search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இளநீர்"

    • கடந்த சில வாரங்களாக கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது.
    • தென்னை விவசாயிகள் குறைந்த விலைக்கு இளநீரை விற்க வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது.

    பொள்ளாச்சி:

    பொள்ளாச்சி, ஆனைமலை தாலுகா பகுதிகளில் அதிகளவில் தென்னை விவசாயம் நடந்து வருகிறது. இங்கு விளையும் தேங்காய், இளநீர் உள்ளிட்ட பொருட்கள் தமிழகத்தில் உள்ள அனைத்து பகுதிகளுக்கும் கொண்டு செல்லப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அண்டை மாநிலமான கேரளாவுக்கு கொண்டு செல்லப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தற்போது கோடை வெயில் காரணமாக பொள்ளாச்சி, ஆனைமலை தாலுகாக்களில் ஒரு டன் இளநீரின் பண்ணை விலை ரூ.15 ஆயிரத்து 500 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஆனைமலை இளநீர் உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் கூறியதாவது:-

    கடந்த சில வாரங்களாக கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. இதனால் பொதுமக்கள் இளநீரை விரும்பி பருகி வருகிறார்கள். இந்த வாரம் நல்ல, தரமான குட்டை, நெட்டை வீரிய ஓட்டுரக மரங்களின் இளநீர்விலை, கடந்த வார விலையை விட ஒரு ரூபாய் உயர்த்தப்பட்டு ரூ.39 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஒருடன் இளநீரின் விலை ரூ.15 ஆயிரத்து 500 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இளநீர்வரத்து மிக மிக குறைவாக இருப்பதால் பண்ணைகளில் இளநீர் வாங்குவதில் வியாபாரிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது. இதனால் கூடுதல் விலை கொடுத்து வியாபாரிகள் வாங்கி செல்கிறார்கள். கடுமையான இளநீர் தட்டுப்பாடு காரணமாக வரும் வாரத்தில் இளநீரின் விலை மேலும் உயர வாய்ப்புள்ளது. எனவே தென்னை விவசாயிகள் குறைந்த விலைக்கு இளநீரை விற்க வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    • சென்னை மாநகருக்கு கடலூர், தேனி, பொள்ளாச்சி, புதுச்சேரி ஆகிய இடங்களில் இருந்து லாரிகளில் இளநீர் விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது.
    • வியாபாரிகளுக்கு தினமும் 500 இளநீர் விற்பனைக்காக கொடுக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது விளைச்சல் குறைந்து வரத்தும் வெகுவாக குறைந்துள்ளது.

    சென்னை:

    தமிழகத்தில் கோடை வெயில் சுட்டெரித்துக் கொண்டிருக்கிறது. வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க பொதுமக்கள் குளிர்பானங்கள், இளநீர் உள்ளிட்டவற்றை அதிக அளவில் வாங்கி குடித்து வருகிறார்கள்.

    இந்த நிலையில் சென்னையில் இளநீர் விலை ரூ.90 ஆக உயர்ந்துள்ளது. ரூ.60-க்கு விற்பனையான பெரிய இளநீர் மற்றும் செவ்விளநீர் ஆகியவற்றின் விலையே அதிரடியாக உயர்ந்துள்ளது. கடந்த வாரம் இவற்றின் விலை ரூ.60-ல் இருந்து 70 ஆகவே இருந்தது. தற்போது ரூ.80 -ல் இருந்து 90 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

    சென்னையில் இடங்களுக்கு தகுந்தாற்போல விலை நிர்ணயம் செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுவதாகவும் கூறப்படுகிறது.

    சென்னை மாநகருக்கு கடலூர், தேனி, பொள்ளாச்சி, புதுச்சேரி ஆகிய இடங்களில் இருந்து லாரிகளில் இளநீர் விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது.

    வியாபாரிகளுக்கு தினமும் 500 இளநீர் விற்பனைக்காக கொடுக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது விளைச்சல் குறைந்து வரத்தும் வெகுவாக குறைந்துள்ளது. இதனால் ரோட்டோர இளநீர் வியாபாரிகளுக்கு வாரத்துக்கு 200 இளநீர் கிடைப்பதே அரிதாக மாறியுள்ளது. அதே நேரத்தில் இளநீர் தேவை அதிகரித்துள்ளது.

    இது போன்ற காரணங்களே விலை உயர்வுக்கு காரணம் என்று இளநீர் வியாபாரிகள் தெரிவித்து உள்ளனர்.

    சிறிய ரக இளநீர் ரூ.45-க்கு விற்பனை செய்யப்படுவதாகவும் இதன் விலை முன்பு ரூ.35 ஆக இருந்ததாகவும் வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

    இளநீரின் திடீர் விலை உயர்வால் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் அதனை வாங்கி குடிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

    • வைட்டமின் சி நம்முடைய உடலுக்குத் தேவையான அடிப்படையான ஊட்டச்சத்து.
    • பிளாக் காபி குடிப்பது நம்முடைய உடலின் மெட்டபாலிசத்தை அதிகரிக்க செய்யும்.

    நாம் உண்ணும் உணவு, நம்முடைய உடலில் உள்ள செல்லில் ஆற்றலாக மாற்றப்படும் செயல்பாடுகளை மெட்டபாலிசம் (வளர்சிதை மாற்றம்) என்று அழைக்கின்றோம்.

    மெட்டபாலிசம் உடலில் சீராக இருந்தால் உடல் எடையை குறைக்க உதவி செய்யும் என்பது நிறைய பேருக்கு தெரிவதில்லை. உடலில் மெட்டபாலிசம் அதிகரிப்பது என்றால் ஜீரண மண்டலமும் சீராக செயல்படுகிறது என்று அர்த்தம். அதனால் மெட்டபாலிசத்தை அதிகரிக்கும் உணவுகளை எடுத்துக் கொள்ளும்போது அது எடையை குறைக்கவும் உதவியாக இருக்கும். அப்படி உடலின் மெட்டபாலிசத்தை சீராக வைத்திருக்க உதவி செய்யும் பானங்கள் பற்றி பார்க்கலாம்.

