லண்டன் சுற்றுப் பயணத்தை முடித்துக்கொண்டு சென்னை திரும்பினார் முதலமைச்சர் விஜய்

லண்டன் பயணத்தின் ஒரு பகுதியாக முதலமைச்சர் விஜய் தான் தங்கியுள்ள ஓட்டலின் கீழே லண்டன் வாழ் தமிழர்களை சந்தித்து பேசுவதாக தகவல் பரவியது.
சென்னை விமான நிலையத்தில் இருந்து வெளியே வந்த முதலமைச்சர் விஜய்யின் கார்
Published on
Summary

முதலமைச்சர் விஜய், தனது அரசு முறை சுற்றுப்பயணத்தை முடித்து லண்டனில் இருந்து சென்னை புறப்பட்டார். அவர் இன்று காலை 8.30 மணியளவில் சென்னை விமான நிலையம் வந்தடைந்தார். சென்னை வந்த முதலமைச்சர் விஜய்க்கு த.வெ.க.வினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

லண்டன் பயணம்

முதலமைச்சர் விஜய், அரசு முறை பயணமாக கடந்த 10-ந்தேதி சென்னையில் இருந்து புறப்பட்டு லண்டன் சென்றார். அங்கு அவருக்கு தமிழர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

அதனைத்தொடர்ந்து 12-ந்தேதி முதலமைச்சர் விஜய், தமிழகத்தில் உலகத்தரம் வாய்ந்த மோட்டார் ஸ்போர்ட்ஸ் நகரம் அமைப்பதற்காக புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார் பந்தயத் திடலுக்கு உலகப் புகழ் பெற்ற சில்வர் ஸ்டோன் பந்தயக் களத்தில் உள்ள உள்கட்டமைப்பு, பந்தயச் சுற்றுப்பாதை, பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் போட்டிகளை வணிக ரீதியாக நடத்தும் முறைகள் ஆகியவற்றை நேரில் பார்வையிட்டார். பின்னர் அங்கு நடிகர் அஜித் பங்கேற்ற கார் ரேசையும் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

தொழில் முதலீடு

அதன் தொடர்ச்சியாக 2 நாட்கள் முதலமைச்சர் விஜய், பல்வேறு தொழில் அதிபர்களை சந்தித்து தமிழ்நாட்டுக்கு பல்வேறு தொழில் முதலீடுகளை ஈர்த்தார். சுமார் ரூ.15 ஆயிரம் கோடிக்கு மேலான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. அதன் மூலம் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்று தமிழக அரசு அறிவித்தது.

நிகழ்ச்சி ரத்து

லண்டன் பயணத்தின் ஒரு பகுதியாக நேற்று முதலமைச்சர் விஜய் தான் தங்கியுள்ள ஓட்டலின் கீழே லண்டன் வாழ் தமிழர்களை சந்தித்து பேசுவதாக தகவல் பரவியது. ஆனால் அங்குள்ள போலீசார் தரப்பில் இது போன்ற எந்த நிகழ்ச்சிக்கும் அனுமதி தரவில்லை என்று தெரிகிறது. இருந்தாலும் ஏராளமானோர் அங்கு குவிந்தனர். இதனால் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது. ஒரு கட்டத்தில் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. அங்கிருந்தவர்கள் 'த.வெ.க. வளர்க விஜய் வாழ்க' என்று கோஷமிட்டனர். கூட்டமும் சாலையின் இருபுறமும் ஆண்கள், பெண்கள் மட்டுமின்றி குழந்தைகளும் திரண்டு இருந்தனர்.

எனவே முதலமைச்சரின் பாதுகாப்பு அதிகாரி தர்மராஜ் மைக் மூலம் பேசினார். அப்போது அவர், 'பொதுமக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளதால், அனைவரும் கலைந்து செல்ல வேண்டும்' என்றார். இதனையடுத்து கலைந்து சென்றனர்.

வரவேற்பு

இதற்கிடையே நேற்று இரவு விஜய், தனது அரசு முறை சுற்றுப்பயணத்தை முடித்து லண்டனில் இருந்து சென்னை புறப்பட்டார். அவர் இன்று காலை 8.30 மணியளவில் சென்னை விமான நிலையம் வந்தடைந்தார். அவருக்கு த.வெ.க.வினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com