

மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. போட்டியிடுவது குறித்து 2 தொகுதி மாவட்டச் செயலாளர்களுடன் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார்.
மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிக்கு அடுத்த மாதம் 6-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தொகுதிகளில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வாக வெற்றி பெற்ற மரகதம் குமரவேல் கடந்த மே மாதம் 25-ந்தேதி தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துவிட்டு த.வெ.க.வில் இணைந்துவிட்டார். இதே போல் தாராபுரம் தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வாக இருந்த சத்தியபாமாவும் தனது எம்.எல்.ஏ.பதவியை ராஜினாமா செய்துவிட்டு த.வெ.க.வில் இணைந்தார்.
அ.தி.மு.க. வெற்றி பெற்ற இந்த இரு தொகுதிகளிலும் தி.மு.க. கணிசமான வாக்குகளை பெற்றிருந்தது. அதனால் இந்த இடைத்தேர்தலில் தி.மு.க. போட்டியிடுவது பற்றி இன்று முடிவு எடுக்கப்படுகிறது.
இதற்காக காஞ்சிபுரம் வடக்கு மாவட்டச் செயலாளர் முன்னாள் அமைச்சர் தா.மோ.அன்பரசன், காஞ்சிபுரம் தெற்கு மாவட்டச் செயலாளர் சுந்தர், அதே போல் திருப்பூர் மாவட்டக் கழக செயலாளர் இள பத்மநாபன், முன்னாள் அமைச்சர் வெள்ளக்கோவில் சாமிநாதன் மற்றும் தொகுதி பிரதிநிதிகளுடன் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவாலயத்தில் ஆலோசனை நடத்தினர். 2 தொகுதி இடைத்தேர்தலில் மும்முனை போட்டி நிலவும் என்பதால் வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கும் என்பது பற்றி விரிவான ஆலோசனை நடத்தினார்.
இந்த தேர்தலில் த.வெ.க., அ.தி.மு.க.வை எதிர்த்து களம் காண வேண்டி இருப்பதால் தேர்தல் வியூகத்துக்கு என்னென்ன செய்ய வேண்டும் என்பது பற்றி மாவட்டச் செயலாளர்களின் கருத்துக்களை கேட்டறிந்தார்.
இடைத்தேர்தலில் வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்கி உள்ளதால் வேட்பாளராக யாரை நிறுத்தலாம் என்பது பற்றியும் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.