

பெங்களூரு :
கர்நாடக சட்டசபையில் நேற்று முன்தினம் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் நேற்று முன் தினம் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறவில்லை. இதையடுத்து, நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற வேண்டும் என்று வலியுறுத்தி பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் விதானசவுதாவில் தொடர் தர்ணாவில் ஈடுபட்டனர்.
நேற்று முன்தினம் இரவு விதானசவுதாவில் எடியூரப்பா உள்ளிட்ட பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் படுத்து தூங்கினார்கள். அங்கு வைத்தே நேற்று முன்தினம் இரவு மற்றும் நேற்று காலை உணவு சாப்பிட்டனர். இந்த நிலையில், நேற்று காலையில் பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் சாப்பிட்டு கொண்டிருக்கும் போது திடீரென்று துணை முதல்-மந்திரியான பரமேஸ்வர் அங்கு வந்தார்.
பின்னர் எடியூரப்பா உள்ளிட்டோரிடம் அவர் நலம் விசாரித்தார். விதானசவுதாவில் தூங்குவதற்கு மிகவும் கஷ்டமாக இருந்திருக்கும் என்பதால் காலையிலேயே வந்து பா.ஜனதாவினருடன் பரமேஸ்வர் வந்து பேசியதாக தெரிகிறது. அதன்பிறகு, பா.ஜனதா எம்.எல்.ஏ.க்களுடன் சேர்ந்து விதானசவுதாவில் வைத்து துணை முதல்-மந்திரி பரமேஸ்வர் உணவு சாப்பிட்டார். அந்த சந்தர்ப்பத்தில் அவருடன் பா.ஜனதா எம்.எல்.ஏ.க்களான சுரேஷ் குமார், ராமதாஸ் ஆகியோர் உடன் இருந்தனர்.
பின்னர் துணைமுதல்- மந்திரி பரமேஸ்வர் நிருபர்களிடம் கூறுகையில், “சட்ட சபைக்குள் பேசுவது வேறு, சட்டசபைக்கு வெளியில் நடந்து கொள்வது வேறு. நான் பா.ஜனதாவினருக்கு எதிரி அல்ல. அவர்களும் எனக்கு எதிரி அல்ல. பா.ஜனதாவில் எனக்கு ஏராளமான நண்பர்கள் உள்ளனர். விதானசவுதாவில் தொடர் தர்ணாவில் ஈடுபட்டதுடன், எடியூரப்பா உள்ளிட்ட அனைவரும் இங்கே படுத்து தூங்கியுள்ளனர். இதனால் அவர்களது உடல் நலம் குறித்து விசாரிப்பதற்காக வந்தேன்“ என்றார்.