என் மலர்tooltip icon
    • பிரதமர் மோடி மேற்கு வங்க மாநிலத்திற்கு இன்று பயணம் மேற்கொள்கிறார்.
    • நாடியா மாவட்டத்தில் நெடுஞ்சாலை திட்ட பணிகளை தொடங்கி வைக்கிறார்.

    கொல்கத்தா:

    தமிழகம், மேற்கு வங்கம், கேரளா, அசாம் உள்ளிட்ட மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த தீவிரப்பணிகள் (எஸ்ஐஆர்) நடந்தது. வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தப் பணிக்கு (எஸ்ஐஆர்) மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமுல் காங்கிரஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

    இந்நிலையில், மேற்கு வங்க மாநிலத்திற்கு பிரதமர் மோடி இன்று காலை பயணம் மேற்கொள்கிறார். அங்குள்ள நாடியா மாவட்டத்தில் நெடுஞ்சாலை திட்ட பணிகளை தொடங்கி வைக்கிறார்.

    இதையடுத்து, இன்று மதியம் அசாம் செல்லும் பிரதமர் மோடி கவுகாத்தியில் அமைக்கப்பட்டுள்ள லோக்பிரியா கோபிநாத் போர்டோலோய் பன்னாட்டு விமான நிலையத்தின் புதிய முனையத்தைத் திறந்து வைக்கிறார். மேலும் அசாமில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பிரதமர் மோடி பங்கேற்கிறார்.

    • டாஸ் வென்ற பிரிஸ்பேன் ஹீட் பந்துவீச்சை தேர்வு செய்தது.
    • முதலில் பேட் செய்த பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணி 20 ஓவரில் 257 ரன்கள் குவித்தது.

    பிரிஸ்பேன்:

    ஆஸ்திரேலியாவில் நடைபெறும் உள்ளூர் டி20 தொடர் பிக் பாஷ் லீக். இந்தத் தொடரின் 15-வது சீசன் நடந்து வருகிறது.

    பிரிஸ்பேனில் உள்ள காபா மைதானத்தில் நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் பெர்த் ஸ்கார்ச்சர்ஸ், பிரிஸ்பேன் ஹீட் அணிகள் மோதின. டாஸ் வென்ற பிரிஸ்பேன் ஹீட் பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி முதலில் பேட் செய்த பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 257 ரன்கள் குவித்தது.

    அந்த அணியின் பின் ஆலன் 79 ரன்னும், கூப்பட் கனோலில் 77 ரன்னும் அடித்தனர்.

    பிரிஸ்பேன் ஹீட் அணி சார்பில் சேவியர் பார்ட்லெட் 2 விக்கெட் வீழ்த்தினார்.

    இதையடுத்து, 258 ரன் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை நோக்கி பிரிஸ்பேன் ஹீட் அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் ஆன காலின் முன்ரோ கோல்டன் டக் அவுட்டானார்.

    அடுத்து இணைந்த ஜாக் வைல்டர்முத்-மேட் ரென்ஷா ஜோடி அதிரடியாக ஆடியது.

    பெர்த் அணியின் பந்துவீச்சை இந்த ஜோடி வெளுத்து வாங்கியது. சிக்சரும் பவுண்டரியுமாக விளாசிய இருவரும் சதமடித்து அசத்தினர்.

    இரண்டாவது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 212 ரன் சேர்த்த நிலையில் ரென்ஷா 101 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த மேக்ஸ் பிரையண்ட் தனது பங்குக்கு 28 ரன்கள் அடித்து ரிட்டயர்டு ஹர்ட் ஆனார்.

    இறுதியில் பிரிஸ்பேன் ஹீட் அணி 19.5 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 258 ரன் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சிறப்பாக ஆடிய ஜாக் வைல்டர்முத் 110 ரன்களுடன் களத்தில் இருந்தார்.

    இதன்மூலம் பிக் பாஷ் லீக் வரலாற்றில் அதிக ரன்களை சேசிங் செய்த அணி என்ற வரலாற்று சாதனையை பிரிஸ்பேன் படைத்துள்ளது.

