சென்னை நந்தம்பாக்கத்தில் நடைபெற்ற அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவில் த.வெ.க. தலைவர் விஜய் கலந்து கொண்டார்.
அந்நிகழ்வில் பேசிய அவர், "மக்கள் உணர்வுகளை மதிக்க தெரியாத, மக்களுக்கு அடிப்படை சமூகநீதியான பாதுகாப்பை கூட உறுதி செய்ய இயலாத கூட்டணி கணக்குகளை மட்டுமே நம்பி இறுமாப்புடன் 200 வெல்வோம் என்று எகத்தாள முழக்கமிடும் மக்கள் விரோத ஆட்சியாளர்களுக்கு என் மக்களோடு இணைந்து நான் விடுக்கும் எச்சரிக்கை. நீங்க உங்கள் சுயநலத்திற்காக பல வழிகளில் பாதுகாத்து வரும் கூட்டணி கணக்குகள் அனைத்தும் 2026-ல் மக்களே மைனஸ் ஆக்கிவிடுவார்கள்" என்று தெரிவித்தார்.
மேலும் அந்நிகழ்வில் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி துணை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா, "மன்னர் பரம்பரை போன்ற ஆதிக்கத்திற்கு தமிழகத்தில் இனி இடமில்லை. 2026ம் ஆண்டு தேர்தலில் மன்னராட்சி ஒழிக்கப்பட வேண்டும். பிறப்பால் ஒரு முதலமைச்சர் தமிழகத்தில் உருவாக்கப்பட கூடாது" என்று தெரிவித்தார்.
இந்நிலையில் த.வெ.க. தலைவர் விஜய்க்கு இயக்குநர் அமீர் அறிவுரை தெரிவிக்கும் விதமாக தனது வாட்சப்பில் ஸ்டேடஸ் வைத்துள்ளார்.
அவரது பதிவில், "பிறப்பால் ஒருவர் பணக்காரர் ஆகலாம். பணக்கார வாரிசுகளை மணப்பதாலும் ஒருவர் பணக்காரர் ஆகலாம்.. ஆனால், ஜனநாயக நாட்டில் மக்கள் ஆதரவின்றி ஒருவர் முதலமைச்சராகவே முடியாது" என்றும் "செல்வந்தர்களின் திடீர் அரசியல் பிரவேசம் என்றைக்குமே மக்களுக்கு நன்மை தராது. ஆதவ் அர்ஜுனாவின் நட்பு, விஜயன் அரசியலுக்கு நல்லதல்ல" என்றும் தெரிவித்துள்ளார்.