தொடர் கனமழை காரணமாக பல்கலைக்கழக, சட்டக் கல்லூரி தேர்வுகள் ஒத்திவைப்பு

தொடர் கனமழை காரணமாக சென்னை பல்கலைக்கழம், அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் சட்டக் கல்லூரி தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. #HeavyRain #AnnaUniversity #MadrasUniversity
தொடர் கனமழை காரணமாக பல்கலைக்கழக, சட்டக் கல்லூரி தேர்வுகள் ஒத்திவைப்பு
Published on

சென்னை:

தமிழகத்தில் வட கிழக்கு பருவமழை தொடங்கியதில் இருந்து அவ்வப்போது பரவலாக மழை பெய்து வந்த நிலையில், தற்போது பருவமழை தீவிரமடைந்திருப்பதால், தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

வலுவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தென்மேற்கு வங்ககடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள தமிழக கடற்கரை பகுதிகளில் நிலை கொண்டு இருக்கிறது. 

இதன் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரி கடலோர பகுதிகளில் பரவலாகவும், உள்பகுதிகளில் ஒரு சில இடங்களிலும் மழை பெய்துள்ளது. வருகிற 23-ந்தேதி வரை மழை தொடரும் என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

தொடர் கனமழை காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வேலூர், திருவாரூர் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

தொடர் மழை காரணமாக இன்று நடைபெற இருந்த சென்னை பல்கலைக்கழக தேர்வுகள் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படுவதாக  துணைவேந்தர் துரைசாமி அறிவித்துள்ளார்.

நாகை, திருவாரூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் அண்ணா பல்கலை உறுப்பு கல்லூரிகளில் இன்றும், நாளையும் தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. மேலும் அரசு சட்டக் கல்லூரி மற்றும் சீர்மிகு சட்டக் கல்லூரியில் இன்று நடைபெறவிருந்த தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. #HeavyRain #AnnaUniversity #MadrasUniversity 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com