அமெரிக்காவின் அலாஸ்கா அருகே உள்ள பெரிங் கடலில் படகு கவிழ்ந்த நிலையில், 15 வயது சிறுவன் சுமார் 2 நாட்களாக கடும் குளிரில் போராடி உயிர் தப்பிய சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
செயின்ட் லாரன்ஸ் தீவில் உள்ள சவோங்கா கிராமத்தை சேர்ந்த 15 வயது சிறுவன் டெரெக் பார்க்கர் அக்னாங்கா தனது உறவினர்களுடன் மீன்பிடிக்கச் சென்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக அவர்கள் சென்ற படகு கடலில் கவிழ்ந்தது.
இதையடுத்து சிறுவன், கவிழ்ந்த படகை இறுக்கமாகப் பற்றிக்கொண்டு கடலில் தத்தளித்துள்ளார். கடல் நீரின் வெப்பநிலை சுமார் 10 டிகிரி செல்சியஸ் மட்டுமே இருந்த நிலையில், இரவு பகலாக அவர் உயிருக்கு போராடியுள்ளார்.
இதற்கிடையே அவருடன் சென்றிருந்த இரு உறவினர்களும் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒருவர் கடலில் மூழ்கிய நிலையில், மற்றொருவரின் உடலும் பின்னர் மீட்கப்பட்டது.
3 பேர் காணாமல் போனதாக உள்ளூர் பகுதி மக்களால் தகவல் தெரிவிக்கப்பட்டதும், அமெரிக்க கடலோரக் காவல்படையினர் தீவிர தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டனர். விமானம் உள்ளிட்டவற்றின் உதவியுடன் தேடுதல் நடத்தியுள்ளனர்.
சுமார் 2 நாட்களுக்குப் பிறகு, செயின்ட் லாரன்ஸ் தீவில் அருகே சென்ற மீன்பிடிப் படகினர் சிறுவனை கண்டுபிடித்தனர். உடனடியாக அவரை மீட்டு கரைக்கு அழைத்துச் சென்றனர்.
கடும் குளிரையும், கடல் சீற்றத்தையும் பொருட்படுத்தாமல் கவிழ்ந்த படகை பற்றிக்கொண்டு 2 நாட்கள் உயிருடன் இருந்த 15 வயது சிறுவனின் போராட்டம் பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
செயின் லாரன்ஸ் தீவு , அலாஸ்காவின் கடற்கரைக்கு அருகில் பெரிங் கடலில் அமைந்துள்ளது . இங்கு சுமார் 800 பேர் வசித்து வருகின்றனர், இவர்களுக்கு மீன்பிடித்தல் உள்ளூர் சமூகத்தின் வாழ்வில் ஒரு முக்கிய அங்கமாகத் இருந்து வருகிறது.