    • ஸ்டேட்ஸ்வில்லி விமான நிலையத்திலிருந்து புளோரிடா நோக்கி விமானம் புறப்பட்டது.
    • சுமார் 2,000 அடி உயரத்தை அடைந்தபோது விமானத்தில் திடீரென கோளாறு ஏற்பட்டது.

    வாஷிங்டன்:

    அமெரிக்காவைச் சேர்ந்தவர் கிரெக் பிபிள் (55). இவர் முன்னாள் கார் பந்தய சாம்பியன் ஆவார். இவர் தனது மனைவி கிறிஸ்டினா, குழந்தைகள் ரைடர், எம்மா ஆகியோருடன் செஸ்னா சி550 என்ற சிறிய ரக விமானத்தில் பயணம் செய்தார். இவர்களுடன் டென்னிஸ் டட்டன், அவரது மகன் ஜாக், கிரெக் வாட்ஸ்வொர்த் ஆகியோரும் இருந்தனர்.

    ஸ்டேட்ஸ்வில்லி விமான நிலையத்திலிருந்து புளோரிடாவை நோக்கிப் புறப்பட்ட இந்த விமானம் சுமார் 2,000 அடி உயரத்தை அடைந்தது. அப்போது திடீரென ஏற்பட்ட கோளாறு காரணமாக அந்த விமானம் விமான நிலையத்திற்கே திரும்பியது.

    அவசரமாகத் தரையிறங்க முயன்றபோது கட்டுப்பாட்டை இழந்த விமானம் ரன்வேயைத் தாண்டிச் சென்று ஆண்டனா மற்றும் சுற்றுச்சுவர் மீது மோதி பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறியது.

    இதில் பயங்கர தீவிபத்து ஏற்பட்டு விமானத்தில் பயணித்த 7 பேரும் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர்.

    கட்டுப்பாட்டை இழந்த விமானம் சுவரில் மோதி தீப்பிடித்ததில் 7 பேர் பலியானது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நேற்றுடன் முடிவடைந்தது.
    • மக்களவை சபாநாயகர் ஓம்பிர்லா நேற்று தேநீர் விருந்தளித்தார்.

    புதுடெல்லி:

    பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் டிசம்பர் 1-ம் தேதி தொடங்கி நேற்றுடன் நிறைவு பெற்றது. இந்தக் கூட்டத்தொடரில் தேர்தல் சீர்திருத்தம் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டது.

    காப்பீடு துறையில் அந்நிய முதலீடு அதிகரிப்பு, அணுசக்தி துறையில் தனியாரை அனுமதிக்கும் மசோதா, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி சட்டத்திற்கு மாற்றாக கொண்டு வரப்பட்ட 'விபி ஜி ராம் ஜி' மசோதா உள்ளிட்டவை விவாதத்துக்கு பிறகு நிறைவேற்றப்பட்டன.

    கூட்டம் தொடங்கிய போது எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன. அதன்பின், விவாதங்களில் அக்கட்சிகள் பங்கேற்றன.

    இதற்கிடையே, ஒவ்வொரு பாராளுமன்ற கூட்டத்தொடர் நிறைவுபெறும் போது, மக்களவை சபாநாயகர் ஓம்பிர்லா எம்.பி.க்களுக்கு தேநீர் விருந்தளிப்பது வழக்கம்.

    இந்நிலையில், நேற்றும் சபாநாயகர் ஓம்பிர்லா தேநீர் விருந்து அளித்தார். இந்த முறை எதிர்க்கட்சி எம்.பி.க்களும் இந்த விருந்தில் பங்கேற்றனர்.

    பிரதமர் நரேந்திர மோடி, மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் அருகே காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா அமர்ந்திருந்தார்.

    அப்போது, எத்தியோப்பியா, ஜோர்டான் மற்றும் ஓமன் பயணம் குறித்து மோடியிடம் பிரியங்கா கேட்டார்.அதற்கு மோடி, பயணம் சிறப்பாக அமைந்ததாக தெரிவித்தார்.

    சமாஜ்வாதி கட்சியின் தர்மேந்திர யாதவ், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சுப்ரியா சுலே, கம்யூனிஸ்ட் கட்சியின் டி.ராஜா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    • முதலில் ஆடிய இந்தியா 20 ஓவரில் 231 ரன்கள் குவித்தது.
    • திலக் வர்மா, ஹர்திக் பாண்ட்யா ஆகியோர் அரை சதமடித்தனர்.

