

பாராளுமன்ற தேர்தலுக்கான தேதி இன்னும் 2 நாட்களில் அறிவிக்கப்பட உள்ளது. அதற்குள் தி.மு.க.வில் கூட்டணி கட்சிகளுக்கு தொகுதி பங்கீடு செய்து முடிக்கப்பட்டு விட்டது.
அ.தி.மு.க.வில் தேர்தல் கூட்டணி இன்றுடன் பேசி முடிவு செய்ய உள்ளனர். இந்த கூட்டணியில் தே.மு.தி.க. சேருமா? சேராதா? என்பது இன்று தெரிந்து விடும்.
இந்த நிலையில் இன்னும் 4 நாட்களில் அ.தி.மு.க. போட்டியிடும் தொகுதி விவரங்கள் அதிகார பூர்வமாக அறிவிக்கப்பட உள்ளது. இதற்காக எந்தெந்த தொகுதியில் யார்-யார் போட்டியிட உள்ளனர் என்ற பட்டியலும் தயார் செய்யப்பட்டு வருகிறது.
இதற்கிடையே அ.தி.மு.க. அமைப்பு செயலாளர்களான முன்னாள் அமைச்சர்கள் பொன்னையன், நத்தம் விஸ்வநாதன் தலைமையிலான 7 பேர் கொண்ட குழுவினர் கடந்த 1 மாதமாக அ.தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
இதற்காக தமிழகத்தில் நிலவும் முக்கியமான பிரச்சனைகளை அறிந்து அதை தேர்தல் அறிக்கையில் இடம்பெற செய்துள்ளனர். விவசாயிகள்-மாணவர்களுக்கு சலுகைகள், நெசவாளர்களுக்கு மானியம், மதுக்கடைகளை படிப்படியாக மூடுவதற்கான புதிய அறிவிப்புகள், பெண்களுக்கு புதிய கடன் உதவி திட்டம் என்று பல்வேறு அம்சங்களுடன் மக்களை கவர்ந்திழுக்கும் வகையில் தேர்தல் அறிக்கையை தயார் செய்துள்ளனர்.