

டாஸ்மாக் கடைகளில் கூடுதல் விலைக்கு மது விற்றால் போலீசில் புகார் அளிக்கலாம் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
சென்னையில் பெரம்பூர், கொளத்தூர், மாதவரம் உட்பட 30 இடங்களில் உள்ள டாஸ்மாக் கடைகளில் அதிக விலைக்கு மதுபானங்களை விற்பனை செய்த ஊழியர்கள் மீது ஊழல் தடுப்புச் சட்டம் மற்றும் சட்டவிரோத பணப்பரிமாற்ற சட்டம் ஆகியவற்றின் கீழ் வழக்குப்பதிவு செய்ய லஞ்ச ஒழிப்புத் துறை மற்றும் அமலாக்கத் துறைக்கு உத்தரவிடக் கோரி தேவராஜன் என்பவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.
இதுபோல, 2022ம் ஆண்டு முதல் 2026ஆம் ஆண்டு வரை கூடுதலாக வசூலிக்கப்பட்ட தொகையை சம்பந்தப்பட்ட பணியாளர்களிடமிருந்து வசூலித்து அரசுக்கு செலுத்த வேண்டும், சம்பந்தப்பட்ட ஊழியர்களுக்கு எதிராக பணி நீக்க நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு தமிழகம் முழுவதும் அனைத்து டாஸ்மாக் கடைகளிலும், ரசீது புத்தகங்களை பராமரிக்க வேண்டும் என்றும் டாஸ்மாக் நிர்வாகத்துக்கு உத்தரவிட்டது.
இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, விற்கப்படும் மதுபானங்களுக்கு ரசீது வழங்கவேண்டும் என மதுபான கடைகளுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டு உள்ளது. மது வாங்குவோரின் கூட்டம் அதிகமாக இருப்பதால் ரசீது வழங்குவதில் சிரமங்கள் இருக்கிறது என டாஸ்மாக் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.
ஆனாலும், நேற்று கூட மது வாங்கியபோது ரசீது வழங்கப்படவில்லை. கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டது என மனுதாரர் சார்பில் புகார் தெரிவிக்கப்பட்டது.
அப்போது குறுக்கிட்ட நீதிபதி, சூப்பர் மார்க்கெட்களில் டூத் பேஸ்ட் வாங்கினால் கூட ரசீது கொடுக்கும் நிலையில், மாநிலத்துக்கு பெரும் வருவாயை தரும் டாஸ்மாக் கடைகளில் ரசீது வழங்குவதில் என்ன சிக்கல் உள்ளது? கூட்டத்தை முறைப்படுத்த ஏன் காவலர்களை பணியமர்த்தக் கூடாது என கேள்வி எழுப்பினார்.
மேலும், டாஸ்மாக் மதுபான கடைகளில் கூடுதல் தொகை வசூலித்தால் நுகர்வோர் புகார் அளிக்கலாம். அப்படி புகார் வந்தால், அந்த புகார் மீது உடனடியாக வழக்கு பதிவு செய்ய வேண்டும் என காவல்துறைக்கு உத்தரவிட்டது.
அரசு சுற்றறிக்கையைப் பின்பற்றாமல், கூடுதல் தொகை வசூலித்தால் சம்பந்தப்பட்ட போலீசிடம் புகார் அளிக்க வேண்டும். மனுதாரர் புகாரை விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய லஞ்ச ஒழிப்புத்துறைக்கு ஐகோர்ட் நீதிபதி உத்தரவிட்டார்.