    அகமதாபாத்:

    இந்தியா, தென் ஆப்பிரிக்கா இடையிலான 5-வது மற்றும் கடைசி டி20 போட்டி அகமதாபாத்தில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி முதலில் பேட் செய்த இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 231 ரன்கள் குவித்தது. திலக் வர்மா 73 ரன்னும், ஹர்திக் பாண்ட்யா 63 ரன்னும் அடித்தனர்.

    தென் ஆப்பிரிக்கா தரப்பில் கார்பின் போஷ் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

    அடுத்து ஆடிய தென் ஆப்பிரிக்கா 201 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் இந்தியா 30 ரன் வித்தியாசத்தில் வென்றது.

    இந்நிலையில், இந்தப் போட்டியில் தென் ஆப்பிரிக்க பந்துவீச்சை வெளுத்து வாங்கிய ஹர்திக் பாண்ட்யா வெறும் 16 பந்தில் அரை சதம் விளாசினார்.

    இதன்மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட் வரலாற்றில் குறைந்த பந்துகளில் அரைசதம் விளாசிய 2-வது இந்திய வீரர் என்ற அபிஷேக் சர்மாவின் (17 பந்துகள்) சாதனையை பாண்ட்யா முறியடித்துள்ளார்.

    இந்தப் பட்டியலில் யுவராஜ் சிங் முதலிடத்தில் உள்ளார்.

    யுவராஜ் சிங் - 12 பந்து

    ஹர்திக் பாண்ட்யா - 16 பந்து

    அபிஷேக் சர்மா - 17 பந்து

    • பா.ஜ.க. தேசியத் தலைவராக கடந்த 2020-ம் ஆண்டு ஜே.பி.நட்டா நியமிக்கப்பட்டார்.
    • பாராளுமன்றத் தேர்தலால் அவரது 3 ஆண்டு பதவிக்காலம் முடிந்தும் நீட்டிக்கப்பட்டு வந்தது.

    புதுடெல்லி:

    இந்திய தேர்தல் ஆணையம் சார்பில் வரைவு வாக்காளர் பட்டியல்இன்று வெளியிடப்பட்டது. இதனால் அனைத்து கட்சி அலுவலகங்களும் பிசியாக இருந்தன.

    தனது கட்சி அலுவலகத்துக்குச் சென்ற முனுசாமி, என்னப்பா, நம்ம தொகுதியில எத்தனை வாக்காளர்கள் நீக்கப்பட்டிருக்காங்க என கேட்டார்.

    அதற்கு பதிலளித்த சிவகுரு, சுமார் 25 ஆயிரத்துக்கும் அதிகமானோர் நீக்கப்பட்டு இருக்காங்க என தெரிவித்தார்.

    பரவாயில்லையே, நான் கூட இன்னும் நிறைய இருக்குமோனு நினைச்சேன். இனி வரும் தேர்தலில் வாக்காளர்கள் அனைவரும் கட்டாயம் வாக்கு செலுத்த வேண்டும். அப்படி செய்தால் தான் ஒரு நல்ல தலைவரை தேர்வு செய்ய முடியும். அதனால நமக்கும் நல்ல ஆட்சி கிடைக்கும் இல்லையா என கேள்வி எழுப்பினார் முனுசாமி.

    ஆமாம்பா, ரொம்ப கரெக்டா சொன்னே, தேர்தல் ஆணையம் எதை செய்தாலும் நாம் அதை எப்படி பயன்படுத்துகிறோம் என்பதில் தான் அதன் பயனே இருக்கு என்றார் சிவகுரு.

    ஆமா, சமீபத்தில பாரதிய ஜனதா கட்சிக்கு ஒரு தலைவரை தேர்வு செய்தார்களாமே, யாரு அவரு? என கேட்டார் முனுசாமி.

    அவர் நிதின் நபின். பீகாரைச் சேர்ந்தவர் என பதிலளித்த சிவகுரு, நிதின் நபின் பாஜக தேசிய தலைவராக செய்யப்பட்டதன் சாராம்சத்தை விவரித்தார். அது பின்வருமாறு:

    பாரதிய ஜனதா கட்சியின் தேசியத் தலைவராக கடந்த 2020-ம் ஆண்டு ஜே.பி.நட்டா நியமனம் செய்யப்பட்டார்.

