

தஞ்சை மாவட்டம் மல்லிப்பட்டினம் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியை ரமணி அவர்கள் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது என்று தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தஞ்சை மாவட்டம் மல்லிப்பட்டினம் மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியர் ரமணி அவர்கள் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது. அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
திமுக ஆட்சியில் கொலை என்பது சர்வசாதாரணம் என்ற அவல நிலை நிலவி வரும் அளவிற்கு, நிர்வாகச் சீர்கேடு இந்த ஆட்சியில் நிலவுகிறது. எனவே சட்டம் ஒழுங்கு கேள்விக்குறியாக மாறியுள்ளது. அரசுப்பள்ளி ஆசிரியர்கள், அரசு மருத்துவர்கள் உள்ளிட்ட அரசு ஊழியர்களுக்கு அவர்கள் பணிபுரியும் அரசுக்குச் சொந்தமான இடங்களில் கூட பாதுகாப்பு துளியும் இல்லாதது மிகவும் கண்டனத்திற்குரியது.
அதேபோல் பன்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் பொய்யாமொழி நேரடியாக சென்று ஆய்வு செய்து, அப்பள்ளிகளில் நடக்கும் அவலத்தை உடனடியாக சீர்படுத்த வேண்டும். பள்ளிகளில் ஏற்படும் இந்த அவலங்கள் அந்த துறைக்கே மிகப்பெரிய வெட்கக் கேடாக அமைந்துள்ளது" என்று தெரிவித்துள்ளார்.