    நாம் உண்ணும் உணவுகளில் உள்ள ஊட்டச்சத்துக்களை உடலுக்கு தேவையான ஆற்றலாக மாற்றுகின்ற ரசாயன மாற்றத்தை தான் மெட்டபாலிசம் என்கிறோம். இந்த செயல்பாட்டின் மூலம் உடல் கலோரிகளை எரிக்கும் வேலையை செய்யும். இதற்கு நீர்ச்சத்து அதிகமுள்ள உணவுகளும் சில ஆரோக்கியமான பானங்களும் உதவுகின்றன. அதனால் அதிகப்படியான கலோரிகள் எரிக்கப்பட்டு உடல் எடையையும் சீராக வைத்திருக்கச் செய்யும்.

    கிரீன் டீயில் மெட்டபாலிசத்தை அதிகரிக்கும் தன்மை அதிகம். இதிலுள்ள கேட்டசின் என்னும் சக்திவாய்ந்த ஆன்டி ஆக்சிடண்ட்டுகள் உடல் வெப்பத்தை அதிகரிக்கச் செய்து கலோரிகளை எரிக்க உதவி செய்கிறது. அதனால் தினமும் க்ரீன் டீ அடிக்கடி குடிக்கும் பழக்கம் இருந்தால் உங்களுக்கு எடை குறைதல் மிக வேகமாக நடக்கும்

    காபி யாருக்குதான் பிடிக்காது. காலையில் எழுந்ததும் நாம் குடிக்கும் முதல் பானமே அதுதான். ஆனால் காபியில் பால் சேர்த்து குடிக்காமல் பிளாக் காபியாக (சர்க்கரையும் சேர்க்காமல்) குடிப்பது நம்முடைய உடலின் மெட்டபாலிசத்தை அதிகரிக்க செய்யும்.

    மெட்டபாலிசத்தையும் அதிகரிப்பதோடு உடலுக்கு தேவையான எனர்ஜியையும் கொடுக்கிறது. அதனால் பிளாக் காபியில் சிறிது இலவங்கப்பட்டை பொடி அல்லது தேங்காய் எண்ணெய் சேர்த்து குடித்து வர மெட்டபாலிசமும் அதிகரிக்கும். உடல் எடையும் குறையும்.

    நம்முடைய உணவுகளில் ஃபிளேவர்களை அதிகரிக்க நாம் பட்டை, சோம்பு கிராம்பு, ஏலக்காய் போன்ற மசாலா பொருள்களை பயன்படுத்துகிறோம். ஆனால் அந்த மசாலாக்கள் நம்முடைய உடலின் வெப்பநிலையில் மாற்றத்தை ஏற்படுத்தி உடலில் உள்ள அதிகப்படியான கலோரிகளை எரிக்கவும் உதவி செய்கிறது.

    இந்த மசாலாக்கள் பசியை கட்டுப்படுத்தி கலோரிகளின் அளவை குறைப்பதோடு மெட்டபாலிசத்தையும் அதிகரிக்கச் செய்து உடல் எடையை வேகமாக குறைக்க உதவி செய்கிறது.

    உடல் எடையை குறைக்க டயட்டில் இருப்பவர்கள் பலரும் காலையில் எழுந்ததும் வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை சாறு சேர்த்து குடிப்பதை பழக்கமாக வைத்திருப்பார்கள். ஆனால் எலுமிச்சை பழம் மட்டுமின்றி வைட்டமின் சி அதிகமுள்ள எலுமிச்சை, ஆரஞ்சு, கிரேப் ஃப்ரூட் ஆகிய அனைத்துமே உடலுக்கு நல்ல புத்துணர்ச்சியை கொடுக்கக் கூடியவை தான்.

    வைட்டமின் சி நம்முடைய உடலுக்குத் தேவையான அடிப்படையான ஊட்டச்சத்தும் கூட. அதோடு கொழுப்புகளை எரித்து, உடலில் உண்டாகும் ஆக்சிஜனேற்ற அழுத்தத்தையும் குறைக்கச் செய்கிறது. இதனால் தேவையில்லாத கொழுப்புகள் எரிக்கப்பட்டு உடல் எடை குறைகிறது.

    புரதம் நம்முடைய உடலின் இயக்கத்துக்கு தேவையான அவசியமான, அடிப்படையான ஊட்டச்சத்து ஆகும். இந்த புரதச்சத்து தான் தசைகளின் வளர்ச்சியை மேம்படுத்தவும் சாப்பிட்ட திருப்தியையும் திசுக்களில் ஏற்படும் சேதத்தை ரிப்பேர் செய்யவும் உதவி செய்கிறது.

    அதோடு நம்முடைய உணவில் உள்ள மற்ற ஊட்டச்சத்துக்களை உடல் உறிஞ்சிக் கொள்ளவும் ஜீரணத்தை மேம்படுத்துவதற்கான ஆற்றலை கொடுக்கவும் இந்த புரதச்சத்துக்கள் உதவி செய்கின்றன.

    காலையில் முதல் உணவாக புரதங்கள் நிறைந்த ஸ்மூத்தியை எடுத்துக் கொள்ளும்போது வயிறு நிரம்பிய உணர்வும் கிடைக்கும். கலோரிகள் அதிகமாக எடுத்துக் கொள்வதையும் தவிர்க்கலாம். இவை மெட்டபாலிசத்தை தூண்டி உடல் எடை இழப்புக்கும் உதவி செய்யும்.

    குறிப்பாக காலையில் ப்ரோ - பயோடிக் நிறைந்த யோகட், தாவர மூலங்களில் இருந்து தயாரித்த புரோட்டீன் பவுடர் (சோயா, பாதாம், ஓட்ஸ்) ஆகியவற்றுடன் காய்கறிகள் மற்றும் பழங்கள் சேர்த்து சாப்பிடும் பழக்கத்தைப் பின்பற்றலாம்.

    உடலை அதிக நீர்ச்சத்துடன் வைத்துக் கொள்ள இளநீர் மிகச்சிறந்த பானமாக இருக்கும். இளநீரில் உள்ள இயற்கையான எலக்ட்ரோலைட்டுகள் உடலுக்கு புத்துணர்ச்சியை கொடுக்கும்.

