

திருவாரூர்:
திருவாரூர் அருகே மாங்குடியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேர்தல் அலுவலகத்தை திறந்து வைத்து மாநில செயலாளர் ஆர்.முத்தரசன் பேசுகையில் கூறியதாவது:-
உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் 27 மாவட்டங்களுக்கும் 2 கட்டமாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுகிறது. இதன் நோக்கமே அதிகாரத்தை பயன்படுத்தி வெற்றிகளைப் பெறுவதற்காக தவறான முயற்சிகளில் ஆளும் கட்சி ஈடுபட்டிருப்பது அப்பட்டமாக தெரிகிறது. மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக உள்ளாட்சித் தேர்தல் மூலம் வாக்காளர்கள் தக்க பாடம் புகட்டுவர்.
இவ்வாறு அவர் கூறினார்.
மன்னார்குடியை அடுத்த கோட்டூரில் அவர் பேசுகையில்:-
குடியுரிமை திருத்தச் சட்டத்தைக் கண்டித்து போராட்டம் நடத்தியவர்கள் மீது காவல்துறையைக் கொண்டு தடியடி நடத்தியும், துப்பாக்கிச் சூடு நடத்தியும் அடக்கிவிடலாம் என மத்திய அரசு நினைத்து அதற்கு செயல் வடிவம் கொடுத்த காரணத்தால் உத்தரபிரதேசம், கர்நாடகம் ஆகிய மாநிலங்களில் இதுவரை 18 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இது மிகவும் கண்டிக்கத்தக்கது. சட்டத்தைத் திரும்ப பெறுவதுதான் ஒரே வழி. அதுவரை போராட்டங்கள் தொடரும்.
இவ்வாறு அவர் கூறினார்.