

தற்போதைய முதலமைச்சர் சினிமா செட் என நினைத்து சட்டசபையில் பஞ்ச் டயலாக் பேசிக்கொண்டிருக்கிறார் என்று தி.மு.க. தலைமை செயற்குழு கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் கூறினார்.
தமிழக சட்டசபை தேர்தல் தோல்விக்கு பிறகு தி.மு.க.வில் கட்சி ரீதியாக பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
இந்த நிலையில் தி.மு.க. தலைமை செயற்குழு கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கத்தில் இன்று காலை நடைபெற்றது. தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் பொதுச் செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் மாநில நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள், செயற்குழு உறுப்பினர்கள் 800-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இதில் கட்சியின் ஆக்கப்பணிகள் குறித்தும், கட்சியை மறு சீரமைப்பு செய்வது குறித்தும் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
தி.மு.க.வில் அமைப்பு ரீதியாக செய்ய வேண்டிய மாற்றங்கள் குறித்தும், வருங்காலத்தில் கட்சியை வலுப்படுத்துவதற்கு தேவையான திட்டங்கள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
இதையடுத்து செயற்குழு கூட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது:
* நாம் பார்க்காத வெற்றியும் இல்லை. நாம் பாரக்காத தோல்வியும் இல்லை.
* தேர்தலில்தான் தோல்வி அடைந்திருக்கிறோமே தவிர, நிரந்தரமாக இல்லை.
* இந்த தோல்வியானது எதிர்காலத்தை திட்டமிடுவதற்காக நமக்கு கால அவகாசம் என எடுத்துக் கொள்வோம்.
* கழக வரலாற்றில் இது மிக முக்கியமான செயற்குழுவாக அமையவிருக்கிறது.
* Comeback கொடுப்பதில் நாம் Specialist! சிறப்பாகக் கொடுப்போம்!
* Bore அடிக்கிறது என்பதற்காக நாம் அரசியலுக்க வந்தவர்கள் இல்லை. போராடுவதற்காக அரசியலுக்கு வந்தவர்கள் நாம்.
* திமுகவினர் முதலில் அவர்கள் வீட்டில் அரசியல் பேச வேண்டும். பிள்ளைகள், உறவினர்களிடம் பரப்புரை செய்ய வேண்டும்.
* இனமும் மொழியும் நாடும் இருக்கும் வரை கறுப்பு, சிவப்பு கொடி பறக்க வேண்டும் என்று உழைக்க வேண்டும்.
* தற்போதைய முதல்வர் நாம் கொண்டு வந்த திட்டங்களுக்கு பெயர் மாற்றுவதில் பிஸியாக உள்ளார்.
* தற்போதைய முதலமைச்சர் சினிமா செட் என நினைத்து சட்டசபையில் பஞ்ச் டயலாக் பேசிக்கொண்டிருக்கிறார்.
* அண்ணா உருவாக்கிய இயக்கத்தை, கலைஞர் வளர்த்த இயக்கத்தை மேலும் வலிமையானதாக வளர்த்தெடுப்போம்.
இவ்வாறு அவர் கூறினார்.