

பிரதமர் மோடியை வழி அனுப்பிய பிறகு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழ்நாட்டில் பெய்து வரும் கன மழை விவரங்களை பிரதமரிடம் தெரிவித்தேன். குறிப்பாக சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், நாகையில் மழை சேதத்தையும் விளக்கினேன். மழை சேதத்துக்கு தமிழ்நாட்டுக்கு மழை நிவாரணமாக ரூ.1,500 கோடி கேட்டுள்ளோம். மழையால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு உரிய நிவாரணம் அளிப்பதாக பிரதமர் உறுதி அளித்திருக்கிறார்.
தாழ்வான பகுதிகளில் தேங்கியிருக்கும் மழைநீரை வெளியேற்ற அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. எதிர்காலத்தில் தண்ணீர் தேங்காமல் இருக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வருகின்றன.
இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது, உள்ளாட்சித் தேர்தல் எப்போது நடத்தப்படும்? என நிருபர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த முதலமைச்சர், நீதிமன்றத்தில் தீர்ப்பு வந்த பிறகு உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும் என்றார்.
முதலமைச்சருடன், துணை முதலமைச்சர் மற்றும் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் உடனிருந்தனர்.