

பெங்களூரு:
கர்நாடகாவில் மதசார்பற்ற ஜனதா தளம், காங்கிரஸ் கூட்டணி ஆட்சி குமாரசாமி தலைமையில் நடைபெற்றது. இந்த இருகட்சிகளை சேர்ந்த 17 எம்.எல்.ஏ.க்களை தன் பக்கம் இழுத்து எடியூரப்பா ஆட்சியை கவிழ்த்தார். இதன் மூலம் அங்கு பாரதீய ஜனதா ஆட்சி அமைந்தது.
17 எம்.எல்.ஏ.க்களும் தங்களது பதவியை ராஜினாமா செய்திருந்தனர். அதில் 15 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இது சம்பந்தமாக காங்கிரஸ் முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா கூறியதாவது:-
இடைத்தேர்தல் நடக்கும் 15 தொகுதிகளில் காங்கிரஸ் நிச்சயமாக 12 தொகுதிகளில் வெற்றி பெறும். 15 தொகுதிகளிலும் வெற்றி பெற்றாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
மக்கள் எங்களுக்கு ஆதரவாக திரண்டு இருக்கிறார்கள். காங்கிரசுக்கு கிடைக்கும் இந்த வெற்றியின் காரணமாக எடியூரப்பாவால் ஆட்சியை தொடர முடியாது. இங்கு காங்கிரஸ் கட்சி மீண்டும் ஆட்சி அமைக்க வாய்ப்பு ஏற்பட்டு இருக்கிறது.
இவ்வாறு சித்தராமையா கூறினார்.