

இடைத்தேர்தல் நடைபெறும் 2 தொகுதிகளிலும் வெற்றி பெற்று அதனை திமுகவின் வசமாக்குவோம் என்று மதுராந்தகம் தொகுதி திமுக வேட்பாளர் பரந்தாமன் கூறினார்.
மதுராந்தகம், தாராபுரம் ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்கு அடுத்த மாதம் 6-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.
இந்நிலையில் மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்கியது. தினமும் காலை 11 மணிக்கு தொடங்கி 3 மணி வரை வேட்பு மனு தாக்கல் செய்யலாம்.
இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று முதல் வருகிற 16-ந்தேதி வரை நடைபெறுகிறது. வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை 17-ந்தேதி நடைபெறும். வேட்புமனுக்களை திரும்ப பெற 19-ந்தேதி கடைசி நாள் ஆகும். அக்டோபர் 6-ந்தேதி வாக்குப்பதிவு நடைபெறும். அக்டோபர் 9-ந்தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.
இதற்கிடையே, அண்ணா அறிவாலயத்தில் தொகுதி பிரதிநிதிகளுடன் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.
இதனையடுத்து வரும் இடைத்தேர்தலில் மதுராந்தகம் தொகுதியில் பரந்தாமன், தாராபுரம் தொகுதியில் சுகன்யா போட்டியிடுவதாக திமுக தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
மதுராந்தகம் தொகுதி இடைத்தர்தலில் திமுக சட்டத்துறை இணைச்செயலாளர் பரந்தாமன் போட்டியிடுகிறார். தாராபுரம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் திமுக சார்பில் வழக்கறிஞர் சுகன்யா போட்டியிடுகிறார்.
இந்நிலையில் மதுராந்தகம் தொகுதி திமுக வேட்பாளர் பரந்தாமன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
* தவெக ஆட்சியில் பொதுமக்கள் மிகுந்த சிரமம் அடைந்துள்ளனர்.
* இடைத்தேர்தல் நடைபெறும் 2 தொகுதிகளிலும் வெற்றி பெற்று அதனை திமுகவின் வசமாக்குவோம்.
* தவெக ஆட்சியின் அவலங்களை மக்களிடம் எடுத்துக்கூறி வெற்றி பெற்று வெற்றிக்கனியை தலைவரிடம் சமர்பிப்போம்.
* மதுராந்தகம் வெற்றியை திமுக தலைமைக்கு சமர்பிப்போம்.
* தவெக ஆட்சியில் மின்கட்டணம் உயர்ந்துள்ளது.
* தவெக அரசின் அவலங்களை வீடு வீடாக சென்று எடுத்துக்கூறி வெற்றி பெறுவோம்.
* திமுகவினர் களத்தில் வலுவாக இருப்பவர்கள், அதனால் வெற்றி நிச்சயம்.
இவ்வாறு அவர் கூறினார்.