தமிழக செய்திகள்

தலையில் கல்லை போட்டு 2 வடமாநில இளைஞர்கள் கொலை - நாமக்கல்லில் பயங்கரம்

கொல்லப்பட்ட இருவரும் ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர்கள். உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.

நாமக்கல் மாவட்டம் வெப்படை அருகே வடமாநில இளைஞர்கள் இருவர் தலையில் கல்லை போட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கொல்லப்பட்ட இருவரும் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த முன்னா மற்றும் துகிலேஷ் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இருவரின் உடல்களும் பாதரை என்ற பகுதியில் இருந்ததாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், இருவரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.

வடமாநில இளைஞர்கள் கொல்லப்பட்ட சம்பவம் குறித்து நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணன் விசாரணை மேற்கொண்டு வருகிறார். சம்பவ இடத்தில் கைரேகை நிபுணர்கள் மோப்பநாய் உதவியுடன் தடயங்களை சேகரித்துள்ளனர். எதற்காக கொலை நடைபெற்றது என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.