தி.மு.க. அரசியல் நாடகத்துக்கு மோடியை இழுப்பதா?: மு.க.ஸ்டாலின் மீது பொன்.ராதாகிருஷ்ணன் பாய்ச்சல்

பிரதமர் மோடியை சந்திக்க நேரம் ஒதுக்காததாக மு.க.ஸ்டாலின் கூறிய குற்றச்சாட்டுக்கு மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், தி.மு.க. நடத்தும் அரசியல் நாடகத்துக்கு பிரதமரை இழுக்க கூடாது என்று கடுமையான சாடி உள்ளார்.
தி.மு.க. அரசியல் நாடகத்துக்கு மோடியை இழுப்பதா?: மு.க.ஸ்டாலின் மீது பொன்.ராதாகிருஷ்ணன் பாய்ச்சல்
Published on

தமிழக எதிர்க்கட்சி தலைவர் என்ற முறையில் விவசாயிகள் பிரச்சினை தொடர்பாக பேச பிரதமர் மோடியை சந்திக்க நேரம் கேட்டும் ஒதுக்கவில்லை என்று மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டி இருந்தார்.

இதுபற்றி மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கூறியதாவது:-

பிரதமர் மோடி இதற்கு முன்பு சந்திக்காமல் இருந்தாரா? சந்தித்தவர் தானே. இவர்கள் எதற்காக பார்க்க வேண்டும் என்று அனுமதி கேட்டிருந்தார்கள்? பிரதமர் அலுவலகத்தில் எதற்காக நேரம் ஒதுக்க முடியவில்லை? என்பதெல்லாம் எனக்கு தெரியாது.

ஆனால் தி.மு.க.வை பொறுத்தவரை எதை எடுத்தாலும் அரசியலாகத்தானே பார்க்கிறது. பிரதமரை சந்திக்க அனுமதி கேட்க வேண்டியது. அனுமதி கிடைக்காவிட்டால் அதை வைத்து அரசியல் நடத்த வேண்டியது. இதனால் என்ன பயன்?

விவசாயிகள் பிரச்சினை நடந்தபோது அதுபற்றி பேச யாரும் தயாரில்லை. பிரச்சினை என்ன? தீர்வுக்கு என்ன வழி? என்று ஆளும் கட்சி, எதிர்க்கட்சி எல்லாம் கூடி விவாதித்தது உண்டா?

மாநில அரசு செய்ய வேண்டிய எதையும் செய்யாமல் ஒருவருக்கொருவர் குறை சொல்வதிலேயேதான் குறியாக இருந்தார்கள். செய்ய வேண்டிய கடமையை செய்யாமல் குற்றச்சாட்டு சொல்ல மட்டும்தான் முடிந்தது.

உ.பி.யில் புதிய அரசு பொறுப்பேற்றதும் அந்த மாநில அரசு கடன் ரத்து உள்ளிட்ட பல நடவடிக்கைகளை மேற்கொண்டு விவசாயிகளுக்கு உதவியது. ஆனால் தமிழகத்தில் இவ்வளவு போராட்டம் நடந்த போது தி.மு.க. கூட்டிய கூட்டம் முழுக்க முழுக்க எதிர்கால அரசியல் லாபத்துக்காக கூட்டப்பட்டது. தமிழ்நாடு முழுவதும் நாடகம் நடத்தினார்கள். தமிழக மக்களை ஏமாற்ற பிரதமரை சந்தித்து மனு கொடுக்கப் போவதாக கூறினார்கள்.

ஆக்கப்பூர்வமாக என்னென்ன செய்யப்பட்டது? என்னென்ன செய்யலாம்? என்று விவாதியுங்கள். 8-ந் தேதி சட்டசபை கூடுகிறது. அங்கு விவாதியுங்கள், ஆற்று மணலை விற்கும் சூழ்நிலை ஏன் வந்தது. தடுப்பணைகள் ஏன் கட்டவில்லை. கடுமையான வறட்சி நிலவுகிறது. இதை சமாளிக்க முன்னெச்சரிக்கையாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன?

மத்திய அரசின் பயிர் பாதுகாப்பு திட்டத்தை ஏன் தீவிரமாக செயல்படுத்தவில்லை. விவசாயத்துக்காக ஒதுக்கப்பட்ட நிதியை ஏன் செலவு செய்யவில்லை என்பதை பற்றியெல்லாம் விவாதியுங்கள்.

இதையெல்லாம் விட்டு விட்டு தி.மு.க. நடத்தும் அரசியல் நாடகத்துக்கு பிரதமரை இழுக்க கூடாது. எத்தனை நாள்தான் இப்படியே மக்களை ஏமாற்றுவீர்கள்? எல்லாரும் எல்லா காலத்திலும் ஏமாற மாட்டார்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com