    உடலின் செயல்பாடுகளை சீராக வைத்திருக்கவும் ஆரோக்கியமான மெட்டபாலிசத்துக்கும் தேங்காய் தண்ணீர் உதவி செய்யும். அதிலும் உடற்பயிற்சிக்கு பிறகு ஏற்படும் ஆற்றல் இழப்பை சரிசெய்ய இளநீர் உதவி செய்யும். உடலை நீர்ச்சத்துடன் வைத்திருக்கவும் உடலின் மெட்டபாலிசத்தை அதிகரிக்கச் செய்யும் அதன்மூலம் உடல் எடையை குறைக்கவும் இளநீர் உதவும்.

    மூலிகைகள் சேர்க்கப்பட்ட ஹெர்பல் டீ வகைகள் உடலின் மெட்டபாலிசத்தை அதிகரிக்க உதவி செய்யும். குறிப்பாக பல்வேறு மூலிகைகள் சேர்க்கப்பட்ட ஹெர்பல் டீ உடலின் ஜீரண மண்டலத்தின் செயல்பாட்டை மேம்படுத்தவும் உடல் எடையை குறைக்கவும் உதவி செய்யும். அதிலும் கெமோமில் டீ, பெப்பர்மிண்ட் டீ, புதினா டீ ஆகியவை உடலில் உள்ள தேவையற்ற கெட்ட கொழுப்பை எரித்து உடலின் மெட்டபாலிசத்தை அதிகரிக்க செய்யும். எடையும் குறையும்.

    வெறும் தண்ணீர் மட்டும் குடிப்பதன் மூலம் உடலில் நீர்ச்சத்து உண்டாகும். அதோடு புதினா, வெள்ளரிக்காய், எலுமிச்சை துண்டுகள், இஞ்சி என மூலிகைகளை தண்ணீருக்குள் போட்டு வைத்துக் குடிப்பதன் மூலம் நீர்ச்சத்தோடு சேர்த்து அந்த பொருள்களில் உள்ள மினரல்களும் சேர்த்து நமக்குக் கிடைக்கும்.

    நீர்ச்சத்து குறைபாடு உடலில் ஏற்பட்டால் மெட்டபாலிசத்தின் வேகமும் குறையும். அதனால் எடை குறைவது சிரமமாகி விடும். அதனால் நீர்ச்சத்தை அதிகரிக்கச் செய்து உடலின் மெட்டபாலிசத்தை அதிகரிக்கவும் எடையை வேகமாக குறைக்கவும் இந்த தண்ணீர் உதவி செய்யும்.

    • இது இயற்கையாக கிடைக்கக்கூடிய பானம்.
    • ஒரு டம்ளர் இளநீரில் வெறும் 10 கிராம் சர்க்கரை தான் இருக்கிறது.

    நீரிழிவு நோய் பாதிப்புள்ளவர்கள் இளநீர் குடிக்கலாமா? இதனால் பாதிப்பு ஏற்படுமா? என்ற சந்தேகம் ஏற்படும். இதோ மருத்துவர் என்ன சொல்கிறார்கள் என இங்கு அறிந்துக் கொள்வோம்.

    இளநீரில் சர்க்கரை, கார்போஹைட்ரேட் மற்றும் குறைவான அளவு கொழுப்புகள், சோடியம், பொட்டாசியம், பாஸ்பரஸ், வைட்டமின் சி உள்ளிட்ட பல்வேறு ஊட்டச்சத்துக்கள் உள்ளது.

    இளநீரை எல்லோரும் 'நேட்சர்ஸ் ஸ்போர்ட்ஸ் பிவரேஜ்' என்று சொல்கிறார்கள். ஏனென்றால் இதில் அதிகமான அளவு சோடியம், பொட்டாசியம், சிங்க், மெக்னீசியம், இரும்புச்சத்து இருக்கிறது. இது இயற்கையாக கிடைக்கக்கூடிய பானம். ஒரு டம்ளர் இளநீர் நமக்கு 45 கலோரிகள் கொடுக்கிறது. பாட்டிலில் அல்லது டின்களில் வரும் குளிர்பானங்களை ஒப்பிட்டு பார்க்கும் போது ஒரு டம்ளர் இளநீரில் வெறும் 10 கிராம் சர்க்கரை தான் இருக்கிறது. ஆனால் பாட்டில் குளிர்பானங்களில் ஒரு டம்ளரில் 30 கிராம் சர்க்கரை இருக்கிறது.

    இதில் நார்ச்சத்து இல்லாதது ஒரு சிறிய குறையாக கருதப்படுகிறது. இளநீரில் உள்ள எல்-ஆர்ஜினின், வைட்டமின்-சி, இன்சுலின் செயல் திறனை அதிகப்படுத்துகிறது. அதனால் ரத்தத்தில் சர்க்கரை அளவு குறைவதாக சில ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது. இளநீரில் உள்ள லாரிக் ஆசிட் நோய் எதிர்ப்பு திறனை அதிகப்படுத்துகிறது. இளநீரை காலையில் குடிப்பது உங்களுக்கு சிறந்த நேரமாக இருக்கும்.

    இளநீரில் நிறைய நன்மைகள் இருப்பதால் நீரிழிவு நோயாளிகள் வாரத்திற்கு மூன்று அல்லது நான்கு முறை, அரை டம்ளர் அல்லது ஒரு டம்ளர் இளநீர் பருகலாம். அதற்கு மேல் குடித்தால் பல்வேறு உடல் நல பாதிப்புகள் ஏற்படும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளவும்.

    கர்ப்ப காலத்தில் ஏற்படும் நீரிழிவு நோய்களுக்கு இளநீர் குடிக்கலாமா? என்ற கேள்வி அனைவருக்கும் எழக்கூடும். மருத்துவ நிபுணர்களின் கூற்றுப்படி, கர்ப்பகால நீரிழிவு நோயாளிகளும் இதை உட்கொள்ளலாம். ஆனாலும் மகப்பேறு மருத்துவரின் பரிந்துரையின் படி, சரியான அளவு இளநீரை நீங்கள் எடுத்துக்கொள்ளுங்கள்.