    அவரது 3 ஆண்டு பதவிக்காலம் ஏற்கனவே முடிந்துவிட்டது. எனினும், பாராளுமன்றத் தேர்தல் உள்ளிட்ட காரணங்களால் அவரது பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டு வந்தது.

    இதற்கிடையே, பா.ஜ.க.வுக்கு புதிய தேசியத் தலைவரை நியமனம் செய்ய அக்கட்சியில் தொடர்ந்து ஆலோசனை நடந்தன.

    இதுகுறித்து கட்சி நிர்வாகிகளுடன் பிரதமர் மோடி மற்றும் மந்திரிகள் அமித் ஷா, ஜே.பி. நட்டா ஆகியோர் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வந்தனர்.

    இந்நிலையில், பீகார் மாநிலத்தைச் சேர்ந்த நிதின் நபின் பா.ஜ.க.வின் தேசிய செயல் தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து, அவர் பா.ஜ.க. தேசியத் தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டார்.


    நிதின் நபின் பீகார் மாநில அரசின் சாலைப் போக்குவரத்துத்துறை மந்திரியாகவும், சத்தீஸ்கர் மாநிலத்தில் பா.ஜ.க. பொறுப்பாளராகவும் உள்ளார்.

    பாட்னாவில் பிறந்த நிதின் நபின், பா.ஜ.க.வின் முதுபெரும் தலைவரும் முன்னாள் எம்.எல்.ஏவுமான நபின் கிஷோர் பிரசாத் ஷின்காவின் மகன்.

    பங்கிபூர் சட்டசபைத் தொகுதியில் போட்டியிட்டு பீகாரில் முதல் முறையாக எம்.எல்.ஏ ஆன இவர், அதன்பின் 2010, 2015, 2020 மற்றும் 2025 ஆகிய சட்டசபைத் தேர்தல்களில் தொடர்ந்து வெற்றி பெற்று 5 முறை எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

    அண்மையில் நடந்து முடிந்த பீகார் சட்டசபைத் தேர்தலில், பா.ஜ.க. கூட்டணி ஆட்சியை தக்கவைக்க நிதின் நபின் முக்கிய பங்காற்றினார்.

    இவர் பா.ஜ.க.வின் தேசிய செயற்குழு உறுப்பினர், தேசிய பொதுசெயலாளர் உள்ளிட்ட பல்வேறு முக்கிய பொறுப்புகளை வகித்துள்ளார்.

    தேசிய செயல் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள நிதின் நபினுக்கு பிரதமர் மோடி, அமித் ஷா உள்ளிட்ட பா.ஜ.க. தலைவர்கள் வாழ்த்தி வருகின்றனர் என தெரிவித்தார்.


    பரவாயில்லையே, அந்தக் கட்சி மேல எவ்வளவோ சர்ச்சைகள் இருந்தாலும் ஒரு தலைவரை தேர்வு செய்யும்போது பிரபலம் இல்லாத ஆளையே நியமனம் செய்வது வரவேற்கத்தக்கது எனக்கூறியபடி வாக்காளர் பட்டியலில் தனது பெயர் இருக்கிறதா என்பதை உறுதி செய்துகொண்டார் முனுசாமி.

    • டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
    • முதலில் பேட் செய்த இந்திய அணி 20 ஓவரில் 231 ரன்கள் குவித்தது.

    அகமதாபாத்,

    இந்தியா, தென் ஆப்பிரிக்கா இடையிலான 5 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரின் 5-வது மற்றும் கடைசி போட்டி அகமதாபாத்தில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட் செய்த இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 231 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக திலக் வர்மா 42 பந்தில் 73 ரன்களும், ஹர்திக் பாண்ட்யா 25 பந்தில் 63 ரன்களும் அடித்தனர். சஞ்சு சாம்சன் 37 ரன்னும், அபிஷேக் சர்மா 34 ரன்னும் எடுத்தனர்.


    தென் ஆப்பிரிக்கா சார்பில் கார்பின் போஷ் 2 விக்கெட் வீழ்த்தினார்.

