

110 புதிய மாவட்டங்கள் அடங்கிய பட்டியல் தயாரிக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளது. இந்த பட்டியலை கட்சி தலைமை விரைவில் வெளியிட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் தி.மு.க. தோல்வி அடைந்தது. இதையடுத்து தேர்தல் தோல்விக்கான காரணத்தை ஆராய உண்மை கண்டறியும் குழு அமைக்கப்பட்டது. அந்த குழுவினர் ஆய்வு செய்து அளித்த அறிக்கையின் அடிப்படையில் சமீபத்தில் தி.மு.க. செயற்குழு கூட்டம் கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்தது.
இந்த கூட்டத்தில் 9 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில் ‘தி.மு.க. மாவட்டங்களின் எண்ணிக்கை 110 ஆக அதிகரிக்கப்படும்’ என்ற தீர்மானமும் அடங்கும். அதன் தொடர்ச்சியாக தி.மு.க. கட்சி தலைமை 110 மாவட்டங்கள் அடங்கிய பட்டியலை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டது.
தற்போது 110 புதிய மாவட்டங்கள் அடங்கிய பட்டியல் தயாரிக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளது. இந்த பட்டியலை கட்சி தலைமை விரைவில் வெளியிட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதுகுறித்து தி.மு.க. நிர்வாகிகள் சிலர் கூறியதாவது:-
தி.மு.க. செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களின் அடிப்படையில் 110 மாவட்டங்கள் குறித்த பட்டியல் தயாரித்து முடிக்கப்பட்டுவிட்டது. அந்த மாவட்டங்களுக்கு உட்கட்சி தேர்தல் அடிப்படையில் புதிய நிர்வாகிகள் நியமனம் செய்யப்படுவார்கள். இதற்கு வசதியாக முதற்கட்டமாக ஒவ்வொரு மாவட்டத்துக்கும் ஒரு பொறுப்பாளர் வீதம் புதிய பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.
இப்படி பொறுப்பாளர்கள் நியமனம் நடந்தால், அவர்கள் அடுத்து வரும் உட்கட்சி தேர்தலில் மீண்டும் வெற்றி பெறுவதற்கான பணிகளை முடுக்கி விடுவார்கள். அப்போது உட்கட்சி தேர்தல் ஜனநாயக ரீதியிலும், நியாயமான முறையிலும் நடப்பதில் சிக்கல் ஏற்படும் என்று கட்சி தலைமைக்கு மூத்த நிர்வாகிகள் ஆலோசனை தெரிவித்தனர்.
இதனை ஏற்றுக்கொண்ட தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், தற்போது பொறுப்பாளர்கள் பட்டியலை அறிவிக்கும் முடிவை தள்ளி வைத்துள்ளார். இதனாலேயே பொறுப்பாளர்கள் அறிவிப்பில் தாமதம் ஏற்பட்டுள்ளது. விரைவில் 110 மாவட்டங்கள் குறித்த அதிகாரப்பூர்வ பட்டியலை தி.மு.க. தலைமை வெளியிடும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.