

தமிழ்நாட்டில் சமீபத்தில் நடைபெற்று முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக 3வது இடத்திற்கு தள்ளப்பட்டது அக்கட்சி தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தோல்வியால் கட்சிக்குள் மோதல்களும் கிளம்பி வருகின்றன. இதைத்தொடர்ந்து அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மாவட்டம் வாரியாக, கட்சியில் அனைத்து மட்டத்திலும் உள்ள நிர்வாகிகளை அழைத்து ஆலோசனை நடத்தி வருகிறார்.
அந்தவகையில், சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் மாவட்ட செயலாளர்களுடன் இன்று ஆலோசனை நடத்தினார்.
இந்த ஆலோசனையின் போது சட்டமன்ற தேர்தல் தோல்வி குறித்தும், விரைவில் நடைபெற உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெறுவது பற்றியும் விவாதித்துள்ளார்.
புதிதாக நியமிக்கப்பட்ட மாவட்ட செயலாளர்கள், ஏற்கனவே பொறுப்பில் உள்ள மாவட்ட செயலாளர்கள் என அனைவரும் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர். அவர்களுடன் கட்சியின் தலைமை நிர்வாகிகளும் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
அதிமுகவை மீண்டும் வலிமையான இயக்கமாக மாற்றுவதற்கு மாவட்ட செயலாளர்கள் அனைவரும், கட்சி நிர்வாகிகளுடன் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தினார்.
அதிமுக எம்எல்ஏக்கள் 6 பேர் தங்களது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்துள்ள நிலையில், விரைவில் நடைபெற உள்ள இடைத்தேர்தலில் மீண்டும் அதிமுகவை வெற்றிப்பெற வைத்து துரோகிகளுக்கு பாடம் புகட்ட வேண்டும் எனவும் தெரிவித்தார்.