    இதையடுத்து, 232 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை நோக்கி தென் ஆப்பிரிக்கா அணி களமிறங்கியது. டி காக் அதிரடியாக ஆடினார். 35 பந்தில் 68 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். டெவால்டு பிரேவிஸ் 17 பந்தில் 31 ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் நிலைத்து நிற்கவில்லை.

    இறுதியில், தென் ஆப்பிரிக்க அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 201 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 30 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்தியா டி20 தொடரை 3-1 என கைப்பற்றி அசத்தியது.

    இந்தியா சார்பில் வருண் சக்கரவர்த்தி 4 விக்கெட்டும், பும்ரா 2 விக்கெட்டும், பாண்ட்யா, அர்ஷ்தீப் சிங் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

    • வக்பு சொத்துக்களைப் பதிவு செய்யும் நடைமுறைகளை முறைப்படுத்துகிறது.
    • ஐஐஎம் நிறுவனங்களின் நிர்வாகப் பொறுப்புகளில் மத்திய அரசின் பங்களிப்பை முறைப்படுத்துகிறது.

    2025-ம் ஆண்டில் இந்திய பாராளுமன்றத்தில் (மக்களவை மற்றும் மாநிலங்களவை) பல முக்கியமான மசோதாக்கள் அறிமுகப்படுத்தப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளன.

    குறிப்பாகப் பொருளாதாரச் சீர்திருத்தங்கள், நிர்வாக மேலாண்மை மற்றும் சமூக நலன் சார்ந்த சட்டங்கள் இதில் முக்கிய இடம் பிடித்துள்ளன. 

    2025-ல் நிறைவேற்றப்பட்ட சில முக்கிய மசோதாக்களின் பட்டியல் இதோ:

    காப்பீட்டுச் சட்டங்கள் (திருத்தம்) மசோதா, 2025 (Sabka Bima Sabki Raksha Bill)

    இந்த மசோதா 2025-ன் மிக முக்கியமான பொருளாதாரச் சீர்திருத்தமாகக் கருதப்படுகிறது. காப்பீட்டுத் துறையில் அந்நிய நேரடி முதலீட்டை (FDI) 74%-லிருந்து 100% ஆக உயர்த்த இந்த மசோதா வழிவகை செய்கிறது.

    2047-க்குள் அனைவருக்கும் காப்பீடு என்ற இலக்கை அடைவதும், காப்பீட்டுத் துறையில் அதிக முதலீடுகளை ஈர்ப்பதும் இதன் நோக்கமாகும்.

    வக்பு (திருத்தம்) மசோதா 2025:

    நீண்ட விவாதங்களுக்குப் பிறகு நிறைவேற்றப்பட்ட இந்த மசோதா, வக்பு வாரியங்களின் நிர்வாகத்தில் மாற்றங்களைக் கொண்டு வருகிறது.

    வக்ப் வாரியங்களில் முஸ்லிம் அல்லாத உறுப்பினர்கள் மற்றும் பெண்கள் இடம்பெறுவதை இது உறுதி செய்கிறது. மேலும், வக்ஃபு சொத்துக்களைப் பதிவு செய்யும் நடைமுறைகளை முறைப்படுத்துகிறது.

    ஆன்லைன் கேமிங் (முறைப்படுத்துதல்) மசோதா, 2025:

    வளர்ந்து வரும் ஆன்லைன் விளையாட்டுத் துறையை முறைப்படுத்தவும், சூதாட்டம் போன்ற சட்டவிரோதச் செயல்களைத் தடுக்கவும் இந்த மசோதா கொண்டு வரப்பட்டது.

    ஆன்லைன் கேமிங் நிறுவனங்களுக்குக் கடுமையான விதிகள் மற்றும் வயதுக் கட்டுப்பாடுகளை இது விதிக்கிறது.

    தேசிய விளையாட்டு நிர்வாக மசோதா, 2025:

    இந்தியாவில் உள்ள விளையாட்டு அமைப்புகளின் நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மையைக் கொண்டு வருவது.

    விளையாட்டு வீரர்களின் நலனைப் பாதுகாத்தல் மற்றும் ஊக்கமருந்து சோதனைகளை (Anti-Doping) சர்வதேசத் தரத்திற்கு ஏற்பக் கொண்டு வருதல்.

