

திருவனந்தபுரம் :
கேரளாவில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. எனினும் கேரள அரசு சில தளர்வுகளை அறிவித்து வருகிறது. இதனை தொடர்ந்து கடந்த 1-ந் தேதி குருவாயூர் கிருஷ்ணசாமி கோவிலில் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டது.
அதன்படி தினமும் 4 ஆயிரம் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வந்தனர். இந்தநிலையில் பூசாரிகள், ஊழியர்கள் என 46 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து மறு அறிவிப்பு வரும் வரை பக்தர்கள் தரிசனத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதே சமயத்தில் தினசரி பூஜைகள், வழிபாடு வழக்கம் போல் நடைபெறும் என கோவில் நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 53 ஆயிரத்து 508 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 4,642 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.
4,748 பேர் கொரோனாவில் இருந்து மீண்டனர். இதுவரை கொரோனா தொற்றால் பாதிப்புக்குள்ளான 6 லட்சத்து 58 ஆயிரத்து 683 பேரில், 5 லட்சத்து 96 ஆயிரத்து 593 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு உள்ளனர். மேலும் புதிதாக 29 கொரோனா நோயாளிகள் மரணம் அடைந்தனர். இதனால் சாவு எண்ணிக்கை 2,562 ஆக உயர்ந்து உள்ளதாக சுகாதாரத்துறை மந்திரி சைலஜா தெரிவித்தார்.