தமிழக செய்திகள்

கர்நாடக வனப்பகுதியில் நடந்த சம்பவத்திற்கு பாரபட்சமற்ற விசாரணை நடத்த வேண்டும் - பிரேமலதா!

தமிழக அரசு உடனே தலையிட்டு, கர்நாடக அரசிடம் வலியுறுத்தி உயிரிழந்தவர் குடும்பங்களுக்கு நீதி பெற்றுத் தர வேண்டும்.

கர்நாடக மாநிலம் ஹானூர் அருகே மரிமங்கலம் வனப்பகுதியில் மான் வேட்டையில் ஈடுபட்டதாக கூறி வனத்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் மூன்று தமிழர்கள் உயிரிழந்த சம்பவத்திற்கு தேமுதிக பொது செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கண்டனம் தெரிவித்துள்ளார்.

மனித உயிர்களை மதிக்காமல் நடந்த இந்த கொடூரத்திற்கு உடனடியாக விசாரணை மற்றும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து பிரேமலதா தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது,

கர்நாடக மாநிலம் ஹானூர் அருகே உள்ள மரிமங்கலம் பகுதியில், மான் வேட்டையில் ஈடுபட்டதாகக் கூறி கர்நாடக வனத்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் தமிழர்களான அந்தோணிசாமி, ஜான் ரோஸ் பீட்டர் மற்றும் ஜெபஸ்டின் டேவிட் குமார் ஆகிய மூவர் உயிரிழந்திருக்கும் சம்பவம் மிகுந்த அதிர்ச்சியையும், வேதனையையும் எற்படுத்தியுள்ளது.

வேட்டையில் ஈடுபட்டதாகவும், வனத்துறை அலுவலர்களைத் தாக்கியதாகவும் கூறப்படும் நிலையில், மூன்று பேரின் உயிரையும் பறிக்கும் அளவிற்கு துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டிருப்பது பல்வேறு கேள்விகளை எழுப்புகிறது.

மனித உயிர்களின் மதிப்பை சிறிதும் கருத்தில் கொள்ளாமல் நிகழ்த்தப்பட்டுள்ள இந்தக் கொடூரச் சம்பவத்தை தேமுதிக சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறோம்.

சட்டத்தை அமல்படுத்த வேண்டிய பொறுப்பில் உள்ள வனத்துறையினர், தங்கள் அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி உயிரைப் பறிக்கும் வகையில் செயல்பட்டிருந்தால், அதற்கு உரிய சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்.

இந்தச் சம்பவம் தொடர்பாக உடனடியாக கொலை வழக்குப் பதிவு செய்து, வெளிப்படைத்தன்மை மிக்க, பாரபட்சமற்ற விசாரணை நடத்த வேண்டும். விசாரணையின் மூலம் உண்மை வெளிக்கொண்டு வரப்பட்டு, தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும், உயிரிழந்த மூவரின் குடும்பங்களுக்கும் தமிழக அரக உரிய இழப்பீட்டுத் தொகையை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்களின் குடும்பங்களில் தகுதியான ஒருவருக்கு அரசு வேலை வழங்குவதற்கும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

தமிழ்நாடு-கர்நாடக எல்லைப் பகுதிகளில் வாழும் தமிழர்களின் உயிருக்கும், உடைமைக்கும், உரிமைகளுக்கும் உரிய பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டியது இரு மாநில அரசுகளின் கடமையாகும்.

எனவே, தமிழ்நாடு அரசு இனியும் காலம் தாழ்த்தாமல் இவ்விவகாரத்தில் உடனடியாக தலையிட்டு, கர்நாடக அரசிடம் உரிய முறையில் வலியுறுத்தி, உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நீதி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழர்களின் உயிரிழப்பை சாதாரணமாகக் கடந்து செல்லாமல், இந்தச் சம்பவத்திற்கு காரணமானவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டும்.

இதுபோன்ற சம்பவங்கள் எதிர்காலத்தில் மீண்டும் நடைபெறாத வகையில் உரிய நடவடிக்கைகளை கர்நாடக அரக மேற்கொள்ள வேண்டும் என தேமுதிக சார்பில் வலியுறுத்துக்கிறோம் என்று பிரேமலதா கண்டனம் தெரிவித்துள்ளார்.