    நிதி மசோதா மற்றும் வரி விதிப்புச் சட்டங்கள் (திருத்தம்), 2025:

    சுகாதாரப் பாதுகாப்பு வரி, புகையிலை மற்றும் குட்கா பொருட்கள் மீது புதிய வரியை விதிக்க இந்த மசோதா வழி செய்கிறது. இந்த நிதி தேசியப் பாதுகாப்பு மற்றும் பொதுச் சுகாதாரத்திற்காகப் பயன்படுத்தப்படும்.

    வருமான வரி (திருத்தம்):

    வருமான வரி நடைமுறைகளை எளிமையாக்குவதற்கும், டிஜிட்டல் பரிவர்த்தனைகளை ஊக்குவிப்பதற்கும் திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன.

    இந்திய மேலாண்மை நிறுவனங்கள் (IIM) திருத்த மசோதா: ஐஐஎம் நிறுவனங்களின் நிர்வாகப் பொறுப்புகளில் மத்திய அரசின் பங்களிப்பை முறைப்படுத்துகிறது.

    குடிவரவு மற்றும் வெளிநாட்டினர் மசோதா, 2025:

    இந்தியாவில் தங்கும் வெளிநாட்டினரின் பதிவு மற்றும் விசா நடைமுறைகளைப் புதுப்பிக்கிறது.

    2025-ம் ஆண்டின் குளிர்காலக் கூட்டத்தொடர் (டிசம்பர் 1 முதல் டிசம்பர் 19 வரை) மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்றது. இந்தக் கூட்டத்தொடரில் அணுசக்தி, வேலைவாய்ப்பு மற்றும் வரி விதிப்பு எனப் பல்வேறு துறைகளில் நீண்டகால மாற்றங்களை ஏற்படுத்தும் முக்கிய மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

    குளிர்காலக் கூட்டத்தொடரில் நிறைவேற்றப்பட்ட கூடுதல் முக்கிய மசோதாக்கள் இதோ:

    ஷாந்தி (SHANTI) மசோதா, 2025

    (Sustainable Harnessing and Advancement of Nuclear Energy for Transforming India Bill) இந்த மசோதா இந்தியாவின் எரிசக்தி கொள்கையில் ஒரு மிகப்பெரிய மாற்றமாகும்.

    இந்தியாவின் சிவில் அணுசக்தி துறையில் தனியார் நிறுவனங்கள் முதலீடு செய்யவும், அணுமின் நிலையங்களை அமைத்து இயக்கவும் முதல்முறையாக அனுமதி அளிக்கிறது.

    இது இந்தியாவின் தூய்மையான எரிசக்தி (Clean Energy) தேவையைப் பூர்த்தி செய்யவும், நிலக்கரி மீதான சார்பைக் குறைக்கவும் உதவும்.

    விக்சித் பாரத் கிராம வேலைவாய்ப்பு மசோதா (VB G-RAM-G Bill)

    மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்திற்கு (MGNREGA) மாற்றாக அல்லது அதன் மேம்படுத்தப்பட்ட வடிவமாக இது கொண்டு வரப்பட்டுள்ளது.

    கிராமப்புற வேலைவாய்ப்பை உறுதி செய்வதோடு, அந்த வேலைகள் மூலம் நிரந்தரமான கிராமப்புறச் சொத்துக்களை உருவாக்குவதை இது வலியுறுத்துகிறது.

    100 நாள் வேலைத் திட்டத்தின் அடிப்படைத் தன்மை மாறுவதாகக் கூறி எதிர்க்கட்சிகள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தன.

    அரசியலமைப்புச் சட்டத் திருத்தம் (130-வது) மசோதா, 2025

    நிர்வாகத் தூய்மையைக் கருத்தில் கொண்டு இந்த மசோதா அறிமுகப்படுத்தப்பட்டது. பிரதமர், முதலமைச்சர்கள் அல்லது அமைச்சர்கள் குற்ற வழக்குகளில் சிக்கி 30 நாட்களுக்கு மேல் சிறையில் இருந்தால், அவர்கள் தானாகவே பதவியை இழக்க நேரிடும்.