    நீரிழிவு நோய் நிபுணர் டாக்டர் வி. சத்ய நாராயணன், எம்.டி., சி. டயாப் (ஆஸ்திரேலியா), காஞ்சிபுரம்

    லைஃப்ஸ்டைல் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    • மாம்பழங்களின் விற்பனையும் உயர்வு
    • கிளிமூக்கு-ரூ.80 என்ற விலையில் விற்பனை செய்யப்படுகிறது

    நாகர்கோவில் :

    குமரி மாவட்டத்தில் பிப்ரவரி மாத தொடக்கத்தில் இருந்தே வெயில் சுட்டெரித்து வரு கிறது. அதிலும் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கிறது. இதனால் இயற்கை பானங்களான இளநீர், நுங்கு, தர்ப்பூசணி உள்ளிட்டவற்றை பொதுமக்கள் பெரிதும் வாங்கி சாப்பிடுகிறார்கள். இதன் காரணமாக அவற்றின் விலை உயர்ந்துள்ளது. நாகர்கோவி லில் ஒரு சிகப்பு இளநீர் ரூ.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    மேலும் கோடை காலம் என்பதால் மற்ற பழ வகைகளை மக்கள் பெரிதும் வாங்கி உண்ணு கிறாா்கள். இதனால் கடந்த ஒரு மாதமாகவே பழங்கள் விலை சற்று அதிகமாக உள்ளது. ஆப்பிள் மற்றும் ஆரஞ்சு பழங்களின் சீசன் இல்லாததால் அவற்றின் விலை உயர்ந்தே காணப்படுகிறது.

    அன்னாசி பழம், கொய்யா, திராட்சை உள்ளிட்ட பழங்களின் விலை ரூ.10 வரை அதிகரித்து இருக்கிறது. அந்த வகையில் நாகர்கோவி லில் நேற்று ஒரு கிலோ திராட்சை-ரூ.70, அன்னாசி பழம்-ரூ.60, கொய்யா-ரூ.80, முலாம்பழம்-ரூ.45, ஆப்பிள்-ரூ.200, ஆரஞ்சு-ரூ.140 என்ற அடிப்படையில் வியாபாரம் நடந்து வருகிறது.

    இந்த நிலையில் கோடை காலம் என்பதால் குமரி மாவட்டத்தில் தற்போது தித்திப்பான மாம்பழம் சீசன் களை கட்டியுள்ளது. பொதுவாகவே குமரி மாவட்டத்தில் மாம்பழம் விளைச்சல் அதிகமாக இருக்கும். சப்போட்டா, மாம்பழம் நீலம், கிளிமூக்கு மாம்பழம் ஆகிய மாம்ப ழங்கள் அதிகளவில் விற்ப னைக்காக வருகின்றன.

    அதிலும் குமரி மாவட்டத் தில் விளையும் சுவை மிகுந்த மாம்பழமான செங்கவருக்கை மாம்பழம் சீசன் தொடங்கியுள்ளது. கடைகள், மார்க்கெட்டுகள், சந்தைகள் என அனைத்து இடங்களிலும் செங்க வருக்கை மாம்பழம் விற்ப னைக்காக வந்துள்ளது.

    இந்த மாம்பழம் ஒரு கிலோ ரூ.150-க்கு விற்பனை ஆகிறது. இதே மற்ற மாம்பழங்களான சப்போட்டா-ரூ.70 முதல் ரூ.80 வரை, நீலம்-ரூ.60 முதல் ரூ.70 வரை, கிளிமூக்கு-ரூ.80 என்ற விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

    இதுபற்றி வியாபாரி களிடம் கேட்ட போது, "குமரி மாவட்டத்தில் தற்போது மாம்பழங்கள் சீசன் தொடங்கியதால் வரத்து அதிகரித்து இருக்கிறது. 1½ கிலோ மாம்பழம் ரூ.100 என்ற அடிப்படையில் விற்பனை நடக்கிறது. அதிலும் குமரி மாவட்ட ஸ்பெஷலான செங்கவருக்கை அதிகளவில் வருகிறது. இதனால் அதன் விலை குறைந்துள்ளது. இந்த வகை மாம்பழம் வரத்து குறை வாக இருந்தால் ரூ.200-க்கு விற்பனை ஆகும். தற்போது வரத்து அதிகமாக உள்ள தால் ரூ.150-க்கு விற்பனை ஆகிறது. இன்னும் வரத்து அதிகரித்தால் விலை இன்னும் குறையும்" என்றனர்.

    • சிவப்பு இளநீர் ரூ.35 முதல் ரூ.40-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது
    • ஒரு கிலோ ரூ.10 முதல் ரூ.12 வரை தர்ப்பூசணி விற்பனை செய்யப்பட்டு வருகிறது

    நாகர்கோவில் :

    குமரி மாவட்டத்தில் கோடை வெப்பத்தின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரிக்க தொடங்கி உள்ளது. இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்கு ஆளாகி வருகிறார்கள். காலை யில் இருந்தே மாவட்டம் முழுவதும் சுட்டெ ரிக்கும் வெயில் அடித்து வருவதால் குழந்தைகள் முதல் பெரிய வர்கள் வரை வீட்டிலேயே முடங்கி உள்ளனர்.

    நாகர்கோவில் நகரில் மதியம் நேரங்களில் அடித்து வரும் சுட்ெடரிக்கும் வெயி லின் காரணமாக சாலைகளில் கானல்நீர் தெரியும் அளவிற்கு வெப்பத்தின் தாக்கம் உள்ளது. வெப்பத்தின் தாக்கத்தின் காரணமாக சுற்றுலா தலங்களிலும் கூட்டம் குறைவாகவே காணப் படுகிறது. கன்னியா குமரி, குளச்சல் பீச், சொத்த விளை பீச், வட்டக்கோட்டை பகுதிகளில் வழக்கமாக கோடை நேரங்களில் சுற்றுலா பயணிகள் வருகை அதிக ரிக்கும். ஆனால் தற்பொழுது சுற்றுலா பயணிகள் வருகை குறைவாகவே உள்ளது.

    சுட்டெரிக்கும் வெயிலில் இருந்து தப்பிக்க பொதுமக்கள் குளிர்பானங்களை அருந்த தொடங்கியுள்ளனர். இதனால் குளிர்பானங்களின் விற்பனை சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. இளநீர் விற்பனை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதை யடுத்து குமரி மாவட்டத்தில் இருந்து மட்டும் இன்றி வேறு மாவட்டங்களில் இருந்தும் இளநீர் விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது. ரோட்டோரங்களில் இளநீர் விற்பனைக்காக குவித்து வைக்கப்பட்டுள்ளது.

