டாக்டர்கள் வேலை நிறுத்தத்தை கைவிட வேண்டும்- தமிழிசை சவுந்தரராஜன் வேண்டுகோள்

ஏழை மக்கள் நலன் கருதி டாக்டர்கள் வேலை நிறுத்தத்தை கைவிட வேண்டும் என்று தமிழக பா.ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தமிழிசை சவுந்தரராஜன்
தமிழிசை சவுந்தரராஜன்
Published on

சென்னை:

தமிழக பா.ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

மத்திய அரசு மருத்துவர்களின் ஊதியத்திற்கு இணையான ஊதியம் கேட்டு போராடும் தமிழக அரசு மருத்துவர்களின் கோரிக்கை நியாயமானதாக இருந்தாலும் ஏழை,எளிய மக்களின் மருத்துவ தேவைகளை பாதிக்கும் வேலை நிறுத்தம் தவிர்க்கப்பட வேண்டும்.

ஏழை, எளிய மக்களின் மருத்துவ தேவையை பாதிக்கும் என்பதால் அரசு மருத்துவர்களும், அரசும் அமர்ந்து பேசி உடனே தீர்வு காண வேண்டும். கோரிக்கைகள் நியாயமானவையாக இருந்தாலும் அரசு மருத்துவமனைகளையே நம்பியிருக்கும் ஏழை நோயாளிகள் சிகிச்சை எந்தவிதத்திலும் பாதிக்கக்கூடாது என்பதற்காகவும் வேலை நிறுத்தம் தவிர்க்கப்பட வேண்டும்

மக்கள் நலனை மறந்து ஆளும் அரசுக்கு எதிராக யார் போராடினாலும் உடனே ஓடோடி ஆதரிப்பது தான் எதிர்க்கட்சிகளின் வேலையா?

காஷ்மீரில் மருந்துகள் கிடைக்கவில்லை. மருத்துவமனைகள் இயங்கவில்லை என காஷ்மீர் மக்களுக்கு ஆதரவாக பேசுவதாக பாகிஸ்தான் குரலை ஒலிக்கும் திமுக, இடதுசாரிகள் இங்கே தமிழக ஏழை, எளிய மக்களின் மருத்துவ தேவையை பாதிக்கும் அரசு மருத்துவமனைகள் வேலைநிறுத்தத்தை ஆதரிப்பது ஏன்? தமிழ் மக்களை பாதிக்காதா?

மத்திய அரசு மருத்துவர்களின் ஊதியத்தை போல் வழங்க வேண்டுமென கோரிக்கை வைத்தும் தமிழக மருத்துவர்கள் மத்திய அரசு கொண்டு வந்த மருத்துவ காப்பீட்டு திட்டம் உள்ளடக்கிய தமிழக முதலமைச்சரின் விரிவாக்க காப்பீட்டு திட்டத்தை நிறைவேற்ற ஒத்துழைக்க மறுத்தது என்ன நியாயம்? இதனால் பாதிப்படைவது சாமானிய மக்கள் தானே, இதனால் அரசுக்கு இழப்பு அல்லவே. ஏழை,எளிய மக்களின் உயிர்காக்கும் மருத்துவப்பணி இறைப் பணிக்கு இணையானது. அரசு மருத்துவர்களே ஏழை, எளிய மக்களின் நம்பிக்கை நட்சத்திரம் என்பதை எக்காலத்திலும் மக்கள் நினைவு கூறும் வகையில் இத்தகைய போராட்டங்கள் தவிர்க்கப்படவேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com