"உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பிரிவினைவாத சக்திகளிடமிருந்து நாட்டை பிரதமர் நரேந்திர மோடி மிக உறுதியாகப் பாதுகாத்து வருகிறார்" என்று ஆந்திர மாநில சுகாதாரத்துறை மந்திரி சத்தியகுமார் யாதவ் புகழாரம் சூட்டியுள்ளார்.
பிரதமர் மோடியின் 25 ஆண்டுகால மக்கள் சேவையை முன்னிட்டு, “சேவை உறுதிமொழி இயக்கம்” முன்னெடுப்பது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் புதுச்சேரி பா.ஜனதா தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.
இதில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட பின், செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அக்டோபர் 7-ம் தேதியோடு நரேந்திர மோடி பொதுவாழ்வில் மிக உயரிய பொறுப்புகளை ஏற்று 25 ஆண்டுகள் நிறைவு பெறுகிறது. குஜராத் மாநிலத்தின் முதலமைச்சராக 12½ ஆண்டுகளும், நாட்டின் பிரதமராக 12½ ஆண்டுகளும் அவர் தொடர்ச்சியாகப் பணியாற்றியுள்ளார்.
எந்தவித சுயநலமும் இன்றி, முழு அர்ப்பணிப்புடன் அவர் நாட்டுக்குச் சேவை செய்து வருகிறார்.
இந்தியா வலிமையான மற்றும் வளமான நாடாக மாறுவதையே தனது முதல் நோக்கமாகக் கொண்டு பிரதமர் செயல்பட்டு வருகிறார்.
குறிப்பாக, இந்தியாவைத் துண்டாட நினைக்கும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பிரிவினைவாத கும்பல்களின் சதித்திட்டங்களை முறியடித்து, நாட்டின் பாதுகாப்பை அவர் உறுதி செய்துள்ளார்.
2047-ம் ஆண்டுக்குள் இந்தியாவை உலகின் முதன்மை வளர்ச்சி அடைந்த நாடாக மாற்றும் நோக்கில் பல்வேறு தொலைநோக்கு நடவடிக்கைகளை அவர் எடுத்து வருகிறார்.
பிரதமர் மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு இந்த ஆண்டு செப்டம்பர் 17-ந் தேதி முதல் அக்டோபர் 17-ந் தேதி வரை ஒரு மாதம் முழுவதும் பல்வேறு மக்கள் நலத்திட்டங்கள் மற்றும் 13 வகையான சேவை நிகழ்ச்சிகளை நடத்த பா.ஜனதா திட்டமிட்டுள்ளது.
இதையொட்டி நாடு முழுவதும் பா.ஜனதா தொண்டர்கள் தீவிரமாக களப்பணியாற்ற உள்ளனர் என்று ஆந்திர மந்திரி சத்தியகுமார் யாதவ் தெரிவித்துள்ளார்.