    சுங்கான் கடை, சுசீந்திரம், நாகர்கோவில் பகுதிகளில் சாலை ஓரங்களில் அதிக அளவு பல்வேறு விதமான இளநீர்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது. இளநீர் விற்பனை சூடுபிடிக்க தொடங்கி உள்ளதையடுத்து தற்போது விலை அதிக ரித்துள்ளது. சிவப்பு இளநீர் ரூ.35 முதல் ரூ.40-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மற்ற இளநீர்கள் ரூ.30 முதல் ரூ.35-க்கும் விற்கப் பட்டு வருகிறது.

    வெப்பத்தின் தாக்கத்திலிருந்து தப்பிக்க குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இளநீர் அருந்த தொடங்கியுள்ளனர். தர்ப்பூசணி விற்ப னையும் அமோகமாக நடந்து வருகிறது.

    கரியமாணிக்கபுரம், கன்னியாகுமரி, மார்த்தாண் டம் பகுதிகளில் தர்பூசணி விற்பனைக்கு அதிக அளவு குவித்து வைக்கப்பட்டுள்ளது. ஒரு கிலோ ரூ.10 முதல் ரூ.12 வரை தர்ப்பூசணி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் நுங்கு விற்பனையும் சூடு பிடித்துள்ளது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வியாபாரிகள் நுங்குகளை வாங்கி வந்து சாலையோரங்களில் தள்ளுவண்டிகள் மூலமாக விற்ப னை செய்து வருகிறார்கள்.

    வெப்பத்திலிருந்து தப்பிக்கும் வகையில் பொதுமக்கள் நீர் நிலைகளுக்கு சென்று உல்லாச குளியலிட்டு வருகிறார்கள். திற்பரப்பு அருவியில் மிதமான அளவு தண்ணீர் கொட்டி வரும் நிலையில் சுற்றுலா பயணிகள் அதிகளவு அங்கு குவிந்துள்ளனர்.

    • தர்பூசணி, இளநீர் விற்பனை மும்முரம் அடைந்துள்ளது.
    • இளநீர் விலையும் உயர்ந்திருப்பதுடன் விற்பனையும் நடக்கிறது.

    அபிராமம்

    தமிழகத்தில் ஏப்ரல், மே மாதங்களில் வெயில் சுட்டெரிப்பது வழக்கம். மே மாத அக்னி நட்சத்திர காலத்தில் வெயிலின் தாக்கம் உச்சத்தில் இருக்கும்.

    ராமநாதபுரம் மாவட்டம் திருவாடனை, ஆர்.எஸ். மங்கலம், பரமக்குடி, கீழக்கரை, மண்டபம், ராமேசுவரம், முதுகுளத்தூர், கடலாடி, சாயல்குடி, கமுதி, அபிராமம், பார்த்திபனூர், நயினார் கோவில் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த ஆண்டை விட தற்போது வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது.

    தாங்க முடியாத வெயில் கொடுமை காரணமாக பொதுமக்கள் சொல்ல முடியாத அவதியடைந்து வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் கோடை காலத்தில் வெயில் வாட்டி வதைத்தாலும் மாலை மற்றும் இரவில் வெப்பத்தின் தாக்கம் குறையாமல் இருப்பதால் மக்கள் திறந்த வெளிகளை தேடி தூங்க செல்கின்றனர்.

    கடும் வெயிலால் சாலை களில் மக்கள் நடமாட்டம் குறைவாக உள்ளது. தற்போது 10-ம் வகுப்பு உள்பட பொது தேர்வும், பிற வகுப்புகளுக்கும் தேர்வு நடைபெறுவதால் பள்ளி மாணவ-மாணவிகள் வெயிலால் அவதியடைந்து வருகிறார்கள். சிறுவர்கள். வயதானவர்கள் வெயிலின் உச்சபட்ச தாக்கத்தை பார்த்து வெளியில் செல்வதை தவிர்த்து வருகின்றனர்.

    பொதுமக்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவ -மாணவிகள், முதியோர்கள் அனைவரும் பகல் நேரங்களில் சாலையில் செல்வதை தவிர்த்து வருகின்றனர்.

    வெயில் கொடுமை காரணமாக உடலில் நீர்சத்து குறைவதால் அதனை ஈடு செய்யும் வகையில் பொதுமக்கள் வெப்பத்தை தணிக்கும் வகையில் குளிர்ச்சியான பானங்களை தேடி செல்கின்றனர். இதன் காரணமாக அபிராமம், முதுகுளத்தூர், கடலாடி, சாயல்குடி, கமுதி பகுதியில் உள்ள சாலையோர தர்பூசணி, இளநீர் கடைகளில் கூட்டம் அலைமோதுகிறது.

    தர்பூசணி மற்றும் இளநீர் விலையும் உயர்ந்திருப்பதுடன் விற்பனையும் மும்முரமாக நடக்கிறது.

    • தேங்காய் விலையும் குறைந்து ரூ 9 முதல் 10 க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
    • இளநீர் ரூ.15 முதல் 17 வரை குறைந்த விலைக்கு இடைத்தரகர்கள் கொள்முதல் செய்து செல்கின்றனர்.

    உடுமலை :

    உடுமலை சுற்று வட்டாரப் பகுதிகளில் தென்னை சாகுபடி பெருமளவில் செய்யப்படுகிறது. இயற்கை தந்துள்ள வரப்பிரசாதமான இளநீர் ஒரு முழுமையான சத்துள்ள நீராகும். இதில் சோடியம்,பொட்டாசியம், கால்சியம், மக்னிசியம், செலினியம், நார்ச்சத்து, இரும்புச்சத்து உள்ளிட்டவை அடங்கி உள்ளது. இளநீர் குடிப்பதால் உடல் சூடு கட்டுப்படுவதுடன், மலச்சிக்கல், சிறுநீர் எரிச்சல், வாய் மற்றும் வயிற்றுப்புண் குணமாவதுடன், முகப்பருக்கள் கட்டுப்பட்டு சரும பாதிப்பும் சீராகும்.மேலும் ரத்தத்தை சுத்திகரித்து ரத்த கொதிப்பை குறைத்து குழந்தைகளின் மூளை வளர்ச்சி அடையவும் உதவுகிறது.இதில் உள்ள லாரிக் அமிலம் முதுமை ஏற்படாமல் தடுக்கிறது.