    பிரதமரை நீக்கும் அதிகாரம் குடியரசுத் தலைவருக்கும், முதலமைச்சர்களை நீக்கும் அதிகாரம் ஆளுநர்களுக்கும் வழங்கப்படுகிறது.

    பங்குச் சந்தை குறியீடு (SMC) மசோதா, 2025

    செபி (SEBI) சட்டம், டெபாசிட்டரிகள் சட்டம் மற்றும் பரிவர்த்தனை ஒப்பந்தச் சட்டம் ஆகிய மூன்றையும் ஒருங்கிணைத்து ஒரே சட்டமாக (Unified Code) மாற்றுகிறது.

    இது முதலீட்டாளர்களுக்குப் பாதுகாப்பையும், நிறுவனங்களுக்குத் தொழில் செய்வதை எளிதாக்கவும் உதவும்.

    தேசிய நெடுஞ்சாலைகள் (திருத்தம்) மசோதா, 2025

    நெடுஞ்சாலைத் திட்டங்களுக்காக நிலம் கையகப்படுத்தும் நடைமுறைகளை விரைவுபடுத்தவும், இழப்பீட்டுத் தொகையை டிஜிட்டல் முறையில் நேரடியாக விவசாயிகளின் கணக்கில் செலுத்தவும் இது வழிவகை செய்கிறது.

    • முதலில் பேட் செய்த இலங்கை அணி 20 ஓவரில் 138 ரன்களை எடுத்தது.
    • அடுத்து ஆடிய இந்திய அணி 139 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

    துபாய்:

    12-வது ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி துபாயில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகள் இரு பிரிவாகப் பிரிக்கப்பட்டு மோதுகின்றன.

    லீக் சுற்று முடிவில் இந்தியா, இலங்கை, வங்கதேசம், பாகிஸ்தான் ஆகிய அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின.

    இந்நிலையில், முதல் அரையிறுதியில் இந்தியா, இலங்கை அணிகள் மோதின. டாஸ் வென்ற இந்தியா பவுலிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட் செய்த இலங்கை அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 138 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக சமிகா 42 ரன்கள் எடுத்தார்.

    தொடர்ந்து ஆடிய இந்திய அணி 18 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 139 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

    மற்றொரு அரையிறுதியில் வங்கதேசத்தை பாகிஸ்தான் வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

    நாளை மறுதினம் நடைபெறும் இறுதிப் போட்டியில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.

    • உயிரிழந்தவர்கள், இடம்பெயர்ந்தவர்கள், இரட்டை பதிவுகள் என்ற பிரிவுகளின் அடிப்படையில் வாக்காளர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
    • முகவரி இல்லாதவர்கள் எண்ணிக்கை 66,44,881 என்பது தான் நெருடுகிறது.

    தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, கடந்த நவம்பர் 4ஆம் தேதி தொடங்கப்பட்ட வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் டிசம்பர் 14ஆம் தேதியுடன் நிறைவடைந்த நிலையில், அதன் தொடர்ச்சியாக இன்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதன்படி தமிழ்நாட்டில் மொத்தம் 97.37 லட்சம் வாக்காளர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். 

    உயிரிழந்தவர்கள், இடம்பெயர்ந்தவர்கள், இரட்டை பதிவுகள் என்ற பிரிவுகளின் அடிப்படையில் வாக்காளர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் இதுதொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம், 

    தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டவர்களில் இறந்தவர்கள் எண்ணிக்கை 26,94,672 மற்றும் இரட்டைப் பதிவுள்ளவர்கள் எண்ணிக்கை 3,39,278 என்பதை ஏற்றுக் கொள்ளலாம். முகவரி இல்லாதவர்கள் எண்ணிக்கை 66,44,881 என்பது தான் நெருடுகிறது. எல்லா அரசியல் கட்சிகளின் தோழர்களும் இந்த எண்ணில் கவனம் செலுத்தவேண்டும்.

    இவ்வளவு நபர்கள் முகவரி இல்லாமல் இருந்திருக்கிறார்கள் அல்லது இருக்கிறார்கள் என்பது வியப்பாக இருக்கிறது. மெய்யான நபர் வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்படக்கூடாது என்பது தான் நம்முடைய நோக்கம்". எனக் குறிப்பிட்டுள்ளார். 

    ×