

புதுடெல்லி:
அ.தி.மு.க.வில் உள்ள இரு அணிகளில் இரட்டை இலை சின்னம் யாருக்கு? என்பது தொடர்பான 6-ம் கட்ட விசாரணை புதுடெல்லி தேர்தல் ஆணையத்தில் தொடங்கியுள்ளது.
அ.தி.மு.க.வில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் தலைமையில் ஒரு அணியினரும், டி.டி.வி தினகரன் தலைமையில் ஒரு அணியினரும் செயல்பட்டு வருகின்றனர். இரட்டை இலை சின்னத்தை தங்களுக்கே வழங்க வேண்டும் என இரு தரப்பினரும் தேர்தல் ஆணையத்தை நாடினர்.
இரு தரப்பிலும் பல்லாயிரக்கணக்கான பக்கங்கள் கொண்ட ஆவணங்கள், பிரமான பத்திரங்கள் தாக்கல் செய்யப்பட்டன. ஏற்கனவே, ஐந்து கட்டமாக விசாரணை நடைபெற்று வந்த நிலையில், இன்று ஆறாவது கட்டமாக விசாரணை தொடங்கியுள்ளது. இதில், இரு தரப்பினரும் தங்களது வாதங்களை முன்வைக்க உள்ளனர்.
டி.டி.வி தினகரன் தரப்பில் கடந்த விசாரணயின் போது சில ஆவணங்கள் தாக்கல் செய்ய அவகாசம் கோரப்பட்டது. இன்று அதை தாக்கல் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. விசாரணைக்காக இரு தரப்பு வழக்கறிஞர்களும் ஆஜர் ஆகியுள்ளனர். இன்று விசாரணை முடிவை எட்டுமா? அல்லது இன்னும் விசாரணை இழுத்தடிக்கப்படுமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.