    இவ்வளவு சத்துக்கள் சிறப்புகள் வாய்ந்த இளநீரை எப்பொழுது வேண்டுமானலும் குடிக்கலாம். ஆனால் காலையில் வெறும் வயிற்றில் குடிப்பது சிறந்தது என ஊட்டச்சத்து நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.விவசாயிகளின் பிரதான தொழிலாக உள்ள தென்னை சாகுபடியில் தற்போதைய சூழலில் பெரியளவில் வருமானம் கிடைப்பதில்லை.தேங்காய் விலையும் குறைந்து ரூ 9 முதல் 10 க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கூடவே இளநீர் ஒன்றை ரூ 15 முதல் 17 வரை இடம் குறைந்த விலைக்கு இடைத்தரகர்கள் கொள்முதல் செய்து செல்கின்றனர். ஆனால் கூடுதல் விலைக்கு விற்பனை செய்து லாபம் ஈட்டிக் கொள்கின்றனர். இதனால் விவசாயிகளுக்கு தொடர்ந்து இழப்பு ஏற்பட்டு வருகிறது.இது குறித்து விவசாயிகள் கூறுகையில், நிலைத்து நின்று வருமானத்தை அளிக்கக்கூடிய தென்னை சாகுபடியை பரம்பரை பரம்பரையாக செய்து வருகின்றோம். தேங்காய் மற்றும் இளநீரை பறித்து விற்பனை செய்வதில் ஏற்பட்டுள்ள கூலி உயர்வு, இடுபொருட்கள் ,பராமரிப்பு செலவு அதிகரிப்பு, விலை குறைவு போன்ற காரணங்களால் பெரும் பின்னடைவை சந்தித்து வருகின்றோம். இந்த சூழலில் உடலுக்கு ஆரோக்கியத்தை அளிக்கக்கூடிய கோடைகால பானமான இளநீரை குறைந்த விலைக்கு இடைத்தரகர்கள் கொள்முதல் செய்து செல்கின்றனர்.ஆனால் சில்லறை மற்றும் மொத்த வியாபாரிகளுக்கும் இரண்டு மடங்கு விலைக்கு விட்டு விற்பனை செய்து விடுகின்றனர். இதனால் வியர்வை சிந்தி உழைப்பை கொட்டி இரவு பகல் பாராமல் பாடுபட்டு பொருளை விளைவித்த எங்களுக்கு லாபம் கிடைப்பதில்லை.

    எனவே அரசு விவசாயிகளிடம் நேரடியாக இளநீரை கொள்முதல் செய்து விற்பனை செய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். லாபத்தை விவசாயியும் அரசும் பங்கிட்டு கொள்ளலாம். இதன் மூலமாக விவசாயியும் பயன் அடைவதுடன் வேலையில்லா தொழிலாளர்களுக்கும் புதிய வேலை வாய்ப்புகள் உருவாகும் என்று தெரிவித்தனர்.

    • சுமார் 60 அடி உயர தென்னை மரத்தில் ஏறி இளநீர் பறித்து கொண்டிருந்தார்.
    • உடலில் கயிற்றை கட்டி கீழே இறக்கி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    நீடாமங்கலம்:

    திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே உள்ள புங்கஞ்சேரி பகுதியைச் சேர்ந்தவர் சின்னையன் (வயது 49) இளநீர் வியாபாரம் செய்து வந்தார்.

    இந்நிலையில் வழக்கம் போல் சின்னையன் சுமார் 60 அடி உயர தென்னை மரத்தில் ஏறி இளநீர் பறித்து கொண்டிருந்தார்.

    அப்போது திடீரென அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டு மர பட்டையில் தொங்கி கொண்டிருந்தார்.

    தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் மரத்தில் ஏறி சின்னையன் உடலில் கயிறை கட்டி கீழே இறக்கி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    ஆனால் செல்லும் வழியிலேயே சின்னையன் இறந்தார்.இது குறித்து வலங்கைமான் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கொங்கு மண்டலத்தில் உள்ள முருகப் பெருமான் குடிகொண்டு அருள்பாலிக்கும் கோவில்களில் முக்கியமான கோவிலாகும்.
    • மூலவர் முன்பு பூப்போட்டு உத்தரவு கேட்டு அதன் பின்னர் அந்தப் பொருள் பெட்டியில் வைப்பர்.

    காங்கயம் :

    திருப்பூர் மாவட்டம் காங்கயம் அடுத்த சிவன்மலை சுப்பிரமணியசாமி திருக்கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. கொங்கு மண்டலத்தில் உள்ள முருகப் பெருமான் குடிகொண்டு அருள்பாலிக்கும் கோவில்களில் முக்கியமான கோவிலாகும். இது சிவவாக்கிய சித்தர் அருள்பெற்ற ஸ்தலமாகவும், விநாயகப் பெருமான் முருகனை வழிபடும் புகழ்பெற்ற தலமாகவும் விளங்குகிறது. வேறு எந்தக் கோவிலுக்கு இல்லாத சிறப்பு இங்குள்ள ஆண்டவன் உத்தரவு பெட்டியாகும்.

    முருகப் பெருமானே பக்தர்களின் கனவில் தோன்றி குறிப்பிட்ட பொருளை சுட்டிக் காட்டி அதை உத்தரவு பெட்டியில் வைக்க ஆணையிடுவார். அவ்வாறு உத்தரவு பெற்ற பக்தர் கோவில் நிர்வாகத்தை அணுகி விவரத்தை கூறுவார். பின்னர் மூலவர் முன்பு பூப்போட்டு உத்தரவு கேட்டு அதன் பின்னர் அந்தப் பொருள் பெட்டியில் வைப்பர். இதுவே வழக்கமாக தொடர்ந்து வருகிறது. இவ்வாறு உத்தரவு பெட்டியில் வைக்கப்படும் பொருளுக்கு கால நிர்ணயம் ஏதும் கிடையாது.

    அடுத்த பொருள் பக்தரின் கனவில் உத்தரவாக வரும் வரை பெட்டியில் வைத்து பூஜிப்பர். இவ்வாறு பெட்டியில் வைக்கப்பட்டிருக்கும் பொருள் சமூகத்திற்கு ஏதேனும் ஒருவகையில் தாக்கத்தை ஏற்படுத்தும். அது நேர்மறை மற்றும் எதிர்மறை என எதுவாக இருக்கும். அதன்படி, திருப்பூர் மாவட்டம் மங்களப்பட்டியை சேர்ந்த குமாரசாமி என்ற பக்தர் கனவில் இளநீர் - ஈக்குமாறு வைத்து பூஜை செய்யுமாறு உத்தரவானது. இதைவைத்து பூஜை செய்யப்பட்டு வருகிறது.

