

அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று தினகரனுக்கு ஆதரவாக செயல்பட்ட 18 எம்.எல்.ஏ.க்களையும் தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் பிறப்பித்த உத்தரவு செல்லும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
இதையடுத்து அந்த 18 பேரிடமும், டி.டி.வி. தினகரன் சந்தித்து ஆலோசனை நடத்தினார். அப்போது தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்வதா? அல்லது இடைத்தேர்தலை சந்திப்பதா? என்பது குறித்து அனைவரிடமும் தினகரன் கேட்டார். அப்போது மேல்முறையீடு செய்யவேண்டும் என சிலர் கருத்து தெரிவித்தனர். மேல்முறையீடு செய்யாமல் இடைத்தேர்தலை சந்திக்கலாம் என்று ஒரு தரப்பினர் ஆலோசனை தெரிவித்தனர்.
இந்த ஆலோசனையின் முடிவில், தகுதி நீக்க வழக்கில் உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வது என முடிவு செய்யப்பட்டது. ஓரிரு நாளில் மேல்முறையீடு செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது. எனவே, அரசு கொறடா ராஜேந்திரன் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் ஒரு கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டது.