கருணாசுக்கு முன்ஜாமீன் கிடைக்குமா? - மதுரை ஐகோர்ட்டில் நாளை விசாரணை

கருணாஸ் தாக்கல் செய்துள்ள முன்ஜாமீன் மனு மதுரை ஐகோர்ட்டில் நாளை விசாரணைக்கு வர உள்ள நிலையில் அவருக்கு ஜாமீன் கிடைக்குமா என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. #Karunas #MaduraiHighCourt
கருணாசுக்கு முன்ஜாமீன் கிடைக்குமா? - மதுரை ஐகோர்ட்டில் நாளை விசாரணை
Published on

சென்னை:

நடிகர் கருணாஸ் எம்.எல்.ஏ. சென்னை போலீசாரால் 2 வழக்குகளில் கைது செய்யப்பட்டு வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார்.

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, போலீஸ் அதிகாரி அரவிந்தன் ஆகியோரை அவதூறாக பேசிய குற்றச்சாட்டின் மீது நுங்கம்பாக்கம் போலீசார் கருணாசை முதலில் கைது செய்தனர்.

இதன்பின்னர் சேப்பாக்கம் போராட்ட வழக்கில் திருவல்லிக்கேணி போலீசார் கைது நடவடிக்கையை மேற்கொண்டனர். இந்த 2 வழக்குகளிலும் கருணாசுக்கு ஜாமீன் வழங்கப்பட்டது.

தினமும் நுங்கம்பாக்கம், திருவல்லிக்கேணி காவல் நிலையங்களில் அவர் கையெழுத்திட உத்தரவிடப்பட்டு இருந்தது.

சென்னை போலீசார் தொடர்ந்த வழக்கில் ஜாமீன் கிடைத்ததை தொடர்ந்து கருணாஸ் வேலூர் சிறையில் இருந்து விடுதலையானார்.

இந்த நிலையில் புளியங்குடியில் கடந்த ஆண்டு தேவர் பேரவை தலைவர் முத்தையா என்பவரின் கார் உடைக்கப்பட்ட வழக்கில் கருணாசை கைது செய்ய புளியங்குடி போலீசார் சென்னை வந்தனர்.

சாலி கிராமத்தில் உள்ள கருணாசின் வீட்டுக்கு சென்றனர். ஆனால் அவர் அங்கு இல்லை.

இதையடுத்து கருணாஸ் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். நெஞ்சுவலி காரணமாக அவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறுவதாக கூறப்பட்டது. இந்த வழக்கில் தன்னை கைது செய்யாமல் இருக்க முன் ஜாமீன் கேட்டு மதுரை ஐகோர்ட்டில் கருணாஸ் மனுதாக்கல் செய்து இருந்தார். அந்த மனு மீதான விசாரணை கடந்த சில நாட்களுக்கு முன்பு நடைபெற்றது. அப்போது 8-ந்தேதிக்கு முன்ஜாமீன் மனு ஒத்திவைக்கப்பட்டது.

அதன்படி கருணாசின் முன்ஜாமீன் மனு மீது நாளை விசாரணை நடைபெறுகிறது. அப்போது கருணாசுக்கு முன் ஜாமீன் கிடைக்குமா? என்பது தெரியவரும்.

இதற்கிடையே ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ள கருணாஸ் அவசர சிகிச்சை பிரிவில் இருந்து சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டுள்ளார். #Karunas  #MaduraiHighCourt

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com