    இதுகுறித்து பக்தர்கள் கூறுகையில், தற்போது நாடு முழுவதும் நல்ல மழை பெய்து தென்னை உற்பத்தி அதிகரித்துள்ளது. இதனால் கொப்பரை, தேங்காய் உள்ளிட்டவற்றின் விலை சரிந்து வருகிறது. இதனால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். சிவன் மலை காரணமூர்த்தி உத்தரவு பெட்டியில் இளநீரும் - ஈர்க்குமாறும் உத்தரவாகி உள்ளதால் தென்னை பொருட்கள் விலை உயரும் அல்லது கடும் விலை சரிவை சந்திக்கலாம்.

    இருப்பினும் சிவன்மலை ஆண்டவன் நல்ல வழியை காண்பிப்பார் என நம்புவதாக தெரிவித்தனர். முன்னதாக சைக்கிள் வைத்து பூஜிக்கப்பட்ட போது, அதன் பயன்பாடு சமூகத்தில் வெகுவாக குறைந்து போனது. மண் வைத்து பூஜிக்கப்பட்ட போது நிலத்தின் விலை பல மடங்கு உயர்ந்தது. துப்பாக்கி தோட்டா வைத்து பூஜிக்கப்பட்ட போது கார்கில் போர் ஏற்பட்டு அதில் இந்தியா வெற்றி வாகை சூடியது.

    தண்ணீர் வைத்து பூஜிக்கப்பட்ட போது சுனாமி பேரலை ஏற்பட்டு ஆயிரக்கணக்கானோர் பலியாகினர். கடந்த ஏப்ரல் மாதம் ஒன்றாம் தேதி முதல் கடலூரை சேர்ந்த கபில்தேவ் என்ற பக்தரின் கனவில் உத்தரவான ஸ்ரீபோகரின் திருவுருவப் படம் வைத்து பூஜிக்கப்பட்டது. இரண்டு நாட்கள் ஆன நிலையில் கோவை பெரியநாயக்கன்பாளையத்தை சேர்ந்த காமராஜ் என்ற பக்தரின் கனவில் 3 கிலோ விபூதி, 7 எலுமிச்சை பழங்கள் உத்தரவானது.

    அதை வைத்து ஏப்ரல் 4ஆம் தேதி முதல் பூஜிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த ஜூன் மாதம் முதல் பக்தர் ஒருவரின் கனவில் உத்தரவான நிறைபடி கம்பு வைத்து பூஜை செய்யப்பட்டது. ஒருமுறை தானியங்கள் வைத்து பூஜை செய்த போது, விளைச்சல் உயர்வு மற்றும் விலை உயர்வு ஏற்பட்டது. கம்பு வைத்து பூஜை செய்தபோது மானாவாரி நிலங்கள் மூலம் உணவு தானிய பயிர் விளைச்சல் அதிகரித்தது. கடந்த மாதம் 5 ந் தேதி முதல் வேல் வைத்து பூஜை செய்யப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

    தற்போது வைத்து பூஜிக்கப்படும் இளநீர், தென்னை ஈக்குமாறு ஆகியவை சமூகத்தில் எந்த மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது போக போக தெரியும் என்று பக்தர்கள் தெரிவித்தனர்.

    • உடுமலை, குடிமங்கலம் வட்டாரங்களில் பிரதான சாகுபடியாக தென்னை உள்ளது.
    • இளநீருக்கென பிரத்யேகமாக ஒட்டு ரக தென்னை மரங்களை விவசாயிகள் பராமரிக்கின்றனர்.

    குடிமங்கலம் :

    உடுமலை, குடிமங்கலம் வட்டாரங்களில் பிரதான சாகுபடியாக தென்னை உள்ளது. இதில் தேங்காய் உற்பத்திக்காக மட்டுமல்லாது இளநீருக்கென பிரத்யேகமாக ஒட்டு ரக தென்னை மரங்களை விவசாயிகள் பராமரிக்கின்றனர்.கடந்த சில ஆண்டுகளாக இவ்வகை ஒட்டுரக தென்னை மரங்கள், வெள்ளை ஈ தாக்குதலால் படுமோசமாக பாதிக்கப்பட்டன. மரங்கள் பச்சையம் இழந்து கருப்பாக மாறி இளநீர் காய்கள் உற்பத்தி முற்றிலுமாக பாதித்தது.

    பெரும்பாலான விவசாயிகள் வெள்ளை ஈ தாக்குதலை கட்டுப்படுத்த முடியாமல், இளநீர் உற்பத்திக்காக பராமரித்த தென்னை மரங்களை, வெட்டி அகற்றும் நிலைக்கு தள்ளப்பட்டனர்.தொடர்ந்துஊரடங்கு காலத்தில், விற்பனை வாய்ப்புகள் குறைந்தது. இவ்வாறுகடந்த இரண்டு ஆண்டுகளாக இளநீருக்கான தென்னை மரங்களை பராமரித்த விவசாயிகள்தொடர் பாதிப்புகளை சந்தித்து வந்தனர்.

    தற்போது வெள்ளை ஈ தாக்குதல் சற்று குறைந்து, இளநீர் காய்கள் பிடிப்பது அதிகரித்துள்ளது. அதே போல் கர்நாடகா உள்ளிட்ட பிற மாநிலங்களில் இளநீருக்கான தேவை அதிகரித்துள்ளதால் விலையும் நிலையாக மாறியுள்ளது.உடுமலை சுற்றுப்பகுதியிலுள்ள தென்னந்தோப்புகளில், நேரடியாக வந்து இளநீரை கொள்முதல் செய்கின்றனர். தரத்தின் அடிப்படையில் இளநீர் 22-24 ரூபாய் வரை கொள்முதல் செய்யப்படுகிறது.ஆரஞ்ச் மற்றும் பச்சை என இரு வகை இளநீர் காய்களுக்கும், தேவை அதிகரித்துள்ளது.

