

மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சிலைமான் உள்ளிட்ட 9 கிராமங்களில் 418 பயனாளிகளுக்கு ரூ.65 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் இன்று வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் நடராஜன், எம்.எல்.ஏ.க்கள் ராஜன் செல்லப்பா, சரவணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சி முடிந்ததும் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறியதாவது:-
புரட்சித்தலைவி அம்மா மறைவுக்கு பிறகு அ.தி.மு.க.வில் ஏற்பட்ட மாற்றத்தை இன்றைக்கு அரசியலாக்கி தினகரன் ஆதாயம் தேட முயற்சி செய்கிறார். அவரை துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சந்தித்ததை மறுக்கவில்லை.
எப்போதோ நடந்த நிகழ்ச்சியை இப்போது கூறி அ.தி.மு.க.வில் சலசலப்பை ஏற்படுத்தலாம் என்று தினகரன் நினைக்கிறார். அவரது எண்ணம் நிறைவேறாது.
தினகரனின் பழைய முயற்சி புதிய வடிவத்தில் வெளிவந்துள்ளது. குட்டையை- குழப்பி திருப்பரங்குன்றத்தில் மீன் பிடித்து விடலாம் என்று தினகரன் நினைக்கிறார். அவரது முயற்சி எடுபடாது.
தினகரனின் கற்பனை கலந்த எதிர்பார்ப்பை தொண்டர்கள் முறியடிப்பார்கள். அவரது எண்ணம் ஒருபோதும் நிறைவேறாது.
இவ்வாறு அவர் கூறினார்.