தியாகி இமானுவேல் சேகரனாரின் போராட்டங்களையும் தியாகங்களையும் போற்றி நினைவு கூர்வோம் - கனிமொழி

இமானுவேல் சேகரன் ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாகத் திகழ்ந்த டாக்டர் அம்பேத்கருடன் இணைந்து பணியாற்றினார்.
Immanuel Sekaran - Kanimozhi
Published on
Summary

இமானுவேல் சேகரனின் நினைவு தினமான இன்று அவரது போராட்டங்களையும் தியாகங்களையும் போற்றி நினைவு கூர்வோம் என்று திமுக எம்பி கனிமொழி தெரிவித்துள்ளார்.

தியாகி இமானுவேல் சேகரனாரின் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.

இமானுவேல் சேகரன் ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் பகுதி செல்லூர் எனும் கிராமத்தில் 1924 அக்.9-ந்தேதி பிறந்தார். அவர் ஒரு சமூக நீதிப் போராட்டக்காரரும், சுதந்திரப் போராட்டத் தியாகியும் ஆவார். படுகாத்து குடியிருப்பு கிராமத்தில் பிறந்த இவர், ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்காகவும் சுயமரியாதைக்காகவும் தனது இளமைக் காலம் தொட்டே தீவிரமாகக் குரல் கொடுத்தார்.

இமானுவேல் சேகரன் தனது 18வது வயதிலேயே இந்திய சுதந்திர இயக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டு தேசப்பற்றுடன் செயல்பட்டார்.

ஒடுக்கப்பட்ட மக்களின் கல்வி, சமூக சமத்துவம் மற்றும் தீண்டாமைக்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்தப் இமானுவேல் சேகரன் பாடுபட்டார்.

இமானுவேல் சேகரன் ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாகத் திகழ்ந்த டாக்டர் அம்பேத்கருடன் இணைந்து பணியாற்றினார். மேலும் தமிழகத்தில் ஒடுக்கப்பட்டோரின் உரிமைகளுக்காக இயங்கிய தலைவர்களில் ஒருவராக விளங்கினார்.

சாதிய வன்முறைகளின் உச்சகட்டமாக, அவர் தனது 33-வது வயதில் 1957-ம் ஆண்டு செப்டம்பர் 11-ந்தேதி அன்று படுகொலை செய்யப்பட்டார்.

இமானுவேல் சேகரனின் நினைவைப் போற்றும் வகையில் தமிழக அரசால் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 11-ந்தேதி அரசு விழாவாகக் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் இவருக்கென மணிமண்டபம் அமைக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசியலிலும் சமூக நீதியிலும் இவரது தியாகம் ஒரு வரலாற்று அடையாளமாகக் கருதப்படுகிறது.

இமானுவேல் சேகரனின் நினைவு தினத்தையொட்டி திமுக எம்பி கனிமொழி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

சாதிய அடக்குமுறைகளுக்கு எதிராகத் துணிச்சலுடன் போராடி, ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காகத் தன் இன்னுயிரைத் தியாகம் செய்த விடுதலைப் போராட்ட வீரர் தியாகி இமானுவேல் சேகரனார் அவர்களின் நினைவு நாள் இன்று.

அவரது போராட்டங்களையும் தியாகங்களையும் போற்றி நினைவு கூர்வோம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com