    இது குறித்து விவசாயிகள் கூறியதாவது:-

    இளநீர் உற்பத்திக்கான மரங்களை பராமரிப்பது மிக கடினமானதாக மாறியுள்ளது. வெள்ளை ஈ தாக்குதல் மட்டுமல்லாது, உரம் உட்பட பிற இடுபொருட்கள் செலவும் பல மடங்கு அதிகரித்துள்ளது.நிலையான விலை கிடைத்தால் மட்டுமே, இவ்வகை தென்னை மரங்களை தொடர்ந்து பராமரிக்க முடியும்.கட்டுப்படுத்த முடியாத நோய் தாக்குதல் பரவும் போது, வேளாண்துறை வாயிலாக தொழில்நுட்ப வழிகாட்டுதல் மற்றும் மானியத்தில் மருந்துகள் வாங்க அரசு உதவ வேண்டும் என்றனர். 

    • கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு ஒரு இளநீர் பண்ணை விலை அதிகபட்சமாக ரூ.32 வரை இருந்தது.
    • பண்ணை விலை குறைந்தாலும், உற்பத்தி அதிகரித்து விற்பனை விறுவிறுப்பாக நடப்பதால் விவசாயிகள் வியாபாரிகள் ஓரளவு லாபத்தை பெற்று வருகின்றனர்.

    பொள்ளாச்சி:

    கோவை மாவட்டம் பொள்ளாச்சி, ஆனைமலை, கிணத்துக்கடவு மற்றும் திருப்பூர் மாவட்டம் உடுமலை பகுதிகளில் தென்னை சாகுபடியே அதிகளவில் உள்ளது.

    இங்கு உற்பத்தியாகும் பச்சை நிற இளநீர், செவ்விளநீருக்கு வெளி மார்க்கெட்டில் எப்போதுமே நல்ல வரவேற்பு இருக்கும்.

    ஆண்டுதோறும் வெயிலின் தாக்கம் மட்டுமின்றி மழைக்காலங்களிலும் பொள்ளாச்சி சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து வெளி மாவட்டங்கள், வெளிமாநிலங்களுக்கு இளநீர் அனுப்பி வைக்கப்படுகிறது.

    நடப்பாண்டில் கடந்த ஏப்ரல் வரை தினமும் 2.50 லட்சம் வரையிலான இளநீர் அனுப்பப்பட்டு வந்தது. ஏப்ரல் இறுதி முதல் மே மாதம் 3-வது வாரம் வரை கோடை மழை பெய்ததாலும், ஜூன் இறுதியில் தென்மேற்கு மழை ஆரம்பமானதாலும் 1½ மாதம் இளநீர் விற்பனையில் தொய்வு ஏற்பட்டது.

    விற்பனையில் தொய்வு ஏற்பட்டிருந்தாலும் இந்த மழை காரணமாக தென்னையில் உற்பத்தியாகும் இளநீரின் எண்ணிக்கை வழக்கத்தை விட அதிகரித்து காணப்பட்டது.

    இப்போதைய சூழ்நிலையில் தேங்காய் விலை சரிவின் காரணமாக விவசாயிகள் இளநீராக அறுவடை செய்து விற்பனைக்கு அனுப்பி வைக்க தொடங்கி உள்ளனர். கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு ஒரு இளநீர் பண்ணை விலை அதிகபட்சமாக ரூ.32 வரை இருந்தது.

    ஆனால் இளநீர் உற்பத்தி நாளுக்கு நாள்அதிகரித்ததால், சற்று குறைய தொடங்கியுள்ளது. நேற்றைய நிலவரப்படி ஒரு இளநீர் பண்ணை விலையாக ரூ.27 ஆக சரிந்துள்ளது.

    தற்போது மழை குறைவால் அறுவடை மேலும் அதிகமாகியுள்ளது. இதனால் கடந்த சில நாட்களாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் வெளிமாநிலங்களுக்கு கனரக வாகனங்களில் அனுப்பப்படும் இளநீரின் எண்ணிக்கை அதிகமாகி உள்ளது.

    பொள்ளாச்சி இளநீருக்கு கிராக்கியால் நாள் ஒன்றுக்கு சுமார் 4 லட்சம் வரையிலான இளநீர் வெளியூர்களுக்கு அனுப்பப்படுகிறது. இதனால் வியாபாரிகள் நேரடியாக பொள்ளாச்சிக்கு வந்து தோட்டங்களில் குறிப்பிட்ட விலை நிர்ணயம் செய்து இளநீர் கொள்முதல் செய்கின்றனர்.

    தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும், ஆந்திரா, மகராஷ்டிரா, அரியானா, உத்தரபிரதேசம், சண்டிகார், ராஜஸ்தான் உள்ளிட்ட பல மாநிலங்களுக்கும் இளநீர் அனுப்பும் பணி அதிகரித்துள்ளது.

    பண்ணை விலை குறைந்தாலும், உற்பத்தி அதிகரித்து விற்பனை விறுவிறுப்பாக நடப்பதால் விவசாயிகள் வியாபாரிகள் ஓரளவு லாபத்தை பெற்று வருகின்றனர்.

    பொள்ளாச்சி மற்றும் ஆனைமலை பகுதிகளில் உற்பத்தியாகும் குட்டை, நெட்டை, வீரிய ஒட்டு இளநீரின் வலை தற்போது பண்ணை விலையாக ரூ.27 எனவும், ஒரு டன் இளநீரின் விலை ரூ.9500 எனவும் நிர்ணயம் செய்யப்படுகிறது.

    கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக சென்னை உள்பட அனைத்து மாவட்டங்களிலும் மழை இல்லாததால் இளநீர் அறுவடை அதிகரித்துள்ளதுடன், அதன் தேவையும் அதிகரித்துள்ளது.

    சண்டிகார், ராஜஸ்தான், ஐதராபாத் உள்ளிட்ட மாநிலங்களுக்கு அதிகளவு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

    எப்போதும் இல்லாத அளவில் நாள் ஒன்றுக்கு ரூ.4 லட்சத்துக்கு மேல் இளநீர் வெளியிடங்களுக்கு அனுப்பப்படுகிறது. வரும் நாட்களில் இளநீரின் உற்பத்தி மேலும் அதிகரிக்கும்போது, நாள் ஒன்றுக்கு 5 லட்சம் வரையிலான இளநீர் அனுப்பி வைக்கப்படும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    ×