தோப்பு வெங்கடாசலம் மனுவை நிராகரித்தது ஐகோர்ட்

பெருந்துறை தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட தோப்பு வெங்கடாசலம், ஜெயக்குமாரின் வெற்றியை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் தேர்தல் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.
சென்னை ஐகோர்ட்
சென்னை ஐகோர்ட்
Published on
Summary

பெருந்துறை தொகுதி அதிமுக எம்எல்ஏ-வாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜெயக்குமாரின் வெற்றியை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட தேர்தல் வழக்கை நிராகரித்து சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டது.

கடந்த சட்டமன்றத் தேர்தலில் பெருந்துறை தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட ஜெயக்குமார், 9 ஆயிரத்து 693 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். அதன்பின்னர், தவெக அரசுக்கு ஆதரவாக வாக்களித்த ஜெயக்குமார், எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு, தவெகவில் இணைந்தார்.

இதனிடையே,தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட தோப்பு வெங்கடாசலம், ஜெயக்குமாரின் வெற்றியை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் தேர்தல் வழக்கு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை நிராகரிக்கக் கோரி ஜெயக்குமார் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி டி.பரதசக்கரவர்த்தி, தோப்பு வெங்கடாசலம் தாக்கல் செய்த தேர்தல் வழக்கில் சட்டப்படி அனுமதிக்கப்பட்ட எந்த காரணங்களும் இல்லை எனக்கூறி, ஜெயக்குமாரின் மனுவை ஏற்று, தோப்பு வெங்கடாசலத்தின் தேர்தல் வழக்கை நிராகரித்து உத்தரவிட்டுள்ளார்.

பெருந்துறை தொகுதி எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்திருந்த நிலையில், தேர்தல் வழக்கு நிலுவையில் உள்ளதால், தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கக்கூடாது என தொடரப்பட்ட வழக்கில் இடைத்தேர்தல் அறிவிக்க ஐகோர்ட் தலைமை நீதிபதி அமர்வு இடைக்காலத் தடை விதித்திருந்தது என்பதும், தோப்பு வெங்கடாசலம் திமுகவில் இருந்து சமீபத்தில் விலகி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com