

கரூர் சதாசிவ பிரம்மேந்திராள் கோவிலில் பா.ஜ.க. பிரமுகரும், நடிகருமான எஸ்.வி.சேகர் இன்று சுவாமி தரிசனம் செய்தார். பின்னர் கரூர் கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் அன்பழகனை சந்தித்து விட்டு வெளியே வந்த அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
பேஸ்புக்கில் பெண் பத்திரிகையாளரை அவதூறாக விமர்சித்ததாக என் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. எனக்கு ஒருவர் அனுப்பிய தகவலை வேறொருவருக்கு நான் அனுப்பினேன். அது எனது கருத்தோ, எழுத்தோ இல்லை என்பதை தெளிவுபடுத்திவிட்டேன். இந்த பிரச்சனை தொடர்பாக என் மீது 7,8 வழக்குகள் தொடரப்பட்டுள்ளது. அந்த வழக்குகளை ஒரே இடத்தில் நடத்தும் வகையில் வக்கீல்கள் மூலம் நடவடிக்கை எடுத்து வருகிறேன்.
திருவாரூர் இடைத்தேர்தலை நிறுத்த வேண்டும் என்று அனைத்து கட்சிகள் சொல்வதில் நியாயம் இருக்கிறது. தேர்தல் மூலம் கஜா புயலால் பாதித்த அத்தொகுதி மக்களுக்கு நிவாரணம் மற்றும் பொங்கல் பரிசு பொருட்கள் கிடைக்காமல் போகலாம். பாராளுமன்ற தேர்தலுடன் 20 தொகுதிகளுக்கு தேர்தல் வர வாய்ப்பு உள்ளது. என்னை பொறுத்த வரை பா.ஜ.க. தலைமை விரும்பினால் தென்சென்னை தொகுதியில் போட்டியிடுவேன்.
மதசார்பற்றவராக காட்டி கொள்ளும் கேரள முதல்வர் பினராயி விஜயன், மத வெறி பிடித்தவராக உள்ளார். சபரிமலை விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்துகிறேன் என்று சொல்லும் அவர், முல்லை பெரியாறு விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பை ஏன் அமல்படுத்தவில்லை. மதவெறி பிடித்த அரசாக கேரள அரசு செயல்படுகிறது.