்கும்.

    8. சுண்டைக்காயை உணவில் சேர்த்தால்… நாக்குப்பூச்சித் தொல்லை, வயிற்றுப்பூச்சித் தொல்லை தூர ஓடிவிடும்.

    9 வெங்காயம், பூண்டு, சிறுகீரை, வேப்பிலை, மிளகு, மஞ்சள், சீரகம், கருப்பட்டி, வெல்லம், சுண்டைக்காய் வற்றல், செவ்விளநீர், அரைக்கீரை, எலுமிச்சை போன்றவை உடலில் உள்ள நச்சுத்தன்மை நீக்கும் உணவுகள்.

    10. பொன்னாங்கண்ணிக் கீரையைத் துவட்டல் செய்து சாப்பிட்டு வந்தால், மூல நோய் தணியும். இந்தக் கீரையின் தைலத்தை தலைக்குத் தேய்த்துக் குளித்து வந்தால்… கண் நோய்கள் நெருங்காது.

    11. சமையலுக்குக் கைக்குத்தல் அரிசியைப் பயன்படுத்துவது மிக மிக நல்லது. கைக்குத்தல் அரிசியில் நார்ச் சத்துக்கள் நிறைந்துள்ளன.

    12. சைக்கிள் கேப்பில் எல்லாம் ஸ்நாக்ஸ் சாப்பிடுவதை முற்றிலுமாகத் தவிர்க்க வேண்டும். அதற்குப் பதிலாக தானியங்கள், முளைகட்டிய பயறு போன்றவற்றைச் சாப்பிடலாம்.

    13. பப்பாளிப் பழங்கள் மிகவும் சத்து மிகுந்தவை. வாரம் ஒருமுறை பப்பாளிப் பழம் வாங்கிச் சாப்பிடுங்கள். கண்களுக்கும் நல்லது.

    14. அதிக நாட்கள் உணவை ஃப்ரிட்ஜில் வைத்து சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். அப்படி வைக்கப்பட்ட உணவுகளில் சத்துக்கள் குறைந்து விடுவதோடு, உடல் ஆரோக்கியத்துக்கும் தீங்கினை ஏற்படுத்தும்.

    15. தினசரி சிறு துண்டு பைனாப்பிளை தேனில் ஊற வைத்து, அந்தத் தேனை இரண்டு வாரம் சாப்பிட்டால் கல்லீரல் ஆரோக்கியமாக இருக்கும்.

    16. பலமான விருந்து காரணமாக ஜீரணக் கோளாறா? புதினா, தேன், எலுமிச்சைச் சாறு… இவற்றில் ஒவ்வொரு ஸ்பூன் கலந்து சாப்பிட்டால் போதும். கல்லும் கரைந்துவிடும்.

    17. கேன்சர் செல்களைத் தகர்க்கும் சக்தி திராட்சையின் தோலில் இருக்கிறது. திராட்சை கொட்டைகளிலிருந்து பெறப்படும் மருந்துப் பொருட்கள், வைரஸ் எதிர்ப்புச் சக்தியை பெரிதும் தூண்டுகின்றன.

    • அசைவ உணவின் சுவைக்கு ஈடான சுவையை தரக்கூடியது காளான்.
    • காளானில் உடலுக்கு தேவையான எண்ணற்ற அத்தியாவசிய சத்துக்கள் உள்ளன.

    சைவ உணவுகளிலேயே அசைவ உணவின் சுவைக்கு ஈடான சுவையைத் தரக்கூடியது தான் காளான். அத்தகைய காளானில் உடலுக்கு தேவையான எண்ணற்ற அத்தியாவசிய சத்துக்கள் நிறைந்துள்ளன. அதிலும் நீரிழிவு நோயாளிகள் காளானை அதிகம் சாப்பிடுவது நல்லது. அத்தகைய காளானுடன், சத்துக்கள் அதிகம் நிறைந்த பசலைக் கீரையை சேர்த்து ஒரு குழம்பு செய்தால், மிகவும் அலாதியான சுவையில் குழம்பானது இருக்கும். இப்போது பசலைக்கீரை காளான் குழம்பின் செய்முறையை பற்றி பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள்:

    பட்டன் காளான் - 15

    வெங்காயம் - 1 (பெரியது மற்றும் நறுக்கியது)

    சீரகம் - 1 டீஸ்பூன்

    மல்லி தூள் - 1 டீஸ்பூன்

    கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்

    எலுமிச்சை சாறு - 1 டேபிள் ஸ்பூன்

    எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்

    உப்பு - தேவையான அளவு

    தண்ணீர் - 1/2 கப்

    அரைப்பதற்கு

    பசலைக் கீரை - 1 கட்டு (கழுவி நறுக்கியது)

    இஞ்சி - 1 இன்ச்

    பச்சை மிளகாய் - 2

    பட்டை - 1

    ஏலக்காய் - 4

    கிராம்பு - 4

    அன்னாசிப்பூ - 1

    கொத்தமல்லி - 1/2 கப் (நறுக்கியது)

    செய்முறை:

    முதலில் பட்டன் காளானை நன்கு நீரில் கழுவி நறுக்கிக் கொள்ள வேண்டும். பின்னர் அரைப்பதற்கு கொடுத்துள்ள அனைத்து பொருட்களையும் மிக்சியில் போட்டு நன்கு கெட்டியான பேஸ்ட் போல், தண்ணீர் ஊற்றாமல் அரைத்துக் கொள்ள வேண்டும்.

    பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், சீரகம் சேர்த்து தாளித்து, வெங்காயத்தைப் போட்டு, தீயை குறைவில் வைத்து 4-5 நிமிடம் வதக்க வேண்டும்.

    அதன்பிறகு நறுக்கி வைத்திருக்கும் காளானை சேர்த்து 5-6 நிமிடம் வதக்கி விட வேண்டும். பிறகு பசலைக்கீரை பேஸ்ட்டை போட்டு நன்கு கிளறி விட வேண்டும்.

    அடுத்து மல்லி தூள், உப்பு, கரம் மசாலா சேர்த்து 3 நிமிடம் வதக்கி, தண்ணீர் ஊற்ற, தட்டு கொண்டு மூடி 7-8 நிமிடம் நன்கு கொதிக்க விட வேண்டும். காளான் நன்கு வெந்ததும், அதில் எலுமிச்சை சாற்றினை ஊற்றி கிளறி இறக்கினால், சூப்பரான பசலைக்கீரை காளான் குழம்பு ரெடி.

    ×