

அ.தி.மு.க பெயர் மற்றும் இரட்டை இலை சின்னத்தை யாருக்கு ஒதுக்குவது? என்பது தொடர்பான விசாரணை டெல்லியில் உள்ள தேர்தல் ஆணையத்தில் நடந்தது. விசாரணையின் முடிவை தேர்தல் ஆணையம் இன்று வெளியிட்டது.
கட்சியின் பெயர் மற்றும் இரட்டை இலை சின்னம் ஆகியவற்றை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் அணியினருக்கு ஒதுக்கி அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், அவர்கள் கட்சியின் பெயர், சின்னத்தை பயன்படுத்த தடை ஏதும் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் ஆணையத்தின் இந்த அறிவிப்பால் முதல்வர் மற்றும் துணை முதல்வர் அணியினர் உற்சாகம் அடைந்துள்ளனர். பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், சின்னம் மீண்டும் கிடைத்துள்ள நிலையில், ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்திற்கு முதல்வர், துணை முதல்வர் வருகை தந்தனர். அவர்களை அடுத்து அமைச்சர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் வந்தடைந்தனர்.
அப்போது, முதல்வர் மற்றும் துணை முதல்வர் சார்பில் வெளியிடப்பட்ட கூட்டறிக்கையை அமைச்சர் ஜெயக்குமார் வாசித்தார். இதனையடுத்து, ஓ.பன்னீர் செல்வம் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்தனர்.