

ஆட்சிப் பொறுப்பில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் கடந்த 78 ஆண்டுகளில் தமிழ்நாட்டைப் பல்வேறு நிலைகளில் உயர்த்தியதில் திமுகவின் பங்களிப்பு மகத்தானது.
திராவிட முன்னேற்றக் கழகம் தன் பயணத்தில் 78-ஆவது ஆண்டில் அடியெடுத்து வைப்பதை முன்னிட்டு, அக்கட்சியின் இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்துச் செய்தி வெளியிட்டுள்ளார். ஜமீன்களின் அரண்மனைகளிலும் பண்ணையார்களின் நிலங்களிலும் முடங்கிக் கிடந்த அரசியலை, சாதாரண பாமர மக்களின் கரங்களுக்குக் கொண்டு சேர்த்த பெருமை திமுகவையே சாரும் என்று அவர் பெருமிதத்துடன் குறிப்பிட்டுள்ளார்.
திராவிட இயக்கத்தின் முக்கிய அமைப்பான திமுக உருவான வரலாற்றை நினைவுகூர்ந்த உதயநிதி ஸ்டாலின், நாற்பதுகளில் இருந்த பேரறிஞர் அண்ணாவும், இருபதுகளில் இருந்த கலைஞர் கருணாநிதியும் கொட்டும் மழையில் தங்கள் தம்பிமார்களுடன் இணைந்து இந்த இயக்கத்தைத் தொடங்கினர் என்று தெரிவித்துள்ளார். அடக்குமுறைகள், நெருக்கடிகள் மற்றும் புதிய எதிர்ப்புகளை கடந்து கழகம் இன்றளவும் வலிமையோடு நடைபோடுகிறது என்று அவர் சுட்டிக்காட்டினார்.
ஆட்சிப் பொறுப்பில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் கடந்த 78 ஆண்டுகளில் தமிழ்நாட்டைப் பல்வேறு நிலைகளில் உயர்த்தியதில் திமுகவின் பங்களிப்பு மகத்தானது என்று அவர் குறிப்பிட்டார். சமூக நீதி, மாநில உரிமை, பெண் விடுதலை மற்றும் தொழிற்துறை வளர்ச்சி ஆகியவற்றைக் கொள்கை அடித்தளமாகக் கொண்டு செயல்பட்ட கழகம், 'தமிழ்நாடு' எனப் பெயர் சூட்டியது முதல் அதைத் தன்னிகரற்ற மாநிலமாக மாற்றியது வரை வரலாற்று சிறப்புமிக்கப் பணிகளை ஆற்றியுள்ளதாகக் கூறினார்.
தற்போது கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக மேலும் துடிப்பாகச் செயல்பட்டு வருகிறது. நூறாண்டுகளை நோக்கிப் பயணிக்கும் இந்த இயக்கத்தின் மேன்மைக்காகத் தொடர்ந்து உழைப்போம் என்றும், "கருப்பு - சிவப்பு வெறும் நிறமல்ல, அது நம் உயிர்" என்ற உணர்வோடு தொண்டர்கள் செயலாற்ற வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.