தமிழக செய்திகள்

இந்திய வரலாறு தெற்கில் தமிழ் நிலத்தில் இருந்தே இனி எழுதப்படும் - அமைச்சர் ரகுபதி பெருமிதம்

5300 ஆண்டுகளுக்கு முன்பே இரும்பின் பயன்பாடு தமிழ்நிலத்தில் அறிமுகம் ஆகிவிட்டது பொய் வரலாறு புனைந்து வந்தோரின் பொய்களை எல்லாம் அறிவியல் ஆய்வு மூலம் சுக்கு நூறாக்கிவிட்டார்.

சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கத்தில் நடைபெற்ற தொல்லியல் துறை நிகழ்ச்சியில் பங்கேற்று 'இரும்பின் தொன்மை' எனும் நூலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.

அப்போது பேசிய அவர், "தமிழ் நிலப்பரப்பில் இருந்து தான் இரும்பின் காலம் தொடங்கியது. தமிழகத்தில் 5300 ஆண்டுகளுக்கு முன்னதாகவே இரும்பு தொழில்நுட்பம் இருந்தது ஆய்வில் தெரிய வந்துள்ளது. இரும்பு தாதுவை பிரித்து எடுக்கும் தொழில்நுட்பம் தமிழ் நிலப்பரப்பில் தான் தொடங்கி உள்ளது" என்று தெரிவித்தார்.

இந்நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதை குறிப்பிட்டு அமைச்சர் ரகுபதி தனது எக்ஸ் பக்கத்தில் பெருமிதமாக பதிவிட்டுள்ளார்.

அவரது பதிவில், "5300 ஆண்டுகளுக்கு முன்பே இரும்பின் பயன்பாடு தமிழ்நிலத்தில் அறிமுகம் ஆகிவிட்டது என்ற வரலாற்று சிறப்புமிக்க ஆய்வு முடிவுகளை இன்று மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் உறுதி செய்துள்ளார்.

தமிழர் நாகரிகத்தையும், பண்பாட்டு வரலாற்றையும் மறைக்க துடித்து பொய் வரலாறு புனைந்து வந்தோரின் பொய்களை எல்லாம் அறிவியல் ஆய்வு மூலம் சுக்கு நூறாக்கிவிட்டார் நமது முதலமைச்சர் அவர்கள்.

இந்திய வரலாறு தெற்கில் தமிழ் நிலத்தில் இருந்தே இனி எழுதப்படும் அதை உலகிற்கு உணர்த்திய மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கு ஆயிரம் நன்றிகள்" என்று தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT