கட்சியை உடைத்துவிடலாம் என நினைத்தவர்களுக்கு சம்மட்டி அடி: முதல்வர் பழனிச்சாமி

அ.தி.மு.க.வை உடைத்து விடலாம் ஆட்சியைக் கலைத்துவிடலாம் என நினைத்தவர்களுக்கு தேர்தல் ஆணையத்தின் உத்தரவு சம்மட்டி அடி என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பேசியுள்ளார்.
கட்சியை உடைத்துவிடலாம் என நினைத்தவர்களுக்கு சம்மட்டி அடி: முதல்வர் பழனிச்சாமி
Published on

அ.தி.மு.க பெயர் மற்றும் இரட்டை இலை சின்னத்தை யாருக்கு ஒதுக்குவது? என்பது தொடர்பான விசாரணை டெல்லியில் உள்ள தேர்தல் ஆணையத்தில் நடந்தது. விசாரணையின் முடிவை தேர்தல் ஆணையம் இன்று வெளியிட்டது.

கட்சியின் பெயர் மற்றும் இரட்டை இலை சின்னம் ஆகியவற்றை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் அணியினருக்கு ஒதுக்கி அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், அவர்கள் கட்சியின் பெயர், சின்னத்தை பயன்படுத்த தடை ஏதும் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் ஆணையத்தின் இந்த அறிவிப்பால் முதல்வர் மற்றும் துணை முதல்வர் அணியினர் உற்சாகம் அடைந்துள்ளனர். பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், சின்னம் மீண்டும் கிடைத்துள்ள நிலையில், ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்திற்கு முதல்வர், துணை முதல்வர் வருகை தந்தனர். அவர்களை அடுத்து அமைச்சர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் வந்தடைந்தனர்.

அப்போது, முதல்வர் மற்றும் துணை முதல்வர் சார்பில் வெளியிடப்பட்ட கூட்டறிக்கையை அமைச்சர் ஜெயக்குமார் வாசித்தார்.

இதனையடுத்து, செய்தியாளர்களிடம் பேசிய துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், “இந்த வெற்றியை எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதாவுக்கு சமர்ப்பிக்கிறோம். ஜெயலலிதாவின் ஆன்மாவே சின்னத்தை எங்களுக்கு தந்துள்ளது. கட்சிக்கு ஏற்பட்ட சோதனைகளுக்கு தேர்தல் ஆணைய தீர்ப்பு மகிழ்ச்சி அளிக்கிறது. ஜெயலலிதா நியமித்த நிர்வாகிகள் இணைந்து அ.தி.மு.க.வை வழி நடத்திச் செல்வோம். எங்களுக்கு முன்னாலும் பின்னாலும் யாரும் இல்லை” என்று கூறினார்.

இதனையடுத்து பேசிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, “அ.தி.மு.க.வை உடைத்து விடலாம், ஆட்சியை கலைத்து விடலாம் என நினைத்தவர்களுக்கு தேர்தல் ஆணையத்தின் இந்த தீர்ப்பு சம்மட்டி அடியாக அமைந்துள்ளது. தேர்தல் ஆணையத்தின் முடிவு உண்மை, நீதியை நிலைநாட்டும் வகையில் உள்ளது” என பேசினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com