டிரம்ப், காமேனி 
உலகம்

மானம் கெட்ட அமெரிக்கா.. இறுதிச்சடங்குக்கு வந்தவர்களை ஒரே குண்டில் கொல்ல முடியும் என்ற டிரம்ப் பேச்சுக்கு ஈரான் பதிலடி

நீங்கள் ஒரு நறுமணப் பாட்டிலை உடைத்திருக்கிறீர்கள். இப்போது அதன் வாசம் எல்லா இடங்களிலும் பரவத் தொடங்கியுள்ளது.

ஈரானின் மறைந்த உச்ச தலைவர் அயதுல்லா அலி காமேனியின் இறுதிச்சடங்கு ஊர்வலத்தில் பங்கேற்றுள்ள ஈரான் தலைவர்களை அமெரிக்காவால் ஒரே குண்டில் ஒட்டுமொத்தமாக ழித்துவிட என்ற டிரம்ப் பேச்சுக்கு ஈரான் பதிலடி கொடுத்துள்ளது.

டிரம்ப் பேச்சு

ஆக்சிஸ் ஊடகத்திடம் பேசிய டிரம்ப், "ஈரான் மக்கள் காமேனியை வெறுக்கிறார்கள் என்றுதான் நான் நினைத்தேன். ஒருவேளை அவர்கள் அழுவது போலி கண்ணீராக இருக்கலாம்.

காமேனியின் இறுதிச்சடங்குக்காக ஈரான் தலைவர்கள் அனைவரும் ஒரே இடத்தில் கூடியிருக்கிறார்கள்.

நாங்கள் நினைத்தால் ஒரே ஷாட்டில் அவர்கள் அனைவரையும் காலி செய்ய முடியும். ஆனால், நாங்கள் அதைச் செய்யப் போவதில்லை.

ஏனென்றால் அவர்களை அழித்துவிட்டால், அதற்குப் பிறகு பேச்சுவார்த்தை நடத்த அங்கு யாரும் இருக்க மாட்டார்கள்." என தெரிவித்தார்.

மேலும், "நாங்கள் நல்லவர்கள் என்பதால் அவர்களுக்கு ஒரு வாரம் லீவு கொடுத்திருக்கிறோம்" என்று கிண்டலாகக் குறிப்பிட்டார்.

ஈரான் பதிலடி

இந்த ஆணவப் பேச்சுக்கு, ஆர்மீனியாவில் உள்ள ஈரான் தூதரகம் தனது எக்ஸ் தளத்தில் பதிலடி கொடுத்துள்ளது.

அமெரிக்காவின் 250 ஆவது சுதந்திர தினமான ஜூலை 4ஆம் தேதியைக் குறிப்பிட்டு ஈரான் தூதரகம் வெளியிட்ட பதிவில்,

"மனிதர்களைக் கொல்ல முடியும், ஆனால் கொள்கைகளைக் கொல்ல முடியாது. நீங்கள் அயதுல்லா காமேனியைக் கொன்றுவிட்டதாக நினைக்கிறீர்கள்.

ஆனால், உண்மையில் நீங்கள் ஒரு நறுமணப் பாட்டிலை உடைத்திருக்கிறீர்கள். இப்போது அதன் வாசம் எல்லா இடங்களிலும் பரவத் தொடங்கியுள்ளது.

உங்களால் இந்த மக்களின் துக்கத்தைப் புரிந்துகொள்ள முடியாது. ஏனென்றால், அமெரிக்காவுக்கு என்று சொந்தமாக நாகரிகமோ, வரலாறோ அல்லது மானமோ கிடையாது. அதனால்தான் உங்களால் இந்த விஷயங்களைப் புரிந்துகொள்ள முடிவதில்லை" என தெரிவித்துள்ளது.

இறுதிச்சடங்கு

கடந்த பிப்ரவரி 28 அன்று அமெரிக்கா-இஸ்ரேல் வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்ட ஈரானின் முன்னாள் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமேனியின் உடல் தற்போது தெஹ்ரானில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

புனித நகரங்கள் வழியாக ஒரு வாரம் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படும் அவரது உடல் வரும் ஜூலை 9ஆம் தேதி அவரின் சொந்த ஊரான மஷாத் நகரில் அடக்கம் செய்யப்படவுள்ளது.